All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

வரமாய் வந்த உயிரே 29.2

 

VSV 41 – வரமாய் வந்த உயிரே
(@vsv41)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 46
Topic starter  

அத்தியாயம் 29.2

இறுதி அத்தியாயம்

குழந்தைக்கு இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது. இரண்டு மாதங்களும் இரண்டு நொடிபோலக் கண் மூடித் திறப்பதற்குள்ளாகவே கடந்திருந்தது. புது அம்மாவாக ஆரம்பத்தில் தடுமாறியவள் பின் மெது மெதுவாக அனைத்தையும் கற்று தெரிந்து கொண்டாள். தன் புத்தம் புது அன்னைக்கு எந்தச் சிரமமும் கொடுக்காமல் அன்னை கொடுக்கும் பாலை அருந்திவிட்டு இரவிலும் தொல்லை செய்யாமல் சமர்த்தாகத் தூங்கி, இரவில் ஒரு நேரம் மட்டுமே விழித்துப் பாலுக்காக அழுபவள் அன்னை கொடுக்கும் பாலை குடித்துவிட்டு தூங்கி விடுவாள். அவர்களின் தேவதை பெண்.

குழந்தைக்கு மூன்று மாதம் நடக்கும்போது பெயர் சூட்டு விழாவை வைத்திருந்தார்கள் சக்தியும் வைஷ்ணவியும். பெரிதாகக் கூட்டம் சேர்க்காமல் இரு வீட்டு சொந்தங்களை மட்டுமே அழைத்திருந்தார்கள். இடையில் அனைவருமே தனித்தனியாக ஒரு முறை வந்து குழந்தையைப் பார்த்துச் சென்றார்கள். பாட்டியைத் தனியாக விட்டு வர முடியாததாலும் விசாலாட்சியும் கைக்குழந்தையுடன் அங்கு இருக்க. வள்ளி விழாவுக்கு வராமல் அவர்களோடு இருந்து கொண்டார்.
அவர்களின் வீட்டு சார்பாக வைஷ்ணவியின் தந்தை, குமரன், கல்பனா அவர்களின் பிள்ளைகளோடு வந்திருந்தார்கள்.
காயத்ரி அவள் கணவன் குழந்தைகள் மாமியாருடனும் சஞ்சனா அவளின் குடும்பத்தோடும் விழாவில் வந்து கலந்து கொண்டார்கள்.

சக்தி, வைஷ்ணவி இருவரும் சேர்ந்து குழந்தைக்கு அவிஷா (கடவுளின் பரிசு)
என்று பெயர் சூட்டினார்கள். குழந்தையின் தாய் மாமனாகக் குமரன் குழந்தையின் கழுத்தில் செயின் மற்றும் இரு கைகளுக்கும் தங்க காப்பை அணிவித்தான். குழந்தையின் தாத்தாவாக வைஷ்ணவியின் தந்தை இடுப்பிற்கு தங்க கொடியும் காலிற்கு தங்கத்தில் தண்டையும் அணிவித்தார். விசாலாட்சியின் கணவர் அவர் சார்பில் குழந்தையின் கழுத்தில் தங்க செயினை அணிவித்தார். அத்தைகளாகக் காயத்ரி குழந்தைக்குப் பிரேஸ்லெட்டும் சஞ்சனா மோதிரமும் அணிவித்தார்கள்.

மகள்கள் குழந்தைக்குச் செய்த பரிசைப் பார்த்துப் பொடு பொடுவென்று வந்தது பவித்ராவிற்கு. காயத்ரியை கூடப் பெரிதாக அவர் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் சஞ்சனாவின் மீது கடும் கோபத்தில் இருந்தார் தனியாக மகள் எப்பொழுது மாட்டுவாளெனப் பார்த்திருக்க வசமாக வந்து சிக்கினால் அவளும்.
"ஏன் டி இதுதான் உங்க அண்ணன் குழந்தைக்குச் செய்ற பரிசா.?" எனக் கோபமாகக் கேட்க.
"ஏன் மா.?" என்று கேட்டவளுக்கு.
"என்ன ஏன் மான்னு கேட்கிற.?
உனக்கு எப்படி எல்லாம் சீர் செய்து கல்யாணம் பண்ணினான். உன் குழந்தைக்கு எவ்வளவு நகை செஞ்சு போட்டான். ஆனா அவன் குழந்தைக்கு நீ ஒரு மோதிரத்தை எடுத்துட்டு வந்து இருக்க."என்று கோபமாகக் கேட்க.

