All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

காற்றில் நிறம் கருப...
 
Notifications
Clear all

காற்றில் நிறம் கருப்பு - (Story Thread)

Page 3 / 4
 

Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 2 months ago
Posts: 81
Topic starter  
கருப்பு 30
 
மேட்டு வீட்டின் கேட்டுக்கு வெளியே நின்று, எட்டி உள்ளே பார்த்துக் கொண்டிருந்த சடை சாமியை, கேட்டை திறந்து ஆவேசமாக வெளியே வந்த முத்துப்பாண்டி ஒரு மிதி மிதித்தான்.
 
கக்கென்று வினோதமாக சத்தமிட்டு சடைசாமி ஓரமாய் போய் விழ, உள்ளே இருந்து பார்த்த தாமஸ்,
 
"அய்யய்யோ பாவம்!!! சடசாமியை மிதிச்சிட்டு போறான் அந்த முரட்டு கம்முனாட்டி...", என்று சொல்லிவிட்டு  கேட்டை நோக்கி ஓடினான். சுந்தர்ராமனும் அவன் பின்னால் சென்றார்.
 
அகல்யா தாமசை ஆச்சரியமாக பார்த்தாள். 
 
நேர் தோற்றம், பக்கவாட்டு தோற்றம் எல்லாவற்றிலும் பிரமாதமா இருந்தான். முகத்தில் ஒரு இயல்பான துறுதுறுப்பு. வசீகரமான முகம். அவன் சிரிக்கும் போது கீழ் உதட்டின் இடது பக்கத்தில் சின்னதாய் ஒரு குழி விழுவது அவன் சிரிப்பிற்கு மேலும் வசீகரம் சேர்க்கிறது.
 
எதார்த்தமாக அவனுடன் நடக்கும் உரையாடல்களில் அவனைப் பற்றிய தகவல்களை சேகரித்து நினைவு அடுக்குகளில் அடுக்கிக் கொண்டிருந்தாள். அவன் அப்பா இபி லைனில் ஏறி ரிப்பேர் செய்யும் போது பேலன்ஸ் தவறி கீழே விழுந்து இறந்த கதை அவளுக்கு மனப்பாடம். புது படங்களை விட பழைய படங்கள் தான் அவனுக்கு ரொம்ப பிடிக்கும், குறிப்பாக ஜெய்சங்கர் காலத்து படங்கள். முழுக்கை சட்டையை இரண்டு மடக்கு மடக்கி விட்டுக் கொள்வான். பைக்கில் யாரும் இல்லாத சாலையில் வேகமாக செல்வது பிடிக்கும். மழையில் நனைவது அவனுக்கு ரொம்ப பிடிக்கும் என்றாலும், ஹேர் ஸ்டைல் ஸ்பாயில்லாகி விடுமே என்று நனைய மாட்டான். சர்ச்சுக்கு போய் பாவ சங்கீர்த்தனம் செய்து பல வருடங்கள் ஆகிவிட்டது. கடவுள் நம்பிக்கை இருந்தாலும், சர்ச்சுக்கு போவதே இல்லை. காலையில் சாப்பிடும் பழக்கம் இல்லை. ஆனால் சித்ரா டிபன் கொடுப்பதால் சாப்பிட பழகிக் கொண்டான். இப்படி நிறைய... எல்லாம் பேச்சுவாக்கில் சேகரித்த விஷயங்கள்.
 
இப்படி அவள் இயல்பிலிருந்து பிரித்து ஆட்டிப்படைக்க ஆரம்பித்தான் தாமஸ்.
 
இதுக்கு பேர் தாண்டி லவ் என்றால், அவளுக்கு கோபம் வரும்.  கேள்விகள் பறக்கும். சிக்கல் பிறக்கும்.
 
நான் என்ன தப்பா பண்றேன்? அவரு ரொம்ப நல்ல டைப்பா இருக்கிறார், அவரைப் பற்றி தெரிந்து வைத்துக்கொள்வது தப்பா?
 
இயல்பா, கலகலப்பா பழகணும்னு நினைக்கிறதுக்கு காதல் என்று பெயர் சூட்டுவதா? குறுகிய மனப்பான்மையுடன் என்றைக்குமே இருக்கக் கூடாது. "சரிங்க மேடம்" என்று கைகட்டி, மனசாட்சி பம்மி கொண்டது.
 
காலையில் பள்ளிக்கூடம் செல்லும்போது அவன் பைக் ஸ்டார்ட் பண்ணும் சத்தம், வழக்கமாக தெருவில் கேட்கும் சத்தங்களை தவிர்த்து விட்டு தனியாக அவளுக்கு கேட்கும். வீட்டுக்கு வந்து கார்த்தியுடன் அவன் பேசிக் கொண்டிருக்கும் போது, பேச்சு சப்தம் கேட்டால், ரூமுக்குள்ளே படித்துக் கொண்டிருக்கும் கதை புத்தகத்தை விட்டு விட்டு என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்காத மாதிரி கவனிப்பாள்.
 
எல்லா ஆண்களையும் போல் அவன் இல்லை. மனசுக்குள் கள்ளம் வைத்து பேசுகிற தீய குணமில்லை. கெட்ட பழக்கங்கள் இல்லை. அதனால் அவனை பிடிக்கிறது. ஒருவேளை ஏதாவது தவறான பேச்சுகளோ, மோசமான குணங்களோ அவனிடம் இருந்தால், அவன் மேல் உதித்த நல்லெண்ணம் உதிர்ந்து போயிருக்கும். ஆனால் அப்படி  எதுவும் இல்லையே... இந்த இயல்பான, ஆர்கானிக்கான நட்பின் வளர்ச்சியை, காதல் என்று உடனே முத்திரை குத்த அவள் விரும்பவில்லை. வளரட்டும் பார்க்கலாம் என்று விட்டுவிட்டாள்.
 
அதனால் நாம் அவளை கோபப்படுத்தும் விஷயங்களை சொல்ல வேண்டாம்.
 
கேட்டை திறந்து வெளியே ஓடிய தாமஸ் கீழே கிடந்த சடைசாமியை தூக்கி விட... முத்துப்பாண்டியும் மற்ற இருவரும், பைக்குகளை ஸ்டார்ட் பண்ணி கிளம்பினார்கள்.
 
முத்துப்பாண்டி தாமசை மூர்க்கத்தனமாக பார்த்துக் கொண்டே கடந்து சென்றான். சுந்தர்ராமனும் கவனித்தார்.
 
சுந்தர் ராமன்: நீ பேசின பேச்சுக்கு நிச்சயமா அவன் சும்மா விட மாட்டான். ஏதாவது சில்லுண்டித்தனம் பண்ணுவான்.
 
தாமஸ்: பண்ணட்டுமே!!! என்னதான் பண்றான்னு பார்ப்போம்?
 
ராமன்: சாமி, அடி ஏதும் படலையே?
 
சடைசாமி இல்லை என்பது போல் தலையாட்டி, அவர்கள் இருவரையும் மாத்தி மாத்தி பார்த்தான். ஏதோ சொல்ல முயல்வதைப் போல் தோன்றியது.
 
ராமன்: என்ன சாமி ஏதாவது சொல்லனுமா? காசு வேணுமா? பசிக்குதா?
 
இல்லை என்று தலையாட்டி, இரண்டு பேரையும் மாறி மாறி பார்த்தான். 
 
பின்னர் முடிவை மாற்றிக் கொண்டு, அவனுடைய வழக்கமான வேப்ப மரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். நடையில் வழக்கத்தை மீறிய தயக்கம் தெரிந்தது.
 
தாமஸ் மைண்ட் வாய்ஸ்: என்னமோ சொல்ல வந்தான், சொல்லாமல் போறானே. நான் இருந்ததுனால சொல்லலையா? இல்ல, ராமன் வாத்தியார் இருந்ததுனால சொல்லாம போறானா?
 
நாமாகவே போய் பேசினால், அவன் பேச மாட்டான். அவனாகவே வந்து பேசினால் தான் உண்டு. ஏற்கனவே ஒரு முறை,  இரவு மயக்கமுற்ற சம்பவத்தை அவனிடம் விசாரிப்பதற்காக போன போது, பேசவே இல்லை.
 
மேட்டு தெருவில் சோர்வாக வந்து கொண்டிருந்த சித்ரா, இருவரும் வெளியே நின்றிருப்பதை பார்த்ததும், சுந்தராமனை பார்த்து மட்டும் சிரித்தாள். காதோரம் கலைந்திருந்த ஒற்றை முடிகள் காற்றில் பறந்து கொண்டிருந்தன. அவள் கண்களில் சோர்வா, கலக்கமா, குழப்பமா என்று தெரியாத அளவுக்கு, உணர்வுகளின் கலவை.
 
"என்னம்மா, காலேஜ் இன்னிக்கி முடியறதுக்கு லேட் ஆயிடுச்சா?"
 
"ஆமா அங்கிள், அஞ்சு மணிக்கு தான் முடிஞ்சுது..."
 
"போம்மா... போயி  மூஞ்ச  கழுவிட்டு காபி கீப்பி குடி. பாவம்!!! வரும்போதே சடஞ்சி போய் வருது..."
 
அரைக்கண்ணால் தாமசை பார்த்தபடி, வேகமாக அங்கிருந்து நகர்ந்து, கேட்டை திறந்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள். தாமஸ் அவள் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டுதான் இருந்தான். கருப்பன் தாத்தா சாவு காரணமாக கொஞ்ச நாள் போகட்டும் என்று விட்டு வைத்திருந்தான். இனிமேல் விட முடியாது.
 
சித்ரா வீட்டுக்குள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த சுந்தர் ராமன் முகத்தில், கவலை ரேகைகள்.
 
"ப்ச்ச்.... மூணு பொட்ட புள்ளைங்கள கருப்பன் அனாதையா விட்டுட்டு போயிட்டான். முனியா இல்ல அந்த சனியான்னு தெரியல எதா இருந்தாலும் நாசமா போகட்டும். முத்துப்பாண்டி மாதிரி ஆட்கள் இருக்கிற ஊர்ல எப்படி தனியா இவங்க சமாளிக்க போறாங்களோ? நினைச்சு பார்க்கவே கஷ்டமா இருக்கு. அகல்யா ரொம்ப பாவம்பா... எங்க குலதெய்வம் வெட்டிமுறிச்சான்  இசக்கி தான், அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்கணும். நாளைக்கு போய் ஒரு பூஜையை போட்டுற வேண்டியது தான்."
 
தாமஸ் தோளில் தட்டி கொடுத்துவிட்டு, ஏதேதோ புலம்பிக்கொண்டே அவர் வீட்டை நோக்கி சென்றார்.
 
தாமஸ் உதட்டோரத்தில் பெயரிட முடியாத ஒரு வினோத சிரிப்பு நெளிந்தது.
 
இரவு 8 மணி
 
அகல்யா கிச்சனில் இரவு உணவு தயார் செய்து கொண்டிருக்க, கார்த்தி டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
மேட்டு வீட்டில் கருப்பனின் மறைவு பயங்கர தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், தட்டு தடுமாறி, இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருந்தது. 
 
கூடத்தில் இருந்த சுவரில் அப்பா அம்மா புகைப்படங்களுக்கு பக்கத்தில் தாத்தாவும் சிரித்துக் கொண்டிருந்தார். அவர்கள் படங்களுக்கு கீழே, செம்பருத்திப் பூக்கள் ஒரு நாளை ஓட்டிய சோர்வில் தளர்ந்து போயிருந்தன.
 
சைலண்டில் போட்டிருந்த மொபைல் போன் ஒளிர்ந்து கொண்டிருக்க, சித்ரா எடுத்து பார்த்தாள். தாமசிடமிருந்து whatsapp மெசேஜ்.
 
அவளுக்கு பதட்டமானது.
 
"கால் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கற. மெசேஜ் பண்ணா ரிப்ளை இல்லை. நேராக வீட்டுக்கு வந்து உன்கிட்ட பேசவா?..."
 
"No...please", என்று பதட்டத்தில் உடனடியாக பதில் அனுப்பினாள்.
 
"Then come and meet me now" என்று உடனடியாக ரிப்ளை வந்தது.
 
"அக்கா இருக்காங்க. பயமாருக்கு.."
 
"உங்க அக்கா கிச்சன்ல இருப்பா. 5 மினிட்ஸ் தானே வந்துட்டு போ..."
 
எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறான்!!!
 
சலித்தபடி, " ஓகே" என்று மெசேஜ் அனுப்பினாள்.
 
ரூமை விட்டு வெளியே வந்து, தாழ்வாரத்தில் நடந்து கிச்சன் வாசல் அருகே சென்று மெதுவாக பூனை போல் எட்டி பார்த்தாள். அக்கா வேலை செய்து கொண்டிருந்தாள். பின்னர் திரும்பி வந்து ஹாலை நோக்கி சென்றாள். ஹாலில்  கார்த்தி, டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். ஹாலை கடந்து வெளியே அவள் செல்ல,
 
கார்த்தி: எங்கக்கா போற?
 
திடுக்கென்று நின்று, அது... வந்து... என்று சித்ரா உளறி, "சும்மா... வெ...ளியில் கா...த்து வாங்க....", என்றாள்.
 
கார்த்தி: ஏன்க்கா பதட்டப்படுற? எங்க போறன்னு தானே கேட்டேன்?
 
அசட்டு சிரிப்பு சிரித்து விட்டு, நகர்ந்து வெளியே சென்றாள். 
 
கார்த்தி சந்தேகமாக அவளை பார்க்க, சன் மியூசிக்கில் அடுத்தது "சுட்டும் விழி சுடரே' சூர்யா பாட்டு வந்ததும், சித்ராவை கை கழுவி விட்டு, பாட்டை பார்க்க ஆரம்பித்தாள்.
 
காவண வீட்டை நெருங்கிய சென்ற சித்ரா, கதவை தட்டுமுன், கதவு திறந்தது சிரித்தபடி தாமஸ் வாசலிலேயே நின்றிருந்தான். சித்ரா சுற்றிலும் பார்த்தபடி, "என்ன விஷயம் சீக்கிரம் சொல்லுங்க?" என்றாள்.
 
"உள்ள வா சொல்றேன்..."
 
சித்ரா உள்ளே நுழைய,
 
கையில் வைத்திருந்த
"pregnancy test kit" ஐ அவளிடம் கொடுத்தான்.
 
"பீரியட்ஸ் வந்து உனக்கு 40 நாளுக்கு மேல ஆயிடுச்சுல்ல?"
 
"ஆமா...."
 
"அப்படின்னா அந்த கிட்டை வைத்து டெஸ்ட் பண்ணி பாரு. யூசர் இன்ஸ்ட்ரக்ஷன் அதிலேயே போட்டுருக்கான். காலைல எழும்பினதும், முதல் வேலையா யூரின் எடுத்து டெஸ்ட் பண்ணு. கலர் வச்சு நீ பிரக்னண்டா இருக்கியா இல்லையான்னு கண்டுபிடிச்சிடலாம்... ஓகேவா?"
 
சித்ரா வாங்கிக் கொண்டாள். அவள் கைகள் நடுங்கியது.
 
"எனக்கு உடம்புல தெரியுற சிம்டம்ஸ் வச்சு பார்த்தா கர்ப்பமாய் இருப்பேன்னு தான் சந்தேகமா இருக்கு. அரவிந்தும் இதுவரைக்கும் போன் பண்ணல. அவனை நம்புறதா வேண்டாமான்னும் தெரியல்லை. ஒருவேளை நான் பிரகனண்ட் ஆனேன்னா இப்ப இருக்கிற பிரச்சனைகளில், என் அக்காவுக்கு இது தெரிஞ்சா, எப்படி தாங்கிக்குவா ? நிச்சயமாக தூக்குல தான் தொங்குவா. ரொம்பவே பயமா இருக்கு..."
 
தாமஸ் சிரித்தான்.
 
"இதெல்லாம் நீ தப்பு செய்றதுக்கு முன்னால் யோசிச்சிருக்கணும் கண்ணு.."
 
சித்ராவின் கண்களில் நீர் கட்டிக் கொள்ள, தாமஸ் கலங்கலாக தெரிந்தான்.
 
தாமஸ்: சரி ஓகே அழாதே. முதல்ல டெஸ்ட் பண்ணு. அப்படி பாசிட்டிவ் ரிசல்ட் வந்துச்சுன்னா, என் பிரண்டு பார்வதிபுரத்துல Polyclinic  வச்சிருக்கான். அங்கேயே visiting gynaecologist ஒருத்தங்க வராங்க. அங்க கூட்டிட்டு போறேன். யாருக்கும் தெரியாமல் கலைச்சிடலாம். காலைல போனா சாயங்காலம் வந்துடலாம். ஆனா இதெல்லாம் செய்யனும்னா, நான் கேட்டத நீ பண்ணனும்.
 
சித்ரா அவனை பயத்துடன் பார்த்து, அழாத குறையாக "கண்டிப்பா பண்ணனுமா? பயமாருக்கு" என்று சொல்ல...
 
தாமஸ் கடுப்பாக: மொத தடவ பண்ணும் போது மட்டும் பயமா இல்லையா? 
 
சித்ரா எதுவும் பேசாமல், தலை குனிந்து நின்றிருந்தாள்.
 
தாமஸ்: நாளைக்கு டெஸ்ட் பண்ணி ரிசல்ட் சொல்லு. ரெண்டு பேரும் திருப்பரப்பு போறோம். ரூம் போடுறோம். மேட்டரை முடிக்கிறோம். திரும்பி வர்றோம். யாருக்குமே தெரியாது. ஓகேவா? 
 
சித்ரா தலையை உயர்த்தி, பதில் சொல்லாமல், "வேணாம் ப்ளீஸ் விட்ருங்க" என்பது போல், அவனைப் பய பார்வை பார்த்து கொண்டிருக்க,
 
தாமஸ்: கவலைப்படாத, பிரச்சனை ஏதும் வராம நான் பாத்துக்குறேன்.
 
சித்ரா பதில் ஏதும் சொல்லாமல், கண்ணில் நீர் மல்க, தயங்கிக் கொண்டே நின்றாள்.
 
தாமஸ்:  "கிளம்பு கிளம்பு... இதுக்கு மேல நின்னு பேசிகிட்டு இருந்தா, உன் அக்கா சந்தேகப்படுவா", என்று அவள் தோளை பிடித்து திருப்பி கதவு பக்கமாக தள்ளினான்.
 
வேறு வழி இல்லாமல்,  சித்ரா அவசரமாக கண்ணீரை துடைத்துக் கொண்டு வெளியே சென்றாள்.
 
இரவு 12 மணி 
 
கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த சித்ராவுக்கு திடுக்கென்று விழிப்பு வர, முழித்துக் கொண்டாள்.
 
சே! மறுபடியும் ஒரு பயங்கரமான கனவு.
 
நிஜம் தான் பயங்கரமான கனவு போலிருக்கிறது என்றால், கனவுகளும் அதற்கு மேல் பயங்கரமாக இருக்கிறது. 
 
மேட்டு தெருவில் சிக்னியின் குறைப்பு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
 
சித்ரா அணிந்திருந்த டி-ஷர்ட் நீரில் துவைத்து எடுத்தது போல் ஈரமாக இருந்தது. ஃபேன் ஓடிக் ஓடிக்கொண்டிருந்தும் அவ்வளவு புழுக்கமா?
சோம்பல் முறித்துக் கொண்டு கார்த்திகா கட்டிலை பார்த்தாள். திகைத்தாள்.
 
கார்த்திகா தூங்காமல் எழும்பி ஜன்னலருகே  நின்றபடி.... வெளியே வெறித்துக் கொண்டிருந்தாள். அன்றைக்கு இரவு நடந்த மாதிரி தான், ஆனால் இம்முறை ஜன்னலுக்கு பக்கத்தில் போய் நிற்கிறாள்.
 
ஜன்னலை பூட்டி தானே வைத்திருந்தோம். யார் திறந்தது?
 
வெறிக்க வெறிக்க அப்படி ஜன்னலுக்கு வெளியே என்ன பார்க்கிறா? அன்னைக்கு மாதிரி கண்ணு மிதந்து வந்துச்சு? காத்து கருப்பு பார்த்தேன்னு ஏதாவது சொல்லுவாளா?
 
ஜன்னலுக்கு வெளியே இருந்து சில்வண்டுகளின் இடைவிடாத ரீங்காரம், அனுமதி இல்லாமல் ரூமுக்குள் நுழைந்து இருந்தது.
 
சித்ரா: ஏய் கார்த்தி.. அங்க நின்னுட்டு என்னடி பண்ற?
 
சித்ராவுக்கு ரொம்ப கலவரமாக இருந்தது. அன்றைக்கு நடந்த மாதிரியே தான் நடக்கிறது. 
 
கார்த்தி பதிலளிக்கவில்லை.
 
சித்ரா: என்ன தாண்டி தெரியுது உனக்கு? அன்னைக்கு மாதிரியே, வெளியவே பாத்துட்டுருக்க?
 
கார்த்திகா திரும்பி சித்ராவை பார்த்தாள். அவள் முகம் பூராவும் திகில் அப்பியிருந்தது.
உதட்டருகே சுட்டு விரலை வைத்து, உஷ் என்று சைகை காண்பித்தாள்.
 
சித்ரா: என்னடி என்னாச்சு?? ஜன்னலுக்கு வெளியில் ஏதாவது தெரியுதா? பூட்டியிருந்த  ஜன்னல் எப்படி திறந்துச்சு?
 
கார்த்திகா பதில் சொல்லவில்லை.
 
சித்ரா:  கேட்கிறேன்ல்ல பதில் சொல்லு?
 
கார்த்திகா: நான் தான் திறந்தேன்.
 
சித்ரா கட்டிலில் இருந்து எழும்பி, ஜன்னலை நோக்கி நடந்து, கார்த்தியை திருப்புவதற்காக தோளை தொட்டாள்.
 
கண்ணிமைக்கும் நேரத்தில்,
 
தட்ட்ட்ட்...
 
சித்ராவுக்கு படாரென்று கன்னத்தில் அடி விழ,
 
இடி விழுந்தது போல்  பொறி கலங்கியது. கண்களை திறக்க முடியாத அளவுக்கு நட்சத்திரங்கள் மின்ன, "அக்கா", என்று கத்தியபடி கீழே சரிந்தாள்.
 
அவள் அலறல் சத்தம், பக்கத்து ரூமில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த அகல்யாவுக்கு கேட்டது.
 
சித்ரா குரலாச்சே!! 
 
அகல் பதட்டமாக எழும்பினாள்.
 
அதே நேரம்,
 
குறைத்துக் கொண்டிருந்த சிக்னியின் சத்தம் நின்று போய், திடீரென்று லாரியில் அடிபட்டது போல் கீயா கீயா என்று கிரீச்சிடும் அழுகுரல் இரவின் நிசப்தத்தை கலைத்தது.
 
தூங்கிக் கொண்டிருந்த சுந்தர் ராமன், என்னடா இது வித்தியாசமான சத்தமா இருக்குதே! என்று எழும்பினார். பக்கத்தில் படுத்திருந்த சரஸ்வதி நல்ல தூக்கத்தில் இருந்தாள்.
 
எழும்பி லுங்கியை கட்டிக் கொண்டு, ஹாலுக்கு வந்தார். லைட்டை போட்டார். வாசல் கதவை திறந்து வெளியே எட்டிப் பார்த்தார். 
 
காவண வீட்டின் கேட் பூட்டியபடி தான் இருந்தது. வெளியே சிக்னி மரண அவஸ்தையில் இருப்பது போல், அடிவயிற்றில் இருந்து கூக்குரலிடும் சத்தம் கேட்க... வழக்கமா இப்படி சத்தம் போடாதே என்று தாமசுக்கு சந்தேகப்பொறி.
 
Something is wrong! 
 
சுந்தர் ராமனுக்கு மனசு கேட்கவில்லை. ஆனால் கருப்பனின் சாவுக்கு பிறகு எல்லாமே பயமாகத்தான் இருக்கிறது. 
 
முனி நடமாட்ட நேரம். வெளியே போனால் ஆபத்து!
 
ரோட்டுக்கு போக வேண்டாம் கேட்டருகே நின்று எட்டிப் பார்ப்போம் என்ற யோசனை சரியாகப்பட்டது. சுந்தர் ராமன் டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு, கதவு பக்கத்திலிருந்த சிறிய படிக்கட்டுகளில் இறங்கினார்.
 
கதவை விட்டு இறங்கிய தாமஸ், கேட்டை நோக்கி, நுனி காலில் நடந்து சென்றான். 
 
சித்ராவின் குரலை கேட்டு ரூமை விட்டு வெளியே தாழ்வரத்திற்கு வந்த அகல்யா, பக்கத்து ரூமுக்கு போவதற்கு முன்னால், தாழ்வாரத்தின் டியூப் லைட் ஸ்விச்சை தட்டினாள்.
 
சுத்திலும் பார்த்தாள். முற்றத்தை கடந்து ஹாலுக்கு போகும் வழியை பார்க்க, கார்த்தி சென்று கொண்டிருந்தது தெரிந்தது.
 
"இவ தூங்காம இந்நேரத்துல எங்க போறா?"
 
அவள் நடையே, விசித்திரமாக தூக்கத்தில் நடப்பது போலிருந்தது. அகல்யாவும் ஹாலை நோக்கி செல்ல, கார்த்தி ஹாலை கடந்து, முன் வாசக்கதவை திறந்து கொண்டிருந்தாள்.
 
ஹாலில் நுழைந்த அகல், அவள் முன் வாசல் கதவை திறப்பதை பார்த்ததும்,
 
"ஏய் கார்த்தி, இந்நேரத்தில் எங்கடி போற?" என்று கேட்க, அதை பொருட்படுத்தாமல், கதவை திறந்து கார்த்தி பொம்மை போல் சிட் அவுட்டுக்கு சென்றாள்.
 
சற்றுமுன் அலறிய சித்ராவை கவனிப்பதா? இல்லை, கதவை திறந்து வெளியே போகும் கார்த்தியை பார்ப்பதா என்று தெரியாமல் ஒரு நொடி அகல்யா யோசித்தாள்...
 
கார்த்தி நடவடிக்கைகள் விசித்திரமாக தோன்ற....  வாசக்கதவு  நோக்கி அகல்யா பதட்டமாக ஓடினாள்.
 
தொடரும்
 
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது
 

   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 2 months ago
Posts: 81
Topic starter  
கருப்பு  31
 
கேட்டருகே வந்து தலையை வெளியே நீட்டி, முடிந்த வரைக்கும் தெருவை இடமும் வலமும் பார்த்தான் தாமஸ். சிக்னியின் கிரீச்சிடும் சத்தம் அடங்கியிருக்க, எங்கே விழுந்து கிடக்கிறதென்று அவனால் அரை இருட்டில் பார்க்க முடியவில்லை.  ஆங்காங்கே சிந்தி கிடந்த டியூப் லைட்டின் முக்கால்வாசி வெளிச்சத்தை, இருள் துடைத்து இருந்தது.
 
சடைசாமி இருக்கிறானா என்று பார்த்தான். அவனையும் காணவில்லை. தெருவில் இறங்கி பார்க்கலாமா என்று யோசித்த தாமஸ், உடனே அந்த யோசனையை நிராகரித்தான். வேண்டாம்!!! இன்னும் ஃபுல் டீடைல்ஸ் gather பண்ணவில்லை. அனாவசிய ரிஸ்க்.
 
மேட்டு தெருவை தாண்டி, 
 
சடைசாமி வழக்கமாக படுத்து கிடக்கும் வேப்ப மரத்துக்கு பின்னால் மசமசத்துக் கிடக்கும் இருளை, நிச்சயமாக காவண வீட்டிலிருந்து தாமஸ்  பார்க்க முடியாது. வழக்கமான வெற்று இருள் இல்லை. இருளுக்கு கை கால்கள் முளைத்திருந்தது. மூச்சுவிட்டுக் கொண்டிருந்தது.  தரையில் பதிந்திருந்த கால்கள், வந்த வேலையை முடிக்கும் அவசரத்தில் நிலையில்லாமல் தவித்தன.
 
திரும்பி மேட்டு வீட்டை பார்த்த தாமஸ் சிட்டவுட்டில் வெளிப்பட்ட கார்த்தியை கவனித்தான்... இவள் எதற்கு இந்நேரத்தில் வெளியே வருகிறாள்?
 
சிட் அவுட்டுக்கு வந்த கார்த்தி,
 
கருப்பன் வழக்கமாக உட்காரும் பிரம்பு நாற்காலியில் ஜம்மென்று உட்கார்ந்து கொண்டாள்.
 
"கார்த்தி... கார்த்தி..." என்று சத்தமிட்டபடி பின்னால் போடி வந்த அகல், பிரம்பு நாற்காலியில் அவள் இருப்பதை பார்த்ததும், நிம்மதியாகவும் கலவரமாகவும் ஒரு சேர உணர்ந்தாள்.
 
இன்னைக்கு வழக்கத்துக்கு மாறாக நடக்கிறது! 
என்னமோ சரியில்லை!
 
திக் திக்கென்று இருந்தது.
 
நைட்டு தூங்க போறதுக்கு முன்னால வரைக்கும் ஒழுங்கா தானே இருந்தா?
 
தயக்கத்தோடு நடந்து அவளை நெருங்கினாள்.
 
அவள் தோளை தொட்டு அகல் உலுக்கி,
"என்னடி, இந்நேரத்தில் இங்கே வந்து உட்கார்ந்திருக்க?", என்று பிசிறு தட்டிய குரலில் கேட்க,
 
கார்த்தி ஸ்லோ மோவில் தலையை உயர்த்தி பார்த்தாள். அவள் கண்கள் அசாதாரணமாக பளிச்சிட்டன. வயதை மீறிய பார்வை.
 
கார்த்தி பேச ஆரம்பித்தாள்.
 
கார்த்தி பேச பேச, பயத்தில் ஒவ்வொரு ஸ்டெப்பாக பின்னால் நகர்ந்து, சுவரோடு போய் அகல் படாரென்று ஒட்டிக்கொண்டாள்.
 
காரணம்,
 
பேசியது கார்த்தியாக இருந்தால் பரவாயில்லை, கருப்பன் தாத்தாவின் கரகரப்பான தகர குரல் கேட்டது.
 
தாத்தாவாகவே இருந்தாலும்...  யாருக்குமே பயம் வரத்தானே செய்யும்.
 
'நம்ம குடும்பத்தை வன்மம் சூழ்ந்திருக்கு. கண்ணுக்கு தெரியாத எதிரிகள். ஆபத்து.... என்னை முனி அடிக்கல்லை.  தாம...
 
தோட்டத்திலிருந்து என்னாச்சு என்று குரல் கேட்க, அகல் திரும்பி பார்த்தாள். டார்ச்சுடன் தாமஸ் வந்து கொண்டிருந்தான்.
 
கேட்டருகே, போக பயந்து, சற்று பின்னால் நின்றபடியே மேட்டுத் தெருவை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ராமன் வாத்தியாருக்கு, எதிரே இருந்த மரத்தடியில் கால்களை இழுத்துக் கொண்டிருந்த சிக்னி தெரிந்தது. 
 
திக்கென்று இருந்தது.
 
சிக்னியை யாராவது அடித்து தூக்கி எறிந்திருக்க வேண்டும். முனி வேலையா? 
 
சிக்னியின் இயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டிருந்தது. வலி முனகல் அடங்கி கொண்டிருந்தது.
 
அகல்யாவை ஜாக்கிரதையாக இருக்க சொல்ல வேண்டும். போன் பண்ணி பார்க்கலாம். போன் பண்ணுவதற்காக வீட்டுக்கு செல்ல, திரும்பினார். தடதடவென்று யாரோ ஓடி வரும் சத்தம் கேட்க, திகிலில் திரும்பி பார்த்தார்.
 
ஓடி வந்தது சடைசாமி.
 
ஒரு நொடி திடுக்கிட்ட ராமன், பின்னர் சுதாரித்து,
 
"என்னப்பா இந்த நேரத்துல... இப்படி ஓடி வர்ற? அப்படி என்ன அவசரம்?"
 
