About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
பாரியை அவள் அறையில் படுக்க வைத்துவிட்டு நரசிம்மன் வெளியே வர வாசல் கதவு மற்றும் அதைத் தாண்டி இருக்கும் கிரில் கேட் இரண்டையும் பூட்டு வைத்து பூட்டி ஒருமுறைக்கு இருமுறை சோதித்த பின்னர் உள்ளே வந்தான் கண்ணன். நரசிம்மன் அவனைத் தாண்டிக்கொண்டு சென்று குளிர்சாதனப்பெட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து குடித்துக்கொண்டிருந்த வேளையில்,
“நாளைக்கு நீங்க செம்பாவைக் கூட்டிக்கிட்டு உங்க வீட்டுக்கு கிளம்பிடுங்க சிம்மன்.” நேரடியாகவே சொல்லிவிட்டான் கண்ணன். அவனுக்கு வேறு வழி இருக்கவில்லை.
நரசிம்மனையும், செம்பருத்தியையும் ஒன்றாகப் பார்ப்பது தான் தங்கை பாரியின் பிரச்சனைக்குக் காரணம் என்கிற தவறான புரிதல் இருந்தது அவனிடத்தில். அந்த நினைப்பு நரசிம்மனுக்கும் இருக்கவே தங்கை கணவனின் வார்த்தைகளுக்கு பெரிதாக மறுப்பு சொல்லாமல் உடன் ஒப்புக்கொண்டான்.
அடுத்த நாள் காலையில் நரசிம்மன் செம்பருத்தியிடம் விஷயத்தைச் சொல்ல, “என்ன திடீர்னு.” என்றாள் அவள்.
“உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு செம்பருத்தி. என் அம்மாவோட வார்த்தைகளால் உனக்கு மனக்கஷ்டம் வந்தது உண்மை. உன் மன ஆறுதலுக்காக உன்னோட சேர்த்து நான் இங்க வந்ததும் உண்மை. ஆனா இது நிரந்தரம் இல்லை. எப்படிப் பார்த்தாலும் நம்ம வீடு அதுதான்.” என்றான். கவனமாக பேச்சில் கூட பாரிஜாதத்தை தவிர்த்தான்.
“உங்க அம்மா இப்படித்தான் பேசுவாங்கன்னு தெரிஞ்சும் என்னை அங்க தான் இருக்கணும் னு எதுக்காக சொல்றீங்க சிம்மன். உங்க அம்மாவைப் பார்த்துக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கு தான். அதுக்காக உங்க மனைவியான என்னோட சந்தோஷம் முக்கியம் இல்லைன்னு ஆகிடாது தானே.
எல்லா நேரத்திலும் அம்மாவுக்கும், மனைவிக்கும் நடுநிலையா இருக்க முடியாது. சில நேரங்களில் யார் பக்கம் நியாயம் இருக்கோ அவங்க பக்கம் வளைஞ்சு கொடுத்து தான் ஆகனும். என் பக்கம் தான் கொஞ்சம் வாங்களேன்.
மனைவியான என்னோட மனநிம்மதியில் தான் கணவனான உங்களோட சந்தோஷம் இருக்கு சிம்மன். நம்ம ஆரோக்கியமான எதிர்காலத்துக்காக தனிக்குடித்தனம் வரக் கூடாதா? ரொம்ப தூரம் எல்லாம் போக வேண்டாம். பக்கத்து தெருவில் வீடு பார்த்தா கூட எனக்குப் போதும்.” என்ற செம்பருத்தியை சில கணங்கள் ஆழ்ந்து பார்த்த நரசிம்மன்,
“என் அம்மா, அப்பாவை விட்டு தனியா போகும் அளவு தைரியம் எனக்குள்ள இருந்தா, நான் ஆசைப்பட்ட பாரியையே கல்யாணம் பண்ணி இருப்பேனே. எதுக்காக நானும் மனசு நொந்து, அவளையும் கஷ்டப்படுத்தி இப்படி ஒரு கல்யாணத்தை பண்ணி இருக்கணும்.” என்க, செம்பருத்தியின் மனமும், முகமும் மொத்தமாக துவண்டு போனது.