"மமா அண்ணா குழந்தையாவே என்னால நினைக்க முடியல. அக்கா குழந்தை என்று தான் எனக்கு ஞாபகம் வருது."
"எடு விளக்கமாத்த. இந்த நினைப்போட இனி இந்த வீட்டு படி ஏறாத." என்ற அன்னையின் கோபத்தில் சற்று பயந்து போனாள் அவள்.
"அம்மா சாரிமா. இனி அப்படி நினைக்கமாட்டேன். குழந்தைக்கு முடி இறக்கி காது குத்துவீங்கல்ல அப்போ நல்ல சிறப்பா சீர் செய்யறேன்."என்று வேகமாகக் கூறியவளை முறைத்து விட்டே அகன்றார் அவர்.

ஒவ்வொரு நாளும் குழந்தையின் ஒவ்வொரு செயலையும் கண்டு ரசித்து மகிழ்ந்தார்கள் சக்தியும் வைஷ்ணவியும். கடையைச் சாத்திவிட்டு இரவில் வெகுவிரைவாகவே வீடு வந்து சேர்ந்து விடுவான் சக்தி தன் செல்ல மகளுக்காக. இவனின் குரல் நன்றாகத் தெரிந்திருந்தது அந்தச் சின்ன வாண்டுக்கு...

இவன் வந்ததும், அவன் குரல் கேட்டதும், படுத்தப்படியே அவனை நோக்கிப் பம்பரம் போலச் சுழன்று அவன் செல்லும் திசையெல்லாம் அவனைப் பார்த்தபடி அழைப்பவள் அவன் கண்டு கொள்ளாமல் நகர்ந்தாள் பெரும் குரலில் அழுகையை தொடங்கி விடுவாள். அப்படி மகள் அவனைத் தேடுவதிலும் அவன் குரலைக் கேட்டுத் திரும்புவதிலும் பெரும் ஆனந்தமும், பெருமையும் அந்தப் புதிய தந்தைக்கு. பிள்ளையின் பால் மனத்தை நுகர்ந்து நுகர்ந்து தன் சுவாச பையை நிரப்பிக் கொள்வான் அவன். எப்பொழுதும் குழந்தையின் வாயின் மீது தன் மூக்கை வைத்துக் கொண்டிருப்பவனை எவ்வளவு முறை வைஷ்ணவி கண்டித்தாலும் இந்த பழக்கத்தை மட்டும் மாற்றவே முடியவில்லை அவனால். அப்படித்தான் அன்று பால் குடித்து ஏப்பம் விடாமல் இருந்த குழந்தையை மடியில் அமர்த்தி முதுகை தட்டிக் கொடுத்துக் கொண்டிருக்க. அவளிடம் இருந்து குழந்தையை வாங்கியவன் எப்போதும் போல அதன் வாயில் தன் மூக்கை வைத்து பால் வாசத்தை உணர்ந்து கொண்டிருக்க ஜீரணமாகாத குழந்தை அப்படியே அவன் முகத்தின் மீது வாந்தி எடுத்தாள்.

பார்த்துக் கொண்டிருந்த வைஷ்ணவிக்கு சிரிப்பு பொத்து கொண்டு வந்தது.
"சொன்னா கேக்குறீங்களா..? தேவையா இது..?" என்று கூறியபடி டிஷ்யூ பேப்பரை எடுத்து அவன் முகத்தை துடைத்துவிட்டு
"போய் முகம் கழுவிட்டு வாங்க. போங்க.."
"இதெல்லாம் அபிஷேகம் டி யாருக்கும் கிடைக்காது.."என்று கெத்தாக கூறிவிட்டு எழுந்து சென்றான் அவன்.

"அவி மா.." என்று இவன் கூப்பிடும் ஒரு குரலுக்கு எங்கிருந்தாலும் அவள் கண்கள் தந்தையை நோக்கி சென்றுவிடும். எவ்வளவுதான் தந்தையை தேடினாலும். அவன் மடியில் அமர்ந்து அவன் முடியைப் பிடித்து இழுத்து, அவன் மூக்கை கடித்து, கன்னத்தைத் தன் அரிசி பற்களால் இழுத்து எச்சில் ஒழுக முத்தம் என்ற பெயரில் நக்கி வைப்பவளுக்கு தூங்கும் நேரம் மட்டும் தன் அம்மா வேண்டும். சின்ன ராணிக்கு.