சடைசாமி அவரைப் பார்த்து, பதட்டமாக ஏதோ சைகைகளை செய்தான். ராமன் வாத்தியாருக்கு அவன் சைகைகள் புரியவில்லை.
 
"நீ என்ன சொல்ற? ஒன்னும் புரியலையே?"
 
மேட்டு தெருவை பயத்தோடு சுற்றிலும் பார்த்துவிட்டு, மறுபடியும் ராமன் வாத்தியாரை பார்த்து, சைகையில்,
 
"பெரிய கருப்பனை கொன்னது முனி கிடையாது..."
 
அவன் சொன்ன விஷயம் புரிந்ததும், ராமன் வாத்தியார் திடுக்கிட்டார்.
 
"வேற யாரு? முத்துப்பாண்டியா?"
 
அவன் இல்லை என்று தலையாட்டினான்.
 
மேற்கொண்ட அவன் சொன்ன பெயரை அரைகுறையாக கேட்டதும், அவருக்கு தூக்கி வாரி போட்டது.
 
ராமன்:  என்னடா சொல்ற? முழுசா சொல்லு... என்று அதிர்ச்சியாக கேட்க,
 
அடுத்தது பேசுவதற்காக வாய் திறக்கும் முன், 
 
தடபுடா என்று மெல்லிய அதிர்வுகள் மேட்டு தெரு காற்றில் பரவி வர,
 
தெருவை திரும்பிப் பார்த்த சாமி " முதல்ல உள்ள போங்க", பரபரப்பாக சைகை செய்தான்.
 
"நீ விஷயத்தை முழுசா சொல்லு? இவ்வளவு நேரம் விட்டுட்டு, இப்போ வந்து சொல்ல வேண்டிய அவசியம் என்ன?"
 
அவர் கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லை.
 
முனி ஓட்டம் ஆரம்பிச்சிருச்சு என்று சொல்வதற்காக, முனி போல் நாக்கை வெளித்தள்ளி, கைகளை அகல விரித்து, கண்களை உருட்டி, ஹே ஹே என்று காண்பித்தான்.
 
"உள்ள போங்க", என்று அவன் வாய் திறந்து சத்தமிடாமல் சைகையிலேயே கதற, வேறு வழியில்லாமல் திரும்பி பார்த்தபடியே, வீட்டை நோக்கி சென்றார். சடைசாமி அங்கிருந்து அலை திரிக்க ஓட ஆரம்பித்தான்.
 
ராமன் மைண்ட் வாய்ஸ்: என்ன சொல்றான்? இவன் சொல்றத உண்மைன்னு எப்படி நம்புறது? 
 
யோசித்தபடியே வீட்டுக்குள் நுழைந்தார்.  போனை எடுத்து அகல்யாவுக்கு போன் பண்ண, ரிங் போய்க்கொண்டே இருந்தது. வெளியே போய் பார்க்கவும் பயம். முனி ஓட்டம் என்று பயமுறுத்துகிறான். பிபி அவருக்கு எகிரி கொண்டிருக்க, வேறு வழியில்லாமல் காலையில் தான் போய் பார்க்க வேண்டும் என்ற முடிவெடுத்தார்.
 
தாமசின் குரலைக் கேட்டு திரும்பி பார்த்த கார்த்தி, 
 
கரகர வென்று வினோதமாக பற்களை கடித்து, தலையை இரண்டு முறை ஆவேசமாக ஆட்டி, பிரம்பு நாற்காலியிலேயே சரிந்து, வெட்டப்பட்ட மரம் போல் சாய்ந்தாள்.
 
அய்யய்யோ என்று பதறிய அகல்யா, கார்த்தி கன்னத்தின் இரு பக்கத்திலும் கைகளை வைத்து தட்டி எழுப்ப முயற்சித்தாள். தாமஸ் அவர்களை நெருங்கி இருந்தான்.
 
என்னாச்சு என்று கேட்டபடியே, தாமஸ் கார்த்திக்கு பல்ஸ்  செக் செய்தான்.
 
அகல்யா பதட்டமாக, 
"தெரியல... நல்லா தூங்கிட்டு இருந்தா, திடீர்னு தூக்கத்தில் நடக்கிற மாதிரி நடந்து வெளிய வந்து, இப்படி மயங்கி விழுந்திட்டா..." மேற்கொண்டு அவள் நடந்து கொண்ட விதத்தையும், சொன்ன தகவல்களையும் சொல்லவில்லை.
 
"வன்மம் சூழ்ந்திருக்கு.... கண்ணுக்கு தெரியாத எதிரிகள்..."
 
என்ற டயலாக் மட்டும் ஹைலைட்டாகி அவளுக்குள் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
 
தாமஸ்: பயப்படாதீங்க, சாதாரண மயக்கம் தான்.  கொஞ்ச நேரத்துல தானாவே முழிச்சுக்குவா. வேற ஏதாவது பிராப்ளம் இருந்தா ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போலாம்... ஆனா அதுக்கு அவசியப்படாது.
 
அவளிடம் கேட்காமலேயே, கார்த்தியை கைகளால் தூக்கினான். அவளை பூங்கொத்து போல் அள்ளிக்கொண்டு, வீட்டுக்குள் நுழைந்து, அவர்கள் ரூமை நோக்கி சென்றான். அகல் யோசனையுடன் பின் தொடர்ந்தாள்.
 
கார்த்தி மனநிலை பாதிக்கப்பட்டு, தாத்தா மாதிரி பேசுகிறாளா?
 
இல்லையே, தாத்தா குரல் மாதிரியே அச்சு அசலா இருந்துச்சே! 
 
கார்த்தி மூலமா, தாத்தா வந்து என்னை எச்சரித்ததாக எடுத்துக்கலாமா?
 
தாத்தா சாவுக்கு முனி காரணமில்லை என்றால் பின் வேறு யார் காரணம்? முத்து பாண்டியா? 
 
ஏதோ பேரைச் சொல்ல வந்தாரே?
 
தாமஸ் குரலை கேட்டதும் ஏன் மலை ஏறிவிட்டார்?
 
அவர்களின் ரூமுக்குள் நுழைந்த தாமஸ் கட்டிலை நோக்கி சென்று கார்த்தியை கிடத்த....
 
பின்னால் நுழைந்த அகல்யா, ரூம் லைட்டை போட்டாள். ஏதேதோ முனகி கொண்டு கார்த்தி திரும்பி படுத்தாள். 
 
ஜன்னலருகே சித்ரா மயங்கி கீழே கிடப்பதை அகல் பார்த்ததும், " சித்தூ ", என்று அலறி, அவளை நோக்கி ஓடினாள்.
 
கார்த்தியை கிடத்திவிட்டு,  திரும்பி பார்த்த தாமஸ், சித்ரா மயங்கி கிடப்பதை பார்த்தான். அவர்கள் அருகில் ஓடி வந்தான். அவள் கையைப் பிடித்து பார்த்தான். சித்ராவின் ஒரு பக்க கன்னம் வீங்கி சிவந்து காணப்பட்டது.
 
அகல்யா கண்களில் நீர் திரண்டிருந்தது. 
 
"பயப்படாதீங்க.... சித்துவும் மயங்கி தான் கிடக்குது. இன்னைக்கு என்னாச்சு? ஏன் இவ்வளவு குழப்பம்?"
 
அகல்யா, 'தெரியலையே' என்பது போல் பரிதாபமாக பார்க்க,
 
மயங்கி கிடந்த சித்ரா  கண்களுக்குள் விழிகளின் அசைவு. மயக்கம் தெளிவதற்கான அறிகுறிகள் தென்பட்டது.
 
தாமஸ் அகலை பார்த்து, "கொஞ்சம் சுடுதண்ணி கொண்டு வாங்க?"
 
அகல்யா தண்ணி எடுத்து வருவதற்காக கிச்சனை நோக்கி சென்றாள்.
 
தாமஸ் சித்ராவை நோக்கி குனிந்து, அவள் கன்னங்களில் மெதுவாக தட்டி அவளை எழுப்ப முயற்சித்தான். சிறிது நேர முயற்சிக்கு பிறகு, கண்களை சுருக்கி, இமைகளை உயர்த்தி நீட்டி, நிமிர்த்தி, கண்கள் மேலிருந்த  10 கிலோ வெயிட்டை தூக்கி எறிய முயற்சித்தாள். கொஞ்சம் கொஞ்சமாக சித்ரா கண் முழித்தாள்.
 
சுயநினைவு வந்ததும், ஆஆ!!! என்று கன்னத்தைப் பிடித்துக் கொண்டாள். வாங்கின அடி ஞாபகத்துக்கு வந்தது. தாமசை பார்த்ததும் அவளுக்கு ஆச்சரியம்.
 
இவர் எப்படி இங்கே வந்தார்?
 
எழும்பி நின்ற தாமஸ், அவளை நோக்கி கைகளை நீட்ட, பிடித்துக் கொண்டே எழும்பினாள். பயத்தில் இன்னும் நடுங்கி கொண்டிருந்தாள்.
 
தாமஸ்: What happened? ஏன் இப்படி ஜன்னலோரமா மயங்கி கிடந்த? ஏதாவது பார்த்து பயந்துட்டியா?
 
சித்ரா எட்டி கட்டிலில் கார்த்தியை பார்த்தாள். அவள் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்ததும், ஆசுவாசமடைந்தாள்.
 
அகல்யா ஒரு கிளாஸில் தண்ணீர் கொண்டு வர, சித்ரா வாங்கி குடித்து விட்டு, நடந்ததை சொன்னாள். சொல்லி முடிக்கும் தருவாயில்,
 
"அடின்னா சாதாரண அடி கிடையாது. கார்த்திக்கு இப்படி ஒரு அசாத்திய பலம் வர வாய்ப்பே இல்லை. அவளுக்கு என்னமோ முனி புடிச்ச மாதிரி இருந்துச்சு.  இன்னும் எனக்கு கன்னம், தாடை, பல்லுல்லாம் வலிக்குது.. ஏற்கனவே ஒரு நாள் ராத்திரி கூட இதே மாதிரி ஜன்னலை வெறிச்சு பார்த்துகிட்டு இருந்தா... அப்போ நான் அதை பெருசா எடுத்துக்கல..."
 
ஏனோ அகல்யா நடந்த சம்பவத்தை சொல்லாமல் மறைத்தாள்.
 
தாமஸ்: கார்த்தியும் எதையாவது பார்த்து பயந்துருக்கலாம்... தாத்தா சாவுக்கு அப்புறம் எல்லாருமே டிப்ரஷன்ல தான் இருக்கோம். அதனால் ஏற்பட்ட விளைவுகளா இருக்கும். சின்ன பொண்ணு தானே. பாதிப்பு கொஞ்சம் அதிகமா தான் இருக்கும். கார்த்தி தூங்கிட்டு இருக்கிற மாதிரி தான் இருக்கு. அவ கண் முழிச்ச பிறகு நடந்ததை சொல்லி, அவளை பயமுறுத்த வேண்டாம். நம்புகிற மாதிரி ஏதாவது சொல்லி சமாளிச்சிடுங்க.
 
அகல்யா: முதலில் இந்த விஷயங்கள் எல்லாம், அவளுக்கு ஞாபகத்துல இருக்குதான்னு பார்ப்போம்.
 
தாமஸ்: அதுவும் கரெக்ட் தான்.  வீணா மனசு போட்டு குழப்பிக்காம, ஜன்னலை மூடிட்டு நிம்மதியா தூங்குங்க. ஏதாவது தேவைன்னா எனக்கு  கால் பண்ணுங்க.... காலையில பேசிக்கலாம். ஓகே குட் நைட்.... என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.
 
அவன் சென்றதும், சித்ரா கன்னத்தை திருப்பி பார்த்த அகல்யா, "ரொம்ப சிவந்து போச்சே... காலையில ரொம்ப வீக்கம் இருந்துச்சுன்னா, ஒத்தடமோ, மூலிகை பத்தோ போடலாம். கார்த்தி தூங்கட்டும். இதுக்கு மேல பிரச்சனை இருக்காதுன்னு நினைக்கிறேன். இப்ப நீ பேசாம படுத்து தூங்கு...", என்று சொல்லிவிட்டு சென்று ஜன்னலை மூடினாள்.
 
திரும்பி வந்த அகலை, 
 
"அக்கா ஒரு நிமிஷம்", என்று சித்ரா சொல்ல, அகல் நின்றாள்.
 
சித்ரா அவளை கட்டிப்பிடித்துக் கொண்டாள்.  பயத்தில் விசும்பினாள். அவள் முதுகு குலுங்கியது. நடுக்கம் இன்னும் சித்ராவுக்கு தீரவில்லை. அகல் ஆதரவாக அவள் முதுகில் தட்டிக் கொடுத்தாள். 
 
அகலுக்கும் உள்ளுக்குள் குழப்பமும் பயமும் நிறைந்திருந்தாலும், அவள் காண்பித்துக் கொண்டால், தங்கைகள் பயந்து போய் விடுவார்களே என்ற தயக்கம். தங்கைகள் தான் அவளைப் பொருத்தவரையில் முக்கியம்.
 
"பயப்படுற மாதிரி ஒன்னுமில்லை சித்து...  தைரியமாய் இரு. நாமளே பயந்தா கார்த்திக்கு யார் தைரியம் சொல்லுவா... அவ சின்ன பொண்ணு, எதையோ பார்த்து பயந்துருக்கா. நம்ம வீட்டுக்குள்ளேயும், காவண வீட்டுக்குள்ளேயும் எந்த தீய சக்தியும் நெருங்க முடியாது. தாத்தா இருக்கும்போது தான் மந்திர கட்டு போட்டிருந்தாரே. போதாக்குறைக்கு ராமன் வாத்தியார் வெட்டிமுறிச்சான்  இசக்கி கோயிலில் இருந்து கொண்டு வந்த திருவிளக்கை வீட்ல வச்சுட்டு போயிருக்காரு. இதெல்லாம் தாண்டி, வீட்டுக்குள்ள முனி எப்படி வரும்?"
 
அணைப்பிலிருந்து விடுபட்ட சித்ரா, அவளை கூர்மையாக பார்த்து: வீட்டுக்குள்ள வராது. ஆனா தோட்டத்துக்கு வரலாம்ல? அதைப் பார்த்து கார்த்தி பயந்திருக்கலாம்ல்ல... என்று கேட்க,
 
அவள் கேட்பது சரிதான் என்று அகல்யாவுக்கு தோன்றினாலும், அதை ஒத்துக் கொள்வதாக இல்லை.
 
அகல்யா: அப்படியே வந்திருந்தாலும், அதை பார்த்து அவ பயந்துருந்தாலும்,  அவளை சரி பண்ண வேண்டியது அக்காங்க நம்ம பொறுப்பு. அதனால முதலில் நாம பயப்படாம இருக்கணும். புரியுதா ?
 
சித்ரா புரியுது என்று தயக்கமாக சொன்னாள்.
 
அகல்யா: மேற்கொண்டு என்ன பண்றதுன்னு காலையில பேசிக்கலாம். இந்த ஜன்னலை இரவு நேரங்களில் திறக்காத. தெய்வமாய் இருக்கிற நம்ம அப்பா அம்மாவையும், தாத்தாவையும் துணைக்கு வரச் சொல்லி நினைச்சுக்கோ.   இப்ப நீ பேசாம படுத்து தூங்கு.
 
சித்ரா கட்டிலில் போய் உட்கார,
 
அகல்யா கார்த்தியை ஒரு முறை திரும்பி பார்த்தாள். அவளிடம் எந்த சலனமும் இல்லை. அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தாள். அகல் ரூமை விட்டு வெளியே சென்றாள்.
 
சித்ரா கார்த்தியை பயத்தோடு பார்த்துக் கொண்டே... கட்டிலில் தலை சாய்த்தாள்.
 
மறுநாள் காலை 8 மணி
 
காலையில் வீட்டை விட்டு வெளியே வந்த சுந்தர் ராமன், நேற்று பார்த்த மரத்தடியிலேயே சிக்னி அபரிதமாக ரத்தம் கக்கி இறந்து கிடந்ததை பார்த்தார். பதறி போனார். மேட்டு வீட்டிற்கு சென்று அகல்யாவிடம் நலம் விசாரித்தார். இரவு நடந்த சம்பவங்களை, அகல் எடிட் செய்து, கார்த்தி எதையோ பார்த்து பயந்து விட்டாள் என்ற மட்டிற்கு சொன்னாள்.
 
ராமன் வாத்தியாரும் சடைசாமி சொன்ன விஷயங்களை சொல்லி, குழப்ப விரும்பாமல் மறைத்து விட்டார். 
 
ரெண்டு பேரும், அதி முக்கியமான விஷயங்களை மறைக்கிறார்கள் என்று இருவருக்குமே தெரியவில்லை.
 
சிக்னி இறந்து கிடந்தது தெரிந்ததும், அகல்யா என்னதான் நடக்கிறதென்று தெரியாமல் குழம்பி போனாள்.
 
ராமன்: கார்த்தி கிட்ட இப்ப சொல்ல வேண்டாம். நான் அதை காட்டுக்கு எடுத்துட்டு போய் பொதச்சிடறேன். எங்கேயாவது ஓடிப்போய் இருக்கும்னு மட்டும் சொல்லு.
 
அகல் சரி என்றாள்.
 
பின்னர், ராமன் ஒரு கோணி பையில் சிக்னியை அள்ளிப் போட்டுக் கொண்டு கடற்கரைக்கு போகும் வழியில் புதைத்து விட்டு வந்தார். 
 
கீழத்தெரு வேப்ப மரத்திற்கு வந்த ராமன், சடை சாமியை தேடினார். அவன் இல்லை. டீக்கடைக்கு போகும் வழியில், அவனை விசாரித்தபடியே சென்றார். யாரும் காலையில் இருந்து அவனை பார்க்கவில்லை என்றார்கள்.
 
டீக்கடையில் அமிர்தமும் செல்லப்பனும் மட்டும், அவனை எதுக்கு திடீர்னு விசாரிக்கிறீங்க என்று கிராஸ் கொஸ்டின் கேட்டார்கள்.
 
ராமன்: வேற ஒன்னும் இல்லப்பா... ராத்திரி முனி ஓட்டம் இருந்துச்சா இல்லையான்னு தெரியல. மேட்டு தெருவில் வழக்கமா உறுமிட்டு திரியுமே... அந்த நாய் காலையில பார்த்தா, ரத்தம் கக்கி செத்து கிடந்துச்சு. இவனையும் காலையிலிருந்து காணல. அதான் சந்தேகப்பட்டு விசாரிக்கிறேன்.
 
டீக்கடையில் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தவர்கள், பதட்டம் ஆனார்கள்.
 
"ஏலே அந்த சடை சாமி பய எங்கேயாவது தென்படுறானா... தேடுங்கல..." என்று சுற்றிலும் கட்டளைகள் பறந்தது. முனி ஓட்டம், மேட்டு தெரு நாய் இறந்து கிடந்தது, சடை சாமியை காணாத விஷயம், 5ஜி நெட்வொர்க் செயல்படுவதை விட வேகமாக செயல்பட... ஊர் முழுவதும் செய்தி பரவியது. அவனைத் தேட ஆரம்பித்தார்கள்.
 
ஊருக்கு வெளியே, இருளாயி கோயிலுக்கு பின்னால் இருக்கும் முள்ளு காட்டில், ரத்தம் கக்கி செத்து கிடந்தான் சடைசாமி. வானத்தில் கா...கா என்று காகங்களும், கூடவே வல்லூறுகளும் சத்தமிட்டு பறந்து கொண்டிருந்ததால், நிச்சயமாக ஊர்காரர்கள் அவன் சடலத்தை சீக்கிரம் கண்டுபிடித்து விடுவார்கள்.
 
அதே நேரம்,
 
காவண வீட்டின் கேட் தட்டப்படும் சத்தம் கேட்க, தாமஸ் வெளியே வந்து எட்டிப் பார்த்தான்.
 
நடுத்தர வயதை தாண்டிய பெண்மணி ஒருத்தி நின்றிருந்தாள். நட்பில்லாத கண்கள். பொட்டு இல்லாத நெற்றி. சிரிப்பு இல்லாத உதடுகள்.
 
"யாருமா நீங்க? என்ன வேணும்?"
 
"தம்பி, நான் என் மகன் தாமசை பாக்கறதுக்காக  தென்காசியில் இருந்து வந்திருக்கேன். இந்த வீட்ல இருக்கிறதா தான் சொன்னாங்க. இந்த ஊருக்கு வேலைக்கு வந்ததிலிருந்து போன் பண்ணவே இல்ல. அவன் நம்பரும் சுவிட்ச் ஆஃப்ல இருக்கு. வீட்ல இருக்கிறானா?"
 
தாமஸ்க்கு பதட்டமானது.  இதுவரைக்கும் நல்லா தானே போயிட்டு இருந்துச்சு. 
 
இது என்னடா புது பிரச்சனை!!!
 
பதட்டத்தை மறைத்துக் கொண்டு, அவசர சிரிப்பை உதிர்த்தான். சுற்றிலும் யாராவது இருக்கிறார்களா என்று பார்வையை ஓட்டினான்.
 
நல்ல வேளையாக யாருமே இல்லை.
 
"அம்மா, அவர் வெளியில போயிருக்கிறார். நீங்க உள்ள வந்து உட்காருங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாரு.."
 
அவள் தாமசை நட்பில்லாமல், வெறுப்பில்லாமல், ஆனால் பார்வையால் அளவெடுத்தாள். உள்ளே வராமல் கேட்டுக்கு வெளியேவே நின்றிருந்தாள்.
 
"காலையிலேயே எங்க போனான்? 9 மணிக்கு தானே ஸ்கூல்? ஆமா நீங்க யாரு?"
 
"நான் அவருடைய ஃப்ரெண்ட்.. கூட தங்கிருக்கேன். யாரையோ பார்த்துட்டு வரேன்னு அவசரமா போனாரு. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாரு. நீங்க உள்ள வந்து உட்காருங்க..."
 
வந்தவள் சிரித்தாள். தாமஸ்க்கு அவள் சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை.
 
"வெயிட் பண்றதுக்காக உள்ள வர சொல்றியா? இல்ல, என்னையும் தாமசை செஞ்ச மாதிரி, காலி பண்ண போறியா?"
 
தாமஸ் உச்சகட்டமாக அதிர்ந்தான். அதிர்ச்சி முகத்திலேயே வெளிப்பட்டது. பதில் சொல்ல முடியாமல் திணறினான்.
 
"அது... வந்து... வந்து.."
 
வந்தவள் கையில் வைத்திருந்த போனை எடுத்து, காதில் ஒற்றி, "பேசிக்கிட்டு இருந்ததெல்லாம் கேட்டியா? பையன் உண்மையை ஒத்துக்கிட்டான். கொஞ்சம் இங்கே வருறியா?"
 
தாமஸ் பதட்டமாக, "உண்மையிலேயே யாரு நீங்க?"
 
வந்தவள்: அதைத்தான் தம்பி நானும் கேட்கிறேன்... கொஞ்சம் வெயிட் பண்ணு. டைரக்டர் வந்துருவாரு. அவரு சொல்லுவாரு.
 
அடுத்து சில நொடிகளில், கேட்டருகே காலடி சத்தம் கேட்டது. வருவது யாரென்று தாமஸ் எட்டி பார்க்க, திருமுடி "அபூர்வ சகோதரர்கள்" ஜனகராஜ் மாதிரி கோணலாக சிரித்துக்கொண்டு நின்றான்.
 
திருமுடி வந்தவளை பார்த்து, 
"சரோஜா  இனிமே நீ போ. சாரை நான் கவனிச்சிக்கிறேன்."
 
அவள் நெளிந்தபடி,
"பெர்ஃபார்மென்ஸ் பார்த்தல்ல... பேசின தொகைக்கு மேல 500 ரூபாய் போட்டு கொடு...", என்றாள்.
 
திருமுடி: சாயங்காலம் வந்து தரேன். இப்ப நீ போ.
 
அவள் தாமஸுக்கு சிரித்தபடி, கவர்ச்சியாக டாடா காண்பித்து விட்டு சென்றாள்.
 
திருமுடி தாமசை பார்த்து, "வணக்கம் தாமஸ் சார். நல்லாருக்கீங்களா?"  என்று நக்கலாக கேட்க,
 
கையும் களவுமாக மாட்டியதால், தாமஸ் செய்வதறியாது திகைத்து நின்றிருந்தான்.
 
தொடரும்
 
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது

https://kavichandranovels.com/community/dennis-jegans-novels-comments-and-discussions/


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 2 months ago
Posts: 81
Topic starter  
கருப்பு 32
 
திருமுடிக்கு இந்த மாதிரி தகிடு தத்தங்கள் எல்லாம் கைவந்த கலை. 
 
உண்மை தெரிந்து போனதால், திருமுடியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று தாமஸ் அவசரகதியில் யோசித்தான். பதட்டம் முகத்தில் டிஸ்ப்ளே ஆகாமல் இருக்க பெருமுயற்சி செய்தான்.
 
திருமுடி: என்ன தாமஸ் சார்.... எப்படி நம்ம வேலை? எனக்கு என்ன குழப்பமா இருக்குன்னா எப்படி  மாவட்ட பள்ளி கல்வி அலுவலகத்தையும், ஸ்கூலையும் ஏமாற்றி தாமஸ்ன்கிற பேர்ல வர முடிஞ்சது???... சரி அத விடுங்க.... தாமசை ஸ்கூல்ல பார்த்திருக்க மாட்டாங்க. ஏதோ forgery பண்ணி வந்துட்டீங்க.  ஓகே .... ஆனா எதுக்காக தாமஸ்ங்கற பேர்ல நடிக்கிறீங்க? உங்க நோக்கம் என்ன? உண்மையை நீங்களா சொல்றீங்களா? இல்ல, பொழுதுபோக்கா இந்த விஷயத்தை ஊர் பூரா பத்த வைக்கட்டுமா?
 
தாமஸ் சுற்றிலும் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தான். அந்த ஒரே நொடியில், அவன் மண்டைக்குள் பல்வேறு யோசனைகள் குறுக்க மறுக்க ஓடின. அனைத்து சாத்தியக்கூறுகளையும் நொடிப்பொழுதில் அலசினான். முடிவெடுத்த தீர்க்கம் அவன் முகத்தில் வெளிப்பட்டது.
 
பின்னர் திருமுடியை பார்த்து, "கொஞ்சம் வீட்டுக்குள் வர முடியுமா? தனிப்பட்ட முறையில் பேச வேண்டிருக்கு..."
 
திருமுடி கண்களில் சந்தேகத்தை தேக்கிக்கொண்டு, தாமசை ஏற இறங்க பார்த்தான்.
 
மைண்ட் வாய்ஸ்:  இவன் பார்க்கப் பழம் மாதிரி இருந்துட்டு, நம்மளை விட பயங்கர தில்லாலங்கடியா இருக்கிறான். உண்மையான தாமசை என்ன பண்ணினான்னு தெரியல. இவனை நம்பி வீட்டுக்குள்ள தனியா போலாமா?
 
தாமஸ் அவன் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டு, "நீ பயப்பட வேண்டாம்.  உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும். வேற யாரும் கேட்டுற கூடாதுல்ல, அதனால தான் உள்ளே கூப்பிடுறேன்...", என்றான்.
 
திருமுடி: ஒரு நிமிஷம் இருங்க... என்று சொல்லிவிட்டு போனை  எடுத்து, யாருக்கோ போன் செய்தான்.
 
"ஹான்.... சரோஜா, தாமஸ் சார் ஏதோ தனிப்பட்ட முறையில் பேசணும்னு வீட்டுக்குள்ள கூப்பிடுறாரு. சாயங்காலம் நான் உன்ன பாக்க வரலைன்னா, நம்ம பசங்க எல்லாருக்கும் விஷயத்தை சொல்லிரு. குறிப்பா போலீஸ் ஸ்டேஷனுக்கு மறக்காம போய் ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்துடு..." 
 
"..........."
 
"சரி, சரி பணம் தானே சாயங்காலம் வரும் போது தரேன்... நான் சொன்ன விஷயத்தை மறந்துடாத..."
 
ஃபோனை வைத்துவிட்டு, ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்த தாமசை பார்த்து,
 
"என்ன சார் ஆள் பாக்குறதுக்கு காமெடி பீஸ் மாதிரி இருக்கான். விவரமாக இருக்கானேன்னு நினைக்கிறீங்களா? இந்த காலத்துல இப்படில்லாம் இல்லனா நம்மளையே அவிச்சிடுவானுங்க... திருட்டு போர்ஜரி கம்மனாட்டி பசங்க...", என்றான்.
 
தாமஸ் தொண்டையை செறுமி கொண்டான்.
 
தாமஸ் திரும்பி வீட்டுக்குள் செல்ல, திருமுடி உள்ளுக்குள் பயம் இருந்தாலும் தைரியமாக இருப்பது போல் காட்டிக் கொண்டு, அவனைப் பின் தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்தான். 
 
தாமஸ் முன் கதவை பூட்டினான்.
 
அரை மணி நேரத்திற்கு பிறகு,
 
கதவு திறக்கப்பட்டது. தாமஸ் வெளிப்பட்டான். அவனைத் தொடர்ந்து திருமுடி வெளியே வந்தான்.
 
திருமுடி: எல்லாம் ஓகே தான். உங்க ப்ராஜெக்ட்டை வெற்றிகரமா முடிக்கிறதுக்கு என்னாலான உதவியை நான் கண்டிப்பா செய்றேன். நானும் ரொம்ப நாளா கஷ்டப்பட்டுட்டு தான் இருக்கேன். வாழ்க்கையில் பெருசா முன்னேற்றம் இல்லை. உங்க ப்ராஜெக்ட் நல்லபடியா முடிஞ்சுச்சுன்னா எனக்கும் ஏதாவது பார்த்து செய்யுங்க.
 
தாமஸ், டிவி செய்தி வாசிப்பாளர் போல் முகத்தை வைத்துக்கொண்டு "sure" என்றான்.
 
திருமுடி: நீங்க தாமஸ் தானா இல்லையான்னு கண்டுபிடிக்கிறதுக்காக எனக்கு 2000 ரூபாய் தண்டசெலவு. இன்னைக்கு அந்த சரோஜாவுக்கு கொடுக்கணும். முதல்ல அதை குடுங்க.
 
தாமஸ் வீட்டுக்குள் சென்று 2000 ரூபாய் எடுத்து வந்து அவன் கையில் கொடுத்தான். திருமுடி வாயெல்லாம் பல்லாக சிரித்து விட்டு, அங்கிருந்து கிளம்பினான்.
 
வீட்டை விட்டு வெளியே வந்ததும், திருமுடியின் சாதாரண சிரிப்பு அசாதாரணமாக மாறியது.
 
அதே நேரம்,
 
மேட்டு வீட்டில் அகல்யா போனில் பேசிக் கொண்டிருந்தாள்.
 
"சார், எதிர்பாராத விதமா ரெண்டு நாள் முன்னால எங்க தாத்தா இறந்து போனார். அதனால நீங்க குறிப்பிட்டுருக்கிற ஜாயினிங் டேட்ல, என்னால ஜாயின் பண்ண முடியாது. வீட்ல ஒரு சில விஷயங்களை ஒழுங்கு படுத்த வேண்டி இருக்கிறது. உங்க ngo-ல வேலை பாக்கணும்னு நான் ரொம்ப விருப்பப்படுகிறேன். தயவுசெய்து என்னுடைய ஜாயினிங் டேட்டை ஒரு வாரம் தள்ளிப் போட முடியுமா?" 
 
"..................."
 
"ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார்", போனை கட் பண்ணி விட்டு, கையில் வைத்து தட்டியபடி யோசித்துக் கொண்டிருந்தாள்.
 
ஹேமாவை வேறு ஃபோன் பண்ணி எவனோ டார்ச்சர் பண்றான். ஊருக்கே வந்து விடு என்று சொன்னால் கேட்க மாட்டேங்கிறாள். தனியாக இருந்து கஷ்டப்படுகிறாள். எல்லா பிரச்சனைகளும் ஒன்றாக வருகிறதே!
 