“உன்னை வருத்தப்பட வைக்க நான் இப்படிச் சொல்லல. உண்மையைச் சொன்னேன். என்னோட நிலைமை இது தான். என்னால் என் அம்மாவை விட்டுக்கொடுக்க முடியாது.
கொட்டுறது தேளோட குணம், அதைக் காப்பாத்த நினைக்கிறது என்னோட குணம். அவங்க உன்கிட்ட மட்டும் இல்ல என்கிட்டேயும் இப்படித் தான் பேசுவாங்க. இப்பன்னு இல்ல எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து இப்படித்தான்.
அப்பாவுக்கு கூட அப்பப்ப பேச்சு கிடைக்கும். குறிஞ்சியைத் தவிர வேற யாரையும் அவங்களுக்குப் பிடிக்காது. என் மேல் அன்பு இருக்கு தான். ஆனா அதைத் தாண்டி கோபத்தை தான் அதிகம் காட்டுவாங்க. அதுக்காக நானோ, அப்பாவோ அவங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம். நீயும் அப்படி இருக்கணும் னு நான் எதிர்பார்க்கிறேன்.
அவங்க கூட தான் நம்ம வாழ்க்கை. அவங்களோட வார்த்தைகளைப் பொறுத்துக்கோன்னு சொல்ல மாட்டேன். நீயும் பதிலுக்கு சண்டை போடு. நானும் முடிந்தவரை உனக்கு சப்போர்ட் பண்றேன். பத்து விஷயத்துக்கு பிரச்சனை நடந்தா நாலு விஷயத்தையாவது அம்மா யோசிப்பாங்க.
ஆனா எதுக்காகவும் அந்த வீட்டை விட்டு வெளியே போகனும் னு மட்டும் நினைக்காத. நான் எப்பவும் ஒத்துக்க மாட்டேன்.” என்றான்.
“இது அநியாயமா தெரியலையா சிம்மன். நாளும், பொழுதும் உங்க அம்மா கூட நான் சண்டை போட்டுக்கிட்டே தான் இருக்கணுமா?
என்னோட சின்னச் சின்ன ஆசைகளைக் கூட நான் பெரிய சண்டை போட்ட பின்னால் தான் நடத்திக்கணுமா? இப்படி வாழ்ந்தா நம்ம கல்யாண வாழ்க்கை சலிச்சுப் போயிடாதா?
அவங்க வயசுக்கு அவங்களா சில விஷயங்களைப் புரிஞ்சுக்கிட்டு விலகணும், அதை விட்டுட்டு எப்ப பார் என்கிட்ட போட்டிக்கு வராங்க. வீட்டு நிர்வாகமும் உங்க மேலான உரிமைகளும் அவங்களுக்கு மட்டுமே உரித்தானதா என்ன?
அவங்க சொல்ற சாப்பாடை அவங்க சொல்ற பாத்திரத்தில் தான் சமைக்கணும். அவங்க எந்தெந்த பொருளை எங்கெங்கே வைச்சிருக்காங்களோ நானும் அங்கேயே வைக்கணும்.
இந்த நேரத்துக்குள்ள சாப்பிடணும். வெளியே போனா இத்தனை நேரத்திற்குள் திரும்பி வந்திடணும். அவங்க கூப்பிடும் எல்லா இடங்களுக்கும் அவங்க கூடப் போகனும் னு எத்தனை கண்டிஷன்ஸ். மாத்தி ஒரு வார்த்தை சொல்லிட்டாலும் பேசி பேசி ஒரு வழி பண்ணிடுறாங்க. இந்தக் காலத்தில் எந்தப் பொண்ணு இதையெல்லாம் பொறுத்துப் போவா. என்னால் அவங்க கூட நிம்மதியா இருக்க முடியும் னு தோணல சிம்மன்.” மனதில் இருந்த எல்லாவற்றையும் கொட்டினாள் செம்பருத்தி.