மகள் செய்யும் அத்தனைக்கும் தன்னை ஒப்பு கொடுப்பவன். அவள் தூங்கும் நேரம் சமர்த்தாக வைஷ்ணவியிடம் கொடுத்து விடுபவன். அவள் பால் குடித்து தூங்கும் வரை பிஞ்சு கால்களைத் தடவிக்கொண்டே இருப்பான்.
இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் மெத்தென்ற கால்களைத் தன் மீசை கொண்டு கூச செய்து அவள் காலை இழுத்துக் கொள்ளும்போது முத்தமிட்டு தன் கண்களின் மேல் வைத்துக் கொள்வான் அந்தப் பிஞ்சுப் பாதங்களை. மகளோடு கணவன் செய்யும் அட்டூழியங்களை மகளை மடியில் போட்டுத் தாலாட்டிக் கொண்டே பார்த்து ரசிப்பாள் வைஷ்ணவி.

இப்படி குழந்தையின் ஒவ்வொரு அசைவிலும் மகிழ்ந்து அவள் ஒவ்வொரு மாதமாக வளர இவர்களும் வளர்ந்தார்கள் அவளுடன். ஒவ்வொரு மாதத்திலும் குழந்தைக்கு என்னென்ன ஊட்டச்சத்து கொடுக்க வேண்டும். என்னென்ன திட உணவை ஆரம்பிக்க வேண்டும் என்று மருத்துவரின் பரிந்துரையில் சரியாகக் கடைப்பிடித்தாள். அதன்படி குழந்தையின் வளர்ச்சியும் இருந்தது. தவழும் மாதத்தில் தவழ்ந்து. பல் முளைக்கும் மாதத்தில் பல் முளைத்துச் சரியாக ஒரு வயதில் எட்டெடுத்து வைத்து நடக்க ஆரம்பித்தாள் அவர்களின் செல்ல மகள். அத்துடன்
"ப்பா ம்மா." என்று பேசவும் ஆரம்பித்திருந்தாள் தன் கொஞ்சும் குரலில்.
மகள் வந்தபிறகு நேரம் ரெக்கை கட்டி பறந்தது சக்திக்கும், வைஷ்ணவிக்கும். மகளைக் கொஞ்சுவதுடன் மனைவியையும் கொஞ்சிக் கொள்வான் சக்தி மிச்சம் வைக்காமல். அவர்களின் வாழ்வு பெரும் நிம்மதியில் திளைத்திருந்தது. மகளின் வரவால்.

தாத்தாவைக் கண்டால் பெரிதும் கொண்டாட்டம்தான் இந்தக் குட்டிக்கு அவர் எப்பொழுதும் தூக்கி கொண்டு அலைவதிலும் தன் கடையில், அவளையும் மடியில் அமர்த்தி வைத்து வியாபாரம் பார்ப்பதும், அவளுக்கு வேடிக்கை காட்டுவதும் குதிரை சவாரியை போல அவர் வீட்டின் உள் வந்தால், இரு கைகளையும் அவர் முன் நீட்டி அவரை மறித்து நின்றபடி தூக்கச் செய்து வெளியில் கைக்காட்டுவாள். தன்னை தூக்கிக் கொண்டு வெளியில் செல் என்பது போல. எல்லோரிடமும் ஒட்டிக்கொண்டு அதிகாரம் செலுத்தும் இவளுக்குப் பாட்டியை மட்டும் ஆகவே ஆகாது. ஏனோ அவரிடம் செல்லவும் மாட்டாள். அவராக ஆசை கொண்டு தூக்கினாலும் பெருங்குரலெடுத்து அழுது ஊரைக் கூட்டிவிடுவாள்.

