All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

வரமாய் வந்த உயிரே 18

 

VSV 41 – வரமாய் வந்த உயிரே
(@vsv41)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 35
Topic starter  

அத்தியாயம் 18

 

மருத்துவர் கொடுத்திருந்த ஒரு மாத மருந்து மாத்திரையும் முடிந்திருந்தது.

அதற்குப் பின் வந்த இரண்டு மாதங்களில் முந்தைய மாதம் போலவே நான்கு நாட்கள் மாதவிடாய் தள்ளி வந்தது. அதற்குப் பின்னான மாதத்தில் பத்து நாட்கள் தள்ளி வந்தது. அந்த இடைப்பட்ட நாட்களில் ஆவலும் பயமும் கலந்து அதீத மன உளைச்சலுக்கு உள்ளானாள் வைஷ்ணவி. ஒவ்வொரு மாதமும் தள்ளிப் போகும்போது குழந்தையாக இருக்குமோ.? என்ற ஆர்வமும் ஆசையும் அவள் கண்களில் மின்ன அதற்குச் சற்றும் குறைவில்லாத பயமும் அவளை ஆக்கிரமித்து இருந்தது.

ஆசையும் எதிர்பார்ப்பும் பொய்யாகி போய் மாதவிடாய் வந்தபிறகு வேதனையிலும் வலியிலும் துடித்துப் போனாள் பெண் அவள். மனைவிக்கு உண்டான வேதனையில் சற்றும் குறைவு இல்லாமல் அனுபவித்தான். சக்தியும். சில நேரம் அவளை அன்பால் காதலால் அரவணைத்து அவளைச் சமாதானம் செய்பவன். சில நேரம் கோபம் கொண்டு சண்டையிட்டு சமாதானம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. 

 

"இங்க பாரு வைஷு. நீ இப்படியே அழுதுகிட்டு இருந்தேன்னு வச்சுக்கோ, நான் வீட்டுக்கே வரமாட்டேன். கடையிலேயே இருந்துப்பேன். ஏற்கனவே தலைக்கு மேல வேலை இருக்கு எனக்கு. இதுல உன்னையே பாத்துட்டு இருக்க முடியாது என்னால. உனக்கு மட்டும் தான் வலிக்குதா.? எனக்கும் தான் டி வலிக்குது. நீ அழுது, அரற்றி உன் வேதனைகளை என்கிட்ட கொட்டி ஆதரவு தேடி சமாதானம் ஆகிடுற. நான் என்ன பண்றது.? யார்கிட்ட போறது.? உன்னை மட்டுமே யோசிக்கிற நீ, என்னைப் பத்தி யோசிக்கிறியா.? எனக்கும் வலிக்குன்னு எப்ப புரிஞ்சுப்ப.? ரொம்ப வலிக்குது டி நீயும் என்னைக் கஷ்டப்படுத்தாத. கையில் கிடைக்காத குழந்தைக்கு ஏங்கி, ஏங்கி என்னைத் தான் தவிக்க விடற நீ." என்று கூறியவன் அவளை ஏறிட்டு பார்க்க, கணவனின் வேதனையான குரல் அவளின் அழுகையை நிற்க வைத்திருந்தது. அதிர்வோடு அவனைப் பார்த்துக் கொண்டிருக்கயிலேயே சிவந்துவிட்ட கண்களைச் சிமிட்டியபடி, இரு கைக்கொண்டு தலையை அழுந்த வருடியவன் வேகமாக வெளியேறினான். அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு. 

 

வேகமாகச் செல்லும் கணவனைத் தடுக்க முடியாமல் கையறு நிலையில் நின்றிருந்தாள். அவன் சொல்லிச் சென்ற வார்த்தைகளை மறுமுறை ஓட்டிப் பார்த்தவளுக்கு தான், தன் வேதனை, வலி என்று அவளை மட்டுமே யோசித்து இருந்தது புரிந்தது. கணவனுக்குச் சிறு குழந்தைகள் என்றால் எவ்வளவு பிடித்தம் என்பதை அவள் சகோதர, சகோதரி குழந்தைகள்மீதும் அவன் சகோதரிகளின் குழந்தைகளின் மீதும் அவன் காட்டும் பாசத்திலேயே தெரிந்து கொண்டிருந்தாள்.

 

 அவனுக்கும், தங்களுக்கே தங்களுக்கான ஒரு குழந்தை தங்கள் இருவரின் ஜாடையில் என்று எவ்வளவு ஆசையும், ஆவலும் இருந்திருக்கும் எனப் புரிந்தது.