“எங்க அம்மாவைச் சமாளிக்க உன்னால் மட்டும் தான் முடியும் னு சொல்லி தான் நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதா எனக்கு ஞாபகம் செம்பருத்தி.” ஒரு மாதிரி குரலில் நரசிம்மன் சொல்லிவிட என்ன பதில் சொல்லிவிட முடியும் அவளால்.
“உன்னால் முடியும் னு நீ சொன்ன அந்த ஒரு காரணத்துக்காகத் தான் நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு மறந்திருக்க மாட்டேன்னு நம்புறேன்.” என்க, அமைதியாகத் தலையாட்டினாள்.
அதன் பிறகு நரசிம்மன் எதுவும் பேசவில்லை. சில நிமிட மனப் போராட்டத்திற்குப் பிறகு அவன் உடன் செல்வதற்குத் தலையாட்டினாள் செம்பருத்தி. இப்போதும் மல்லிகாவுடன் ஒரே வீட்டில் இருப்பதற்கு அவளுக்குப் பெரிதாக விருப்பம் இல்லை தான். ஆனால் தன் திருமணத்திற்காக அவள் சொன்ன வார்த்தைகள் பொய்யாகிப் போவதை விரும்பவில்லை அவள்.
என்னவெல்லாம் சொல்லி இந்தத் திருமணத்தை நடத்திக்காட்டினாளோ அது அனைத்தையும் சரியாக நிறைவேற்றி, தன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நிஜம் என்பதை நிரூபிக்க நினைத்தாள்.
வாழ்க்கை வாழ்வதற்கு தான். அதை விடுத்து தான் சரி என்று சுற்றியுள்ள அனைவரும் ஒப்புக்கொள்ளவேண்டும் என்று நினைக்கும் யாருக்கும் மனநிம்மதி நிச்சயம் கிடைக்காது. செம்பருத்திக்கு இது புரியவில்லை.
தன்னுடைய பொருள்கள் அனைத்தையும் எடுத்து வைக்கத் துவங்கிய நரசிம்மனை சில நொடிகள் ஆழ்ந்து பார்த்தவள், பெருமூச்சோடு அறையில் இருந்து வந்து விஷயத்தை தாமரையிடம் சொன்னாள்.
“அதுக்குள்ள போறியா? இன்னும் கொஞ்ச நாள் இங்க இருப்பன்னு நினைச்சேன்.” என்ன முயன்றும் முடியாமல் தாமரையிடம் சற்றே மனத்தாங்கல் வந்து ஒட்டிக்கொண்டது.
பெண்ணாகப் பிறந்தவள் இன்னொரு இல்லம் சென்று வாழ்ந்து, அந்த இல்லத்தை தன் இல்லமாக மாற்றிக்கொள்ள பிறப்பெடுத்ததவள் என்று புரிந்தது தான். ஆனால் நிகழ்வது தன் பிரிய மகளுக்கு என்று நினைக்கையில் சற்றே வருத்தமாகத் தான் இருந்தது அவருக்கு.
“அவ இங்கேயே இருந்திட முடியாதேம்மா. சந்தோஷமா அவளை வழி அனுப்பி வைக்க வேண்டிய ஏற்பாட்டைப் பண்ணுங்க.” என்றபடி வாசல் தாண்டி உள்ளே வந்தான் கண்ணன்.
முந்தைய நாள் பாரிக்கு உதவி செய்த நாய்களில் ஒன்றை விடிந்தும் விடியாத வேளையில் தங்கள் வீட்டுக்கு தத்துப் பிள்ளையாக அழைத்து வந்திருந்தான். தங்கைக்கு செய்த உதவிக்கான நன்றிக்கடன் மற்றும் இனி இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நினைத்தான் அதை.
கண்ணன் அந்த நாயை வீட்டிற்குள் வரச்சொல்லி அழைத்துப் பார்த்தான். ஆனால் இத்தனை வருடங்களில் அதற்குத் தெரிந்த பழக்கம் போல், வீட்டு வாசலைத் தாண்டி உள்ளே வர மறுத்தது அது. கடைசியில் அதன் விருப்பத்திற்கே விட்டுவிட்டான் கண்ணன்.