"வன்மம் சூழ்ந்திருக்கு.... கண்ணுக்கு தெரியாத எதிரிகள்..."
 
நேற்றிரவில் இருந்து திரும்பத் திரும்ப ஓடிக் கொண்டிருந்தது.
யாராக இருக்கும்? 
எங்கள் மேல் வன்மத்துடன் இருப்பது யார்?
முத்துபாண்டி தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது ஆனால் கண்ணுக்குத் தெரியாத எதிரி யார்?
 
முத்துப்பாண்டி தாத்தாவை சாகடிக்கும் அளவுக்கு போவான் என்று அவளுக்கு தோன்றவில்லை. சும்மா சிலம்புவானே தவிர அவனுக்கு அவ்வளவு தைரியம் இருக்காது. 
 
தாத்தா சாவதற்கு முன்னால்,  நிலத்தை அளப்பதற்காக சென்றார். முத்துப்பாண்டி அங்கேயும் வந்து நவரசத்தையும் காட்டி நடித்துவிட்டு சென்றதாக சொன்னார். அன்றைக்கு இரவு, தாத்தாவுடன்  கடைசியாக பேசிய விஷயங்கள் ஞாபகத்திற்கு வந்தது சித்ராவைப் பற்றி விசாரித்தார்.
 
ரொம்ப கவலையாக சித்ராவை பற்றி விசாரித்தாரே?
தாத்தா சாவதற்கு முன்னால் இருந்தே அவள் மூஞ்சி சரியில்லை. ஏதோ பறி கொடுத்த மாதிரியே  இருக்கிறாளே? அப்படி என்றால், சித்ரா விஷயத்தில் something is wrong.
 
அவள் போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்துவிட்டு, சித்ரா ரூமை நோக்கி சென்றாள். சித்ராவும் கார்த்திகாவும் அடித்துப் போட்ட மாதிரி, ஆளுக்கொரு பக்கமாக தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
 
சித்ராவின் ஒரு கன்னம் சிவந்து வீங்கியிருந்தது. காலை 8 மணி தாண்டியும் இருவரும், தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்தபோது, காலேஜுக்கோ ஸ்கூலுக்கோ போகப்போவதில்லை என்று புரிந்தது.
 
சித்ரா படுத்திருந்த தலையணைக்கு பக்கத்தில் போன் இருந்தது. அகல்யா மெதுவாக சென்று போனை எடுத்தாள். ரூமை விட்டு வெளியே வந்தாள்.
 
கேட்டால் என் போன் சுவிட்ச் ஆஃப் ஆகிவிட்டது. சார்ஜ் இல்லை  அவசரமாக போன் பண்ண வேண்டி வந்ததால், உன் போனை எடுத்துக்கிட்டேன்னு சொல்லிக்கலாம்.
 
வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்து  பார்க்க வேண்டும்!
 
ஏனோ அவளுக்கு இனம் புரியாத படபடப்பு, தடுமாற்றம். இந்த மாதிரி திருட்டுத்தனம்ல்லாம் அவள் செய்ததே கிடையாது. தடுமாற்றம் நடுக்கமாக கைகளில் தெரிந்தது. இதெல்லாம் தேவையா? நானே என் தங்கைகளை நம்பாவிட்டால் எப்படி? 
 
குடும்பத்திற்கே ஏதோ ஆபத்துன்னு கருப்பன் தாத்தா வந்து எச்சரிக்கிறார். என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டாமா? நீ செய்வது ஒன்றும் தவறில்லை.
 
அகல்யா தன்னுடைய ரூமுக்குள் நுழைந்து, போனை எடுத்து பேட்டன் லாக்கை ஓப்பன் செய்வதற்காக போட்டாள். லாக் ஓபன் ஆகவில்லை. வழக்கமாக சித்ரா பயன்படுத்தும் பேட்டன் லாக் இன்கரெக்ட் என்று வந்தது. இரண்டு தடவை ட்ரை பண்ணி பார்த்தாள் ஓபன் செய்ய முடியவில்லை. மாற்றிவிட்டாள் போலிருக்கிறது. மறுபடியும் போனை கொண்டு வைப்பதற்காக ரூமை விட்டு வெளியே செல்லப் போன நொடியில், போனில் லைட் எரிந்தது. 
 
TINA calling....
 
சைலண்டில் போடப்பட்டிருந்ததால், இன்கமிங் கால் வந்தபோது லைட் மட்டுமே எரிந்தது.
 
யாரது டீனா? ஒருவேளை அவளுடன் படிக்கும் பிரண்டு யாராவது இருக்கலாம்.
 
எதார்த்தமாக அட்டென்ட் செய்து ஹலோ என்றாள். மறுமுனையில் ஹலோ என்று ஆண் குரல் கேட்டதும், துணுக்குற்றாள்.
 
TINA என்பது பையனா?
 
"என்ன நான் போன் பண்றேன்... மெசேஜ் பண்றேன்... நீ ரிப்ளை பண்ணவே மாட்டேங்குற?" நைட் சம்பவத்துக்கப்புறம் இன்னும் முழிச்சுக்கலயா?"
 
யார் இவன்? எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்குதே?
 
"அது......" என்று குரலை ரொம்ப காட்டிக்கொள்ளாமல்... இழுத்தாள்.
 
"சரி ஓகே விடு. இன்னைக்கு எனக்கு வேற வேலை வந்துருச்சு. அதனால நான் உன்னை மீட் பண்ண முடியாது. நம்ம திருப்பரப்பு ப்ரோக்ராமை நாளைக்கு வச்சுக்கலாம். ஓகேவா?"
 
யாரென்று அகல்யாவுக்கு இப்போது புரிந்தது, தாமசின் குரல்...
 
ஓகே என்றாள். சித்ராவின் குரல் இல்லை என்று தாமஸ் புரிந்து கொள்ளவில்லை. Ok bye என்று சொல்லிவிட்டு காலை கட் செய்தான். தாமஸ் எதற்காக சித்ராவுக்கு போன் செய்கிறார்? என்ன ப்ரோக்ராம்? ஒருவேளை ரெண்டு பேரும்  காதலிக்கிறார்களோ? 
 
சித்ரா ரூமுக்குள் சென்று பார்த்தாள். இன்னும் நல்ல தூக்கத்தில் தான் இருந்தாள். அவள் தலையணை அருகே ஃபோனை வைத்து விட்டு ரூமை விட்டு வெளியே வந்தாள்.
 
உள்ளுக்குள் என்னமோ மெதுவாக சத்தமில்லாமல் உடைந்தது, தகர்ந்தது, வெடித்தது. இருவருக்கும் இடையில் மலர்ந்திருந்த நட்பு பாலத்தில் கரகரவென விரிசல்கள். உண்மையில் இந்த நட்பை அவள் ரசிக்க ஆரம்பித்து இருந்தாள்.
 
போன் சம்பவம் பெரிய அளவில் அகல்யாவை பாதிக்கவில்லை என்றாலும், ஒரு நாசுக்கான கோபம், அதைத் தொடர்ந்து அச்ச உணர்வும் பரவியது. ஒரு பக்கம் மனது அமைதியாக யோசித்தது, மறுபக்க மனது நிலை கொள்ளாமல் தவித்தது.
 
கற்பனை விதவிதமான யூகங்களை எழுப்பியது. அவள் ரூமுக்குள் சென்று சேரில் அமர்ந்தாள். 
 
தாமஸ் நல்ல பையன் தான் சித்ராவுக்கு ஏற்றவர் தான்.  நல்லவிதமாக பேசுகிறார், பழகுகிறார். ஆனால் என்னவோ அவரை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் இருப்பது போலவும், அதை தாண்டி அவர் வெளியே வராது போலவும் அவளுக்கு தோன்றியது.
 
புதிதாக பார்ப்பவளை போல், ரூமை சுத்திலும் பார்த்தாள். உள்ளுக்குள் எழுந்த ஒரு இழப்பு உணர்வை, எச்சில் விழுங்கி உள்ளேயே அமிழ்த்தினாள்.
 
"இருந்தாலும் நாமளே ஒரு முடிவுக்கு வரக்கூடாது.... அனாவசிய கேள்விகள் கேட்டு குழப்பி விடக்கூடாது. குறிப்பாக சித்ராவிடம் இதைப் பற்றி இப்போதைக்கு கேட்க வேண்டாம்.  பொறுத்திருந்து பார்ப்போம்..."
 
ஹேமாவுக்கு கால் செய்வதற்காக, போனை சுவிட்ச் ஆன் பண்ணினாள்.
 
காலை 10 மணி
 
இருளாயி கோயிலை சுற்றியும், முள்ளு காடு ஆரம்பிக்கும் பகுதியிலும் நிறைய ஊர்க்காரர்கள் சுற்றி நின்றபடி பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள்... அவர்கள் பேச்சில் சண்டி முனி பற்றியும், முனி பாய்ச்சல் பற்றிய சங்கதிகளும் தான் அதிகமாக அடிபட்டது. சடைசாமியை பொருத்தவரையில் ஊருக்குள் நல்ல அபிப்பிராயம் நிலவியதால் அவனுக்காக அனைவரும் பரிதாபப்பட்டார்கள்.
 
கூட்டத்தினரிடையே நின்றிருந்த பெருசு தங்கதுரையும், அந்தோனியும், அமிர்தமும், 
 
முள்ளு காட்டில் போலீஸ் தலைகள். சடை சாமியை வெள்ளை துணியால் சுற்றி ஸ்ட்ரக்சரில் வைத்து தூக்கிக் கொண்டு வந்து, அமரர் ஊர்தியில் வைத்தார்கள். மூடப்படாத அவன் முகத்தை சுற்றி நின்ற கூட்டத்தினர் கடைசியாக ஒருமுறை எட்டிப் பார்த்துக் கொண்டனர். 
 
வண்டி புகை விட்டபடி கிளம்பியது.
 
நேற்று நடந்த சம்பவத்தை கூட்டத்தில் நின்றிருந்த சுந்தர் ராமன் வாத்தியர் யாரிடமும் சொல்லவில்லை. அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார். இந்த விஷயத்தில் உண்மை தன்மை தெரியாமல் வெளியே சொல்லவும் தயக்கம். 
கேப்பை கக்கத்தில் வைத்து, போன் பேசிக்கொண்டே முள்ளுகாட்டில் இருந்து வெளிபட்டார் அஞ்சுகிராமம் ஸ்டேஷன் எஸ்ஐ ரங்கசாமி.
 
"இல்ல சார்,  suspicious ஆ எதுவும் இல்லை. ஆள் வயசாளி. வேற ஏதாவது ஹெல்த் பிராப்ளம் இருந்துருக்கலாம். மேலோட்டமா பார்க்கும்போது உடம்புல வேற எந்த காயமும் இல்லை. பின்னந்தலையில் மட்டும் அடிபட்டு இரத்தம் உறைஞ்சிருக்கு. கீழே விழுந்ததனால் ஏற்பட்டிருக்கலாம்.  முனி தான் காரணம்னு எல்லாரும் பேசிக்கிறாங்க..."
 
"........."
 
" Yes sir.....yes sir......", என்று நிறைய எஸ் சார்களை சொல்லிவிட்டு ஃபோனை வைத்தார் எஸ்ஐ ரங்கசாமி.
 
சுற்றி நின்ற ஊர்காரர்களை ஏறிட்டு பார்த்தார்.
 
"ஏம்பா ரெண்டு மூணு  நாள் முன்னால தானே, பெரியவர் ஒருத்தர் முனி அடிச்சு செத்துட்டாருன்னு சொன்னிங்க. இதுவும் முனி வேலையா? இல்ல வேற எவனாவது வேலையை காமிச்சிட்டானா?", என்று சத்தமாக கேட்க,
 
"முனி வேலதான்" என்று கூட்டத்தினர் கோரசாக சொன்னார்கள்.
 
எஸ் ஐ: அட என்னப்பா முனி வேலன்னு சார்ஜ் சீட்டு பைல் பண்ணா, கோர்ட்ல ஒத்துக்குவாங்களா? ஜட்ஜ் எங்களல்ல மெண்டல்ன்னு சொல்லுவாரு. அப்படியே முனி வேலையாக இருந்தால், ஊர் முக்கியஸ்தர்கள் கிட்ட சொல்லி ஏதாவது பூஜை புனஸ்காரம் பண்ணி மேற்கொண்டு எதுவும் நடக்காமல் தடுத்து நிறுத்துங்கப்பா. எங்களுடைய வேலையை குறைங்க. 
 
அந்தோணி காதுக்குள் அமிர்தம் கிசுகிசுப்பாக: இப்ப மட்டும் என்ன வேலை செய்யவா போறாங்க? பாடியை கொண்டு போய் சம்பிரதாயத்துக்கு போஸ்ட்மார்ட்டம் பண்ணி, பைலை க்ளோஸ் பண்ண தான் போறாங்க.
 
எஸ் ஐ பார்க்கிறார் என்று தெரிந்ததும், கிசுகிசுப்பை நிறுத்திக் கொண்டான்.
 
பஞ்சாயத்து எலக்சன் நடக்காததால், ஊருக்கு ப்ரெசிடெண்ட் என்று யாரும் கிடையாது. ஐந்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் வைத்திருக்கும் ராயப்பனும், சிங்கப்பூர் காரரும், பெரிய வீட்டு கருப்பன் தாத்தாவும், சகாயராஜும் தான்  ஊர் முக்கியஸ்தர்கள். இப்போது கருப்பன் தாத்தா இல்லை அவருக்கு பதிலாக முத்துப்பாண்டி அந்த இடத்தை நிரப்பி கொள்வான். 
 
பெருசு தங்கதுரை: ஐயா! ஊருக்குள்ள ரொம்ப நாளா முனி பாய்ச்சல் பேச்சு அடிப்படாம இருந்து, சமீபத்தில் தான் இந்த மாதிரி நடக்குது. அதனால மக்கள் பீதியில இருக்காங்கங்கறது உண்மைதான். அதனால இனிமேல் ஒரேடியா எல்லா மரணத்தையும் முனிமேல் போட்டுறுவாங்க. தயவு செய்து நீங்க கொஞ்சம் விசாரிங்க. முனி ஓட்டம் இருக்கிறது உண்மை தான். ஆனா அதை வைத்து வேற எவனும் வேலையை காமிச்சிட கூடாதுல்ல அதனால தான் சொல்றேன்.
 
எஸ்ஐ பெரியவரை குழப்பமாக பார்த்தார். ஊரே முனி வேலைன்னு சொல்லும் போது, இவர் என்ன வேறு விதமாக சொல்கிறார் என்பதுதான், அவர் பார்வையின் அர்த்தம்.
 
எஸ் ஐ: பெரியவரே, நீங்க ஏதாவது புதுசா சொல்லி குழப்பம் ஏற்படுத்தாதீங்க?
 
தங்கதுரை: ஐயா நான் குழப்பம் ஏற்படுத்தல... சண்டி முனி சாதாரண முனி கிடையாது. முனிகளில் நல்லதும் இருக்கு, கெட்டதும் இருக்கு. சண்டி முனியும் அப்படித்தான். முனி ஓட்டம் நடக்கும்போது, எதிர்க்க வர்றவங்களை நிச்சயமா அடிச்சிடும். ஆனா சில முனிகள் காலில் விழுந்து கும்பிட்டா பரிதாபப்பட்டு விட்டுரும். சண்டி முனி நிச்சயமாக விடாது. அடிச்சே தீரும். அடிச்சு தூக்கி வீசிடும். எதிரே வர்றவங்களை அடிக்கிறதுனால காயங்கள் பொதுவா உடம்பின் முன் பகுதியில் தான் இருக்கும். ஆனால் இறந்து போன சடைசாமிக்கு முன் பகுதியில் எந்த காயமும் இல்லை. ஆனா பின்னந்தலையில், பின்கழுத்தில் காயம் இருந்ததை, நீங்க ஸ்ட்ரெச்சர்ல தூக்கிட்டு போகும் போது பார்த்தேன். அதனால் தான் எனக்கு சந்தேகம்.
 
பெரிய கருப்பன் ஐயாவுக்கு காயங்கள் எப்படி இருந்துச்சுன்னு எனக்கு தெரியல. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் உங்களுக்கு இருக்கும் இல்லையா? நீங்க அதை வச்சு  பாருங்க. குற்றவாளிகள் தப்பிக்க கூடாதுன்கிற ஒரு நோக்கத்தில் தான் இதை சொல்றேன்... மத்தபடி குழப்பம் ஏற்படுத்தனுங்கறதுக்காக  இல்லை
 
பக்கத்தில் நின்ற அந்தோணி,
"ஐயா, பெருசு சொல்றது சரிதானுங்க. இன்னொரு விஷயம் என்னன்னா, சடைசாமி இப்ப செத்து கிடக்கிறது முனி ஓட்டம் இல்லாத பகுதி. முதல்ல இந்த பகுதியில முனி ஓட்டம் இருந்துச்சு. இருளாயி கோவில் கட்டுனதுனால, கடற்கரை பாதையில திரும்பி, வேறு பக்கமா ஊருக்குள் போற மாதிரி முனி ஓட்டம் மாறிடுச்சு."
 
எஸ் ஐ: செத்துப்போனவருக்கு வேற யாராவது விரோதிகள் இருக்காங்களா?
 
அமிர்தம்: அவனுக்கு யாரு சார் இருக்க போறாங்க? அவன் கீழத்தெரு வேப்பமரத்தடியில் தான் உட்கார்ந்து இருப்பான். சோறு போட்டாங்கன்னா சாப்பிடுவான். இல்லன்னா அவன் பாட்டுக்கு படுத்து கிடப்பான்.  தினமும் இருளாயி கோயிலுக்கு வந்து கும்பிட்டுட்டு போவான். அவன் நேரமோ என்னமோ செத்து கிடந்ததும், இருளாயி கோயில் பக்கத்திலேயே கிடக்கிறான்.
 
எஸ்ஐ கடுப்பாக: எப்படியோ வேலை வெச்சிட்டீங்க. விசாரிப்பதற்காக திரும்பவும் எப்படியும் வர வேண்டிருக்கும் அப்போது முழு தகவலையும் கேட்டு தெரிஞ்சுக்கிறேன். இப்போ கிளம்புறேன்.... என்று சொல்லிவிட்டு நின்றிருந்த ஜீப்பில் போய் ஏறிக்கொண்டார். அவர் கூட வந்த கான்ஸ்டபிள்களும் ஜீப்பில் ஏறிக்கொள்ள, ஜீப் கிளம்பியது.
 
அவர் கிளம்பியதும் சுற்றி நின்றவர்களை பார்த்து அந்தோணி,
 
"இதோ பாருங்க மக்கா.... சடைசாமி செத்துப் போனது முனி தான் காரணமா இல்லையான்னு தெரியல. என்னவோ இருந்துட்டு போகட்டும். ஆனா முனிவோட்டம் ஆரம்பிச்சது, நிச்சயமா காவண வீட்டை வாடகைக்கு விட்டதிலிருந்து தான். அதற்கு வேற காரணமே இருக்க முடியாது. ஏற்கனவே நேர்ந்து விட்ட காவண வீட்டை மறுபடியும் முனிக்கு நேர்ந்து விடனும், அதை விட்டா வேற வழி இல்ல", என்றான்.
 
சுந்தர்ராமன் அதிர்ச்சி அடைந்தார். அவருக்கு அந்த கருத்தில் நேற்றிரவு வரை உடன்பாடுதான். சடைசாமி குழப்பிவிட்டு செத்துப் போயிட்டானே!
 
யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாதுன்னே தெரியலையே!
 
திருமுடியின் முகம், அவர் மனக்கண்ணில் ஒரு நொடி பிளாஷ் அடித்தது.
 
ஈவு இரக்கமில்லாமல், கருப்பனையே கொலை செய்ய முடிகிறது என்றால், நேரடியாக விசாரணையில் இறங்கினால் ஆபத்து. இந்த விஷயத்தில் நிச்சயம் உதவி தேவைப்படும்!
 
காவண வீட்டை விற்று தான் மூன்று பெண்களையும் கரை சேர்க்கணும்னு கருப்பன் ஆசைப்பட்டார். அவர் கடைசி ஆசை நிறைவேறாமல் போய்விடுமோ? 
 
சுற்றியிருந்த மக்கள் கூட்டம் முனி ஓட்டத்தை தடுப்பதற்கான வேறு வழிகளை அலசி ஆராய்ந்து  கொண்டிருக்க, சுந்தரராமன் அவர்கள் பேச்சுக்களில் மனம் பதியாமல், தனி கவலையில் மூழ்கி போனார்.
 
அதே நேரம்,
முத்துப்பாண்டி வீடு,
 
வீட்டு வாசலில் நின்றபடி, யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தான் முத்துப்பாண்டி. வாசலுக்கு வந்து எட்டிப் பார்த்த அவன் தாய் ராஜலட்சுமி, யாரென்று சைகையில் கேட்க, சிமெண்ட் கம்பெனிகாரர்கள் என்று ஜாடையில் பதில் சொன்னான்.
 
அவள் நகர்ந்ததும், குரலை தழைத்துக் கொண்டு பேசினான்.
 
"கிழவன் சோலியும் முடிஞ்சது. அந்த மூணு சிறுக்கிங்க மட்டும் தான் இருக்காளுங்க. அவங்களையும் அடிச்சு விரட்டிட்டா, காவண வீட்டை மட்டுமில்ல, மேட்டு வீட்டையும் சேர்த்து எடுத்துக்கலாம்..."
"..............."
 
"நீ ஒன்னும் டென்ஷன் ஆகாத. நான் பாத்துக்குறேன். அந்த தாமஸ் பயல எப்படி போட்டு தள்றதுன்னு எனக்கு தெரியும். ராத்திரியோட ராத்திரியா போயி, மண்டைய அடிச்சு ஒடச்சி, சாகடிச்சிட்டு பழியை முனி பேரில் போட்டுரலாம்.
 
".................."
 
"இதுவரைக்கும் நீ சொல்றத தானே நான் கேட்கிறேன். அப்புறம் என்ன உனக்கு சந்தேகம்? நீ சொல்றதையும் கண்டிப்பா பண்றேன்... கவலைப்படாதே.....", என்றான்.
 
வீட்டுக்குள் சென்ற ராஜலக்ஷ்மி, உள்ளே செல்லாமல், அவர்கள் பேசுவதை கேட்பதற்காக, காதை தீட்டியபடி வாசலின் பக்கவாட்டிலேயே நின்றாள்.
 
மேற்கொண்டு ஒரு சில விஷயங்கள் பேசி விட்டு, முத்துப்பாண்டி ஃபோனை வைத்தான். கையை தலைக்கு மேலே உயர்த்தி, சோம்பல் முறித்துக் கொண்டான். 
 
ராஜலட்சுமி அவசரமாக அந்த இடத்திலிருந்து நகர்ந்து, வீட்டுக்குள் சென்றாள்.
 
தொடரும்
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது

https://kavichandranovels.com/community/dennis-jegans-novels-comments-and-discussions/


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 2 months ago
Posts: 81
Topic starter  
கருப்பு 33
 
அடுத்த இரண்டு நாட்களில் நடந்த சம்பவங்களை சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்,
 
அஞ்சுகிராமம் போலீஸ் ஸ்டேஷன்.
 
"நீங்க தானா எஸ் ஐ ரங்கசாமி?"
 
"ஆமா சொல்லுங்க. நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேணும்?"
 
"சார் என்னோட பேரு சுந்தர் ராமன். ரஸ்தாகாடு ஊர்ல சமீபத்துல கொலை செய்யப்பட்ட பெரிய கருப்பன் வீட்டுக்கு பக்கத்து வீடுதான் என்னோட வீடு. நாங்கல்லாம் பேமிலி பிரண்ட்ஸ். அந்த கேஸ் பத்தியும், அப்புறம் சடை சாமி கேஸ் பத்தியும் விசாரிச்சிட்டு போலாம்னு வந்தேன்.."
 
"ரெண்டு கேஸ்லையும் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை சார். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் படி ரெண்டு பேருக்குமே தலைல அடி. இரும்பு கம்பி மாதிரி, ஏதோ கனமான ஆயுதத்தால அடிச்சிருக்கலாம்ன்னு சொல்லிருக்காங்க. வேற எந்த தடயங்களும், கைரேகைகளும், ஆதாரங்களும் கிடைக்கல. கொலை செய்ய யூஸ் பண்ண ஆயுதமும் கிடைக்கல. பெரிய கருப்பன் விஷயத்துல அவருக்கு விரோதிகள் இருக்காங்க... like.. அவன் பெயர் என்ன? ஹான், முத்துப்பாண்டி, அப்புறம் அந்த சிமெண்ட் கம்பெனி நபர்கள் ஒரு சில பேரை விசாரிச்சிட்டோம். ஒரு சாலிடான ஆதாரமும் கிடைக்கல. யாரை கைது செய்றது? சடைசாமி விஷயத்துல, தனிப்பட்ட விரோதிகள் யாரும் இருந்த மாதிரியே தெரியல..."
 
அதன் பிறகு ஊருக்குள் பேசு பொருளான முனி பாய்ச்சல் பற்றி பேசினார். அவருடைய பேச்சை சுந்தர ராமன் ரசிக்கவில்லை என்று தெரிந்ததும் பேசுவதை நிறுத்திவிட்டார்.
 
வெளியே சென்றிருந்த பிரபாவதி வீட்டுக்குள் நுழைந்தபோது ராகினி வாசலிலேயே உக்கிரமாக நின்றிருந்தாள்.
 
"யாரை கேட்டுட்டு மேற்கு நிலத்துக்கான பவரை முத்துப்பாண்டிக்கு போட்டு கொடுத்தீங்க?"
 
"வேற என்னடி செய்ய சொல்ற? நமக்கு பக்க பலமா இருந்த உங்க தாத்தாவும் இப்ப இல்ல. ஊருக்குள்ள பாண்டியை பகச்சிட்டு வாழவே முடியாது. வழக்கமா கெஞ்சி கேட்கிறவன், தாத்தா இல்லனதும் அடிக்க வர்ற மாதிரி கேக்குறான். வேற வழி இல்லாம கொடுத்துட்டேன். ஏதோ கொஞ்சம் பணம் தரேன்னு சொல்லிருக்கான். அது உன் பேர்ல அக்கவுண்ட்ல போடுறேன். உன்னுடைய எதிர்காலத்துக்கு இதாவது இருக்கட்டும்..."
 
"அதுக்காக அவன் கிட்ட போய் கொடுக்கணுமா? வேற நல்ல பார்ட்டியா பார்த்து நம்மளே வித்துருக்கலாமே..."
 
"யார்... நீ கூப்டு வருவியா?  என்னடி தெரியும் உனக்கு? சாப்பிட்ட  தட்ட ஒழுங்கா கழுவ தெரியல. பெருசா பேச வந்துட்டா? எனக்கப்புறம் உன் நிலைமை என்னாகுமோன்னு  நினைச்சு தானே கஷ்டப்படுறேன்... கல்லு மாதிரி இருந்த தாத்தாவே இப்ப இல்ல. நாளைக்கு எனக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா? உன்னை யாரு கவனிச்சுப்பா. பெரிய இவளாட்டும்  மறிச்சிட்டு நிற்கிறா? தள்ளுடி..."
 
அவளை விலக்கிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தாள். பிரபாவதி உள்ளே சென்றதும், 
 
ராகினி m.v:  எனக்கா ஒன்னும் தெரியாது?...
 
அவள் உதட்டோரம் இளக்கார சிரிப்பு. திரும்பி திரும்பி பார்த்தபடி வீட்டை விட்டு வெளியே வந்தாள். அவள் பார்வையில் எக்கச்சக்க திருட்டுத்தனம். போனை எடுத்து யாருக்கோ அவசரமாக  போன் செய்தாள்.
 
"ஹலோ யார் பேசுறீங்க?"
 
"நான்தான்... உனக்கு ரொம்ப வேண்டப்பட்டவன் பேசுறேன் ஹேமா"
 
ஹேமாவுக்கு திடுக்கென்று இருந்தது. எப்படி இந்த நம்பரை கண்டுபிடித்தான்?
 
"நான்... நீ.... எப்படி...?" 
ஹேமா திணறினாள்.
 
" நீ போன் நம்பரை மாத்திட்டாலோ, இல்ல உன் குழந்தையை விடுற கிரஷ்சை மாத்தினாலோ நான் கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சியா பேபி? எங்க போனாலும், உன்னையும் சரி உன் குழந்தையும் சரி விடமாட்டேன்..."
 
"ஐயோ!!! உங்களுக்கு என்ன தான் வேணும். நீங்க நினைக்கிற மாதிரி ஆள் நான் இல்ல... தயவு செய்து என்னை விட்ருங்க?"
 
"விட்டுர்றேன்... என் ஆசையை மட்டும் நிறைவேத்திரு...  உனக்கு தேவையான பணமும் தரேன். உன் குழந்தையையும் ஒன்னும் பண்ண மாட்டேன். இதுக்கு மேல பொறுமையை சோதிக்காதே..."
 
அவன் பேச பேச, ஹேமா தரப்பிலிருந்து விசும்பும் சத்தம் மட்டும் தான் கேட்டது.
 
"இது ஒரு சாதாரண சமாச்சாரம். இதுக்கு ஏன் இவ்வளவு சீன் போடுற? நான் சொல்றதுக்கு cooperate பண்ணு. உன்னை அலுங்காம குலுங்காம திரும்பி அனுப்பி வச்சிருறேன். யாருக்கும் ஒரு சின்ன விஷயம் கூட தெரிய போறதில்ல. அப்புறம் என்ன உனக்கு பிரச்சனை?... இப்ப நீ ஒத்துக்கலன்னா... நேரா நான் செட்டிகுளம் கிரஷ் தான் போறேன்.  உன் குழந்தையை காலையில நீ பார்த்தது தான் கடைசியாக இருக்கும்."
 
"ஐயோ வேணா வேணா... அவளை ஒன்னும்  செஞ்சிராத. நான் ஒத்துக்குறேன்..."
 
அவன் சிரித்தான்.
 
"வெரி குட்.... இதை முதல்லயே சொல்லிருந்தா இந்நேரம் வேலையை முடிச்சுட்டு பணத்தையும் நீ வாங்கிருக்கலாம். எங்க, எப்ப வரணும்ங்கறதை நாளைக்கு கால் பண்ணி சொல்றேன்...bye take care baby"
 
ஹேமாவுக்கு மார்பு படபடவென்று அடித்துக் கொண்டது. தலை கிறக்கமாக இருந்தது. நெற்றியில் அபரிதமான வியர்வை விளைச்சல். 
 
போனை வைக்க போனவன், திடீரென்று, "ஹான் ஒரு நிமிஷம். போலீசுக்கு போலாம்னோ, இல்ல நண்பர்களிடம் உதவி கேக்கலாம்னோ கேனத்தனமா உனக்கு ஐடியா வந்துச்சுன்னா....  நான் தான் ஏற்கனவே சொன்னேன்ல... எவ்வளவு நாளைக்கு அவங்க உதவி செய்ய முடியும்? அதுக்கப்புறம் உன் மகளை நீ மறந்திர வேண்டியதுதான். எந்த முடிவு எடுத்தாலும், உன் மகளை மனசுல வச்சுக்கிட்டு முடிவெடு...."
 
என்று சொல்லிவிட்டு மறுமுனை பேச்சை நிறுத்தியது. டேபிள் மேல் போனை போட்டு விட்டு, அதை பார்த்துக் கொண்டிருந்த ஹேமாவின் இதயத்துடிப்பு சீரடைய வெகு நேரமானது. 
 