தன் கணவனும், மகனும் வீட்டிற்குள் வந்தவுடன் அவர்களை வேறு எதுவும் செய்ய விடாமல் அவர்கள் முன் மறித்து நின்று தூக்கச் சொல்லி மறுபடியும் வெளியில் அவளைத் தெரு முனைவரை ஒரு ரவுண்டு அழைத்துச் சென்று விட்டால்தான். அவர்களை வேறு வேலை பார்க்க விடுவாள். அப்படியான நேரங்களில், இவள் முன்வந்து மிரட்டும் பாட்டியைப் பிடிப்பதே இல்லை அவளுக்கு

"ஏன் டி.? சின்னக் குட்டி. இப்ப தானே வீட்டுக்குள்ள வராங்க. உடனே உன்னைத் தூக்கிக்கிட்டு வெளியில சுத்த போகணுமோ. வந்தவங்களால சூடா ஒரு டீ, காபி குடிக்க முடியுதா.? இல்ல பசிக்கு உடனே சாப்பிட முடியுதா.? ரொம்ப தான் டி அராஜகம் பண்ணி. மயக்கி வச்சிருக்க நீ." என்றபடி அவள் கன்னங்களை நிமிண்டுபவரின் கைகளைத் தட்டி விட்டு
"பே." என்று கூறி தன் பின் பக்கத்தைத் திருப்பி அவரிடம் ஆட்டிவிட்டு ஓடிச் சென்று தன் அன்னையிடம் அடைக்கலம் புகுந்து விடுவாள். பெரும் சிரிப்புடன்.

"இதோ வரேன் டி…" என்பவருக்கும் சிரிப்பு பொத்துக் கொண்டு வரும்.

குழந்தையின் முதல் வருட பிறந்த நாளும் நெருங்கி வந்தது. அத்துடன் முடி இறக்கி, காது குத்தும் வைபவமும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.
தாய்மாமன் மடியில் வைத்துக் குலதெய்வ கோவிலில்
அனைத்தும் சிறப்பாக நடந்தேறியது. குட்டி காதுகளில் குட்டி ஜிமிக்கி அழகாக இருந்தது. இதற்கும் சிறப்பாகவே சீர் செய்தனர் வைஷ்ணவியின் குடும்பத்தினர். அன்னைக்கு பயந்தே சஞ்சனாவும் நன்றாகவே சீர் செய்திருந்தாள் அண்ணன் மகளுக்கு. மறுநாள் பிறந்தநாள் பார்ட்டியை வீட்டிலேயே அலங்காரத்துடன் ஏற்பாடு செய்திருந்தார்கள். உறவினர்கள் குழந்தையைத் தூக்கி கொஞ்சம் போது எந்த உணர்வும் ஏற்படாத வைஷ்ணவிக்கு காயத்ரியோ அவள் கணவனோ குழந்தை கொஞ்சும்போது மனம் படபடக்க அவர்களையே பார்த்துக் கொண்டிருப்பாள். தன்னையும் அறியாமல் ஒருவிதமான பயத்தில்.

அன்றும் அப்படித்தான் பட்டுப் பாவாடையை போட்டுக் கொண்டு தளிர் நடையிட்டு நடந்து வந்த சின்னவளை அள்ளிக்கொண்ட செல்வம்
"செல்லக்குட்டி." என்று கொஞ்ச பார்த்திருந்த வைஷ்ணவிக்கு தான் மனம் பரிதவித்தது.
"மாமா பாருங்க. மாமா பாருங்க." என்றவன்
"அத்தை பாருங்க." என்று மனைவியைக் காட்டவும் மறக்கவில்லை.. இப்படி அவன் சொன்னபிறகு தான், இழுத்து வைத்த மூச்சை சாவகாசமாக வெளியிட முடிந்தது அவளால். இனி தன் பயம் அர்த்தமற்றது என்று ஆசுவாசம் கொண்டாள்.

யார் தூக்கினாலும் தாவி அவர்களிடம் சென்று விடும் அவிஷா. ஏனோ காயத்ரியிடம் மட்டும் செல்லவே மாட்டாள். தன் முகத்தை மறைத்து ஓர கண்ணால் அவளைப் பார்ப்பவள்.
"வாங்க குட்டி." என்று அவள் கொஞ்சி அழைத்தாலும், முகத்தைத் திருப்பிக்கொண்டு தன் அன்னையை நோக்கி ஒரே ஓட்டமாக ஓடி விடுவாள்.
தன்னைப் பிடிக்க வரும் பூச்சாண்டியாகவே அவளை நினைத்து அவள் பக்கம் வந்தாலே இவள் எதிர்பக்கம் ஓடிவிடுவாள் தன் அன்னையை தேடி.

இப்படியே நாள் ஒரு மேனியும்பொழுது ஒரு வண்ணமும் ஆக நாட்கள் மகிழ்வுடன் நகர்ந்தது சக்தி மற்றும் வைஷ்ணவிக்கு அவர்களின் செல்ல மகளுடன்.


   
ReplyQuote

You cannot copy content of this page