“எதுக்குண்ணா இது?” செம்பா அருவருப்புடன் கேட்க, “நேத்து இராத்திரி சந்தேகப்படுற மாதிரி சுத்திக்கிட்டு இருந்ததா மூணு பேரை அரஸ்ட் பண்ணி இருக்காங்க போலீஸ். நம்மளோட பாதுகாப்புக்காக ஒரு சின்ன ஏற்பாடு.” என்றான். உள்ளுக்குள் பற்கள் அரைபட்டது அவன் மட்டுமே அறிந்த ஒன்று.
“எனக்குத் தான் நாய் பிடிக்காதே அண்ணா.” செம்பருத்தி கேட்க, “நீ தான் இன்னைக்கு கிளம்பிடுவியே. அப்பப்ப தானே வந்து போவ. அது உன்னைத் தொந்தரவு செய்யாது. நீ அதைத் தொந்தரவு செய்ய வேண்டாம். பாரிக்கு நாய் ரொம்பப் பிடிக்கும். நம்ம யார் கூடவும் அவ பேச மாட்டேங்கிறா. குறைந்தபட்சம் இது கூடவாச்சும் பேசுறாளா பார்க்கலாம்.” என மனதை மறைக்காமல் சொல்லிவிட்டான்.
அண்ணனின் நேரடியான வார்த்தைகள் பிடிக்கவில்லை செம்பருத்திக்கு. தான் இருந்தாலும் இல்லாமல் போனாலும் தனக்குப் பிடிக்காதது தன் வீட்டில் நடக்கக் கூடாது என்று நினைக்கும் இரகம் அவள். அவளுடைய இந்த அதிகாரம் எல்லாம் தாமரையிடம் மட்டும் தான் செல்லுபடியாகும். ஓரளவு பொறுத்துப் போகும் கண்ணன் சில நேரம் அவளைக் கண்டிக்கவும் தவற மாட்டான்.
அந்த வகையில் அண்ணன் ஒரு நாய்க்காக தன்னைப் பேசினால் அது தனக்குப் பெரிய அவமானம் என்று நினைத்து இந்த விஷயத்தில் சற்றே அமைதியாகிவிட்டாள் செம்பருத்தி.
முந்தைய நாள் நடந்த எதுவும் தெரியாமல், நடுவீட்டில் நின்று கொண்டிருந்த யாரையும் கவனிக்காமல் தன் போக்கில் தோட்டத்து பக்கம் செல்லும் பாரியை கண்கலங்க பார்த்தான் கண்ணன்.
இரவெல்லாம் பொட்டு உறக்கம் இல்லை அவனுக்கு. காலை எழுந்ததும் மருத்துவராகப் பணியாற்றும் நண்பன் மனைவிக்கு அழைத்து தங்கையின் நிலையைப் பற்றி சொல்லி விவரம் கேட்டான்.
“சோம்னாம்புலிசம் னு சொல்லப்படும் தூக்கத்தில் நடக்கும் வியாதி எதுக்காக வேண்ணா வரலாம் கண்ணன். சரியான உறக்கம் இல்லாமல் இருப்பது, மனஅழுத்தம், உடல் சோர்வு, உடல் நிலை சரியில்லாமல் இருப்பது மாதிரி எந்த காரணத்தால் வேண்ணா வரும். சின்னவங்களில் இருந்து பெரியவங்க வரை இந்த பிரச்சனை காமனா இருக்கு. இருபது நிமிஷத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை இந்த துயில்நடைக் காலம் இருக்கலாம் னு ஒரு சர்வே சொல்லுது.
படுத்திருக்கும் மெத்தையில் இருந்து எழுந்து உட்கார்வது, உறக்கத்திலேயே பாத்ரூம் போய் வருவது, வீட்டுக்குள் நடப்பது, தண்ணீர் குடிப்பது மாதிரி சாதரண துயில் நடை நிலையில் யாருக்கும் பெரிதா பாதகம் வராது.