திக்கற்று இருக்கிறோமே!யாரிடம் தான் உதவி கேட்பது? என்ன செய்வதென்று ஒன்றுமே அவளுக்கு புரியவில்லை.
இரண்டு நாட்களுக்குப் பிறகு,
காலை 10 மணி
 
நாகர்கோவில் பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே, கேர்ள்ஸ் கான்வென்ட் ஸ்கூலுக்கு எதிரே, பைக்கில் தாமஸ் நின்றிருந்தான். அடிக்கடி போனில் டைம் பார்த்துக் கொண்டிருந்தான். பஸ் ஸ்டாண்ட் சாலையில் வாகனங்கள் தீ வைத்து விட்டது போல்... அமளி, ஆரவாரம், இரைச்சலுடன் சென்று கொண்டிருந்தன. மக்களின் முகங்களில் பவுடரை விட பரபரப்பு தான் அதிகமாக தெரிந்தது.
 
பின்பக்கமாக திரும்பிப் பார்த்துக் கொண்டே இருந்த தாமஸின் முகம் மலர்ந்தது. தூரத்தில் சித்ரா வருவது தெரிந்தது. அவளைப் பார்த்து கை காட்டி சிரித்தான். அவனைப் பார்த்ததும், பதிலுக்கு சிரிக்காமல், உம்மென்று, நடையில் வேகம் காட்டி அவனை நோக்கி வந்தாள்.
 
வெளிர் நீலத்தில் வெள்ளைப் பூக்கள் தெளித்த சுடிதார், அதே நீலத்தில் துப்பட்டாவும், முகத்தில் வழக்கத்துக்கு மாறான பயமும் சோகமும் அணிந்தபடி வந்தாள். அவள் தோளில் காலேஜ் பேக்.
 
பைக் அருகே வந்ததும்,
 
தாமஸ்: " ஏன் இவ்வளவு லேட்? இப்ப கிளம்பினாலும் ஒன் ஹவர் ஆகும்..."
 
"வழக்கமா பிடிக்கிற 8.45 பஸ்ஸ விட்டுட்டேன்...", என்றாள்.
 
"சரி சரி டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம். ஏறு..."
 
சித்ரா தயங்க படியே நின்றாள்.
 
"கண்டிப்பா பண்ணனுமா? எனக்கு ரொம்ப பயமாருக்கு."
 
தாமஸ் அவளை பார்த்து முறைத்து விட்டு,
"அப்படியா வேண்டாம்னா விடு. நீ காலேஜுக்கு போ. நான் என் வேலையை பார்க்க போறேன். நடக்கிற படி நடக்கட்டும்", என்றான் கோபமான குரலில்.
 
சித்ரா பதட்டமாக, "ஐயையோ வேண்டாம். நான் வரேன்", என்று பட்டென்று பைக்கின் பின்பக்கமாக இரண்டு பக்கமும் கால் போட்டபடி  ஏறிகொண்டாள்.
 
திருப்பரப்பு நீர்வீழ்ச்சிக்கு செல்வதற்காக, பைக் பார்வதிபுரத்தை நோக்கி பறந்தது.
 
பைக் பார்வதிபுரத்தை தாண்டிய போது, மெயின் ரோட்டில் இருந்து உள்பக்கமாக செல்லும் சாலை ஒன்றை தாமஸ் காமித்து,
 
"இதுக்குள்ள தான் என் பிரண்டுடைய poly clinic இருக்கு. என்னோட கிளாஸ் மெட் இன்னைக்கு திருப்பரப்பு ப்ரோக்ராம் முடிஞ்சதுக்கப்புறம் டைம் இருந்துச்சுன்னா இன்னைக்கே போய் அபார்ஷனுக்கு consult பண்ணலாம். டைம் இல்லனா நாளைக்கு போய் பார்க்கலாம்."
 
சித்ரா எதுவுமே பேசாமல், அவள் நிலைமையை நினைத்து, தலை குனிந்தபடி கேட்டுக் கொண்டாள்....
 
அவனை உரசாமல் கேப் விட்டு தள்ளியே உட்கார்ந்து இருந்தாள். கர்ப்பம், அபார்ஷன், பயம், குழப்பம், இதெல்லாம் போக இன்று என்ன நடக்கப் போகிறதோ என்ற பதட்டம் அவளுக்கு....
 
வண்டி டிராபிக்கில் வளைந்து வளைந்து செல்லும்போது, பின்னால் இருந்த சித்ரா சிரமப்படுவதை பார்த்ததும்,
 
"கீழே விழுந்துட போற, கிட்ட வந்து உட்காரு. என்னை புடிச்சுக்கோ..." என்று எதிரே வந்த மோதிய காற்றின் சீற்றத்தை மீறி கத்தினான்.
 
தயக்கத்துடன் நெருங்கி உட்கார்ந்து, அவன் தோளில் கை வைத்துக் கொண்டாள்.
 
மதியம் 12 மணி
 
திருப்பரப்பு நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில், தக்கலை தாண்டியதும், மெயின் ரோட்டிலேயே பைக்கை  நிறுத்தினான். சற்று தள்ளி பளபளப்பாக  ரோட்டோரமாக கோல்டன் பேலஸ் ஹோட்டல் தெரிந்தது. இரவில் நிச்சயமாக கலர் கலர் லைட்டிங்களுடன், நியான் போர்ட்கள் சகிதமாக, ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு அல்டாப்பாக இருக்கும்.
 
சித்ரா பைக்கில் இருந்து கீழே இறங்கினாள்.
 
தாமஸ் அவளை திரும்பி பார்த்து, " இந்த ஓட்டலுக்கு தானே நீங்க ஏற்கனவே வந்தீங்க?"... குரலில் கவனமாக எள்ளல் தொனியை தவிர்த்தான்.
 
சித்ரா அவனை நேருக்கு நேராக பார்ப்பதை தவிர்த்து, ஆமா என்று தலையாட்டினாள்.
 
தாமஸ்: அவனுக்கு போன் போட்டு, ஸ்பீக்கரில் போடு.
 
சித்ரா கையில் வைத்திருந்த ஃபோனில் கால் செய்தாள். மறுமுனையில் கால் அட்டென்ட் செய்யப்பட்டதும்,
 
சித்ரா: நீ எங்க இருக்கிற? வந்துட்டியா?
 
ஐயோ!!! அவன் வந்திருக்கக் கூடாது என்று மனசுக்குள் வேண்டி கொண்டாள்.
 
அரவிந்த்:  yes... வந்துட்டேன். அதே ரூம்ல தான் இருக்கேன்.... No: 37. ஸ்ட்ரைட்டா ரூமுக்கு வந்துரு. நீ எங்க இருக்கிற?
 
சித்ரா பதிலேதும் சொல்லாமல் போனை கட் செய்தாள்.
 
தாமஸ் சித்ராவைப் பார்த்து, "நான் சொல்லல, கரெக்டா அதே தான் நடந்திருக்கு. உன்கிட்ட பேசுறதுக்கு சாருக்கு முடியல. அப்பாவோட ஆட்கள் 24 மணி நேரமும் அவர் கூடவே சுத்தி காவல் காத்துகிட்டு இருப்பாங்க.. வீட்டுக்கு வா, காலேஜுக்கு வா கல்யாணத்த பத்தி பேசலாம்னா அப்பவும் முடியல. ஆனா திருப்பரப்புக்கு வான்னு கூப்பிட்டதும், விழுந்தடிச்சு ஓடி வந்துருக்கான்... அவன் உன்ன லவ்ல்லாம் பண்ணல. மேட்டருக்கு தான் aim பண்ணிருக்கான். அவன் aim பண்ணது முடிஞ்சதும், உன்னை கழட்டி விட தான் ட்ரை பண்ணிட்டு இருக்கான். நீயும் அவன் வருவான், உன்னை கல்யாணம் பண்ணிப்பான்னு லூசுத்தனமா நம்பிகிட்டு இருக்க... இப்ப கூட திற்பரப்பு வந்தா மேட்டர்  நடக்குங்கறதால தான் வந்துருக்கான். இல்லனா வந்திருக்க மாட்டான்.."
 
சித்ராவின் கண்கள் பூராவும் நீர் தழும்பி கொண்டிருக்க, தாமசுக்கு அவளை பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது... 
 
சரி திட்டியவரைக்கு போதும்!!! ஏற்கனவே பார்க்கும்போதெல்லாம் ரொம்பவே கடிந்து கொண்டு விட்டோம். பாவம் சின்ன பெண்!!! இதற்குமேல் தாங்க மாட்டாள்.
 
உண்மையிலேயே அரவிந்த் house arrestடில் இருக்கிறானா? இல்லை, கழட்டி விடுவதற்காக நடிக்கிறானா? என்று தெரிந்து கொள்ள, சித்ராவை அவனுக்கு மெசேஜ் அனுப்ப சொல்லிருந்தான்.
 
அவளும் தாமஸ் சொன்னபடியே, "உன்னை பாக்கணும் போலிருக்கிறது. திருப்பரப்புக்கு போய் வந்த அதே ஞாபகம். என்னால் மீள முடியவில்லை... அங்கேயே மீட் பண்ணலாம். வர முடியுமா?", என்று மெசேஜ் அனுப்ப, ரொம்ப நாட்களாக டெலிவரி ஆகவில்லை. நம்பர் சுவிட்ச் ஆன் ஆகி, டெலிவரி ஆனதும், உடனே ரிப்ளை வந்தது.
 
"எனக்கும் உன்னுடைய ஞாபகம் தான். இப்பதான் மெசேஜ் பார்த்தேன்....i will call u "
 
சொன்னபடி போன் செய்தான். தாமஸ் சொன்னபடி சித்ரா பேசினாள். அவர்கள் பேசிய விஷயங்களை விஸ்தரித்து சொல்லுமளவுக்கு ஒன்றும் இல்லை. வீட்டுக்கு வா கல்யாணத்த பத்தி பேசலாம் என்று கேட்கும் போது, பல்வேறு சால்ஜாப்புகள் சொன்னான். திருப்பரப்புக்கு வா பேசலாம் என்றதும், சரி என்றான்.
 
இடையில் ஒரு முறை அவன் போன் செய்யும்போது கூட... அவளுக்கு ஆதரவாக பேசுவதை விட, அவர்கள் காதலைப் பற்றி பேசுவதை விட, அவனுக்கு சித்ராவை திற்பரப்பு ஹோட்டலுக்கு வர வைக்கும் விஷயம் தான் முக்கியமாக இருந்தது. 
 
Call record செய்து தாமசுக்கு சித்ரா போட்டு காண்பித்தாள். கால் ரெக்கார்டிங் கேட்டதுமே தாமஸ் சொன்னான்.
 
"நல்லா புரிஞ்சுக்கோ... உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு அவனுக்கு அபிப்பிராயம் இருந்துச்சுன்னா, நிச்சயமா எல்லா எதிர்ப்பையும் மீறி, உன்னை பார்க்க காலேஜுக்கு வருவான், இல்ல வேற எங்கேயாச்சும் பொது இடத்தில் மீட் பண்ணுவான். திருப்பரப்பு ஹோட்டலில் தனியா தான் மீட் பண்ணனும்னு உறுதியா இருந்தானா, அவன் நிச்சயமா ஒரு ஐட்டம் பாய் தான்..."
 
கட் பண்ணினால், 
 
இருவரும் திருப்பரப்பு ரோட்டில் நின்று கொண்டிருந்தார்கள்.
 
தாமஸ் அவள் தோளில் தட்டி கொடுத்து, சுற்று முற்றும் பார்த்தபடி," சித்து ஓகே விடு விடு... அழாதே, ரோட்ல நிக்கிறோம்... கண்ணை தொடைச்சுக்கோ...", என்றான்.
 
சித்ரா துப்பட்டாவால் கண்களை துடைத்துக் கொண்டாள். அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. திருப்பரப்பு வருவதற்கு முன், ஏதாவது பொது இடத்தில் வந்து மீட் பண்ணுவான் என்று கடைசி வரைக்கும் ஒரு சின்ன நம்பிக்கை இருந்தது. அரவிந்தையே போராடி கல்யாணம் செய்து, கர்ப்பத்தை கலைக்க வேண்டாம் என்று கூட நினைத்திருந்தாள். எப்படியாவது தாமஸ் சொல்வது பொய்யாகிவிடும் என்ற அவளின் நினைப்பு மண்ணாக போனது.
 
தாமஸ் அடி குரலில் கேட்டான்:  தயவு செஞ்சு வந்தவன் கிட்ட போய், கெஞ்சிகிட்டு இருக்காதே.. அவனே செக்ஸுக்காக தான் உன்னிடம் பழகிருக்கான். அப்படிப்பட்டவன் உனக்கு தேவையில்லை... அடுத்தது என்ன செய்யலாம்?"
 
சித்ரா விரக்தியாக,
"நான் அவன உண்மையா காதலிச்சதனால, அவன் மேல நம்பிக்கை இருந்ததால, என்னையே அவனுக்கு கொடுத்தேன். நம்பிக்கை துரோகம் பண்ணிட்டான். என்ன பொறுத்த வரைக்கும் அவன் செத்துப் போய்ட்டான். இதுக்கு மேல அவன்ட கெஞ்சி என்ன பிரயோஜனம்? வேணாம் Toms.. விடுங்க போலாம்", என்றாள்.
 
அவள் வேதனையில் வெம்பி நின்றதை பார்த்ததும், தாமஸின் அடி மனது மிருகம் எழுந்து கொண்டது. மிருகத்தை அவ்வப்போது வெளியே அழைத்து வந்து தீனி, பானி தேனின்னு  ஏதாவது கவனித்திருந்தால் சாதுவான மிருகமாக இருந்திருக்கும். ஆனால் அவன் அதை கண்டுக்கவே இல்லை. எப்படியோ உள்ளுக்குள் வளர்ந்து,  டைனோசர் ரேஞ்சிக்கு மாறி போயிருந்தது.
 
தாமஸ் ஆக்ரோஷமாக, 
"அதெப்படி ? எனக்கு வேண்டப்பட்ட பொண்ண லவ் பண்றேன்னு சொல்லி, ஆசையை தீர்த்துகிட்டு, கழட்டி விடுவான்.... பாத்துட்டு சும்மா இருப்பாங்களா? நல்லா கேட்டுக்கோ... இங்க வரும்போது ரெண்டு திட்டத்தோடு தான் வந்தேன். எப்படியும் அவன் கார்ல தான் வந்திருப்பான். அப்படியே அவனை காரில் அள்ளி போட்டு, நம்ம ஏரியாவுக்கு கொண்டு போயி, அவன permanent டா பஞ்சர் ஆக்கணும்.... இல்லன்னா, ஹோட்டல் ரூமிலேயே வெச்சு மூஞ்சி முகரையை பேத்துரணும்.... ரெண்டுல ஏதாவது ஒண்ணு பண்ணியே தீருவேன்."
 
சித்ரா வேண்டாம் Toms என்று பதறினாள்.
 
தாமஸ்: நீ சும்மா இரு சித்து. உனக்கு தெரியாது.... (தூரத்தில் தெரிந்த ஐஸ்கிரீம் கடையை காண்பித்து) நீ அங்க போய், வெண்ணிலா, சாக்லேட் ஐஸ்கிரீம்ன்னு வாங்கி மாத்தி மாத்தி சாப்பிட்டுட்டு cool down ஆகு. நான் ஒரு அரை மணிக்கூர்ல வந்திறேன்.
 
ஐயோ வேண்டாமென்று அவன் கையை பிடித்து கெஞ்சினாள். கதறினாள். தாமஸ் கேட்கவே இல்லை. அவள் கையை உதறி விட்டான்.
 
அவன் கண்கள் கோவத்தில் சிவந்து கனன்று கொண்டிருக்க, வேற ஒருவனாக மாறி இருந்தான்.
 
"நீ போனு சொல்றேன்ல", என்று அதட்டலாக உறும, சித்ரா ஒரு நொடி நடுங்கி போனாள்.
 
ஐஸ்கிரீம் கடையை நோக்கி சித்ரா ஆரம்பித்தாள். 4 அடி நடந்தவள், திரும்பி பார்க்க, தாமஸ்,"போ" என்று தலையாட்டி சைகை செய்தான். என்னாக போகுதோ என்று பயத்துடன் நடக்க ஆரம்பித்தாள். 
 
தாமஸ் திரும்பி ஹோட்டலை நோக்கி ஆவேசமாக சென்றான்.
 
ரஸ்தா காடு
அதே நேரம்
 
ரஸ்தா காடு ஊருக்கு மேற்கால இருக்கும் 50 சென்ட் நிலத்தில், முத்துபாண்டியும் சிமெண்ட் கம்பெனி பவர் ஏஜென்ட் ராகவன், அவனுடைய ஜிம்பாய் மாணிக்கமும் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். 
 
ராகவன்: என்னதான் இந்த நிலங்கள் நம்ம கைக்கு வந்தாலும், காவண வீடும் அதை சுற்றி இருக்கக்கூடிய நிலங்களும் நம்ம கைக்கு வந்தா தான் சரியா இருக்கும். இந்த ஏரியாவில் பேக்டரி கட்டுனா, கடற்கரை பக்கமா கட்டினால் தான் கரெக்ட்டா இருக்கும்னு கம்பெனில பீல் பண்றாங்க. காவண வீட்டை வாங்கிட்டால், அடுத்தது கீழ தெருவில் கடற்கரை பக்கமா இருக்கக்கூடிய வீடுகளை காலி பண்றது easy தான். நிச்சயமா பணத்துக்கு மசிஞ்சிருவாங்க. 
 
முத்துப்பாண்டி வெறுமையாக தலையாட்டினான்.
 
ராகவன்: அந்த தாமஸ் கிட்ட எவ்வளவோ தன்மையா பேசி பாத்துட்டேன். மிரட்டி பாத்துட்டேன்.. அவன் காலி பண்ற மாதிரி தெரியல.
 
முத்துப்பாண்டி இல்லை என்பது போல் தலையாட்டி, "அவன்கிட்ட பேசுறதல்லாம் வேலைக்கு ஆகாது. நான் ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்துட்டேன். ரெண்டு பேரும் ராத்திரி வாங்க. இன்னைக்கு அவன் காலி. கணக்கு முனி பெயரில் போய் சேர்ந்திடும்", என்றான்.
 
ராகவன் அவன் சொன்னதை புரிந்து கொண்டு,
 
"ஓஹோ!!! அப்படின்னா ஏற்கனவே தாத்தாவையும், அந்த பைத்தியக்காரனையும் போட்டு தள்ளினது நீதானா?"
 
முத்துப்பாண்டி விகாரமாக சிரித்தான். 
 
"அதுக்கு நான் காரணம் இல்லை... ஆனா இன்னைக்கு நடக்கப் போற சம்பவத்துக்கு நான் தான் காரணம்..."
 
சொல்லிவிட்டு இன்னும் சத்தமாக சிரித்தான். 
 
மற்ற இருவரும் எதற்காக இப்படி அனாவசியமாக சிரிக்கிறான் என்று புரியாமல், அவனைப் பார்த்தார்கள்.
 
தொடரும்
 
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது
 
 

   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 2 months ago
Posts: 81
Topic starter  
 
கருப்பு 34
 
அந்த ரோட்டோர ஐஸ் கிரீம் பார்லர் முன்னால் போடப்பட்டிருந்த சாமியானாக்கள் மஞ்சள் வெயிலில் காய்ந்து கொண்டிருந்தன. அதன் கீழிருந்த டேபிள் ஒன்றில் அமர்ந்திருந்தாள் சித்ரா. அடிக்கடி பதட்டமாக வாட்ச்சை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் சாப்பிட்டுக் கொண்டிருப்பது மூன்றாவது ஐஸ்கிரீம். சும்மா இருந்தால், சந்தேகமாக பார்ப்பார்கள் என்று வேறு வழியில்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
 
தாமஸ் லாட்ஜ்க்குள் போய் அரை மணி நேரமாகிறது.
 
அவள் இருக்கும் இடத்திலிருந்து ஹோட்டலின் மெயின் கேட் தெரிந்தது. கேட்டில் இருந்த செக்யூரிட்டியின் சல்யூட்களை நிராகரித்துவிட்டு, யார் யாரோ போகிறார்கள் வருகிறார்கள் ஆனால் அவனை காணவில்லை.
 
என்னாச்சுன்னு தெரியலையே.... உள்ளுக்குள் உருவாகும் படபடப்பை வெளி காட்டாமல் இருக்க சித்ரா பெரு முயற்சி செய்தாள். ஆனாலும் படபடப்பு நெற்றியில் வேர்வை துளிகளாக அவ்வப்போது வெளிப்பட்டது.
 
சற்று நேரத்திற்கெல்லாம் தாமஸ் வெளிப்பட்டான். சித்ராவின் பதட்ட முகத்தில் மலர்ச்சி. அவள் இருக்கும் ஐஸ்கிரீம் பார்லரை நோக்கி, புன்னகையோடு வந்தான்.
 
அவன் வந்ததும், 
சித்ரா: "என்னாச்சு? ஏன் இவ்வளவு நேரம்? நான் தான் வேண்டாம்னு சொன்னேன்ல்ல?"... என்று  பதட்டமாக கேட்க....
 
தாமஸ் கூலாக,  "ஒண்ணுமில்ல, நீ டென்ஷன்  ஆகுற அளவுக்கு பெருசா ஒண்ணும் நடக்கல..."
 
ஐஸ்கிரீம் கடைக்காரரிடம் எவ்வளவு என்று கேட்டு பணத்தை கொடுத்துவிட்டு, கேள்விக்கு பதிலை  எதிர்பார்த்துக் கொண்டிருந்த சித்ராவிடம், "முதலில் இங்கருந்து கிளம்பலாம்", என்றான்.
 
பைக்கை ஸ்டார்ட் செய்ய, சித்ரா ஏறி கொண்டாள். பைக் உறுமிக் கொண்டு கிளம்பியது. இன்ஜினின் உறுமலில், நாகர்கோவிலில் இருந்து கிளம்பும்போது இருந்த கோபம், இப்போது இல்லை. 
 
அடுத்த அரை மணி நேரத்திற்கு தாமஸ் எதுவுமே பேசவில்லை. சித்ரா நடுநடுவே கிளறி பார்த்தாள். தாமஸ் இடமிருந்து எந்த பதிலும் கிடைக்காமல் போகவே அமைதியானாள். ஆனாலும் என்ன நடந்திருக்குமோ என்று அவள் தலைக்குள் பல்வேறு யோசனைகள். தக்கலைக்கு வந்ததும் ஒரு டீக்கடை ஓரமாக பைக்கை நிறுத்தினான்.
 
சித்ரா இறங்கி அவன் முன்னால் வந்து நின்று, "என்னாச்சுன்னு தான் கேட்கிறேன்ல்ல, சொல்லுங்க Toms", என்றாள்.
 
அவளுக்கு தலையே வெடித்து விடும் போலிருந்தது.
 
தாமஸ்: உன் விஷயத்தை சொல்லி சொல்லி அவனை அடிக்கிற அடியில பல்லு பகடல்லாம் எகிறரனும்ன்னு ஆவேசமா தான் போனேன். போகும்போது வேற ஒரு யோசனை. என்ன இருந்தாலும் ஆளு செல்வாக்கானவன், நாளைக்கு அவனால உனக்கு பிரச்சனை வந்துச்சுன்னா அதனால...
 
சித்ரா அவளின் பாதாம் கண்களை அகலமாக விரித்தாள். அதில் எக்கச்சக்கமான பயம். ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்குமோ என்று  உள்ளுணர்வு.
 
"அதனால என்ன பண்ணீங்க?" என்று கேள்வியால் அவனை உலுக்கினாள்.
 
தாமஸ் பதில் சொல்லாமல், போனில் அவன் எடுத்திருந்த வீடியோவை ப்ளே பண்ணி அவள் கையில் கொடுத்தான்.
 
"நீயே பாரு..."
 
Disclaimer: இதயம் பலவீனமானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், கீழ்க்கண்ட வீடியோவை பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
 
சித்ரா கை நடுக்கத்துடன் போனை வாங்கி பார்த்தாள்.
 
வீடியோ ஒரு கதவு முன்னால் விழித்துக் கொண்டது.
 
டக் டக்... கதவு தட்டப்படும் சத்தம்.
 
சிரித்தபடி கதவை திறக்கும் அரவிந்த். வேறு யாரோ ஒரு புது நபர் நின்றிருப்பதை பார்த்ததும், அவன் முகத்தில் குழப்பம்.
 
"யார் நீங்க?"
 
"சொல்றேன்... உள்ள போ"... அவன் விலகி வழி விட போன் உள்ளே நுழைந்தது.
போன் சிறிது ஷேக் ஆனதால், கொஞ்ச நேரம் என்ன நடந்ததென்று தெரியவில்லை.
 
"யார் நீங்க?" என்று அரவிந்தின் குரல். காட்சி தெரியவில்லை
 
ஒரு சில நொடிகளுக்கு பிறகு,  அந்த ரூமில் இருந்த ஒரு டேபிள் மத்தியில், வாகான இடத்தில் போன் வைக்கப்படுகிறது. இருவரும் தெரிந்தார்கள். 
 
கேமராவை பார்த்து, தாமஸ் ஹேர் ஸ்டைல் அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டான்.
 
"யார் நீன்னு கேட்டுட்டு இருக்கேன். உன் பாட்டுக்கு உள்ள வர்ற? வீடியோ எடுக்கிற, என்ன விஷயம்? நான் யார் தெரியுமில்ல?"
 
தாமஸ்: "ஏன்டா ரோட்ல கார் ஓட்ட சொன்னா, பிளைட் ஓட்டுறியா? தே... மவனே.. நீ எவனா வேணா இருந்துட்டு போ. உங்க அப்பன் போட்ட ரோடா?... 
 
அதைத்தொடர்ந்து,
 
தட். தடார்.. டிஷ்க்... ஹய்...
 
"டேய் விடுல.... யாருல நீ" 
 
படார்... படார்... படார்...
 
இடையிடையே அரவிந்தின் அலறல்கள்.
 
பார்த்துக் கொண்டிருந்த சித்ரா, படபடப்பு காரணமாக இடது கையை நெஞ்சில் வைத்துக் கொண்டாள்.
 
அரவிந்த் உடம்பில்  எந்தெந்த பகுதிகளில் அதிக மிதி வாங்கினான் என்று பட்டிமன்றமே வைக்கலாம்.
 
டொம்... டொம்...
 
அரவிந்த் சைடில் தூக்கி எறியப்பட... வீடியோவில் இருந்து காணாமல் போனான்.
 
தடார்....தடார்
 
"எங்கல போற... கேமராவுக்கு தெரியாதுல்ல. அடிவாங்கி விழுந்தாலும் கேமரா ஃபீல்டுகுள்ள தான் விழனும்."
 
அவனை தர தரவென இழுத்துக் கொண்டு தாமஸ் கேமராவின் புலம் பார்வைக்குள் வந்தான்.
 
சப்பு சப் பென்று அரவிந்த் அரை வாங்கினான். பார்த்துக் கொண்டிருந்த சித்ராவுக்கு வலித்தது. 
 
மறுபடியும் சைடில் போய்விட
 
தாமஸ் அவனை பிடித்து இழுத்துக் கொண்டு வந்து, கேமராவின் FOVக்குள்  நிறுத்தினான். அவன் கையை இடுப்பருகே பின்பக்கமாக மடக்கி திருப்பினான்... மளுக்...
 
எலும்பு உடையும் சத்தம்.
 
"ஆஆ..." முழுவதுமாக கத்துவதற்குள், பட்டார் என்று வாயில் அடி வாங்கினான்.
 
அரவிந்த் சத்தத்தை முழுங்கி கொண்டான். முட்டிக்கால் போட்டு உட்கார்ந்து, தலை குனிந்தபடி ரத்த வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான். ஒரு கை கட்டுப்பாட்டை இழந்து தொங்கிக் கொண்டிருந்தது.
 
அவன் தலை மயிரை பிடித்து தாமஸ் உயர்த்தினான்,
 
"ரத்த வாந்தி எடுத்தாலும், கேமராவை பார்த்து தாம்ல எடுக்கணும்...", என்றான்.
 
அரவிந்த் பேச முடியாமல், வாய் வழியாக ரத்தம் கொப்பளித்தபடியே பேசினான்:  
"காரை வே...கமா ஓட்டு....னதுக்காக..வா இப்படி அடி...க்கிற? உன...க்கு அப்படி என்னல பண்...ணினேன்?"
 
தாமஸ், "என்ன பண்ணியாவா? தேவையில்லாம என் பைக்கை உரசிட்டு போயிட்ட ல .... என்னோட அன்புக்குரிய, பாசத்துக்குரிய, நட்புக்குரிய பைக்ல சின்னதா கீறல் விழுந்துருச்சு. நாளைக்கு கீறலை சரி பண்ணிடலாம் தான். ஆனா அதோட உடம்புல விழுந்த கீறல்.. எனக்கு மனசுல வலிக்குதுல. என் பைக்ல ஒரு கீறல் விழுந்தா உன் உடம்புல நூறு கீறல் விழும்ல...", அவன் பதிலில் 100% கிண்டல், நக்கல், எள்ளல்.
 
அரவிந்த் நம்ப முடியாமல் அவனை பார்த்தான். பைக்கையா சொல்கிறான்? இதுக்காகவா இவ்வளவு அடிக்கிற என்பது போல் இருந்தது அவன் பார்வை. உடம்பின் பகுதிகள் வலியால் கதறிக் கொண்டிருந்ததால், அவனால் தெளிவாக பார்க்க முடியவில்லை.
 
அப்புறம் ஏன்டா வீடியோ எடுக்குற என்பது போல், சந்தேகமாக போனை திரும்பி பார்த்தான்.
 
அவன் பார்வையின் போக்கை பார்த்ததும், 
தாமஸ்: இனிமே நீ வீட்டை விட்டு வெளியே வந்தாலே, இந்த அடி நியாபகத்துக்கு வரணும். உன்னை அடிக்கிற வீடியோவை எடுத்து என் பைக்கிட்ட காமிச்சாதான், எனக்கு திருப்தியா இருக்கும்... என்றான்.
 
தாமஸ்: அடுத்த ரவுண்டு ஆரம்பிப்போமா?
 
டம்.. படீர்... டிஸ்க்...
 
தட்.... தட்...
 
அரவிந்த்: ஐயோ, மறு...படி...யும் ஃபர்ஸ்ட்ல இருந்தா???.... 
 
அவன் காலை பிடித்து கெஞ்சினான்.
 
அதற்கு மேல் பார்க்க பிடிக்காமல், சித்ரா போனை தாமஸிடம் கொடுத்தாள். அவள் கண்களில் நீர் திரண்டிருந்தது. 
 
டீக்கடை என்பதால், நாசுக்காக கண்களை துடைத்துக் கொண்டாள்.
 
டீக்கடையில் இருந்த டீ மாஸ்டரும், இன்னும் டீ குடித்துக் கொண்டிருந்த ஒரு சில பேரும், தாமசையும் சித்ராவையும் பார்த்துவிட்டு, லவ்வர்ஸ் போல என்று நினைத்துக் கொண்டார்கள்.
 
"அவனை அடிச்சதுக்காக நான் ஃபீல் பண்ணல. உங்களுக்கு ஏதாவது ஆயிருமோன்னு எனக்கு கவலை. எப்ப அவன் என்ன துரோகம் பண்ணினான்னு தெரிஞ்சுதோ அப்பவே அவன் செத்துட்டான். செத்த பாம்பை எதுக்கு அடிச்சிக்கிட்டு? விடுங்க"
 
"அப்படில்ல சித்து... தட்டி கேக்கலைன்னா இன்னும் எவ்வளவு பொண்ணுங்க வாழ்க்கைல விளையாடுவான்.... பைக்குக்கே இப்படி அடிக்கிறானுங்களே பொண்ணுங்க விஷயத்துல எப்படி அடி விழும்ன்னு அவனுக்கு தெரிய வேண்டாம். இந்த அடியிலிருந்து அவன் எழும்புறதுக்கே ஒரு வருஷம் ஆகும்னு வச்சுக்க.. சரி நீ ரொம்ப பீல் பண்ணாத... அவன் சமாச்சாரத்தை மறந்திரு."
 