புரிந்தது வேதனையில் மனதை அழுத்தக் கணவன் எப்போது வீட்டுக்கு வருவானோ என அவனுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள். வெகுநாட்களுக்குப் பிறகு கணவனுக்குப் பிடித்த ஆகாய நீல நிறத்தில் பருத்தி புடவை அணிந்து.தலையை அழுந்தவாரி சிறிது முல்லை பூவைச் சூடி முகத்தில் லேசான ஒப்பனையுடன் கணவனுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள்.

மருமகளின் வெகுநாட்களுக்குப் பிறகான இந்த அலங்காரத்தில் அவளை யோசனையாகப் பார்த்த பவித்ரா அவளிடம் எதுவும் கேள்வி கேட்காமல் தன் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார்.

 

 இருவருக்குள்ளும் ஏதோ ஓடிக்கொண்டிருக்கிறது என்பது தெரிந்தே இருந்தது அவருக்கு. குழந்தை வேண்டும் என்று அவ்வப்போது அவளை ஜாடை பேசினாலும். கணவன் மனைவி இருவருக்கும் இடையில் நடக்கும் பிரச்சனையிலோ மனஸ்தாபத்திலோ எப்பொழுதும் தலையிட்டதில்லை அவர். அந்த வகையில் நல்லவர் தான். மருந்து, மாத்திரை, சோதனையென இருவரும் மருத்துவமனையும் வீடும் என அலைவது அவருக்கும் மனதில் பாரத்தை ஏற்படுத்தியிருந்தது. நல்ல செய்தி வந்து விட வேண்டும் என அவ்வளவு வேண்டுதல் வைத்திருந்தார் அவர். ஆனால் அது யாருக்கும் தெரியாமல் இருந்தது தான் விந்தை.

 

அன்று சக்தி வீடு வரப் பதினோரு மணிக்கு மேலே ஆனது. உள்ளே வந்தவன் மனைவியின் அலங்காரத்தில் கேள்வியாக அவளைப் பார்த்தவன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு இந்த அமர்ந்தான் சாப்பிடுவதற்கு. சூடான சப்பாத்தியை குருமாவுடன் அவனுக்கு வைத்துவிட்டு அவன் அருகில் ஒரு தட்டை எடுத்து வைத்து அவளும் அமரக் கேள்வியாக அவளைப் பார்த்தவன். 

"இன்னும் சாப்பிடலையா நீ.?"

"இல்ல உங்களுக்காகத் தான் காத்துட்டு இருந்தேன்."

" ப்ச், மாத்திரை போடணும் இல்ல நீ சீக்கிரம் சாப்பிடுவதற்கு என்ன.?"

என்றவனின் கோபமான குரலுக்கு எந்தப் பதிலும் கூறாமல் அவள் சாப்பிட்டுக் கொண்டிருக்க அறையிலிருந்து வெளிவந்த பவித்ரா 

"டேய், அந்த அக்கறை உனக்கு இருந்தால் நீ சீக்கிரம் வந்து இருக்கணும்."

"இப்போ என்ன அக்கறை இல்லாம இருக்கிறேன்.?"என தாயிடம் கோபப்பட, உறங்கிக் கொண்டிருந்த அவனின் தந்தையும் எழுந்து வந்தார்.

"நடுராத்திரியில் என்ன சத்தம் இங்க..? தூங்க விட மாட்டீங்களா மனுஷனை..?"என்றவரின் கேள்விக்கு அனைவரும் அமைதியாக 

"சாப்பிட்டு போய்ப் படுங்க." என்றவர் மனைவியைப் பார்த்து

"நீ என்ன பண்ற.? அவங்க சாப்பிட்டு உள்ள போவாங்க. நீ வா." என்று அவரையும் கையோடு அழைத்துச் சென்றார்.

 

சாப்பிட்டு முடித்து அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு அறைக்குள் சென்ற வைஷ்ணவி கண்கள் மூடிப் படுத்திருந்த கணவனைப் பார்த்தவள் அவனின் அருகே அமர்ந்து.

"சாரி." என்றாள் மெதுவான குரலில்.

 அப்பொழுதும் அவன் அசையாமல் படுத்திருக்க,

"ஏங்க, உங்க கிட்ட தான். சாரி." என்றாள் அவன் கைகளைச் சுரண்டியபடி 

"எதுக்கு இப்ப இந்தச் சாரி.?"

"உங்கள பத்தி யோசிக்காமல் என்னை மட்டுமே நினைத்துக் கவலைப்பட்டுக்கிட்டு இருந்தேன்ல அதுக்கு தான்..."