ஆனா சிலர் தங்களை அறியாம உறக்கத்தில் யாருக்காவது போன் பண்ணுவாங்க, மனசில் அழுத்தும் விஷயங்களை தங்களையும் மீறி சொல்வாங்க. உணர்வில்லாத நிலையில் சமைப்பாங்க. வீட்டு கதவைத் திறந்து வெளியே போவாங்க. சிலர் தங்களோட ஆள் மன கோபத்தின் விளைவா வீட்டில் இருக்கும் யாரையும் கொல்ல கூட வாய்ப்பிருக்கு.” என்று சொல்லும் போது கண்ணனுக்கு நெஞ்சே நின்று போனது ஒரு நொடி.
“இப்படியானவங்களுக்கு துயில் நடை நடக்கும் போது, நடந்த எதுவும் அடுத்த நாள் காலையில் நினைவு இருக்காது. உங்க தங்கை முதல் படியில் தான் இருக்காங்க.
அவங்களுக்கு அமைதியான சூழ்நிலையை உருவாக்கி கொடுங்க. நல்லா சாப்பிட வைங்க. சாப்பாடும், அமைதியான மனநிலையும் ஆழ்ந்த உறக்கத்தைக் கொடுக்கும். அதனால் தன்னால் இந்த பாதிப்பு குறைஞ்சிடும்.” என்று முடித்தார் அந்த மருத்துவர்.
அதை நினைத்துப் பார்த்தவனுக்கு, நரசிம்மன் மட்டும் கதவு திறந்து கிடந்ததைக் கண்டுபிடிக்காமல் விட்டிருந்தால் என்னும் நினைப்பு வந்து வேதனை நெஞ்சை கசக்கி பிழிந்தது.
“அம்மா இனிமேல் எதை மறந்தாலும் இராத்திரி கதவைப் பூட்டி சாவியை எடுக்க மறந்திடாதீங்க.” தங்கை பாரி சென்ற திசையைப் பார்த்துக்கொண்டே சொன்னான் கண்ணன். திருடன் பயத்தை நினைத்து சொல்கிறான் போல என நினைத்து ஏற்றுக்கொண்டார் தாமரை.
கண்ணன் பாரியை பார்க்கப் போக, தோட்டத்தில் இருந்த பப்பாளி இலையை ஒடித்து அதில் இருந்த பாலை எடுத்து உள்ளங்காலில் தேய்த்துக்கொண்டிருந்தாள் அவள்.
“என்ன ஆச்சு பாரி.” என்றபடி தமையன் பதறிக்கொண்டு அருகே செல்ல, அவனைக் கண்டுகொள்ளாமல் வேலையில் கண்ணாக இருந்தாள்.
பூமலரைப் போன்ற மென்மையான அவள் உள்ளங்காலில் இரண்டு மூன்று இடங்களில் பாளம் பாளமாக வெடித்திருந்தது.
“என்னடா இது. எப்ப ஆச்சு. எப்படி ஆச்சு.” என்றபடி கண்ணன் தங்கையின் பாதம் தொடப்போக வெடுக்கென்று எழுந்தவள், அவனை சட்டை செய்யாமல் அங்கிருந்து தன் அறை சென்றடைந்தாள். தங்கை சென்ற திசையை சோகமாக பார்த்துக்கொண்டிருந்தவன் தோளில் கரம் வைத்து கவனம் கலைத்தாள் குறிஞ்சி.
பாரிக்கு நேர இருந்த குரூரத்தை எடுத்துச் சொல்லி, அதனால் கண்ணன் மனம் படும்பாட்டையும் குறிப்பிட்டு காட்டி, முடிந்தவரை அவனுக்கு ஆதரவாக இரு என்று தங்கையைத் தயார் செய்திருந்தான் சிம்மன். இப்போது இருக்கும் நிலையில் இவர்கள் வாழ்க்கையாவது விடியாதா என்னும் ஏக்கம் அவனுக்கு.
“அவளை சரி பண்ணவே முடியாதா குறிஞ்சி?” அழுதுவிடும் குரலில் கேட்டான் கண்ணன்.