சித்ரா உறுதியான குரலில்: நான் எதுக்கு ஃபீல் பண்ணனும்? நான் உண்மையா தான் லவ் பண்ணினேன். அதனாலதான் எல்லாத்துக்கும் சம்மதிச்சேன். நான் தப்பு எதுவும் பண்ணல. என்னுடைய கவலைல்லாம் இந்த விஷயம் அக்காவுக்கு தெரிஞ்சா என்ன ஆகுமோ? என் குடும்பத்தோட பெயர் கெட்டுப் போயிருமோங்கறது தானே தவிர, அந்த துரோகியை நினைத்து நான் கவலைப்படல... என்றாள்.
 
தாமஸ்: வெரி குட்... நீ கர்ப்பமான விஷயத்தை எப்படி deal பண்ணனுமோ அப்படி டீல் பண்றேன். ஒண்ணும் கவலைப்படாதே. வா போலாம்...
 
பைக்கில் ஏற போனான்.
 
சித்ரா, " Toms", என்று அவனை கூப்பிட... திரும்பினான். அவன் கைகளை ஆதரவாக பிடித்துக் கொண்டாள்.
 
இருவரையும் பார்த்தபடியே  டீ ஆத்திக்கொண்டு இருந்த மாஸ்டர், அவள் கையை பிடிக்கும் காட்சியை பார்த்ததும், டீ குறி தவற, கிளாஸில் இருந்து வெளியே சிதறியது.
 
சித்ரா நெகிழ்ச்சியாக: என்ன மன்னிச்சிடுங்க!!!
 
தாமஸ் புரியாமல்: எதுக்கு???
 
சித்ரா: நீங்க திற்பரப்புக்கு போலாம்னு கூப்பிட்டபோ... எனக்கு முதலில் சந்தேகம் தான் வந்துச்சு...  என்னதான் அரவிந்துக்கு போன் பண்ணி வர சொன்னாலும், யாரை நம்புறது, யாரை நம்ப கூடாதுன்னு தெரியலை. அதனால உங்கள முதல்ல சந்தேகப்பட்டுட்டேன். அதுக்காக ரொம்ப வெட்கப்படுகிறேன்... என்னை மன்னிச்சிடுங்க. Pls.
 
தாமஸ்: சேச்சே...thats allright.... ரொம்ப பீல் பண்ணிட்டு நிக்காத. டீக்கடையில் இருக்கிறவங்க நம்மள தான் பாக்குறாங்க.
 
சித்ரா: பார்த்தா பாத்துட்டு போட்டுமே... அவங்களா என் கஷ்டத்துக்கு வந்து கண்ணீர துடைச்சாங்க... உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு...?
 
தாமஸ்: தெரியலையா? நான் சொல்றேன். ஆக்சுவலா வேற ஒரு விஷயமாகத்தான் நான் உங்க ஊருக்கே வந்தேன். வந்த இடத்துல நான் நினைச்சு பார்க்காத சம்பவங்கள் எல்லாம் நடந்துருச்சு. அதனால எனக்கும் நீ ஒரு ஹெல்ப் பண்ணனும்.... என்னன்னு அப்புறமா சொல்றேன்.
 
சித்ரா: இப்ப சொல்லுங்களேன். ப்ளீஸ்,ப்ளீஸ், இல்லனா என் தலையே வெடிச்சிரும். 
 
தாமஸ்: இல்ல இல்ல. இப்ப வேண்டாம். நேரம் வரும்போது சொல்றேன். ஓகேவா?  இப்போ போலாம்.
 
சித்ரா சிறு குழந்தை போல் அடம் பிடித்தாள்.
 
"முடியாது, இப்ப சொல்லுங்க... சொன்னாதான் வருவேன்.." மார்புக்கு குறுக்காக கையைக் கட்டிக் கொண்டு தர்ணா பண்ணுவது போல், பைக் முன்னால் நின்றாள்.
 
தாமஸ் அவள் காதோரமாக, கூட்டத்திலிருந்து பிரிந்திரிந்த ஒன்றிரண்டு தலை முடிகளை மறுபடியும் ஒதுக்கி காதோரமாக விட்டான். பின்னர் அவள் கன்னத்தில் செல்லமாக தட்டி,
 
"சொன்னா கேக்கணும்... இன்னொரு நாள் கண்டிப்பா சொல்றேன், ஓகேவா?... முதலில் அந்த அரவிந்துக்கு ஒரு மெசேஜ் அனுப்பு."
 
"என்ன அனுப்பனும்?"
 
"Sorry... இன்னைக்கு என்னால வர முடியல. எங்க அக்கா வீட்ல இருக்காங்க. இன்னொரு நாள் வரேன்னு அனுப்பு"
 
சித்ரா எதற்காக என்று கேட்கவில்லை, அவன் சொன்னபடியே அனுப்பினாள்.
 
"இப்ப வா போலாம்.. ஏறு"
 
சித்ரா பின்பக்கமாக ஏற, பைக்கை ஸ்டார்ட் பண்ணி தாமஸ் கிளப்பினான். பைக்கில், அவர்களுக்கு இடையே, வரும்போது இருந்த இடைவெளி இப்போது இல்லை.
 
அதே நேரம்,
 
"இதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட நீ அங்க இருக்க கூடாது. என்னடி நினைச்சுக்கிட்டானுங்க? உனக்கு யாரும் இல்லைன்னு நினைச்சுக்கிட்டானா? நான் இருக்கிறேன். உன் வீட்டிற்கு தானே போக மாட்டே. நம்ம வீட்டுக்கு ஏன் நீ வரக்கூடாது?", என்று சீறினாள் அகல்யா.
 
ஹேமா: இல்ல தாத்தா சாவுக்கு வந்தப்ப கூட, என்னை அவங்க முறைச்சிட்டு தான் இருந்தாங்களே தவிர, நல்லதா ஒரு பார்வை பார்க்கவில்லை. அதான் ஊரு பக்கம் வர சங்கடமா இருக்கு. அது மட்டுமில்ல, உனக்கே ஆயிரம் பிரச்சனை? உன்னை எதுக்கு கஷ்டப்படுத்திட்டு தான்னு சொல்லல.
 
அகல்யா: பல்ல தட்டிருவேன்.. பேசுறா பேச்சு. அதுக்காக அங்கேயே இருந்து, கண்ட கண்ட பொறுக்கிங்க கிட்டல்லாம்  பேச்சு வாங்க போறியா? இந்த தடவை நான் சொல்றதை நீ கேளு. நீ வந்து தான் ஆகணும்.
 
மறுமுனையில் ஹேமா தயங்கிக் கொண்டிருக்க,
 
அகல்யா: அட்லீஸ்ட் ஒரு வாரத்துக்கு லீவு போட்டுட்டாவது இங்கே வந்து தங்குடி. மேற்கொண்டு என்ன பண்றதுன்னு பேசி ஒரு முடிவு எடுத்துக்கலாம்?
 
ஹேமா சற்றே யோசித்து சரி என்றாள்.
 
அகல்யா போனை வைத்ததும், சிறிது நேரம் ரூமுக்குள் உலாத்தியபடியே யோசித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு வெப்பராளம் தாங்கவில்லை.  ஹேமாவை போனில் மிரட்டியவன் மட்டும் அவள் கையில் சிக்கினால், அவ்வளவு தான். கந்தல் சிந்தலாக பிரித்து விடுவாள்.
 
எவ்வளவு பெரிய பிரச்சனை? ஹேமாவுக்கு துணை யாருமில்லைன்கிறதை தெரிஞ்சு வச்சுக்கிட்டு, என் கூட படுக்க வரியா? இல்ல உன் குழந்தையை கடத்திட்டுமான்னு ஒருத்தன் தெனாவெட்டா பேசுறான்? இவ என்னடான்னா தனக்கு யாருமில்லைன்னு பீல் பண்ணிக்கிட்டு ஓரமா ஒக்காந்து முக்காடு போட்டுட்டு அழுதுகிட்டு கிடக்கிறா? முட்டாள்.
 
ராமன் சாருக்கு அப்படி என்ன கோபம்? ஊர்ல உலகத்துல யாரும் செய்யாத தப்பையா ஹேமா பண்ணிட்டா? அவ தப்புக்கு தான் தண்டனை கிடைச்சிருச்சே.
 
அகல்யாவுக்கு நினைக்க நினைக்க கொதிப்பாக இருந்தது. 
 
பலவாறாக யோசித்து ஒரு முடிவெடுத்தாள். 
 
ஹேமா கோபப்பட்டாலும் பரவாயில்லை, இதற்கு மேல் ராமன் சாரிடம் சொல்லாமல் இருப்பது தவறு.
 
போனை கட்டிலில் போட்டுவிட்டு, மேட்டு வீட்டை விட்டு விரு விருவென்று வெளியே வந்தாள். சுந்தர்ராமன் வீட்டை நோக்கி நடந்தாள்.
 
இரவு 12 மணி
 
மேட்டு தெருவின் முனையில், கீழ தெருவுக்கு போகும் வழியில் இருந்த வேப்ப மரத்துக்கு பின்னால் வழக்கமான இருட்டு. ஆனால் வழக்கத்துக்கு மாறாக, இருட்டு மூன்று உருவங்களை பிரசவித்திருந்தது. மூவர் கையிலும் இரும்பு கம்பிகள்.
 
மூவரும் காவண வீட்டை பார்த்தப்படியே பேசிக் கொண்டிருந்தார்கள்.
 
முத்துப்பாண்டி: காம்பவுண்ட் சுவருக்கு பின்னால நானும் ராகவனும் நிக்கிறோம்... மாணிக்கம் போய் கதவை தட்டட்டும். அந்த வாத்தி வெளியே வருவான். ஒரே போடா தலையில போட்டு சோலிய முடிச்சி ர்லாம்  கணக்கு முனி பேரில் வந்துரும்.
 
ராகவன்: பாண்டி, நீ சொன்னதும் வந்துட்டோமே தவிர... கொஞ்சம் பக்கு பக்குன்னு தான் இருக்கு. முனி நடமாட்டம் இருக்கிற நேரத்தில் நாம வரணுமா? ஏற்கனவே முனி ரெண்டு பேரை போட்டுருக்கு. வா போயிரலாம்
 
பாண்டி எரிச்சலாக: என்ன சார் அதையே திரும்பத் திரும்ப சொல்லிட்டுருக்க?... இப்ப சொல்றேன் கேளு... ரெண்டு பேரை போட்டது முனி கிடையாது. யாருன்னு எனக்கு நல்லாவே தெரியும். அதை அப்புறமா சொல்றேன். வாத்தி இருக்கிற வரைக்கும் நம்ம திட்டம் நடக்காது. இவனை இந்த சமயத்துல போட்டா தான் நம்ம பேர்ல சந்தேகம் வராது.
 
மேட்டு தெருவை சுற்றிலும் ஒரு முறை ஸ்கேன் செய்து கொண்டான். சில்வண்டுகளின் இரைச்சல்களைத் தவிர வேறு ஆள் நடமாட்டமே இல்லை.
 
முத்துப்பாண்டி காவண வீட்டை நோக்கி ஒரு முடிவுடன் முன்னால் நடக்க, மற்ற இருவரும் அவன் பின்னால் சென்றார்கள்.
 
தொடரும்
 

 

உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது.
 

   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 2 months ago
Posts: 81
Topic starter  
கருப்பு 35
 
மேட்டுத்தெரு மரங்களால் வடிகட்டப்பட்ட நிலவொளியின் கசிவில், தெருவில் வெள்ளி மொட்டுக்கள் இறைந்து கிடந்தன. தெருவை பிரதானமாக ஆக்கிரமித்து இருந்த குளிர் காற்று மொட்டுக்களை மலர்விக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.
 
தட்.... தட்.... தட் 
 
அப்பொழுதுதான் தூக்க குளத்தில் டைவ் அடித்திருந்த தாமஸ், அடித்த வேகத்திலேயே தண்ணீருக்குள் இருந்து, திடுக்கென்று வெளியே தலை நீட்டி எட்டிப் பார்த்தான். யாரோ கதவை தட்டும் சத்தம். ஹாலில் பாயை விரித்து படுத்திருந்த தாமஸ், கண்களை கசக்கி கொண்டு  வால் கிளாக்கில் டைமை பார்க்க, மணி 12.10.
 
மறுபடியும் யாரோ கதவை தட்டும் சத்தம்?
 
யாரது இந்த நேரத்தில்? கேட்டை பூட்டி விட்டு தானே வந்து படுத்தோம்.?
 
தாமஸ்: யாருப்பா அது?
 
"அண்ணே நான் கீழத் தெரு ஸ்டீபன். குழந்தைக்கு திடீர்னு உடம்பு சரியில்லை. பிட்ஸ் வந்த மாதிரி இருக்கு. அதான் அவசரமா ஆஸ்பத்திரி கூட்டிட்டு போகணும். உங்க பைக்கை கொஞ்சம் கேட்கலாம்னு வந்தேன்..", என்று வெளியே இருந்து ஒரு குரல் கேட்டது. 
 
தாமஸ்: அப்படியா ஒரு செகண்ட் இரு. வண்டி சாவி எடுத்துட்டு வரேன்.
 
வீட்டு வாசலில் நின்ற மாணிக்கம், பின்பக்கம் திரும்பிப் பார்த்து, "வர்றான், வர்றான்" என்று கிசுகிசுத்தான். இரும்பு கம்பி ஒன்றை முதுகுக்கு பின்னால் மறைத்து வைத்திருந்தான்.
 
கேட்டருகே, காம்பவுண்ட் சுவர் ஓரமாக இருட்டுக்குள் ஒளிந்து நின்ற முத்துபாண்டியும், ராகவனும் கையில் இருந்த இரும்பு கம்பியை இறுக்கி பிடித்து தயாரானார்கள்.  
 
மூவருமே வீட்டுக் கதவைப் பார்த்தபடியே, திறக்கப்படுவதற்காக  காத்திருந்தார்கள்...
கொலை வெறியுடன்
 
டிக்.. டிக்... நேரம் போய்க் கொண்டே இருக்க,
 
திடீரென்று வெளிப்பக்க லைட் எரிய, மூவரும் அதிர்ந்தார்கள்.
 
"மச்சான்களுக்கு இரவு வணக்கம்...", என்று குரல் கேட்க, மூவரும் பக்கவாட்டில் திரும்பி பார்த்தார்கள். வீட்டின் பக்கவாட்டு தோட்டத்தில் தாமஸ் நின்றிருந்தான்.
 
முத்துப்பாண்டி நரம்புகள் நர நரவென முறுக்கிக் கொண்டன. 
 
சந்தேகப்பட்டு பின்பக்க கதவை திறந்து கொண்டு வந்திருப்பான் போலிருக்கிறது!
 
அனைவர் கண்களிலும் விரோதம் கொப்பளித்தது.
 
பாண்டி: உன்கிட்ட பொறுமையா எவ்வளவோ தடவை வீட்டை காலி பண்ணிட்டு போன்னு சொன்னேன். நீ கேட்கல. இப்ப வேற வழியில்ல, உன்ன போட்டு தள்ளிட்டு, அந்த பொட்டச்சிகளை விரட்டி விட்டுட்டால், கிழவனோட எல்லா சொத்தையும், நான் கவர் பண்ணிக்குவேன்...
 
தாமஸ் எகத்தாளமாக சிரித்தான்:  நான் எதுக்காக வந்துருக்கேன்னு நினைக்கிற? கிழவனோட சொத்துக்களை கவர் பண்றதுக்கு தான் வந்துருக்கேன். அப்புறம் எப்படி விட்டுட்டு போறது?
 
என்ன இவன் பேசி நேரத்தை போக்கிக் கொண்டிருக்கிறான்?
மாணிக்கம் தாமசை நோக்கி ஆவேசமாக ஓடினான். பின்பக்கம் மறைத்து வைத்திருந்த கம்பியை தாக்குவதற்காக அவனை நோக்கி உயர்த்த, தாமஸ்  சாதாரணமாக இருந்த கையை இறுக்கி உலக்கையாக மாற்றினான். அதிவேகத்தில்
அவன் உலக்கை கையை காற்றில் வீச, மாணிக்கத்தின் தாடையில் வெடித்தது. 
 
ரப்ப்ப்ப்ப்...
 
பின்பக்கமாக ஒரு சம்மர்சால்ட் அடித்து மாணிக்கம் விழுந்தான். விழுந்த வேகத்தில், அவன் பெயரே நிச்சயமா மறந்து போயிருக்கும். வலியில் முனகி கொண்டே உருண்டான்.
 
காம்பவுண்ட் சுவர் ஓரமாக நின்றிருந்த முத்துபாண்டியும் ராகவனும் அவனை நோக்கி சீறி பாய்ந்தார்கள். பாண்டி முதலில் ஓடி வர, தாமஸ் காலால் அவன் நெஞ்சில் எத்தினான். 
 
தட்ட்ட்....
 
அதை சற்றும் எதிர்பார்க்காத பாண்டி, பேலன்ஸ் இழந்து தரதரவென  பின்னால் நகர்ந்தான். ஒரு கட்டத்தில் சுதாரித்து பிரேக்கடித்து நின்றான். 
அப்படியே நின்றான், 
ஆணி அடித்தது போல் நின்றான்.
 
ராகவன் ஓடிவந்து  கம்பியை அவனை நோக்கி வீச, கடைசி வினாடியில் தாமஸ் பின்பக்கமாக வளைந்து, அந்த வீச்சை தவிர்த்தான். மறு நொடி, ரப்பர் மரம் போல் மறுபடியும் முன் பக்கமாக பட்டுன்னு நிமிர்ந்து நின்றான். ராகவன் மறுபடியும் கம்பியால் தாக்குவதற்குள், துள்ளி, தலையால் அவன் நெஞ்சில் மோத, ஹக் என்று எக்கச்சக்க மூச்சை இழந்து, நெஞ்சை தடவிக் கொண்டே நாலடி பின்னால் சென்றான்.
 
Air kickக்கு போதுமான இடைவெளி தாமஸ்க்கு கிடைத்தது. ஜம்ப் பண்ணி காலை காற்றில் வீசினான். கால் ராகவனின் வலது பக்க கன்னத்தை பதம் பார்க்க, ராகவன், "அய்யோ" என்று கத்தியபடி சைடில் சுழண்டு விழுந்தான்.
 
சிகப்பு ரத்தம் இரக்கம் இல்லாமல் அவனுடைய கண்கள், மூக்கு, தாடை என்று புவி ஈர்ப்பு விசைக்கு கட்டுப்பட்டு வழிய ஆரம்பித்தது.
 
மாணிக்கமும், ராகவனும் ஆளுக்கொரு பக்கமாக மண்ணில் புரண்டு கொண்டிருந்தார்கள் , நெஞ்சில் தாமஸ் மிதித்ததால் ஏற்பட்டிருந்த தூசியை, முத்துப்பாண்டி கையால் தட்டினான். நெஞ்சில் வாங்கிய மிதி வலிக்கவில்லை. நெஞ்சில் மிதிக்கும் அளவுக்கு இடம் கொடுத்து விட்டோமே என்ற நினைப்பு அவனுக்கு ரொம்பவே வலித்தது.
 
தாமஸ் திரும்பி முத்துப்பாண்டியை பார்க்க, இருவருக்கும் 20 அடி இடைவெளி. ரௌத்திரம் கொப்பளிக்க பார்த்துக் கொண்டார்கள்.
 
தாமஸ் மைண்ட் வாய்ஸ்: பல வருட காலமாக dabur chyawanprash சாப்பிட்டவன் மாதிரி, கிண்ணுனு இருக்கானே!!!
 
கையில் மாட்டியிருந்த வளையத்தை சரி செய்வது போல், கையை திருகிக் கொண்டிருந்தான் பாண்டி.
 
அடுத்த நொடி, தாமசை நோக்கி ஆவேசமாக முன்னேறினான். நீள நீளமாக அடி எடுத்து வைத்து நெருங்கினான்.
 
மறுநாள் காலை.
 
சோம்பல் காரணமாக சூரியனின் தாமதமான வருகை, காற்றில் குளிர், மரங்களின் மண்டையில் ஈரம். விடிந்து விட்டதை அறிவிக்கும் சம்பிரதாய பட்சிகள் வேலை பார்த்துக் கொண்டிருந்தன. மேட்டு தெருவில் இருந்து மறுபக்கமாக கடற்கரைக்கு போகும் சாலையில் விசிலடித்தபடியே சைக்கிளில் வந்து கொண்டிருந்த பால்காரன் முனியசாமி. அவன் சைஸ்க்கு அடுத்த சைஸில் பனியன் அணிந்தபடி, ஏதோ ஒரு பாட்டை விசிலடித்தபடி வந்தவன், முட்புதர்களுக்கு நடுவே யாரோ விழுந்து கிடப்பதை பார்த்ததும், அதிர்ந்து போய் சைக்கிளை நிறுத்தினான்.
 
சைக்கிளை விட்டு இறங்கி முட்புதர்களுக்கு அருகில் போய் பார்த்ததும், உச்சகட்டமாக அலறினான். அவன் அலறல் தான், ரஸ்தா காடு மக்களை அன்றைக்கு காலைப் பொழுதில் எழுப்பிய அலாரம்.
 
"முத்துப்பாண்டியை முனி அடிச்சிருச்சாம்", என்ற செய்தி கொரோனாவை விட வேகமாக பரவி ஊர் முழுக்க பதட்டமானது. முத்துப்பாண்டி மரணத்தில், அவன் தாய் ராஜலட்சுமியை தவிர யாரும் பெரிதாக கவலைப்படவில்லை. முனியை நினைத்து தான் கவலைப்பட்டார்கள். 
 
மேட்டு தெருவில் காக்கி சட்டைகளின் நடமாட்டம். போலீஸ் ஜீப், அமரர் ஊர்தி, வழக்கமான விசாரணைகள். பத்திரிகைக்காரர்களும், மீடியக்காரர்களும் ஊருக்குள் ஆங்காங்கே மைக்குகளை நீட்டிக்கொண்டு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்கள். ஒவ்வொரு வீட்டின் பெட்ரூமுக்குள் மட்டும் தான் அவர்கள் நுழையவில்லை. வேறு எல்லா இடமும் நுழைந்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
 
முத்துப்பாண்டி பாடியை போஸ்ட் மார்ட்டத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு, சப்-இன்ஸ்பெக்டர் ரங்கசாமி யாரிடம் எரிச்சலை காட்டுவதென்று தெரியாமல் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தார். போலீஸ் ப்ரொசீஜர்களை  ஊர் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். முத்துப்பாண்டி கொலை செய்ய வேண்டிய அவசியம் இருக்கும் விரோதிகள் ஆயிரக்கணக்கான பேர் இருக்கிறார்கள்.
 
யாரை என்று சந்தேகப்படுவது? வழக்கம்போல் முனி மேல் தான் கவுண்டிங் போய் சேரும்.
 
சுற்றி நின்ற கூட்டத்தைப் பார்த்து, வெறுப்பில் கத்தினார்.
 
"யோவ் ஏதாவது பூஜை கீஜை பண்ணி அந்த முனியை கட்டி போடுங்கயா... பேப்பர்ல டிவில வேற முனி அட்டகாசம்ன்னு நியூஸ் போட்டு டென்ஷன் படுத்துறானுங்க. மேலதிகாரிங்க தொல்லை வேற... முனி பூசைக்கு காசு பணம் வேணும்னா நானே தரேன். ஏதாவது பண்ணி தொலைங்க", என்று பொரிந்து தள்ளி விட்டு கிளம்பினார்.
 
இடையே ஒருமுறை வந்து கூட்டத்தில் வேடிக்கை பார்த்துவிட்டு போன தாமஸ், எப்போ நடந்துச்சு? எப்படி நடந்துச்சு? என்று சோகமாக வைத்துக் கொண்டு  அங்கே நின்றவர்களிடம் விசாரித்தான். வழக்கமான பதில் தான் கிடைத்தது.
 
" அதே கதை தான். ராவுல எக்கு தப்பான நேரத்துல வெளில வந்துருப்பான். முனி அடிச்சு தூக்கி போட்டுருக்கும். இது முனி ஓட்டம் இருக்கிற பாதை வேற, சொன்னா கேக்கவா செய்றானுங்க?"
 
தாமஸ் வேறு எதுவும் கேள்விகள் கேட்காமல், அமைதியாக வந்த வழியே திரும்பி சென்றான்.
 
அதே நேரம்,
 
அமிர்தம், அந்தோணி, செல்லப்பன், திருமுடி மற்றும் சகாயராஜ் டீக்கடையில் கடுப்பாக அமர்ந்திருந்தார்கள். முத்துப்பாண்டியின் மரணம் அவர்களை ஒரு சில இடத்தில் பாதித்திருந்தது. அவன் செத்துப் போனதுல பெரிய இழப்பு இல்லை என்றாலும், சாதாரண ஆளாக இருந்தால், பரவாயில்லை. ஊரிலேயே பெரிய கை. 
 
திருமுடி: பாண்டி அண்ணன்கிட்ட நான் எவ்வளவோ தரம்... முனி அட்டகாசம் இருக்கு, ராவுல வெளியில வராதீங்கன்னு சொன்னேன்...அவர் முனி விஷயத்தை நம்பவும் இல்ல கேட்கவும் இல்லை... என்றான் சோகமாக.
 
சகாயராஜ்: கருப்பன் தாத்தா குடும்பத்துல ஆண் வாரிசே இல்லாமல் ஆகிப்போச்சே... சே!!! பெரியவர் காவண வீடு விஷயத்துல கொஞ்சம் ஜாக்கிரதையா நடந்துருக்கலாம்.
 
தங்கதுரை: தம்பிங்களா, எல்லாம் அசால்ட்டா முனி மேல பழி போடுறீங்க? எனக்கு என்னமோ இந்த விஷயத்துல சம்சியம் ஜாஸ்தியாகவே இருக்கு
 
புதிய வரைமுறை மற்றும் டேலிமர்  டிவி செய்தியாளர்கள் அவர்களிடம் மைக்கை நீட்டி,
 
"ஊருக்குள்ள முனி இப்படி அட்டகாசம் பண்ணிட்டு இருக்கே, உங்களுடைய மனநிலை எப்படி இருக்கு?", என்று கேட்க,
 
அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். உள்ளுக்குள் பயங்கர எரிச்சல் இருந்தாலும், காட்டிக்கொள்ளவில்லை.
 
திருமுடி: இப்படித்தான் யாராவது கேள்வி கேட்க மாட்டாங்களான்னு காத்துகிட்டு இருக்கோம். வாங்க, விலாவரியா சொல்றேன்... என்று மற்றவர்களை பார்த்து ஜாடை காண்பித்தான்.
 
ரெண்டு செய்தியாளர்களும், கேமரா வைத்திருந்த மற்ற ரெண்டு பேரும், 
"ஆஹா நல்ல கண்டன்ட் கிடைக்கப் போகிறது", என்று உள்ளுக்குள் பூரித்துப் போக,
 
சகாயராஜ்: ஜோசப்பு, எல்லாருக்கும் சூடா டீ  போடு... என்று மாஸ்டரை பார்த்து சொன்னார்.
 
புதிய வரைமுறை செய்தியாளர் நெகிழ்ச்சியாக: அண்ணே, அதெல்லாம் வேண்டாம்.. ரொம்ப தேங்க்ஸ். இப்பதான் சாப்பிட்டோம்.. (கேமரா மேனை பார்த்து) எல்லாருக்கும் குளோசப் வச்சிரு... என்றான்.
 
சகாயராஜ்: அட நம்ம ஊருக்கு வந்துருக்கீங்க டீ கூட சாப்பிடலைன்னா எப்படி? நீ போடு ஜோசப்..
 
ஜோசப்புக்கு புரிந்து போனது செய்தியாளர்களுக்கு கண்டெண்ட் கிடைக்கவில்லை. இவர்களுக்கு தான் கண்டன்ட் கிடைத்திருக்கிறது.
 
டேலிமர் செய்தியாளர்: முதல்ல நீங்க முடிச்சிருங்க, அடுத்தது நான் எடுத்துக்கிறேன்.
 
புதிய வரைமுறையும் டேலிமரும் அவர்களுக்குள்ளே  டீலிங் வைத்துக் கொண்டார்கள்.
 
புதிய வரைமுறை: அண்ணே எல்லாரும் எழும்பி நின்னீங்கனா நல்லாருக்கும். கேமராவில் நல்லா தெளிவா தெரியும்.
 
கேமராமன் கூட்டத்தை போக்கஸ் பண்ண,
 
சகாயராஜ்: தம்பி சொல்றாப்புலல்ல எல்லாம் எழும்பி நில்லுங்க...
 
அனைவரும் எழுந்து நின்றார்கள்.
 
பு....வ : உங்க ஊர்ல நடக்கிற கொலைகள் பத்தி நீங்க என்ன  நினைக்கிறீங்க? எல்லாத்துக்கும் முனி தான் காரணம்னு சொல்றாங்களே.. உண்மையா?.. என்று மைக்கை நீட்ட,
 
பதில் சொல்வதற்காக அனைவரும் போட்டி போட்டார்கள்.
 
தங்கதுரை இடைமறித்து: நான்தான் சீனியர் நான் முதல்ல பேசுறேன்... என்று மற்றவர்களை அடக்கி விட்டு பேச ஆரம்பித்தார்.
 
"அதுல பாருங்க தம்பி... முனியா இருந்தா என்ன? சனியா இருந்தா என்ன? அதை தெரிஞ்சுகிட்டு என்ன பண்ண போறீங்க? எப்படியோ இறந்து போனவங்க குடும்பம் நடுத்தெருவுல நிக்க போகுது. நீங்க போடுற செய்திகளில், ரஸ்தா காடு ஊரில் முனி அட்டகாசம். பீதியில் ஊர்மக்கள்ன்னு ஹெட் லைன்ஸ் போட்டுட்டு, ஊரெல்லாம் பரப்புவீங்க. இதனால இறந்து போனவன் திரும்பி வந்துட போறானா? இல்லை, கஷ்டப்படுற குடும்பத்துக்கு தான் உதவி கிடைச்சிடுமா?"
 
புதிய வரைமுறைக் காரன் குழம்பிப் போனான். என்ன ஓபனிங் இப்படி இருக்குது, சரி கேள்வியை மாத்தி கேட்போம்...
 
"அதுக்காக இல்லை. நீங்க சரியான பதில் சொன்னாதான்,  நாட்டு மக்களுக்கு தெரியும். விழிப்புணர்வு ஏற்படும். தெளிவா பதில் சொல்லுங்க? இங்கு நடக்கும் கொலைகளுக்கு முனி தான் காரணமா? அது எப்படிப்பட்ட முனி?"
 
அந்தோணி: இதுக்கு நான் பதில் சொல்றேன்ல. எங்க ஊர்ல நடக்கிறதல்லாம் மத்தவங்களுக்கு செய்தியா அறிவிக்கிறதுக்காகவா, நாங்க இருக்கோம். எங்களை வச்சு தான் அவங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுமால? அப்படியே விழிப்புணர்வு ஏற்பட்டுட்டாலும், எல்லாரும் திருந்திகிட்டு தான் மறு வேலை பார்க்க போறாங்க? அட போலே வேற ஏதாவது உருப்படியான வேலை பாருங்கல.
 
புதிய வரைமுறை செய்தியாளரும் கேமிராமேனும் தலையை சொரிந்து கொண்டார்கள். திடீர்னு இவர்களுக்கு என்ன ஆச்சு? 
 
பக்கத்தில் நின்ற டேலிமர் குரூப் முழித்துக்கொண்டு இருந்தது.
 
"என்னடா ஓப்பனிங்கில் நல்லா பேசினார்கள். போகப் போக பிசிறு தட்டுகிறதே!!"
 
புதிய வரைமுறை கேமராமேனை பார்த்து, "கொஞ்சம் ஆப் பண்ணு...", என்றான்.
 
பின்னர் டீக்கடை குரூப்பை பார்த்து, " என்னண்ணே... முதல்ல நல்லா பேசினீங்க... கேமராவை ஆன் பண்ணதும் வியாக்கியானமா பேசுறீங்களே?"
 