"சரி."என்றவனின் பதிலில். அதிர்ச்சியாகி 

"என்ன.? அவ்வளவுதானா.?"

"வேற என்ன உடம்பு சரியில்லைல்ல. பேசாம படு."

"உங்களுக்காகத் தான் உங்களுக்குப் பிடிச்ச புடவை எல்லாம் கட்டிட்டு காத்திருந்தேன்."

"பார்த்தேன், பார்த்தேன்." என்றவனுக்கு அதற்கு மேல் கோபத்தை இழுத்து பிடிக்க முடியவில்லை.

கண்களை மூடிப் படுத்து இருந்தாலும் ஓரக்கண்ணால் மனைவியின் அழகையும் இவன் பதிலால் அவள் கொடுக்கும் எதிர் வினையையும் பார்த்து ரசித்துக்கொண்டு தான் இருந்தான். 

அதற்கு மேல் தாமதிக்காமல் அவளை இழுத்து தன் கைவளைவில் வைத்துக்கொண்டு அவள் முகம் பார்க்க, லேசான விசும்பலுடன் அவன் கழுத்தில் புதைந்தவள்,

"கடவுளா நமக்கு எப்ப குழந்தை கொடுக்கணும்னு நினைக்கிறாரோ அப்பக் கொடுக்கட்டும். அதுவரைக்கும் நம்ம காத்திருப்போம். இனி எந்த ட்ரீட்மெண்ட்ம் வேண்டாம் வலி, வேதனையும் வேண்டாம்."

"நிஜமா.?"

"ஆமா. நிஜமா."

அப்புறம் கொஞ்ச நாளைக்கு பிறகு திரும்ப ஆரம்பிக்க மாட்டியே.?" 

"மாட்டேன்."

"நம்பலாமா.?"

"நம்பலாம், நம்பலாம்."

"சரி நம்புவோம். நம்பிக்கை அதானே எல்லாம்." என்றவன் சிரிக்க, அவனின் சிரிப்பில் கலந்து கொண்டாள் அவளும்.

 

வாழ்க்கை அதன் போக்கில் நகர ஆரம்பித்தது.. இவர்கள் மருத்துவரிடம் சென்று வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் முடிந்திருந்தது. இதற்கிடையில் சஞ்சனாவும் சீமந்தம் முடிந்து தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக வந்திருந்தவள் ஆண் குழந்தையைப் பிரசவித்து மூன்று மாதங்களுக்கு மட்டுமே அன்னை வீட்டில் சீரடி விட்டுச் சென்னையை நோக்கி நகர்ந்திருந்தாள்.

 

இருவருமே வேலை பார்த்திருந்ததால் கர்ப்ப காலத்திலுமே அவளால் அதிகமாகத் தாய் வீட்டிற்கு வர முடியவில்லை. அவளின் கணவன் செல்வமும் அவளை நன்றாகப் பார்த்துக் கொண்டான். சில மாதங்கள் செல்வத்தின் தாயும் அவர்களோடு இருந்து மருமகளை பார்த்துக் கொண்டார். வேலை காரணமாக ஒன்பதாவது மாதத்தில் தான் சீமந்தம் செய்து தாய் வீட்டிற்கு வந்தாள் சஞ்சனா. பிரசவம் முடிந்து மூன்று மாதத்திலேயே கைக்குழந்தையை எடுத்துக் கொண்டு அவள் சென்னைக்கு கிளம்பி விட. அவளோடு சென்று சில மாதங்கள் தங்க பவித்ரா பிரியப்பட்டாலும், இங்கிருக்கும் கடை வேலைகளாலும் கணவனை அவ்வளவு நாட்கள் விட்டுச் செல்ல முடியாது என்ற சூழ்நிலையிலும் போக முடியாமல் தவித்திருந்தார். 

 

யோசித்துக் கொண்டே இருந்தவரை வைஷ்ணவி தான்,, வீட்டையும், மாமாவையும் பார்த்துக் கொள்வதாக உறுதி அளிக்க. மகளையும் பார்க்க வேண்டுமே என்ற கட்டாயத்தில் கிளம்பி சென்றார் பவித்ரா சென்னைக்கு மகளோடு. 

 

இங்கு வைஷ்ணவிக்கு வீட்டு வேலையும் அவ்வப்போது கடை வேலையும் என நேரம் சரியாக இருந்தது. சஞ்சனாவின் கைக்குழந்தையை பார்த்ததிலிருந்து திரும்பவும் குழந்தை ஆசை அவள் மனதை ஆக்கிரமித்து இருந்தது. அந்தச் சிறு குழந்தையின் ஸ்பரிசமும் வாசமும் அவள் மனதை விட்டு நீங்காமல் மனதின் அடியில் அமிழ்திருந்த ஆசைகளைக் கிளப்பி விட்டிருந்தது. இதைப் பற்றிக் கணவனிடம் எப்படி பேசுவது என யோசித்துக் கொண்டே இருந்தாள். 