“இப்ப புலம்பி என்ன பிரயோஜனம்?” என்று கேட்க வாய் வரை வார்த்தைகள் வந்த போதும் அதைச் சொல்லி எதிரே நிற்கும் கணவனை மேலும் காயப்படுத்த விரும்பாமல் அமைதியாக அவன் கரத்தில் அழுத்தம் கொடுத்து ஆதரவு காட்டினாள் குறிஞ்சி.
“நாங்க பண்ணது சின்ன தப்பு இல்லன்னு எனக்குத் தெரியும் தான். ஆனா எவ்வளவு பெரிய தப்புன்னு இப்ப தான் புரியுது. அவ என்கிட்ட பேச வேண்டாம். முன்ன மாதிரி பாசமா இருக்க வேண்டாம். நடந்த எல்லாத்தையும் கடந்து சந்தோஷமா வாழ்ந்தா அதுவே எனக்குப் போதும்.” என்றவன் ஆதரவுக்காக மனைவியை அணைத்துக்கொண்டான். அந்த செயலில் ஒருநொடி திகைத்தாலும் சமாளித்து நின்றாள் குறிஞ்சி.
நிலத்தில் பட்டாலே வலியெடுக்கும் நிலையில் இருக்கும் பாதத்தைக் கொண்டு நடக்க முடியாமல் நடந்து வந்த இளைய மகளைப் பார்த்து, “பாரி, உன் அக்கா அவ மாமியார் வீட்டுக்குப் போறா. வெறும் கையோட அனுப்ப முடியாது. பலகாரம் செய்யணும், கொஞ்சம் உதவிக்கு வரீயா?” எனக் கேட்ட தாமரையை பேய் போல் முறைத்துவிட்டு தன் அறைக்குள் வந்தாள் பாரிஜாதம்.
மெத்தையில் இரண்டு மூன்று கதைப்புத்தகங்கள் கிடந்தது. இரவெல்லாம் பொட்டு உறக்கம் இல்லாமல் அவள் படித்து முடித்த கதைகள் அவை அனைத்தும்.
முல்லை வீட்டில் இருந்து வந்த நாளில் இருந்தே உறக்கம் குறைவு தான் என்றாலும், கடந்த சில நாள்களாக உறக்கம் என்பது மருந்திற்கு கூட இல்லாமல் போயிற்று.
எப்பொழுதாவது தன்னை மறந்து உறங்கினாலும், இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் விழித்து அமர்ந்துகொள்வாள். அப்படி உறங்கிய குறுகிய நேரத்திற்குள் தான் அவள் நடைபயணம் மேற்க்கொள்வது.
அவள் நம்பிய அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து செய்த துரோகத்தின் நினைவுகள், நொடி நேரம் கூட இடைவெளி கொடுக்காமல் நான்கு திசைகளில் இருந்தும் தொடர்ந்து தாக்கி தொந்தரவு செய்தது அவளை.
தலையின் நான்கு பக்கமும் குத்துச்சண்டை வீரனின் கையுறை வந்து மோதிக்கொண்டே இருப்பது போல் தலையும், மனமும், உடம்பும் கனத்துக் கிடந்தது. அவற்றோடு போராடி வெற்றி பெற முடியாமல் களைத்துப் போனாள் பாரி.
இத்தனை வருட வாழ்க்கையில் இன்பம், துன்பம், அதிர்ச்சி, ஆச்சர்யம், பயம் எனப் பலவகை நினைவுகளை தன்னில் தனித்தனியாக சேகரித்து வைத்திருந்த பாரியின் மூளை, தன்னில் குடிகொண்டிருந்த அனைத்து நிகழ்வுகளையும் ஒரே நாளில் திருட்டு கொடுத்தது போல், செம்பருத்தி நரசிம்மனைத் திருமணம் செய்யக் கேட்டதில் இருந்து அவர்கள் இருவரும் சட்டப்படியும், சம்பிராதப்படியும் கணவன் மனைவியாக மாறிய நேரம் வரை நடந்த நிகழ்வுகளை மட்டும் திரும்பத் திரும்ப நினைவு படுத்தியது பாரிக்கு. அந்த நினைவுகளின் சுழல் அவளை முழுதாகத் தன்னுள் இழுத்தது. மூச்சுமுட்டுவது போல் உணர்ந்தாள் பாரி.