திருமுடி: அதுவா ஊர்ல நடந்த பிரச்சினைகள் காரணமாக கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டோம். நீங்க எடுங்க... அடுத்தது கரெக்டா பேசுறோம்...
 
புதிய வரைமுறை கண்ணை காட்ட, கேமரா மேன் ஆன் செய்தான்.
 
"ஊருக்குள்ள முனி பேய் நடமாடுதுன்னு சொல்றாங்க. முனியினால் அடிக்கடி நடக்கிற கொலைகளை பற்றி என்ன நினைக்கிறீங்க? உங்க மனநிலை எப்படி இருக்கு?"
 
இதுக்கு இவர்கள் சொல்லும் பதிலை வைத்து சோகமாக ஒரு ப்ளூட் மியூசிக்கை போட்டு டிஆர்பியை ஏத்திருவாங்க. நியூஸ் புரடக்ஷன் மேனேஜரிடம் பாராட்டு கிடைக்கும். 
 
திருமுடி: எங்க மனநிலையா? ரொம்ப ஜாலியா இருக்கு. முனி அடுத்தது யார அடிக்கும்ன்னு நினைச்சு பார்க்கும்போது ரொம்ப திரில்லிங்காவும் இருக்கு.  என்ன முக்கியமான விஷயம்னா முன்பை விட கொஞ்சம் என்டேர்டைன்மென்ட் ஜாஸ்தியா இருக்கு.
 
டீக்கடையில் இருந்த அனைவரும் மகிழ்ச்சியாக ஆமோதித்தார்கள்.
 
செல்லப்பன்: ஆமா, உண்மைதான் சினிமாவுக்கு போக வேண்டிய அவசியம் இல்லை... செத்துப் போனவர்களை பற்றி கதை பேசி, கதை பேசியே, நேரம் நல்லா போகுது. ஜாலியாவும் இருக்கு.
 
புதிய வரைமுறை குழம்பினான். உண்மையை சொல்லுகிறார்களா? கலாய்க்கிறார்களா? என்று புரியாமல், அனைவரையும் கடுப்பாக பார்த்தான். டீக்கடைக்குள் இருந்த ஜோசப்,
 
"தம்பி, குழம்பாதிங்க. அவங்க சொல்றது உண்மைதான்.... ரொம்ப நாளாவே ஊருக்குள்ள ஒரு பொழுதுபோக்கே இல்லாம டல்லா போயிட்டு இருந்துச்சு. முனி ஓட்டம் ஆரம்பிச்சி சாவுகள் விழுந்த பிறகு தான் ஓரளவுக்கு சுவாரசியமாக இருக்கு. ஊருக்குள் உங்களை மாதிரி ஆட்கள் வர்றாங்க, கூட்டம் வருது, போகுது. என்ன இருந்தாலும் எங்களுக்கும் ஒரு பொழுதுபோக்கு வேணும்ல... என்ன நான் சொல்றது?", என்றார்.
 
அந்தோணி:  ஜோசப் கரெக்டா சொன்ன... நம்ம ஊர்ல நடக்கிற சாவுகளை காமிச்சி, டிவி பாக்குறவங்க பொழுதுபோக்குறதுக்கு ஏற்பாடு பண்றாங்க. நான் எப்படி இவங்க கிட்ட காசு வாங்கிக்கலாம்.
 
கேமராமேனுக்கு உண்மை புரிந்தது.
 
"சார் இவங்க நம்மள வச்சி கண்டன்டு கிரியேட் பண்ணி, பொழுதை போக்கிட்டு இருக்காங்க... உங்களுக்கு புரியலையா? இது தேறாது. வாங்க போலாம்.."
 
புதிய வரைமுறையும், டேலிமரும் அவர்களை முறைத்தார்கள். பின்னர் அங்கிருந்து கிளம்பினார்கள்.
 
திருமுடி சத்தமாக, " பின்ன என்னங்க? வந்துட்டானுங்க மைக்கை தூக்கிக்கிட்டு... மனநிலை எப்படி இருக்கு? மண்ணாங்கட்டி எப்படி இருக்குன்னு... மனநிலை எப்படி இருக்கும்? மயிறு மாதிரி தான் இருக்கும். விழிப்புணர்வு ஒரு மயிரும் புழுத்த வேண்டாம்.... போன வாரம் யாரோ ஒரு பத்தாங்கிளாஸ் பொண்ணு பாலியல் பலாத்காரத்தில் செத்துப் போச்சு.. அதுக்கு பிறப்புறுப்பில் காயம், கழுத்தில் காயம், கண்களில் ரத்தம்ன்னு பிரேக்கிங் நியூஸ் மாதிரி ஒரு மணி நேரத்துக்கு ஒரு நியூஸ்ன்னு என்னெல்லாமோ போட்டானுங்க. அந்த பொண்ணு செத்ததுல அவங்க குடும்பத்து காரங்க ஒரு நாள் தான் அழுதுருப்பாங்க இவனுங்க ஒவ்வொரு நாளும் பிரேக்கிங் நியூஸ் போட்டு அழ வைப்பானுங்க... எல்லாம் அவனவன் வீட்டில் நடந்திருந்தால் வருத்தம் தெரியும். போங்கடா வேலைய பாத்துட்டு..."
 
திருமுடி பேசுவது அவர்கள் காதில் விழுந்தது... ஆனால் வந்த செய்தியாளர்களும், கேமராமேன்களும் திரும்பி பார்க்காமல், ஓரமாக நிறுத்தி வைத்திருந்த பைக்கை ஸ்டார்ட் பண்ணி, கிளம்பினார்கள். அவர்கள் எதிரே மற்றொரு பைக்ககாரன் வர, யார் என்று தெரிந்தது நந்தி டிவிகாரன்.
 
நந்தி டிவி: ஏய் என்னப்பா, அதுக்குள்ள நியூஸ் கேதர் பண்ணிட்டீங்களா? நல்ல கண்டன்ட் கிடைச்சுதா?
 
புதிய வரைமுறை: சூப்பர் கண்டன்ட் கிடைச்சது.
 
நந்தி டிவி பதறினான்.
" அப்ப நான் தான் லேட்டா... உங்களை விட அருமையான கன்டென்ட்... எப்படி எடுக்கிறேன் பாரு..."
 
டேலிமர்: போ போ டீக்கடையில் உட்கார்ந்து இருக்காங்க பாரு. அருமையான கன்டென்ட் கிடைக்கும்.
 
புதிய வரைமுறையும், டேலிமரும் நமட்டு சிரிப்புடன் கிளம்பிச் செல்ல, நந்தி டிவிகாரன் டீக்கடைக்கு பக்கத்தில் போய் பைக்கை நிறுத்திவிட்டு, மைக்கை தூக்கி கொண்டு டீக்கடையை நோக்கி ஓடினான்.
 
மதியம் 12 மணி
 
ஹேமாவின் செல்போன் சினுங்கியது. 
அன்நோன் நம்பர். 
 
பார்த்ததும் பதறினாள். ஏற்கனவே காலையில் இரண்டு முறை கால் வந்திருந்தது, அவள் எடுக்கவில்லை. இப்போதும் எடுக்காமல் முடியாது. வேறு வழியில்லாமல் காலை அட்டென்ட் செய்தாள்.
 
"என்ன காலையிலிருந்து இரண்டு தடவை கால் பண்ணினேன். நீ அட்டென்ட் பண்ணவே இல்ல. அவ்வளவு பிஸியா இருக்கியா? வேலைக்கு தான் நீ போகலையே, அப்புறம் ஏன் கால் அட்டென்ட் பண்ணல்லை?..."
 
ஹேமா: அது.. வந்து...வந்து..
 
அகல்யா: போனை ஒரு நிமிஷம் என்கிட்ட குடு...
 
ஹேமா அவளிடம் ஃபோனை கொடுத்தாள்.
 
அகல்யா: ஏன்டா பொறுக்கி ராஸ்கல்... பொண்ணுங்கன்னா உனக்கு இளக்காரமா போச்சா? நீ கூப்பிட்டா, உடனே ஓடி வந்துருவாங்களா? குழந்தையை கடத்திடுவேன்னு மிரட்டுவியா? எங்கே கை வச்சி பாரு பார்ப்போம்... அக்கா தங்கச்சிங்க கூட நீ பொறக்கலை? நல்ல குடும்பத்தில் பிறந்த எவனும் இப்படி பண்ண மாட்டான்... நேர்ல பார்த்தேன், கை வேறு கால் வேறா வெட்டிருவேன்.
 
சுந்தர் ராமன்: ஒரு நிமிஷம் போனை என்கிட்ட கொடுமா...
 
அகல்யா போனை ராமன் வாத்தியாரிடம் கொடுக்க,
 
ராமன்: தேவி... பயலே ... தனியா ஒரு பொண்ணு தங்கி இருந்துச்சுன்னா உடனே அவளை இஷ்டத்துக்கு மிரட்டுவீங்களா? அவளுக்கு யாருமே இல்லன்னு நினைச்சியாடா? நான் இருக்கேன்டா... இனிமே அவளை என் ஊருக்கு கூட்டிட்டு போறேன். முடிஞ்சா நீ அங்க வாடா பாக்கலாம்... உனக்கு அவ்வளவு அரிப்பு தாங்க முடியலன்னா தெருவுல எவ்ளோ போஸ்ட் கம்பம் இருக்கு. நாய்ங்க தெருவுல எவ்வளவோ சுத்திகிட்டு இருக்கு. எதையோ ஒன்னை புடிச்சு மேய வேண்டியதுதானே...
@#₹%&&(@#₹%%%^^₹#@!&*^
 
அதற்கு அப்புறம் வாத்தியார் என்பதையும் மறந்து அவர் பேசியது அச்சிட முடியாத வார்த்தைகள்...
 
அவ்வளவு நாள் ஜென்மவிரோதியை போல் ஒதுக்கி வைத்திருந்த அப்பா, அவள் சார்பாக பேசிக் கொண்டிருந்ததை பார்த்ததும், ஹேமா, கண்ணீர் மல்க நின்றிருந்தாள். அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. எதிர்பாராத பாசத்தினால், நெகழ்ச்சியினால் ஏற்பட்ட நடுக்கம்.
 
உதட்டில் வெளிப்பட துடித்த விசும்பல்களை, அவளால் அடக்கவே முடியவில்லை. 
 
அகல்யா அவள் தோளில் தட்டி கொடுத்து சமாதானப்படுத்தினாள்.
 
சுந்தர் ராமன் போனில் தொடர்ந்து அர்ச்சித்துக் கொண்டிருக்க, தாமஸ் தொடர்ந்து கேட்க முடியாமல், போனை கட் பண்ணினான்..l
 
திருமுடி சிரித்தபடி: என்ன சார் காதுல ரத்தம் வருதா?
 
தாமஸ் சலனமில்லாத முகத்துடன், "ஆமா.." என்றான்.
 
தொடரும்
 
Awaiting for your precious comments 👍 
 

   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 2 months ago
Posts: 81
Topic starter  
கருப்பு 36
 
திருமுடி: பாக்குறதுக்கு ஜெயம் ரவி மாதிரி இருக்கீங்க, பண்றதல்லாம் பிரகாஷ்ராஜ் வேலையா இருக்கே? முத்துப்பாண்டியை நீங்க போடலைன்னு சொல்றீங்க. அப்புறம் வேறு யாரு? முனி தான் அடிச்சிடுச்சா?
 
தாமஸ்: நேத்து ராத்திரி என்னை தாக்க வந்த சிமெண்ட் கம்பெனி ஆட்கள், ஒரே அடியில் சுருண்டுட்டாங்க.   முத்துப்பாண்டி மட்டும் அடிக்கு அடி ஈடு கொடுத்தான். சும்மா சொல்ல கூடாது, அவனை அயன் பண்றதுக்குள்ள கொஞ்சம் அசந்துட்டேன். ஆனா தற்காப்புக்காக தான், அவன் கூட சண்டை போட்டேன். சண்டையோட முடிவில் மூன்று பேரும் தப்பிச்சு ஓடுனாங்க. அவ்வளவுதான் நடந்துச்சு. நான் அவங்களை துரத்திட்டு போகலாம்ன்னு தான் நெனச்சேன். ராத்திரி அந்த நேரத்தில் வெளியில போக வேண்டாம்ன்னு போகல்லை. காலையில் பார்த்தால் அவன் செத்துட்டான்னு  செய்தி கிடைச்சது. எனக்கே அதிர்ச்சியா இருக்கு. அவனுக்கு இந்த முடிவை நானே எதிர்பார்க்கல. ஆக்சுவலா அவனை வழிக்கு கொண்டு வர வேறொரு ஐடியா தான் வச்சிருந்தேன்.
 
திருமுடி: ஏன் சார் உங்களுக்கு இந்த வேண்டாத வேலை? இந்த வேலைல்லாம் செய்வது நீங்கதான்னு தெரிஞ்சிதுன்னா அவ்வளவுதான். நல்லதுக்கு தான் பண்ணேன்னு சொன்னா கூட ஏத்துக்க மாட்டாங்க.
 
அவன் சொல்வது உண்மைதான். நல்லதுக்குள் இருக்கும் கெட்டது தான் பெரிய விஷயமாக பேசப்படுமே தவிர, நல்லதுக்கு காலமில்லை.
 
திருமுடி: உங்க நோக்கம் சரிதான். ஆனால் போற ரூட்டு தான் சரியான்னு தெரியல்லை.
 
தாமஸ் சிரித்தான். அவன் அதை யோசிக்காமல் இல்லை, 
 
தாமஸ் திருமுடியை பார்த்து: உனக்கு புரியிற மாதிரி என் லெவல்ல ஒன்னு சொல்றேன். தவறான வழியில் போகும் மாணவர்களுக்கு, நல்ல விஷயம் சொல்லிக் கொடுக்கிறோம்,
ஆனால் அதை செய்ய மாட்டேன்னு அடம் பிடிக்கிறவங்கள அடிச்சு தான் வழிக்கு கொண்டு வர வேண்டிருக்கு....என்றான்.
 
திருமுடி: என்னமோ நெஜமான வாத்தியார் பீலிங்கில் பேசுறீங்களே? நீங்க என்ன உண்மையான வாத்தியாரா?... என்று கெக் கெக் என்று ஜனகராஜ் போல் சிரித்தான்.
 
தாமஸ் அவன் சிரிப்பை ரசிக்கவில்லை.
 
அதை புரிந்து கொண்ட திருமுடி சிரிப்பை நிறுத்திவிட்டு,
 
திருமுடி: 
 
அடுத்ததா என்ன பண்றதா உத்தேசம்?
 
தாமஸ் முகம் இறுகியது, கோபத்தினால் அல்ல ஏற்கனவே முடிவு எடுத்ததனால் வந்த இறுக்கம்.
 
"முனி அட்டகாசத்திற்கு ஒரு வழி பண்ணனும், அதுதான் அடுத்த நடவடிக்கை. அதைத்தான் முதலில் பண்ணனும்னு நினைச்சேன், அதற்குள் வேறு ஒரு சில பிரச்சனைகள் இருந்ததால, அதை கவனிக்க வேண்டியதா போச்சு", என்றான் தாமஸ்
 
திருமுடி முகத்தில் 100% அதிர்ச்சி.
 
"என்ன சார் பேசுறீங்க? இதெல்லாம் ரொம்ப ஆபத்து. முனி பாய்ச்சலை நேரில் பார்த்தவன் நான். இதுவரைக்கும் நீங்க பண்ணது வரைக்கும் சரி... ஆனா வீணா இப்ப ஆபத்தோட விளையாடாதீங்க..."
 
தாமஸ்: ஆபத்தோடு விளையாட கூடாதுன்னா இங்க வந்திருக்கவே கூடாது. கருப்பன் தாத்தாவையும், சடைசாமியையும் முனியடிச்சு தான் இறந்தாங்கன்னு நான் நினைக்கல. கொஞ்சமா அசால்டா விட்டுட்டேன். ஆனா முத்துப்பாண்டி விஷயம் முனி சமாச்சாரமா இருக்குமுன்னு தான் தோணுது.
 
திருமுடி திடுக்கிட்டு போய் "கருப்பன் தாத்தாவும், சடைசாமியும் முனியடிச்சு சாகலையா? எதை வச்சு அப்படி சொல்றீங்க?", என்று கேட்க,
 
தாமஸ்: ரொம்ப சிம்பிள் லாஜிக். கருப்பன் தாத்தா  இதே ஊரில் பல வருஷ காலமா இருந்தவர். உங்க எல்லாருக்கும் முன்னாலேயே முனியை நேரில் பார்த்தவர் அவர் தான்.  ஏற்கனவே முனி பிரச்சனையை சமாளித்திருக்கிறார், எல்லாமே தெரிஞ்சிருந்தும் இரவு அந்த டைம்ல ஏதோ ஒரு காரணத்துக்காக வெளியில போறாரு. அப்படி என்ன அவசரமோ தெரியல. எனக்கு தெரிஞ்சு முத்துப்பாண்டியை தான் பாக்க போயிருக்கணும்.  கடைசியா மேற்கே இருக்கும்   நில பிரச்சனையை தான் டீல் பண்ணிருக்காரு. அதையும் எனக்கே எழுதி வைங்கன்னு இவன் பிரச்சினை பண்ணிருக்கான். அதனாலதான் அவர முனி அடிச்சிருச்சுன்னு சொல்றத நம்ப முடியல. 
 
மேலும் ஒரு நாள், டீக்கடையில பெரியவர் தங்கதுரை கூட பேசிகிட்டு இருந்தேன். அவர் முனி அடிச்சா எப்படி அடிக்கும்? காயங்கள் எப்படி ஏற்படும்ன்னு விலாவரியா சொன்னாரு. 
 
கருப்பன் தாத்தா போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல traumatic brain injury ன்னு போட்டுருக்காங்க. பின்னந்தலையில், பின்னங்கழுத்துல தான் காயம் இருந்துச்சுன்னு போட்டுருக்காங்க. பர்டிகுலரா மரணம் சம்பவிச்சதுக்கு காரணம் subdural hemorrhage. சடசாமி கேசும் இதேதான். ஆனால் முத்துப்பாண்டி விஷயத்தை பாரு. அவன தூக்கிட்டு போகும்போது பார்த்தேன். மூஞ்சில, மார்பில தான் ரத்த காயம் அதிகமா இருக்கு. PM report வந்துச்சுன்னா இன்னும் தெளிவா தெரியும். என்னோட கருத்துப்படி இவனைத்தான் முனி அடிச்சிருக்கும், மத்த ரெண்டு பேர் சாவுக்கு முனி காரணமில்லை."
 
அதிர்ச்சியா கேட்டுக் கொண்டிருந்த திருமுடி, " ஆமா, பெரியவர் இந்த விஷயத்தை இன்ஸ்பெக்டர் ஐயா கிட்டயும் சொன்னாரு. ஆனால் முனி அடிக்கும் போது தூக்கி எறியப்படக்கூடிய நபர்கள் பின்பக்கமாக விழுந்து தலையில, கழுத்துல அடிபட வாய்ப்பு இருக்குல்ல..."
 
தாமஸ்: good question... ஆனா கருப்பன் தாத்தா தலையில் விழுந்த அடி கீழே விழுந்ததினால் ஏற்பட்ட அடி கிடையாது. யாரோ கட்டை மாதிரி ஆயுதங்களால் தாக்கி இருக்காங்கன்னு போஸ்ட்மாட்டம் ரிப்போர்ட்ல தெளிவாக குறிப்பிட்டுருக்காங்க. அதனால தான் எனக்கு சந்தேகமே வந்தது.
 
திருமுடி: நீங்க சொல்றத வச்சு பார்க்கும்போது... கருப்பன் தாத்தாவை முத்துப்பாண்டி கொன்னுருக்கலாம்ன்னு சொல்றீங்க. முத்துப்பாண்டியை முனியடிச்சி இருக்கும்னு சொல்றீங்க. அப்ப சடசாமியை  யார் கொன்னுருப்பா?", என்று கேட்க,
 
தாமஸ்: சடைசாமியையும் முத்துப்பாண்டி தான் கொன்னுருக்கணும். ஒருவேளை கருப்பன் தாத்தாவை அவன் கொலை செய்யும் போது சடை சாமி பார்த்திருக்கலாம், அதனால அவனை கொன்னுருக்கலாம். அதை கண்டுபிடிக்கிறதுக்குள்ள தான் முத்துப்பாண்டி செத்துட்டானே.
 
அவன் சொல்லி முடித்ததும், திருமுடி சந்தேகமாக தாமசை  ஏற இறங்க பார்த்தான்.
 
"எனக்கெனவோ நீங்க போலீசான்னு சந்தேகமா இருக்கு."
 
தாமஸ்: நான் தான் வந்த விஷயத்தை உன்கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேனே!
 
திருமுடி: இல்ல... எனக்கு  நம்பிக்கை இல்லை... ராமசாமி, வெட்டியான் சாவுக்கு அப்புறம் டிபார்ட்மெண்ட்ல துப்பு துலக்க உங்களை அனுப்பிருக்காங்க. தாமஸ் வாத்தியார்ன்கிற பேர்ல வந்துட்டீங்க. கரெக்டு தானே?
 
தாமஸ் இதற்கு பதில் சொல்லாமல், சத்தமாக சிரித்தது, அவனுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
 
மதியம் 2 மணி
 
முன் கதவை தட்டும் சத்தம் கேட்டு, தாமஸ் எட்டிப் பார்க்க, வெளியே கார்த்தி நின்றிருந்தாள்.
 
அவனைப் பார்த்ததும் மல்லிகை பூ மலர்வது போல் சிரித்தாள். ஏதோ நல்ல விஷயம் போலிருக்கிறது!  புன்முறுவலுடன் அவளை ஏறிட்டு பார்க்க,
 
"Toms சார் வீட்டுக்கு வாங்க. உன்கிட்ட ஒண்ணு காமிக்கணும்", என்று அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு மேட்டு வீட்டை நோக்கி நடந்தாள்.
 
"என்ன விஷயம் சொல்லு?"
 
"வாங்க காட்றேன்..."
 
"உங்க அக்காங்கல்லாம் எங்கே?"
 
"சித்ராக்கா மட்டும் ரூம்ல தூங்கிட்டு இருக்காங்க. அகல்யாக்கா நாகர்கோவில் போயிருக்காங்க.."
 
அதான் தெரியுமே, கொஞ்ச நேரத்துக்கு முன்னால தானே டோஸ் வாங்கினேன் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
 
கார்த்தி அவனை பெட்ரூமுக்குள் கூட்டி சென்றாள். அங்கே ஒரு கட்டிலில், சித்ரா தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் அணிந்திருந்த டிஷர்ட்டின்  முதல் இரண்டு பட்டன்கள், கடமையை செய்ய தவறியிருந்தன.
 
இருவரும் ரூமின் மூலையில் போடப்பட்டிருந்த டேபிளை நோக்கி சென்றார்கள். அதன் மேலே அவள் வைத்திருந்த ஒயர் கூடையை எடுத்து காண்பித்தாள்.
 
கூடையின் ஓட்டை வழியாக அக்கா குருவி கீச் கீச் என்று ஏதோ சேதி சொல்வது போல், கத்திக் கொண்டிருந்தது. அதன் உடலிலும் இறக்கையிலும் மருந்து தேய்த்த மஞ்சள் கறை இன்னும் போகவில்லை. தாமஸ் அருகில் சென்று கையை நீட்டியதும், மூக்கை ஓட்டை வழியாக நீட்டி, அவன் விரல்களில் நட்பாக நீவி விட்டது. அவர்கள் இருவரையும் தவிர, வேறு யார் பக்கத்தில் சென்றாலும், படபடவென சிறகுகளை அடித்துக் கொண்டு தன்னைப்பிடிக்கத்தான் வருகிறார்கள் என நினைத்து கூண்டின் மறு பகுதியில் போய் ஒண்டிக்கொள்ளும்.
 
தாமஸ்: குருவிக்கு காயம் சரியாயிடுச்சு... அதைத் திறந்து விட்டுடலாம். அதனால் தான் சத்தம் போட்டுட்டு இருக்கு.
 
கார்த்தி பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு: நாமளே அதை வளர்க்க முடியாதா?
 
தாமஸ்: சிட்டுக்குருவியை நாம கட்டி போடக்கூடாது கார்த்தி. குருவிகள் எப்போதுமே உற்சாகமா, பரபரப்பா, சுறுசுறுப்பா வானத்தில் பறக்கணும். அதுதான் அதுகளுக்கும் சந்தோஷம், பாக்குறவங்களுக்கும் அழகு.
 
கார்த்தியின் முகம் வாடிப்போனது. 
சிட்டுக்குருவியை பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கும் போது, அவளுக்கு ஏதோ ஸ்டாக் மார்க்கெட்டில் ஒரு கோடி ரூபாய் இழந்துவிட்டது போல் வருத்தம். அவள் கண்களில் மெல்லிய நீர் திரை.
 
தாமஸ் அமைதியாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
 
குட் மார்னிங்? 'கீச் கீச் கீச்’
நைட்டு தூங்குனியா? 'கீச் கீச் கீச்’
பசிக்குதா? 'கீச் கீச் கீச்’
வெயிட் சாப்பாடு கொண்டு வரேன்...'கீச் கீச் கீச்’
 
காலை குட் மார்னிங்கில் ஆரம்பித்து, இரவு குட் நைட் வரை குருவியுடன் செய்யும் சம்பாஷனைகளை ஞாபகத்திற்கு வந்தது. கண்டிப்பாக மிஸ் செய்வாள்.
 
சிறிது நேரம் கழித்து, கார்த்தி தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு, குருவி இருந்த  கூடையை எடுத்து, தாமஸ் கையில் கொடுத்தாள்.
 
தாமஸ் கூடையை தூக்கி ஜன்னல் பக்கமாக சென்று, மேலே இருந்து வயர் மூடியை எடுத்தான்.
 
போய்ட்டு வா ..... 'கீச் கீச் கீச்’. 
 
தூங்கிக் கொண்டிருந்த சித்ரா முழித்து, சுத்திலும் பார்த்தாள். ரூமுக்குள்ளே தாமஸ் நின்றிருப்பதை பார்த்ததும், என்னவென்று பார்க்க, ஓஹோ!!! குருவிக்கு பிரிவு உபசர விழா நடந்து கொண்டிருக்கிறது போல, என்று புரிந்து கொண்டாள்.
 
எழும்பி உட்கார்ந்து ஒயிலாக சோம்பல் முறித்தபடி, பட்டன்களை போட்டுக் கொண்டாள்.
 
கூடையை திறந்ததும், படபடவென சிறகடித்து வெளியே வந்த குருவி, ஜன்னல் கம்பிகளின் மேல் அமர்ந்து, சுற்றிலும் ஒரு முறை பார்த்தது. ரொம்ப நாட்களுக்கு பிறகு சிறகடித்து பறப்பது குருவிக்கு சந்தோஷத்தை தந்திருக்க வேண்டும். கம்பியின் மேல் இருந்தாலும் உற்சாகமாக சிறகடித்துக் கொண்டிருந்தது. ஜன்னலுக்கு வெளியே பரந்து விரிந்த உலகம் தெரிய, சந்தோஷமாக, சுதந்திரமாக சிறகடித்து வெளியே பறந்து மறைந்தது.
 
கண்ணில் நீர் திரையோடு நின்றிருந்த கார்த்தியின், முதுகில் தட்டி கொடுத்துவிட்டு, சித்ராவைப் பார்த்து புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு, தாமஸ் வெளியேறினான்.
 
கார்த்தி ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டே இருந்தாள். பறந்து சென்ற அக்கா குருவியை  காணவில்லை. 
 
தூரத்து மரக்கிளையில் பெயர் தெரியாத இரண்டு பறவைகள் அமர்ந்திருந்தன.  விசில்மெட்டு போல் ஏதோ ஒரு சங்கீதக் குரலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. வழக்கமாக வரும் பறவைகள் தான். அவைகளும் அவளை கண்டு கொள்ளவில்லை. தங்களுக்குள் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தன. வெண் விழி படலத்தில் தானாக படர்ந்த கண்ணீரை ஒரு முறை அழுந்த துடைத்துக் கொண்டாள். ஓடிப்போய் கட்டிலில் விழுந்தாள்.
 
சித்ரா: ஏண்டி... எதுக்காக இவ்வளவு பீல் பண்ற? குருவிங்கனா அப்படித்தான். ஒரு இடத்தில் இருக்காது. சந்தோஷமா சிறகடிச்சு பறந்துகிட்டு இருக்கும். அதை வீட்டு நாய் மாதிரி கட்டி போடவா முடியும்?
 
சொல்லிவிட்டு போனை எடுத்து நோண்ட ஆரம்பித்தாள்.
 
கார்த்திக்கு சித்ராக்கா சொன்னது தெரியும் தான். ஆனால் எதற்காக அவளுக்கு வருத்தமாக இருக்கிறது? எதற்காக அழுகை அழுகையாக வருகிறது என்று அவளுக்கு தெரியவில்லை.
 
கட்டிலில் கிடந்த கார்த்தியின்  காதில் விழுந்தது, குருவி போடும் சப்தம்.
மனச்சுமையோடு புரண்டு குப்புற படுத்தாள்.
காதில் விழுந்தது, குருவி இல்லாத நிசப்தம்.
கார்த்தி புரண்டு மல்லாக்க படுத்தாள்.
காதில் விழுந்தது, நிசப்தத்தில் இருந்த குருவி சப்தம்.
 
அவள் இழப்பு அவளுக்கு மட்டும் தான் தெரியும். 
புரண்டு புரண்டு படுத்தாள். மனச்சுமை ஏறிக் கொண்டே இருந்தது
 
திடீரென்று,
 
"கோவ்..... அக்கோவ்....." சத்தம்.
 
கார்த்தி எழும்பி ஜன்னலை  பார்க்க.... சந்தோஷ ஆச்சரியம். அவளுடைய அக்கா குருவி ஜன்னல் கம்பியில் உட்கார்ந்து இருந்தது.
 
"ஹேய்ய்..." என்று கைகளை உயர்த்தி கார்த்தி கூச்சலிட்டாள்.
 
கீச் கீச் கீச்.... அக்கா எப்படி இருக்கிற? 
என்று அவளைப் பார்த்து நலம் விசாரித்தது.
 
கார்த்தி கட்டிலை விட்டு துள்ளி எழும்பினாள். அவள் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம்.
 
"சித்ராக்கா... குருவி திரும்பி வந்திருச்சு, பாத்தியா?" உற்சாகமாக கத்தினாள்.
 
சித்ராவுக்கும் ஆச்சரியம்.
 
கார்த்தி: என் குருவி என்ன விட்டு எங்கேயுமே போகாது.
 
அக்கா குருவி சந்தோஷமாக ரூமுக்குள் நுழைந்தது. சுற்றிக் கொண்டிருந்த விசிறியை இந்த முறை கவனமாக தவிர்த்தது. கார்த்தியின் தோள்பட்டையில் வந்து அமர்ந்தது. கார்த்தி அதை பிடிக்க போக, அவள் காது மடலை கொத்தி இழுக்கப்
பார்த்தது – ஹேங்ங்கரில் தொங்கிக் கொண்டிருந்த துணிகள் ஒவ்வொன்றிலும் லாவகமாக உட்கார்ந்து, உட்கார்ந்து எழும்பியது. கடைசியாக மேஜைமேல் கிடந்த கூடையை போய் கொத்தி பார்த்தது. கூடைக்குள் நுழைந்து படுத்து கொண்டது.
 
கார்த்தி ரூமை விட்டு, "Toms சார்.." என்று கத்திக் கொண்டே ஓடினாள்.
 
காவண வீட்டின் முன்னால் நின்றபடி, யாரிடமோ போன் பேசிக் கொண்டிருந்த தாமஸ், எதற்காக இவள் இப்படி ஓடி வருகிறாள் என்று பதட்டமாக பார்த்தான்.
 