ஒரு மாதத்திற்கு பின்பு பவித்ராவும் வீடு வந்து சேர்ந்திருந்தார் அங்குச் சஞ்சனாவை பார்த்துக் கொள்ள அவளின் மாமியார் வந்துவிட இவருக்கு வீட்டு ஞாபகமும் அதிகமாக இருக்க கிளம்பி வந்து விட்டார் தன் வீட்டை நோக்கி. 

வந்தவர் குழந்தையைப் பற்றிய அதிகம் பேசிக்கொண்டிருந்தார் வைஷ்ணவியிடம்.

அன்று சமையலில் மும்முரமாக வேலையில் இருந்த பவித்ரா தன் அருகே வேலை பார்த்துக் கொண்டிருந்த வைஷ்ணவியை பார்த்து,

 "ஏன் வைஷ்ணவி.? இந்தக் குழந்தைகளை எல்லாம் பார்த்துக் கூடவா உனக்குச் சீக்கிரமா குழந்தை பெத்துக்கணும்னு ஆசை வரல."என்றவரை அதிர்ந்து பார்த்தவள் 

"ஆசை இல்லாம என்ன அத்தை.? அதெல்லாம் கொள்ளை கொள்ளையா இருக்கு." என்றாள் தன் மனதை மறைக்காமல்.

"ஆசை மட்டும் இருந்தா போதுமா.? அதுக்கான முயற்சி இருக்கணுமே."

"முயற்சி செய்யாமலா இருக்கோம். எல்லா வகையிலும் முயற்சி செஞ்சுட்டு தான் இருக்கோம்."

"எங்க அப்படி ஒன்னும் செஞ்ச மாதிரி தெரியலையே.? இப்ப கொஞ்சம் காலமா."என்றவரின் நக்கலான கேள்விக்கு

 

"அவர்தான் கடவுளா எப்ப நமக்குக் குழந்தை கொடுக்கிறாரோ அப்ப வரட்டும்னு. சொல்லிட்டாரு."

"அவன், அப்படித்தான் சொல்லுவான். ஆம்பள அவனுக்கு என்ன தெரியும். பொம்பள உனக்குத் தானே புரியணும். நமக்குன்னு ஒரு குழந்தை வேணும்னு அவனும் இந்த வீட்டுக்கு ஒரே ஆண் பிள்ளை. அவனோட வாரிசு தானே நம்மளோட குடும்பத்துக்கு வழி வழியாக வரும்."

என்றவருக்கு எந்தப் பதிலையும் கொடுக்காமல் அமைதியாக நின்றிருந்தாள்.

அவளை நிமிர்ந்து பார்த்தவர் 

"அதுவா வரணும்னு நாம காத்திருந்தா. காத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான். நாமளும் முயற்சி செய்யணும். அதுக்கு என்ன பண்றதுன்னு பாருங்க. திரும்பவும் டாக்டர போய்ப் பார்த்து என்ன எதுன்னு கேளுங்க. வேற எதுவும் சிகிச்சை செய்யலாமான்னு கேளுங்க இப்பதான் எவ்வளவோ வந்துருச்சுன்னு சொல்றாங்களே. அப்படி ஏதாவது செய்யப் பாருங்க…எப்படியாவது இந்த வீட்டுக்குன்னு ஒரு வாரிசு சீக்கிரமாவே வந்துடனும். அவ்வளவு தான் நான் சொல்லுவேன்."என்று சற்று கோபமாகக் குரல் உயர்த்தி கூறியவர் வேலைகளைத் தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தார். சொல்ல வேண்டியதை சொல்லிவிட்ட திருப்தியில். 

 

ஏற்கனவே சஞ்சனாவின் குழந்தையைப் பார்த்ததிலிருந்து தனக்கும் ஒரு குழந்தை வேண்டும் என்ற ஆசையில் மிதந்து கொண்டிருந்தவள் தற்போது மாமியாரின் பேச்சில் சீக்கிரமே தங்களுக்கென ஒரு குழந்தை வந்துவிட வேண்டும் என்பதை மனதில் நிறுத்திக் கணவன் வந்தவுடன் இதைப் பற்றிப் பேச வேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டாள்.


   
ReplyQuote

You cannot copy content of this page