நடந்தாலும், படுத்தாலும், உண்டாலும் உறங்கினாலும் என்ன செய்தாலும் வேண்டாத அந்த நினைவுகள் தான் வந்து வாட்டியது. என்ன செய்தும் அந்த நினைவுகளின் நீட்சியை தடுக்க முடியவில்லை அவளால்.
இதில் இருந்து தப்பிக்க என்ன செய்வது என்று இடிஇடிக்கும் தலையைப் பிடித்தபடி தவித்தவளுக்கு தீர்வொன்று கிடைத்தது. அது நல்ல தீர்வா இல்லை தற்காலிகத் தீர்வா என்றெல்லாம் யோசிக்கவில்லை அவள்.
மரத்தில் இருந்து கீழே விழும் சமயத்தில் விழுதாக இருந்தாலும் சரிதான் பாம்பாக இருந்தாலும் சரி தான், பிடித்துக்கொள்ள ஏதேனும் கிடைத்தால் போதும் என்று நினைக்கும் நிலையில் தான் அவள் இருந்தாள்.
பொதுவில், மொத்த கவனத்தையும் ஒன்று திரட்டி ஒரு விஷயத்தில் செலுத்தும் போது, மற்ற தொந்தரவுகள் யாவும் குறிப்பிட்ட நேரத்திற்கு நம்மைத் தொந்தரவு செய்யாது என்பதை அவள் அறிவாள்.
படிக்கும் காலத்தில் கவனம் சிதறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஹெட்போன் மூலமாக காதிற்குள் பாடல்களை ஒலிக்க விட்டுவிட்டு படிக்கத் துவங்குவாள். அவள் கவனம் முழுவதும் படிப்பில் இருந்தால், பாடல் காதில் கேட்காது. பதிலாக சற்றே அவள் கவனம் சிதறினாலும் பாடல் கேட்கத் துவங்கிவிடும்.
அந்த வழிமுறையை தன்னைத் துரத்தும் பொல்லாத நினைவுகளில் இருந்து தப்பிப்பதற்காக பயன்படுத்த நினைத்தாள் பாரி.
அதற்கு அவளுக்குத் தேவைப்பட்டது எல்லாம், அவள் கவனம் மொத்தத்தையும் தனக்குள் இழுத்துக்கொள்ளும் திறமை வாய்ந்த ஒன்று. அப்படி அவள் தேர்ந்தெடுத்தது கதைப் புத்தகங்கள்.
புத்தகங்கள் மனிதனின் வாழ்வை மாற்றும் வல்லமை கொண்டது என்கிறார்கள் அறிஞர்கள். பாரிக்கும் அந்தக் கூற்றில் உடன்பாடு உண்டு. கதைகளைப் படிக்கும் போது அவள் கவனம் முழுவதும் கதையில் தான் இருக்கும். வரிகள் அனைத்தும் காட்சிகளாகி கண் முன் ஓடத்துவங்குவதால் அந்த நேரம் மூளை வேறு எதையும் நினைவுபடுத்தாது.
தற்சமயம் பாரிக்கு அதிகம் தேவைப்பட்டதும் அப்படியான கவனச்சிதறல்கள் தான் என்பதால் ஆர்வமாக கதை படிக்க எடுத்தாள். அவள் நினைத்தது சற்றே நடந்தது. ஆனால் சின்ன மாற்றமாக ஒரு கதையைப் படித்து முடிக்கும் வரை அமைதியாக இருக்கும் அவள் மூளை, அவள் புத்தகத்தை மூடி வைத்த அடுத்த கணம் தன் வேலையை ஆரம்பிக்கும்.
அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, காதலன் என அனைவருக்கும் நல்லது மட்டுமே நினைத்த தனக்கு அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எத்தனை பெரிய பாவத்தை செய்துவிட்டார்கள் என்று நினைத்து நினைத்து தவிப்பாள். உறங்கும் மிகக்குறுகிய நேரமும், கதைகள் படிக்கும் நேரமும் மட்டும் தான் அவளுக்கு பொல்லாத இந்த நினைவுகளின் தொல்லையில் இருந்து விடுதலை கிடைத்தது. மற்ற நேரங்களில் எல்லாம் தொடர் தோல்வி தான்.