ஓடி வந்த கார்த்தி அவனருகே வந்ததும், மூச்சிரைக்க நின்றபடி,
"சார், அக்கா குருவி மறுபடி வந்துருச்சு. என்னை விட்டுட்டு போகல. என்ன மறக்கல...", என்று சந்தோஷம் தாங்காமல், தாமசை கட்டி பிடித்துக் கொண்டாள்.
 
மாலை ஆறு மணி
 
மேட்டு வீடு சிட்டவுட்டில் அமர்ந்தபடி சுந்தர்ராமன் வாத்தியாரும், சரஸ்வதியும், ஹேமாவும், அகல்யாவும் பேசிக் கொண்டிருக்க...  சித்ரா குழந்தை காவியாவை அரவணைத்தபடி ரயிலிங்கில் சாய்ந்து நின்றிருந்தாள்.
 
அகல்யா: எப்படியோ கஷ்டத்திலும் ஒரு நல்ல விஷயமா, எல்லோரும் ஒண்ணு சேர்ந்துட்டீங்க. ரொம்ப ரொம்ப சந்தோஷம். பாக்கவே கண்கொள்ளா காட்சியா இருக்கு.
 
கலங்கிய கண்களுடன் அமர்ந்திருந்த சுந்தர்ராமன், "என் புள்ள இவ்வளவு கஷ்டப்பட்டுகிட்டு இருக்குன்னு எனக்கு தெரியாம போச்சே. கல்யாணம் பண்ணிட்டு போனவ, எங்களையெல்லாம் மறந்துவிட்டு சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கான்னுல்ல நாங்க நினைச்சுக்கிட்டு இருந்தோம். நீயாவது ஒரு வார்த்தை சொல்லிருக்கக் கூடாதா!"
 
அகல்யா: நான் எவ்வளவு தரம் இவகிட்ட கேட்டேன். வாத்தியார் கிட்ட சொல்றேன், சொல்றேன்னு சொன்னேன்.  வேண்டாம், அப்பாவும் அம்மாவும் என் மேல கோபத்தில் இருக்கட்டும், அது பரவால்ல ஆனா என் நிலைமையை நெனச்சி வருத்தப்பட வேண்டாம்ன்னு தடுத்துட்டா.
 
ஹேமா விசும்பி கொண்டிருக்க, சரஸ்வதி அவளை பார்த்து, 
"அழாதே மக்களே அழாதே..." என்று ஆறுதல் படுத்தினாள்.
 
காவியா என்ன நடக்கிறதென்று புரியாமல் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தாள்.
 
சிறிது நேர அமைதிக்கு பிறகு,
 
சுந்தர்ராமன் திடீரென்று ஆக்ரோஷமானார்: "இருந்தாலும், அந்த பயலை சும்மா விடவே கூடாது. இனிமே அவன் கால் பண்ணி பாக்கட்டும். அதுக்கப்புறம் இருக்கு..."
 
இதற்கிடையே,
 
காவண வீட்டின் கேட்டை திறந்து, தாமசும் திருமுடியும் பேசியபடி வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள்.
 
தாமஸ்: "மேற்கொண்டு யாருகிட்ட டீடைல்ஸ் கேட்கிறது?"
 
திருமுடி: ஊருக்குள்ள நிறைய பேர் இருக்காங்க... எங்க சித்தப்பு கிட்ட கேட்டாலே, சொல்லுவாரே.
 
சித்ரா: அக்கா அவங்க வந்துட்டாங்க.
 
அகல்யா எழும்பி, காவண வீட்டை திரும்பிப் பார்த்து,
 
"Toms sir" என்று சத்தமாக கூப்பிட்டாள்.
 
அகல்யா கூப்பிடும் குரலை கேட்டு... தாமசும் திருமுடியும் மேட்டு வீட்டை நோக்கி சென்றார்கள்.
 
தாமஸ் அனைவரையும் பார்த்து சம்பிரதாய சிரிப்பு சிரித்து விட்டு, "என்ன ராமன் சார்  வந்திருக்காரு. ஏதோ பெரிய பேச்சு வார்த்தை நடக்குது. போலருக்கே... யார் இவங்க புதுசா இருக்கு?", என்றான்.
 
திருமுடி m.v: அடங்கொப்புரானே மனுஷனா நீல்லாம்????
 
அகல்யா: இதுதான் ஹேமா. ராமன் சார் மக... என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்... என்று அவளுடைய காதல் சரித்திரத்தை சுருக்கமாக சொன்னாள்.
 
மேலும்,
 
"எப்படியோ இவ தனியா இருக்காங்கிறது தெரிஞ்சுக்கிட்டு, அந்த பொறுக்கி பையன் போன் பண்ணி டார்ச்சர் பண்ணிருக்கான். இவளும் நம்மால எதுக்கு அடுத்தவங்களுக்கு தொந்தரவுன்னு  இவ்வளவு நாள் சொல்லாம தவிச்சிருக்கா. விஷயம் கேள்விப்பட்டதும் இங்கேயே கூட்டிட்டு வந்துட்டோம். இனிமே அந்த bastard கால் பண்ணி தான் பாக்கட்டுமே. பொம்பள பொறுக்கி. எச்சிக்கல நாய்.."
 
தாமஸ் தொண்டையை செறுமி கொண்டு, திருமுடியை பார்த்தான்.
 
பின்னர் ஹேமாவை பார்த்து, "நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க. இனிமே அவன் கால் பண்ணினாலோ வேற ஏதாவது தொந்தரவு செஞ்சாலோ என்கிட்ட சொல்லுங்க. நான் பாத்துக்குறேன்.'
 
திருமுடி m.v: எப்பா யாரு சாமி நீ? என்னமா நடிக்கிறான்!
 
மேலும் ஒரு சில விஷயங்களை பேசிவிட்டு, தாமஸ் விடை பெற்றான். திருமுடியும் அவனை பின் தொடர்ந்து சென்றான்.
 
அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்த சுந்தர் ராமன்,
"உண்மையிலேயே தாமஸ் வாத்தியாரு, ரொம்ப நல்ல டைப் மட்டுமில்லாம, சமயோசிதமா யோசிக்கிறவராவும் இருக்கிறார்.  உன் கிட்ட ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்."
 
அகல்யா: என்ன விஷயம் அங்கிள்? 
 
ராமன்: கருப்பன் இறந்த அன்னைக்கு, அதோ அந்த சுவர்ல நீ சாஞ்சி நின்னுகிட்டு பேச்சு மூச்சு இல்லாம இருந்த. நாங்கல்லாம் ஒரு கட்டத்தில் பயந்து போனோம். உன்னை பேச வைக்கிறதுக்கு எவ்வளவோ முயற்சி பண்ணினோம். உன்கிட்டருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்ல. உனக்கு ஏதாவது ஆயிர கூடாதேன்னு கவலையில் தவிச்சிட்டு இருந்தப்ப தான், வாத்தியார் ஒரு ஐடியா சொன்னாரு. அவங்க தங்கச்சிகளை கூட்டிட்டு போய் முன்னால நிறுத்துங்க,  தானா சுயநினைவு வந்துரும்னு சொன்னாரு. நல்ல வேளையா அவர் சொன்னபடி நடந்துச்சு. உனக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் அழுது தீர்த்துட்ட...", என்றார்.
 
அகல்யா சித்ராவை ஏதோ அர்த்தத்தோடு பார்க்க, அக்கா ஏன் தன்னை பார்க்கிறா என்று அவளுக்கு புரியவில்லை.
 
வாஞ்சனை இருவர் மனசுக்குள்ளும் அதிகரிக்க,  
 
அகல்யாவும் சித்ராவும் ஒரு சேர திரும்பி, தூரத்தில் போய்க் கொண்டிருந்த தாமசை,
 
கனிவு கசியும் கண்களோடு பார்த்தார்கள்.
 
தொடரும்
 
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது
 

   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 2 months ago
Posts: 81
Topic starter  

கருப்பு 37

இரவு 9 மணி

வழக்கமாக 10 மணிக்கு அடங்கும் ஊர், முனி பிரச்சினைகளுக்குப் பிறகு இரவு 8 மணிக்குள் அடங்கிவிட, தெருக்களில் வெகு சொற்பமான நடமாட்டம். அதிலும் குறிப்பாக முனி பாய்ச்சல் இருக்கும் இடங்களை, ஜனங்கள் கவனமாக கருக்கலுக்கு பிறகு தவிர்த்தார்கள்.

வீட்டின் ஹால்  சோபாவில் அமர்ந்தபடி சகாயராஜ் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். இரவு நேர கடைசி கட்ட வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்த அவர் மனைவி பிலோமினாவை ஓரக்கண்ணால் பார்த்தார். அவள் புஷ்டியான இடுப்பின் வேர்வை மினுமினுப்பு என்னமோ செய்தது.

"அந்த பன்னாடை பார்த்து தொலைச்சிட்டதனால, சந்தனமேரி வீட்டுக்கும் போக முடியல. ரொம்ப நாள் ஆச்சு இன்னைக்கு நைட் ஷோ போட்டுற வேண்டியதுதான்.."

ஏதோ வேலைக்காக அவரைத் தாண்டி, முந்தானையில் கை துடைத்தபடி சென்றவளை கையை பிடித்து இழுத்து தாகமாய் பார்த்தார்.

"என்னங்க என்னாச்சு?

சகாய ராஜின் ஏக்கப்பார்வையை பார்த்ததும்,

" இந்தாளு வேற நேரங்கெட்ட நேரத்துல..", சலித்துக் கொண்டாள்.

"உடம்பு சரியில்ல அது இதுன்னு சொல்லி பக்கத்திலேயே நெருங்க விட மாட்டேங்குற... இப்பதான் தெம்பா இருக்கியே? அப்புறம் என்ன?...." என்று இழுத்தார்.

"அதுக்காக இப்பவே வா? உங்க மக தூங்கிட்டாளா இல்லையான்னு தெரியல... கதவு வேற திறந்து கிடக்கு...", அவர் சொன்னதைப் கேட்டதும், சகாயராஜ் நிமிர்ந்து உட்கார்ந்தார். அவள் வேண்டாம் என்று சொல்லவில்லை, மகள் தூங்கட்டும், கொஞ்சம் லேட்டாகட்டும் அதன் பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறாள்.

"அவ எப்பவோ தூங்க போயிட்டா... அரை மணி நேரமாச்சு."

"பாத்ரமெல்லாம் கழுவ வேண்டியது இருக்கு"

"அதெல்லாம் காலைல பண்ணிக்கலாம். நானே கழுவி தர்றேன். இப்ப நீ அவ ரூம் கதவையும், மெயின் டோரையும் பூட்டிட்டு வாயேன்", என்று சினுங்கலாக சொன்னார்.

பிலோமினாவும் சிரித்தபடி, மகள் ரூம் கதவை வெளிப்பக்கமாக சத்தம் வராமல், நைசாக பூட்டி விட்டு, சோபாவில் இருந்த சகாயராஜை உரசியபடியே சென்று, வீட்டு முன் கதவையும் பூட்டினாள். சகாயராஜ் எழும்பி ஹால் லைட்டை ஆப் செய்தார்.

இருட்டுக்குள் இருவரும் நெருங்கி கைகோர்த்து நின்றார்கள்.

சகாயராஜ்: கதவெல்லாம் கரெக்டா பூட்டினியா?

பிலோமினா: ம்ம்ம்... என்றாள் கொஞ்சலாக.

அடுத்த நொடி சகாயராஜ் பிலோமினாவை ஆவேசமாக அணைக்க போக,

சித்தப்பூபூபூ..... என்றொரு குரல்.

இருவரும் திடுக்கிட்டு போய், விலகி கதவை பார்க்க, கதவு பூட்டி தான் இருந்தது. வேறு எங்கிருந்து குரல் வருகிறது?

"சித்தப்பூபூபூ.... நான் இங்க இருக்கேன்...."

சகாயராஜ் பக்கவாட்டு ஜன்னலை திரும்பிப் பார்த்தார். ஜன்னல் கம்பிகளுக்கு வெளியே திருமுடி, ஈஈஈ.... என்று ஜனகராஜ் போல் இளித்து கொண்டிருந்தான்.

பிலோமினா முந்தானையை சரி செய்து கொண்டு சோபாவில் பொத்தென்று சரிந்து உட்கார்ந்தாள்.

சகாயராஜ்: இங்கேயும் வந்துட்டியால. கொஞ்ச நேரம் சந்தோஷமா இருக்க விட மாட்டியே?

திருமுடி ஜன்னலுக்கு வெளியே இருந்து, "என்ன சித்தப்பு நாம  அப்படியா பழகிருக்கோம். வாங்க கதவு திறங்க.. உங்கள பாக்காம இருக்க முடியல. அதான் பார்த்து, ரெண்டு வார்த்தை பேசிட்டு போலாம்னு வந்தேன்.

ஹாய் சித்தி..." என்று உற்சாகமாக கத்தினான்.

பிலோமினா அவனை எரிச்சலாக பார்த்துக் கொண்டிருக்க, சகாயராஜ்  செம கடுப்பில் லைட்டை போட்டுவிட்டு, கதவை திறந்தார். வெளியே திருமுடியும், அவனுக்கு பின்னால், தாமசும் நின்றிருந்தார்கள்.

சகாயராஜ் தாமசை பார்த்ததும், வழிந்து நெளிந்து, "வாங்க சார்... வாங்க" என்று வீட்டுக்குள் கூப்பிட்டார்.

திருமுடி: தாமஸ் சார் உள்ள வாங்க.. நம்ம வீடுதான்...

என்று சொல்லியபடி அவன் பாட்டுக்கு, எந்த சங்கோஜமும் இல்லாமல் உள்ளே நுழைந்தான்.

தாமசை பார்த்ததும், சித்தி வெக்கப்பட்டு கொண்டு சமையல் கட்டுக்குள் சென்றாள்.

சகாயராஜ் திருமுடி காதுக்குள், "ஏம்ல இது உனக்கே நியாயமா இருக்கா? பாக்க வர்றதுக்கு இதான் நேரமா? அப்படி என்ன தல போற விஷயம்? வந்தது தான் வந்த ஒரு பத்து நிமிஷம் கழிச்சு வந்திருக்க கூடாதா?" என்று கிசுகிசுத்தார்.

திருமுடி பதிலுக்கு சகயராஜ் காதுக்குள், "இவ்வளவு நாள் சந்தன காத்து அடிச்சிட்டு  தானே இருந்துச்சு... நல்ல செழிப்பா தான் இருந்தீங்க? அப்புறம் என்ன? ஒரு முக்கியமான விஷயம் சார் பேசணும்னு சொன்னாரு, அதுதான் வந்தோம். ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன். நான் கிளம்பிட்டா கூட நீங்க சித்தி பக்கத்தில் நெருங்க கூடாது... விஷயம் தெரிஞ்சுச்சு. அப்புறம் சந்தன காத்து எல்லா பக்கமும் வீசிடும்.."

"ஐயா சாமி மாட்டேன்பா.." என்பது போல் கையெடுத்து  அவனை கும்பிட்டார்.

தாமஸ்: சித்தப்பாவும் மகனும் கிசுகிசுன்னு அப்படி என்ன பேசிட்டு இருக்கீங்க?

சகாயராஜ்: அது ஒண்ணுல்ல சார். ஊர்ல காத்து ஓவரா வீசுது. அதான் காற்றாலை மின்சாரம் வைக்கிறதுக்கு கவர்மெண்ட்ல மனு குடுக்கலாமான்னு பேசிட்டு இருந்தோம்... அது கிடக்குது. நீங்க வந்த விஷயத்தை சொல்லுங்க?

திருமுடி: நான் சொல்றேன். அதுக்கு முன்னால ... சித்தி சூடா ரெண்டு டீ போடுங்க... என்று கிச்சனை பார்த்து கத்தினான்.

அவன் கேட்டதும், கிச்சனில் பாத்திரங்கள் கடுப்பாக தூக்கி எறியப்படும் சத்தம் கேட்டது.

சகாயராஜ்: பாத்திரம் கை தவறி விழுந்திருக்கும்... என்று சமாளித்தார்.

திருமுடி: சரி விஷயத்துக்கு வரேன். நம்ம  தாமஸ் சார் முனி சம்பந்தமான விஷயங்கள் தெரிஞ்சுக்கணும்னு சொன்னாரு. ஏற்கனவே தங்கதுரை ஐயா கிட்ட ஒரு சில விஷயங்கள் கேட்டுருக்காரு. நம்ம ஊர்ல விவரமானவங்கன்னா... அந்தோணி அண்ணனும், நீயும் தானே. அந்தோணி அண்ணன் கிட்டயும் பேசினோம். அடுத்தது உன்னையும் பார்த்து ஒரு சில விஷயம் கேட்டுட்டு போலாம்னு வந்தோம்.

சகாயராஜ் தாமசை பார்த்து, "என்ன விஷயம் தெரிஞ்சுக்கணும், சொல்லுங்க?", என்று அவசரமாக கேட்க,

திருமுடி: என்ன அவசர அவசரமா கேக்குற? வேற அப்படி உனக்கு என்ன வேலை இருக்கு? இரு, சார் பொறுமையா கேப்பாரு.

தாமஸ்: என்ன விஷயம்னு குறிப்பிடும்படியா இல்ல. சண்டி முனி பத்தி, முனி ஓட்டம், முனி பாய்ச்சல் பற்றி  உங்களுக்கு தெரிஞ்ச விஷயத்தை சொல்லுங்க?

சகாயராஜ் சொல்ல ஆரம்பித்தார். ஏற்கனவே நமக்கு தெரிந்த கதை தான். பல வருடங்களுக்கு முன்னால், இருந்த முனி கோவில். முனியை கும்பிட்ட குறிப்பிட்ட வகுப்பினர், அவர்கள் ஊரை காலி செய்து விட்டு சென்றது, முனி கோவில் பராமரிப்பின்றி நிராதரவாகி பாழடைந்து போனது, இருளாயி கோயில் கட்டப்பட்டது, முனி ஓட்டம் தடம் மாறியது, காலப்போக்கில் முனி பற்றிய பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போனது என்று எல்லாவற்றையும் சொன்னார்.

முடிவாக,

"எப்போ கருப்பன் தாத்தா சண்டி முனிக்கு நேர்ந்து விடப்பட்ட காவண வீட்டை விக்கிறதை பத்தி பேச்சு எடுத்தாரோ, அதன் பிறகு தான் ஊருக்குள்ள முனி ஓட்டம் மறுபடியும் ஆரம்பிச்சது. பாவம், அவரையும் குறை சொல்ல முடியாது. ரொம்ப வருஷ காலமா முனி நடமாட்டமோ, எந்த பேச்சும் இல்லங்கறதுனால, முனி வேறு பக்கமா போயிருச்சுன்னு நினைச்சிருப்பார். வீட்டை வித்து அனாதரவா நிக்கிற பேத்திகளுக்கு ஏதாவது செய்யணும்னு பிரியப்பட்டுருப்பார். அவரையே முனி அடிச்சிருச்சு."

தாமஸும், திரு முடியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

இதற்கிடையே, சித்தி டீ போட்டுக் கொண்டு வர, அனைவரும் டீ சாப்பிட்டபடியே பேசினார்கள். முனி விஷயம் என்பதால் சித்தியும் உட்கார்ந்து ஆர்வமாக கேட்க ஆரம்பித்தாள்.

தாமஸ்: நானும் மாட்டியிருப்பேன்.. எப்படியோ தப்பிச்சிட்டேன். ஒரு நாள் ராத்திரி  ஏதோ சத்தம் கேக்குதேனு வெளியே வந்து எட்டி பார்த்துட்டு இருந்தேன். ஏதோ காத்து மாதிரி ஒன்னு அடிக்க வந்த மாதிரி இருந்துச்சு.. யாரோ என்னை கைய புடிச்சு இழுத்து வீட்டுக்குள்ள தூக்கி போட்டுருக்காங்க. யாருன்னு சரியா தெரியல. அநேகமா சடை சாமியா தான் இருக்கணும்.

சகாயராஜ்: சார் முனி பாய்ச்சல் இருக்கிற வீதில, அந்த நேரத்துல நாம குறுக்கிட்டா நிச்சயமா அடிச்சு தூக்கி வீசிடும். சண்டி முனி மோசமானது. ஒரே அடியில் ஆள் காலி ஆயிடுவான்.

தாமஸ்: சார் தங்கதுரை ஐயா கிட்ட பேசிட்டு இருக்கும்போது, அவர் என்ன சொன்னார்ன்னா  முனிங்கறது நம்ம மூதாதையர்கள் தான். இயற்கைக்கு மாறாக சாவு நேரும்போது,  செய்து முடிக்க வேண்டிய காரியங்கள் இருக்கும்போது, ஆத்ம சாந்தியாகாமல் ஆவியா உலவுவாங்க. சில நேரங்களில் அந்த மாதிரி ஆவிகள், அந்த மண்ணுக்குரிய இயற்கை சக்திகளுடன் கலக்கும் போது முனியா மாறுது.  இயற்கையிலேயே நல்ல சக்தியும், கெட்ட சக்தியும் இருக்குற மாதிரி, நல்ல முனியும் இருக்கு, கெட்ட முனியும் இருக்கு. அப்படிப்பட்ட முனிகளை மக்கள் குல தெய்வங்களாக, உபாசனை சக்திகளாக ஏத்துக்கும் போது அதற்குரிய பூஜை மரியாதைகளை செய்யணும்.  அப்படி செஞ்சா என்னதான் கெட்ட முனியா இருந்தாலும், கும்பிடுகிறவர்களுக்கு நல்லது தான் பண்ணும். தேவைக்கு பயன்படுத்திட்டு முனியை கண்டுகொள்ளாமல் விடும்போது தான் உக்கிரமடைதுன்னு சொன்னாரு...?

சகாயராஜ்: கரெக்டு தான் சார். சண்டி முனி விஷயத்திலும் நீங்க கடைசியா சொன்னது தான் நடந்திருக்கு. ஏற்கனவே கைவிடப்பட்டதால் இருக்கிற கோபம், இப்ப நேர்ந்துவிட்ட வீடும் போயிருச்சேங்குறது தான் சண்டி முனியோட ஆக்ரோஷத்துக்கு காரணமா இருக்கணும்.

தாமஸ்: சார் இன்னொரு கேள்வி. கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமா தான் இருக்கும்... இருந்தாலும் கேட்கிறேன். நீங்க சொல்ற முனி வகையறாக்கள், முனி பாய்ச்சல் சமயத்துல, ஸ்டார்டிங் பிளேஸ்ல இருந்து கிளம்புனா எக்ஸ்பிரஸ் ட்ரெயின் மாதிரி, நிக்காம  அதிவேகத்தில் ஒரு சுத்து சுத்தி மறுபடியும் வந்து சேருமா? அதனால்தான் எதிர் படுறவங்களை அடிச்சு தூக்குதா? இல்ல, புல்டோசர் மாதிரி பல இடங்களில் நின்னு நின்னு போகுமா? சைடு வாங்கி வீட்டுக்குள்ளல்லாம் போயிட்டு வருமா?

சகாயராஜ் புன்முறுவலுடன் பதிலளித்தார்.

"முனி ஓட்டம், முனி பாய்ச்சல்ன்கிற வார்த்தை பிரயோகத்தினால் நீங்க இந்த கேள்வி கேக்குறீங்க? புரியுது... ஆனா யாருமே இதுக்கு சரியான பதில் சொல்ல முடியாது. எனக்கு தெரிஞ்ச வரைக்கும், நின்னு நிதானமா ஷேர் ஆட்டோ மாதிரி போற கதைல்லாம் பொதுவா நடக்காது. அதுபோக்ல போகும். வழக்கமான பாதையிலருந்து விலகுவதல்லாம் இருக்காது. அதனால்தான் முனி ஓட்டம் நேரத்துல எக்கு தப்பா எதிர் படுறவங்களை அடிச்சு தூக்குது. ஆனால் சில முனிகள், தவறுதலா யாராவது எதிர் பட்டாலும் அவங்க கால்ல விழுந்து கும்பிட்டா மன்னிச்சு விட்ரும்ன்னும் கேள்வி பட்டுருக்கேன். சண்டி முனி நிச்சயமா அந்தரகம் கிடையாது. கடற்கரை பாதையில கீழத்தெரு வழியா மேட்டு தெருவுக்குள்ள நுழைஞ்சு...மேட்டு தெருவோட மறுபக்க சந்துகளை கடந்து, முள்ளுக்காடு வழியாக திரும்பவும் முனி கோயிலுக்கு வந்து சேருது. இதுதான் முனி பாய்ச்சல் இருக்கக்கூடிய வழி.

பெரியவர் காவண வீட்டை நேர்ந்து விட்டதால வீட்டுக்குள் நுழையலாம். வாய்ப்பு இருக்கு. ஆனா மந்திர கட்டு போட்டாருன்னு கேள்விப்பட்டேன். அதனால வீட்டை சுத்தி வரலாம், வீட்டுக்குள்ள நுழைய முடியாது...."

தாமஸ்:  கடைசியா ஒரே ஒரு கேள்வி... முனி பாய்ச்சல் இருக்குனு  ஊர்க்காரங்க எல்லாருக்கும் தெரியுது. முனியின் கோவிலை சீரமைச்சி, பூஜை நடத்தி, ஏன் நீங்க அதை சாந்தி படுத்த கூடாது? அட்லீஸ்ட் தேவையில்லாத மரணங்ளையாவது தடுக்கலாமே.

சித்தி: கரெக்டு தான் சார்... என்று அவன் சொன்னதை ஆமோதித்தாள்.

"ராமசாமியை முனி அடிச்சப்பவே நானும், நம்ம ஊரு பொண்ணுங்க நிறைய பேரும் இதையே சொன்னோம். யாரு கேட்டாங்க? அவன் பொண்டாட்டி புள்ளைங்க இப்ப அனாதையா நிக்குது", என்றாள்

சகாயராஜ்: இல்ல சார், கோவில் சீரமைக்கிறதல்லாம் ஓகே. செஞ்சிரலாம். ஆனா மறித்துக்கட்டும் பூஜைகள் நடத்துவதற்கு, முனி கோவில் கட்டினால், பராமரிப்பதற்கு சரியான ஆள் கிடைக்கல்லை. ஏன்னா முனி விஷயம்ங்கறதால விவரம் தெரிஞ்சவங்க தான் தேவைப்படும். அதுக்கு சரியான ஆள் கிடைக்கல. அதனால தான் லேட் ஆகுது.

சித்தி கொஞ்சம் காட்டமாக: அப்படின்னா நீங்க ஆள் தேடிக்கிட்டே இருப்பீங்க.. ஊருக்குள்ள எல்லாரும் செத்துகிட்டு இருப்பாங்க... ஒவ்வொரு நாளும் நாங்க பயந்து செத்துகிட்டு இருக்கணும். ராமசாமி குடும்பம் மாதிரி எல்லா குடும்பமும் நடுத்தெருவில் நிக்கணும்... என்றாள்.

திருமுடி: நல்லா கேளுங்க சித்தி, ஊர்ல சித்தப்பா ஒரு முக்கியஸ்தர்... கருப்பன் தாத்தாவும் இல்லை. முத்துப்பாண்டியும் இல்லை, முடிவெடுக்க வேண்டிய ஒரு பொறுப்புல இருக்குறவரு, பொறுப்பில்லாமல் வீட்டுக்குள் உட்கார்ந்து காத்து வாங்கிட்டு இருக்கிறார்... என்று ஏத்தி விட்டான்.

அடப்பாவி!!! நல்லா இருந்த குடும்பத்துல கும்மி அடிச்சுட்டானே!!!

சகாயராஜ்: அதுக்கில்லம்மா, எல்லாரும் ஒண்ணு சேர்ந்து ஒரு முடிவெடுத்து தானே செய்ய முடியும்? நான் நினைச்ச உடனே பண்ணிட முடியுமா?

சித்தி: நீங்க முடிவு எடுத்துக்கிட்டே இருங்க. ஊருக்குள்ள எல்லாரும் முண்டச்சியா அலையறோம்...  கோபித்துக் கொண்டு எழும்பி, பெட் ரூமுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டாள்.

திருமுடி தூசி தட்டுவது போல் கையை தட்டிக் கொண்டே எழும்பினான்:  சரி சித்தப்பு, வந்த வேலை முடிஞ்சுது நாங்க கிளம்புறோம்.

சகாயராஜ் அவனை கடுப்பாக பார்த்துக் கொண்டிருக்க,

தாமஸ் வணக்கம் வைத்துவிட்டு, "ரொம்ப நன்றி சார், அப்ப நாங்க கிளம்புறோம்", என்று விடைபெற்று கிளம்பினான்.

இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்றார்கள்.  சகாயராஜ் கதவை மூடிவிட்டு, நேராக பெட்ரூம் கதவை தட்டினார்.

"நீ சொல்ற படில்லாம் செய்றம்மா. கொஞ்சம் கதவை திற..."

மறுபடியும் சித்தப்பு என்ற குரல்...

சகாயராஜ் ஜன்னலை பார்த்து திரும்பி, 

"லேய்ய்ய்ய்...", என்று கொலை வெறியோடு கத்த,

திருமுடி: இல்ல ஜன்னலை பூட்ட மறந்துட்டீங்க, அதை பூட்ட சொல்றதுக்காக தான் கூப்பிட்டேன்... என்று சொல்லிவிட்டு அவசரமாக அங்கிருந்து நகர்ந்து ஓடினான்.

இருட்டு சந்தில் டகடகவென சைக்கிள் சத்தம். அளவில் சற்றே பெரிய சந்து. இரண்டு பக்கமும் வீடுகள். திருமுடி சைக்கிளை ஓட்ட இரண்டு பக்கமும் கால் போட்டு தொங்கவிட்டபடி தாமஸ் உட்கார்ந்திருந்தான். முக்கால்வாசி வீடுகளில் தூக்கம் ஆட்சியைப் பிடித்திருக்க, மிச்சம் மீதி வீடுகளில் ஆட்சியை பிடிப்பதற்கான ஆயுத்தங்களை நடத்தி கொண்டிருந்தது

திருமுடி: எவனாவது ஒருத்தனாவது வீட்டை விட்டு வெளியே எட்டிப் பாக்குறானா பாத்தீங்களா? இத்தனைக்கும் இது முனி ஓட்டம் இல்லாத ஏரியா. அப்படி இருந்தும் ஒருத்தனும் வெளியே வரல்லை.

அவன் பேச்சு சத்தத்தை,   எக்ஸ்பைரி டேட் முடிந்த, தெருவோர டியூப் லைட் வெளிச்சம் குறுக்கிட்டது.

தாமஸ் எந்த பதிலும் சொல்லாமல் யோசனையில் இருப்பதை பார்த்ததும்,

திருமுடி: என்ன சார் பதிலே இல்ல. ஏதோ யோசிச்சுகிட்டே வர்றீங்களே?

தாமஸ்: முனிவோட்டம்னு சொல்றாங்க, அத கன்ஃபார்ம் பண்ண வேண்டாமா? அதான் எப்படின்னு யோசிக்கிறேன். நம்ம தெருவுல ஏதாவது வீடியோ கேமரா செட் பண்ணிடலாமா?

திருமுடி: ஏன் சார் உனக்கு இந்த வேண்டாத வேலை. நான் என் கண்ணால பார்த்தேனே. அதுக்கு மேல எதுக்கு கேமரா? இப்ப நினைச்சு பார்த்தாலும் கை காலல்லாம் நடுங்குது.

தாமஸ்: இல்ல, இல்ல... அடுத்தவங்க கண்ணை நம்ப முடியாது. ஆமா, எந்த இடத்தில் வச்சி ராமசாமியை தூக்கி  அடிச்சதுன்னு சொன்ன?

திருமுடி: "அதுவா சார், கீழத்தெருவில் இருந்து திரும்பி, கடற்கரை ரோட்டுல  போகும்போது ரோட்டுக்கு லெப்ட் சைடுல சின்னதா ஒரு குட்டி சுவரு உண்டு. அதுக்கு பின்னால ஒளிஞ்சி நின்னு பார்த்தேன்."

அதைத்தொடர்ந்து,

"ஆமா எதுக்கு கேக்குறீங்க?".......