அந்த தோல்வியை பாரி அறவே வெறுத்தாள். தனக்குப் பிடிக்காத நினைவுகள் தனக்கு நினைவு வரவே கூடாது என்று தீர்க்கமான முடிவுக்கு வந்தாள். அதற்காக கதைகள் படிக்கும் நேரத்தை அதிகரிக்க ஆரம்பித்தாள்.
பசி, தாகம், இயற்கை உபாதைகள், உறக்கம் என அனைத்தையும் கடந்து, கதைகள் ஒன்றே உயிர்வாழத் தேவையான அத்தியாவசியம் என்பது போல் நாளும் பொழுதும் கதை புத்தகங்களோடு நேரம் செலவிடத் துவங்கினாள் பாரி.
வீட்டில் அவள் சேகரித்து வைத்திருந்த புத்தகங்களைத் தாண்டி, ஐயாயிரம் ரூபாய் கொடுத்து அவள் தேர்ந்தெடுத்து வாங்கிய மற்ற புத்தகங்களும் வெகு விரைவில் தீர்ந்து போய்விட, மின் புத்தகங்களுக்கு மாறினாள்.
அள்ள அள்ள குறையாத அட்சயப்பாத்திரம் போல் தேடும் பக்கம் எல்லாம் கதைகள் கொட்டிக்கிடந்த இணையதளம் அவள் வேண்டிய கவனச்சிதறலை நல்முறையில் கொடுத்தது. சரியான உறக்கம் இல்லாததாலும், தொடர்ச்சியாக அலைபேசியை உற்று நோக்கி படிப்பதாலும் கண்கள் எரிந்து வலிக்கத் துவங்கியது. அது கூட கதைகள் படிக்கும் வேகத்தையோ இல்லை அளவையோ குறைக்கவில்லை என்பது வேதனையான உண்மை.
நினைத்தது போலவே வேண்டத்தகாத நினைவுகளும், விரும்பத்தகாத காட்சிகளும் கண்முன் வந்து போவது குறைந்திருக்க சற்றே நிம்மதி கிடைத்தது பாரிஜாதத்திற்கு. ஆனால் இதுயாவும் தற்காலிகத் தீர்வு தான் என்பதை அவள் உணரவில்லை.
மார்பில் வலி என்று வந்தால் உடனடியாக பிரச்சனையின் ஆதிமூலத்தைக் கண்டுபிடித்து சரிசெய்ய வேண்டும். அப்படிச் செய்யாமல் தற்காலிகத் தீர்வாக வலிநிவாரணிகளை மட்டுமே எடுத்துக்கொண்டால் பிரச்சனை பெரிதாகி உயிருக்கே ஆபத்தானதாக மாறிவிடும் என்பதை பாரி மறந்திருந்தாள்.
தற்காலிகத் தீர்வுகள் பிரச்சனையைத் தீர்க்காமல் வேறு சில பிரச்சனைகளையும் சேர்த்து தான் கொண்டு வரும் என்பதை புரியவைக்க அவள் கடினமான காலத்தில் யாரும் அவள் அருகே இல்லை.
தன்னை மொத்தமாகப் பிடித்து வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக நெறுக்கி மூச்சுமுட்ட வைக்கும் பொல்லாத நினைவுகள் என்னும் மாயவலையில் இருந்து தப்பிப்பதற்காக, தற்காலிகத் தீர்வாக பாரி தேர்ந்தெடுத்த கதைஉலகம் மொத்ததமாக அவளைத் தன்னுள் இழுத்துக்கொண்டது. அதன் விளைவாக இதுவரை இருந்த பிரச்சனையைத் தாண்டி வேறு மாதிரியான பிரச்சனைகள் சூழ்ந்தது பாரிஜாதத்தை.
Latest Post: பாய்மரக் கப்பல் - Story Thread Our newest member: Manjula Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page