என்று கேட்க வந்தவன், கேட்காமல், படக்கென்று சைக்கிளை நிறுத்திவிட்டு, பின்னால் திரும்பி, தாமசை பார்த்தான்.

தாமஸ் மந்தஹாசமாக சிரிப்பதை பார்த்ததும்,

"ஐயையோ வேண்டாம் சார், ஆள விடுங்க", என்று அவன் கத்தியது,

அந்த அரை இருட்டு சந்தில் அனாதரவாக ஒலித்தது.

தொடரும்

 
 
 
 
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது
 

   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 2 months ago
Posts: 81
Topic starter  
கருப்பு 38
 
அகல்யா வீடு,
அதே நேரம்
 
அகல்யா தூக்கம் வராமல் ரூமுக்குள்ளே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள். முத்துப்பாண்டி துஷ்டிக்கு, பெரியம்மா வீட்டுக்கு போனபோது, நடந்த நிகழ்வுகள் மனதின் LED டிஸ்ப்ளேயில் மறு ஒளிபரப்பாகிக் கொண்டே இருந்தது.
 
ஃப்ரீசர் பாக்ஸில் முத்துப்பாண்டி உடலை கிடத்தி வைத்திருக்க, சுற்றி அமர்ந்திருந்த பெண்கள் கடமைக்கு அழுது கொண்டிருந்தார்கள். துக்கம் விசாரிக்க, பிரபாவதி அத்தை மற்றும் ராகினியுடன், அகல்யா சென்றிருந்தாள். அகல்யாவை பார்த்ததும், அவள் கையைப் பிடித்து அழுத, பெரியம்மா ராஜலட்சுமி,
 
"எனக்கு இருந்த ஒரே சொந்தமும் போயிடுச்சு. இனிமே எனக்கு யார் இருக்கா?" என்று கேட்க, 
 
அகல்யா பதறிப் போனாள்.
 
"ஐயோ ஏன் பெரியம்மா இப்படி சொல்றீங்க? நாங்க உங்களுக்கு இல்லையா? அண்ணன் தான் எங்களை விரோதமா பார்த்துட்டு இருந்தார். ஆனா நான் என்னைக்குமே அவர என் கூட பிறந்த பிறப்பாவும், உங்களை என் அம்மாவுமா தான் நினைச்சுகிட்டு இருக்கேன் .  பெத்த அம்மா இப்போ உயிரோட இல்ல. நீங்க தானே இப்ப எங்களுக்கு அம்மா..",
 
என்று அகல்யா சொன்ன  பதிலில், மேலும் நெகிழ்ந்து போன ராஜலட்சுமி அவளை கட்டிப்பிடித்துக் கொண்டு குமுறி குமுறி அழுதாள்.
 
சிறிது நேரம் கழித்து, கண்ணீரை துடைத்துக் கொண்டு அவளைப் பார்த்தாள். என்ன நினைத்தாளோ தெரியவில்லை. அகல்யாவை வீட்டுக்குள்ளே தனியாக கூட்டி சென்ற ராஜலட்சுமி, அக்கம் பக்கம் பார்த்துவிட்டு பேச ஆரம்பித்தாள்.
 
"தோ பாருமா, மாமா இறப்புக்கு அப்புறம் உன்கிட்ட பேசணும்னு கொஞ்ச நாளாவே நெனச்சிட்டு இருக்கேன். பல்வேறு காரணங்களால் செய்ய முடியாம போச்சு..."
 
"என்ன விஷயம் சொல்லுங்க பெரிம்மா...." 
 
"கடைசி நாள்களில் பாண்டியின் நடவடிக்கைகள் ரொம்ப சந்தேகத்துக்கு இடமா இருந்துச்சு. யார்கிட்டயோ போன்ல கிசு கிசுன்னு பேசுவதும், நீங்க சொன்னபடியே செய்றன்னு குழையறதும் நெளியிறதும் நேரங் கெட்ட நேரத்தில் வெளியே போறதும் வர்றதும், எனக்கு என்னமோ சரின்னு படவே இல்லை... சிமெண்ட் கம்பெனிக்காரங்க கிட்ட அவன் பணம் வாங்கும் போதே வேண்டாம்னு தடுத்தேன்.  ஒட்டகத்தை கூடாரத்துக்குள்ள நுழைய விடுற மாதிரி தான்... நமக்குள்ள இருக்கிற பிரச்சினையை பேசி தீர்த்துக்கலாம்ன்னு சொன்னதையும் அவன் கேட்கல... இப்ப நம்ம ஊர்ல நடக்கிற பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் அவனோட கூட்டு சேர்ந்து அவனை ஆட்டுவித்த அந்த இன்னொரு நபர் தான்னு என் மனசுக்குள்ள ஏதோ ஒன்னு சொல்லுது. அது யாருன்னு கண்டுபிடிச்சுட்டு உன்கிட்ட சொல்லலாம்னு தான் காத்திருந்தேன். கெட்ட சவகாசம் கேடாத்தான் முடியும்...அதுக்குள்ள பாண்டிக்கு... ", என்று  முடிக்காமல் அழ ஆரம்பித்தாள்.
 
அகல்யா: பெரியம்மா தைரியமா இருங்க... நீங்கதான் நம்ம குடும்பத்துல இப்ப மூத்தவங்க.. எங்களையெல்லாம் நீங்க தான் தைரியப்படுத்தி வழிநடத்தணும். காவண வீட்டையும், மேற்கால நிலத்தையும் அண்ணன் கேட்கும் போதே கொடுத்திருப்பேன். கருப்பன் தாத்தா அண்ணனுக்கு கொடுக்காத காரணம், அண்ணன் தவறான வழியில் பணத்தை செலவழிச்சுடுவாங்களே அப்படிங்கறதுக்காக தான்... மத்தபடி நீங்க கேட்டுருந்தா மறுபேச்சு இல்லாம கொடுத்திருப்பேன். நீங்க சொல்ற மாதிரி அந்த இன்னொரு நபர், சிமெண்ட் கம்பெனி சார்பாக ஊருக்குள்ள ரெண்டு மூணு பேர் சுத்திட்டு இருக்காங்களே... அவனுங்களா?
 
ராஜலட்சுமி தீர்க்கமான குரலில்: இல்லம்மா, அவங்க தான் வீட்டுக்கு நேரடியாகவே வந்து பேசுவாங்களே. இது யாருன்னே எனக்கு கண்டுபிடிக்க முடியல. எதுக்கும், நீயும் சித்ராவும் கார்த்தியும் ஜாக்கிரதையாகவே இருங்க. சொல்லணும்னு தோணுச்சு சொல்லிட்டேன். அது மட்டும் இல்லாமல் இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா.... முனி கிட்டருந்து பாதுகாப்புக்காக,  பாண்டி இடுப்பில் அருணாக்கயிறு கட்டிருந்தான். ஆனா இப்ப அவன் உடம்புல அத காணல... என்னன்னே புரியல.."
 
எல்இடி டிஸ்ப்ளேயில் காட்சிகள் கரைந்து போக, அகல்யா நெற்றியில் குழப்ப சுருக்கங்கள்.
 
"யார் அந்த நபராக இருக்கும்? கார்த்தி மூலமாக தாத்தாவும் வந்து எச்சரிச்சிட்டு போனார். பெரியம்மாவும் சொல்றாங்க.... என்ன செய்வது?"
 
பக்கத்து ரூமில் சித்ராவும் கார்த்தியும் ஏதோ சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.  கொஞ்ச நாள் மூட் அவுட் ஆகி இருந்த சித்ரா இப்போதெல்லாம் பழைய மாதிரி இருக்கிறாள். பார்ப்பதற்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது. 
 
இந்த சிரிப்புக்கு காரணம் தாமசா?
 
அப்படி இருக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டாள், இருக்க வேண்டாம் என்றும் ஆசைப்பட்டாள். 50: 50 என்ற விகிதத்தில் மனம் ஊசலாடி கொண்டிருந்தது.
 
சே! என்ன நினைப்பு இது! தங்கச்சியின் நலனை நினைக்காமல், என்னை முன்னிலைப்படுத்தி யோசிக்கிறேனே!
 
அகல்யாவின் செல்போன் சிணுங்க, எடுத்து பார்த்தாள். ராமன் சாரிடமிருந்து கால். போனை எடுத்து காதுக்கு ஒற்றினாள்.
 
"என்ன அங்கிள் சொல்லுங்க?"
 
"அகல் தாமஸ் சாருக்கு கால் பண்றேன், எடுக்கவே மாட்டேங்குறாரு. ரிங் போயிட்டே இருக்கு.  இவரு அந்த திருமுடி பய கூட சேர்ந்துக்கிட்டு, அங்க இங்க போய் முனி பத்தி விசாரிச்சிட்டு திரியிறாரு. ஊர்ல ரெண்டு மூணு பேர் எனக்கு தகவல் சொல்லிட்டாங்க. உங்களுக்கு நல்லது செய்யணும்னு நெனச்சு, கண்ட நேரத்தில் வெளியில போயி ஏதாவது ஆபத்துல மாட்டிக்க போறாரு. முனி  மோசமானது, ஏற்கனவே பல பேரை காவு வாங்கிருச்சு. அதான் வீட்ல இருக்கிறாரா? இல்லையான்னு பாக்க கால் பண்றேன்..... எடுக்க மாட்டேங்கறாரு... நீ கொஞ்சம் காவண வீட்ல இருக்கறான்னு பாரு, ஆனா வெளியில போகாத.."
 
"சரி அங்கிள் பாக்குறேன்", என்று சொல்லிவிட்டு போன் வாயை மூடினாள். 
 
ரூமை விட்டு வெளியே, வீட்டை விட்டு வெளியே, சிட் அவுட்ஐ விட்டு வெளியே வந்து, காவண வீட்டை நோக்கி நடந்தாள்.
 
கையில் வைத்திருந்த மொபைலில் டைம் பார்த்தாள். மணி இரவு 9.30.
 
காவண வீடு பூட்டி இருந்தது.
 
'இந்நேரத்தில் எங்கே போயிருப்பார்?'
 
தாமஸ் நம்பருக்கு அகல்யா கால் பண்ண, ரிங் போனது. வீட்டுக்குள் இருந்து போன் ஒலிக்கும் சத்தம் கேட்டது. 
 
'போனை வீட்டிலேயே வைத்துவிட்டு வெளியே போய் விட்டாரா?'
 
"முனி விஷயத்தினால் எங்களுக்கு ஏதாவது பாதிப்பு வந்துவிடக்கூடாதுன்னு தான், தாமஸ் முனியை பத்தி தகவல் சேகரிக்கிறார் போல...."
 
ஒரு பக்கம் பரவசமாக இருந்தாலும், மற்றொரு பக்கம் ஏன் இவருக்கு இந்த வேண்டாத வேலை என்ற கோபம் வந்தது?
 
"திருமுடிக்கு கால் பண்ணி பார்ப்போம்?"
 
அகல்யா திருமுடிக்கு கால் செய்தாள்.
 
Cut to கடற்கரை குட்டிச்சுவர்.
கடற்கரை குட்டி சுவர் பின்னால் ஒளிந்தபடி இரண்டு உருவங்கள். கடற்கரை ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி இருக்க, கடற்கரை காற்று ஜிவ்வென்று அவர்களை தூக்கி அடிப்பது போல் வீசிக்கொண்டிருந்தது.
 
திருமுடியின் எழினி அழைத்தது. அட ஆமா!! செல்போனுக்கு தமிழில் எழினி என்றும் சொல்லலாம்.
 
ஃபோனை பார்த்த திருமுடி திகைத்தான். 
'அகல்யா எனக்கு எதுக்கு கால் பண்றா?'
 
தாமஸ்: யார் கால் பண்றா?
 
"அகல்யா பண்றாங்க. எதுக்குன்னு தெரியலையே", என்று சொல்லியபடியே காலை அட்டென்ட் செய்தான்.
 
"திருமுடி நீ எங்க இருக்க?"
 
"இங்கதான், பக்கத்துல, என்ன விஷயம் சொல்லுங்க?"
 
"காவண வீட்டு முன்னால நின்னு தான் பேசுறேன். வீடு பூட்டிருக்கு. அவரு உன்  கூடவா இருக்காரு?"
 
"எவரு?" என்ற கேட்ட திருமுடியின் குரலில் ஒரு ஸ்பூன் நக்கல்.
 
"என்ன நக்கலா?....வாத்தியாரை தான் கேட்கிறேன்?"
 
தாமஸ் இல்லைன்னு சொல்லு என்று அவசரமாக கையாட்டி சைகை செய்ய,
 
"இ...ல்...லையே..", என்று திருமுடி இழுத்தான்.
 
அகல்யா: அடுத்த முறை மேட்டு  தெரு பக்கமா வந்தே, பொய் சொல்ற வாய் சைடு வாங்கிரும். ஒழுங்கா போனை வாத்தியார்ட்ட கொடு.
 
திருமுடி: சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் உண்மைன்னு நினைச்சிட்டீங்களா ... ஹீ ஹீ அய்யோ அய்யோ....
என்று இளித்தபடியே போனை தாமஸிடம் கொடுத்தான்.
 
"ஹலோ.."
 
"எங்க இருக்கீங்க?"
 
"பீச்ல சும்மா காத்து வாங்க வந்தோம்..."
 
ஒரு நொடி அமைதிக்கு பிறகு,
 
"வீட்டுக்கு வாங்க..", என்றாள் அகல் கடுமையான குரலில்,
 
அவள் குரலில் இருந்த கடுமையை விட... அமைதியில் அதிகமான கடுமையை உணர்ந்த தாமஸ்,  
 
உடனே "சரி...." என்றான்.
 
மறு பேச்சு இல்லாமல் சரி சொன்னதும், மறுமுனை அமைதியாகி கால் கட் ஆனது.
 
திருமுடி:  என்ன சார்? வான்னு சொன்னதும் சரின்ட்டிங்க.... 
 
தாமஸ்: வேற என்ன பண்றது? அகல் சொன்னா செஞ்சு தானே ஆகணும்...
 
திருமுடி ஒரு நொடி தாமதமாக புரிந்து, ஓஹோ என்று இழுத்தான்.
 
அடுத்த பத்தாவது நிமிடத்தில், இருவரும் காவண வீட்டின் கேட்டின் முன்னால் நின்றிருந்தார்கள். தாமஸ்  கேட்டை திறந்து கொண்டு முன்னால் செல்ல, திருமுடி சைக்கிளை ஸ்டாண்டிட்டு ஓரமாக நிறுத்திக் கொண்டிருந்தான். வீட்டின் கதவருகே, மார்புக்கு முன்னால் கைகளை கட்டியபடி உஷ்ணத்துடன் அகல் நின்றிருந்தாள்.
 
தாமஸ் ஒன்றுமே பேசாமல், அகல்யா முறைப்பை சந்திக்காமல், தலை குனிந்தபடி அவளை தாண்டி சென்று, கதவில் தொங்கிக் கொண்டிருந்த பூட்டை திறந்தான். 
 
பின்னால் வந்த திருமுடி அகலை பார்த்து, ஹீ ஹீ என்று மறுபடியும் இளிக்க,
 
"திருமுடி நல்லா கேட்டுக்க... பொழுது சாய்ஞ்சப்புறம் இனிமே யாரும் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது. முனிய பத்தி விசாரிக்கிறேன் மண்ணாங்கட்டிய பத்தி விசாரிக்கிறேன், அது இதுன்னு ராத்திரியோ பகலோ கண்ட கண்ட இடங்களில் திரியக்கூடாது. ராத்திரி ஏழு மணிக்கெல்லாம் வெளியில கேட் மூடிருக்கணும். எட்டு மணிக்கு கதவை மூடி இருக்கணும். காலையில ஸ்கூலுக்கு போனமா, பசங்களுக்கு பாடத்தை நடத்துனமா வந்தமான்னு இருக்கணும். ராத்திரி நேரத்தில் இந்த வீட்டில் நான் சொல்றபடி தான் எல்லாம் நடக்கணும். விருப்பம் இல்லனா கிளம்பி போயிட்டே இருக்கலாம்...புரியுதா?", என்று சத்தமாக சொடக்கு போட்டு சொல்ல, வீட்டைத் திறந்து உள்ளே சென்றிருந்த தாமஸுக்கு அவள் சொன்னது கேட்டது
 
திருமுடி முழித்தான்.
 
"நான் சொன்னது புரிஞ்சுதா... இல்லையா?"
 
திருமுடி:  புரிஞ்சதுக்கா... புரிஞ்சுது... என்றான் அவசரமாக.
 
இதுக்குமேல் நின்றால், மேலும் ஏதாவது சொல்வாள் என்று அவள் கோபத்தை புரிந்து கொண்டு, திருமுடி அவசரமாக வீட்டுக்குள் நுழைந்து, கதவை சாத்தினான். அகல்யா கோபமாக திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
 
வீட்டுக்குள்,
 
திருமுடி: என்ன தாமஸ் சார்  எல்லாம் ஒரு அளவுக்கு தான்... ஹவுஸ் ஓனர்ன்னா இஷ்டத்துக்கு பேசுவாங்களா? எப்ப வெளியில போனும் வரணும்ன்னு, எல்லாம் அவங்க சௌகரியத்துக்கு நடக்க முடியுமா? ராத்திரி நேரத்துல அவங்க இஷ்டத்துக்கு தான் நடக்கணுமாமே... நீங்க என்ன அவங்க பொண்டாட்டியா?   நீங்க இருந்திங்கங்கறதால தான் பொறுமையா இருந்தேன்.. இல்லனா நடக்கிறதே வேற.... 
என்று எகிற,
 
கையில் ஏதோ புத்தகத்தை எடுத்துக் கொண்டிருந்த தாமஸ் திரும்பி அவனை கடுப்பாக பார்த்து, புக்கை  அவனைப் பார்த்து எறிந்தான். திருமுடி கடைசி நொடியில் குனிய, புக் கதவில் போய் பட்டென்று மோதி கீழே விழுந்தது.
 
"என்ன சத்தம்?"
 
வெளியே இருந்து அகல்யாவின் குரல்...
 
திருமுடி ஜெர்காகி:  ஒண்ணுல்லக்கோவ்... புக்கு கை தவறி விழுந்துருச்சு. வேற ஒண்ணுல்ல... நீ இன்னும் போகலையாக்கா?
 
.... என்று கதவருகே நின்றபடி வெளியே கேட்குமாறு கத்தினான்.
 
"அதானே பார்த்தேன்... நைட்டு அனாவசியமா சத்தம் கூட கேட்கக் கூடாது", என்று சொல்லியபடி, சரக் சரக் என்று அவள் நடந்து போகும் சத்தம் கேட்டது.
 
சிறிது நேரம், கதவில் காதை வைத்து கேட்டுக் கொண்டிருந்த திருமுடி, அவள் நிச்சயமாக போய்விட்டாள் என்று தெரிந்ததும்,
 
"என்ன சார் பொட்டிப் பாம்பா அப்படியே அடங்கிட்டீங்க? பசங்க வாத்தியாரை பார்த்து பயப்படுவாங்க பார்த்திருக்கேன்.... வாத்தியாரே பயப்படுறதை இப்பதான் பார்க்கிறேன்...."
 
தாமஸ்: அவ நம்ம நல்லதுக்காக தானே சொல்றா, கேட்டுக்க வேண்டியதுதான்.. இதுக்கு பேரு பயமில்லை... மேற்கொண்டு சொல்லாமல் நிறுத்தினான்.
 
திருமுடி: வேற என்ன...சொல்லு, சொல்லு... நீ தான் தைரியசாலி ஆச்சே... சொல்லு பாப்போம்.... என்று ஒரு சிகரெட்டை பற்றவைத்தபடி சொல்ல,
 
தாமஸ் அவன் கிட்ட நெருங்கி,  வாயில் கொளுத்திய சிகரட்டை பிடுங்கி கீழே போட்டான்.
 
"Smoking is injurious to health", என்றான் சிரித்தபடி...
 
திருமுடி: அப்படியா??? ஆள் மாறாட்டம் அதைவிட ஆபத்தானது.
 
தாமஸ் கீழே கிடந்த சிகரெட்டை எடுத்து, மறுபடியும் அவன் வாயிலேயே திணித்தான்.
 
இரவு 11 மணி
 
காவண வீட்டின் காம்பவுண்டுக்குள்ளையே, அரை இருட்டில் கிசுகிசுப்பான குரல்கள்.
 
"இதெல்லாம் ஒர்க் அவுட் ஆகும்னு நினைக்கிறீங்களா?"
 
"தெரியல, ட்ரை பண்ணி பார்க்கிறது தானே? எவ்ளோ நேரம் நாம நின்னு பாத்துட்டே இருக்க முடியும்? அதான் கேமராவை வச்சுட்டா, காலைல பொறுமையா எடுத்து பாத்துக்கலாம்..."
 
"சார்ஜ் எவ்ளோ நேரம் நிக்கும்?"
 
"எப்படியும் இரண்டு மூன்று மணி நேரம் நிக்கும்.."
 
காம்பவுண்ட்டில் தாமஸ்  ஏறினான். சுவரோரமாக  இருந்த மரத்தின் கிளையில் வாகான இடத்தில், கோடக் டிஜிட்டல் கேமராவில், வீடியோவை ஆன் பண்ணி செட் பண்ணினான்.
 
காம்பவுண்டில் இருந்து வீட்டுக்குள்ளே குதித்தான்.
 
தாமஸ் திருமுடியை பார்த்து,
"நீ வெளியே போய் உன்னோட சைக்கிளை எடுத்து நடுரோட்டில் மறிக்கிற மாதிரி வச்சிட்டு வா.."
 
திருமுடி: ஹான்... நல்ல கதையா இருக்கே.. அஸ்கு புஸ்கு. . முனி ஓட்டப் பாதையில  என் சைக்கிளை  வச்சா தூக்கி எறிஞ்சிடும். உங்க பைக்கை எடுத்து வைங்களேன், பாப்போம்.
 
தாமஸ்: அதுக்காக இல்ல.. பைக்னா ரொம்ப போர்ஸ் தேவைப்படும். முனி ஓட்டத்தின் நடுவுல வெச்சா மோதி கீழே வேணா விழலாம். சைக்கிள்ன்னா தூக்கி அடிக்க படலாம். கேமராவுல கரெக்டா capture ஆகும்...அதுக்காக தான் சொல்றேன்.
 
திருமுடி: எல்லாம் ஓகே. என் சைக்கிளுக்கு சின்னதா ஒரு டேமேஜ் ஏற்பட்டாலும், நீங்க தான் புதுசா வாங்கி தரணும், சொல்லிட்டேன்... முனி ஓட்டம் இருக்கிற நேரத்துல இதெல்லாம் தேவையா?
 
என்று சலித்துக் கொண்டே, கேட்டை திறந்து, இரண்டு பக்கமும் ரோடை கிராஸ் பண்ண போவது போல், திரும்பி திரும்பி பார்த்தான். பின்னர் அவசர அவசரமாக, ஓரமாக நின்றிருந்த சைக்கிளை எடுத்துச் சென்று நடுரோட்டில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, திரும்பி பார்க்காமல் கேட்டை திறந்து, ஓடி உள்ளே வந்தான்.
 
இருவரும் வீட்டுக்குள்ளே நுழைந்து, கதவை பூட்டிக் கொண்டார்கள்.
 
மறுநாள் காலை
 
சூரியனின் பிரதிநிதியாக ஒளிக்கற்றைகள் ஜன்னல் வழியாக புகுந்து, தாமசின் முகத்தில் விழ, முழித்துக் கொண்டான்.
 
ஜன்னலுக்கு வெளியே சூரிய வெளிச்சத்தின் இதமான தொடல்களில் சிலிர்த்து கொள்ளும் இலைகளும், கரைந்து போகும் பனியும், முழித்துக் கொள்ளும் பறவைகளுமாக, விடிந்திருந்தது.
 
தாமஸ் வால் கிளாக்கில் டைமை பார்க்க, மணி 7:30.
 
பக்கத்தில் வினோதமாக குறட்டை சத்தமிட்டபடி தூங்கிக் கொண்டிருந்த திருமுடியை தட்டி எழுப்ப,
"அய்யய்யோ நான் இல்ல...நான் இல்ல... தெரியாம வந்துட்டேன்...", என்று சத்தமிட்டபடி பதறி எழும்பினான்.
 
எங்க இருக்கிறோம் என்ற உணர் வந்ததும், 
 
"ஓ!!! நைட்  உங்க வீட்ல படுத்திட்டனா? ஓகே...ஓகே.. குட் மார்னிங்...", என்று சோம்பல் முறித்தபடி நெளிந்தான்.
 
தாமஸ்: வா சைக்கிள் என்னாச்சுன்னு பாப்போம்.
 
இருவரும் கதவை திறந்து கொண்டு வெளியே ஓட, ரோட்டில் சைக்கிளை காணவில்லை. யாராவது எடுத்து ஓரமாக வைத்திருப்பார்கள் என்று திருமுடி நினைத்தான். கேட்டை திறந்து கொண்டு வெளியே போய் இரண்டு திசையிலும் பார்த்தான். மேட்டு தெருவின் இரண்டு பக்கமும் போய் சுற்றி சுற்றி தேடினான். சைக்கிள் இருந்ததற்கான அடையாளமே தெரியவில்லை. 
 
மேட்டு தெருவில் காலை நேரத்திற்குண்டான ஆள் நடமாட்டம் ஆரம்பித்து இருந்தது. சாலையில் வந்த ஒன்றிரண்டு பேரிடம், என் சைக்கிளை பாத்தீங்களா என்று திருமுடி விசாரித்தான். சாதகமான பதில் கிடைக்கவில்லை.
 
தாமஸ் மரத்தில் கேமராவை தேடிக் கொண்டிருந்தான். கேமராவையும் காணவில்லை.
 
திருமுடி: என்னடா இது!!! நம்ம சைக்கிள்னு ஊர்க்கார பயலுகளுக்கு தெரியுமே! எவனும் எடுத்துட்டு போக வாய்ப்பில்லையே!  என் சைக்கிளை தூக்குற அளவுக்கு தைரியம் எவனுக்கு வந்துச்சு?
 
தாமஸ்: கேமராவையும் காணல்லை...
 
திருமுடி: எங்க போயிருக்கும்? எவனாவது திருட்டு பய சைக்கிளையும் கேமராவை தூக்கிட்டு போயிட்டானா? 
 
தாமஸ்: ரோட்டில் நிக்கிற சைக்கிளை எவனாவது தூக்கிட்டு போய்ருக்கலாம் ஓகே..... மரத்துக்குள் வச்சிருந்த கேமரா பத்தி யாருக்கு தெரிஞ்சிருக்கும்?
 
சில நொடிகள் இருவரும் ஆளுக்கொரு கோணத்தில் யோசித்துக் கொண்டிருந்தார்கள்.
 
திருமுடி: சரி சார், எதுக்கும் காம்பவுண்டுக்குள்ள ஒரு தடவ தேடி பாருங்க. நான் வீடு வரைக்கும் போயிட்டு, ஒன்பது மணி போல வரேன். வீட்ல கொஞ்சம் வேலைகள் இருக்கு...
 
திருமுடி கிளம்பி அவன் வீட்டை நோக்கி செல்ல, தாமஸ் காம்பவுண்டுக்குள் சுற்றிலும் ஒரு முறை தேடினான். கிடைக்கவில்லை. 
 
கடற்கரை முள்ளு காட்டில் இருக்கும் முனி கோவிலில், திருமுடியின் சைக்கிளும்,  கேமராவும், சிதைந்த நிலையில் கிடந்தது தாமஸுக்கு இந்த எபிசோடில் தெரிய வாய்ப்பில்லை.
 
தொடரும்
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது.

https://kavichandranovels.com/community/dennis-jegans-novels-comments-and-discussions/


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 2 months ago
Posts: 81
Topic starter  
கருப்பு 39
 
வந்ததுலருந்து ஸ்கூல் பக்கமே சரியாக போகல்லை.  எதற்கும் ஹெட்மாஸ்டரை பார்த்து ஃபார்முலா நம்பர் 37 ஐ செயல்படுத்தி விட்டு வர வேண்டும். அப்போதுதான் இன்னும் ஒரு பத்து நாளைக்கு தாக்குப் பிடிக்க முடியும்?
 
ஃபார்முலா நம்பர் 37 என்னவென்று கேட்கிறீர்களா? அடுத்தவர்களின் ஆதரவையும், அனுதாபத்தையும் பெற வேண்டும் என்றால்,  அவர்கள் எந்த விஷயத்தில் நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்கிறார்களோ அதே விஷயத்தில் தான், நாமும் புதுசாக பாதிக்கப்பட்டிருக்கிறோம், என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று establish  செய்துவிட்டால் போதும்... 'என் இனமடா நீ' என்று ஆட்டோமேட்டிக்காக சிம்பதி தோன்றிவிடும். அன்பு வழிகாட்டுதல்கள் ஆரம்பமாகிவிடும்.
 
ஹெட்மாஸ்டரின் மகன் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதை அட்டெண்டர் மூலமாக தெரிந்ததும்,
 
இல்லாத தம்பி, அதே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை, விசும்பல்களை அடக்கிக் கொண்டு ஹெட் மாஸ்டர் ரூமில், அன்றைக்கு தாமஸ் சொன்னதும், ஹெட் மாஸ்டர் மனதின் இளகிய பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.
 
"இந்த சின்ன வயசுல எனக்கு ஏன் இப்படி ஒரு சோதனை? அவனை கவனிச்சுக்க வேண்டிய முழு பொறுப்பும் என் தலையில் தான்", என்று தாமஸ் நா தழுதழுத்தபடி முடித்ததும், ஹெட் மாஸ்டரின் ஒட்டுமொத்த இரக்கமும் அவன் மேல் பாய்ந்தது. கேட்ட நேரத்திலல்லாம் லீவும்  கிடைக்கிறது.
 
மனசாட்சி: மனுசனா நீல்லாம்? உன் காரியத்தை சாதிச்சுக்குறதுக்காக அடுத்தவங்க வீக் பாயிண்ட்ல அடிக்கிறியே? இன்னும் எவ்வளவு பொய் தான்டா சொல்லுவ?
 
தாமஸ்: What can i do? A marriage can be made by telling thousand lies.
 
மனசாட்சி: என்னடா சொல்ற?
 
தாமஸ்: கல்யாணத்தை பண்றதுக்கு ஆயிரம் பொய் சொல்லலாம்ன்னு சொல்றாங்க. அப்படின்னா லவ் பண்றதுக்கு அட்லீஸ்ட் 500-வது சொல்லலாமே. இப்பதான் 37 சொல்லிருக்கேன். மிச்சத்துக்கு என்ன பண்றதுன்னே தெரியல... என்றான் பரிதாபமாக.
 
மனசாட்சி மேற்கொண்டு அவனிடம் பேசக்கூட பிடிக்காமல், சைடு வாங்கிக் கொண்டது.
 
அவசரமாக ஷேவிங் செய்துவிட்டு, குளித்து ரெடி ஆகி, பேண்டை எடுத்து போட்டு, ஷர்ட் என்ன போடலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தபோது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.
 
கதவை திறந்தான். வெளியே சித்ரா வீட்டில் முன்னால் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். வெளிர் ஆரஞ்சு  டாப்ஸும், கருநீல பைஜாமாவும் அணிந்திருந்தாள்.
 
கதவு பக்கத்தில், ஒரு கூடையில் காலை டிபன் இருந்தது.
 
சித்ரா கோலம் போடும் அழகு அவனை கவர்ந்தது. கதவோரம் சாய்ந்து நின்றபடி பார்த்தான். அவள் முகத்தில் இருந்த ஒரு குழந்தைத்தனம், காதோரம் வளைந்திருந்த முடிக்கற்றை, லேசாக ஆடிக் கொண்டிருந்த ஜிமிக்கி, உதட்டோரம் இருந்த சிறு புன்னகை, கைவிரல்களின் கோலக் கவிதை, டாப்ஸ், பைஜாமா அணிந்த கோவில் சிற்பம்.
 
அவன் பார்ப்பதை பார்த்ததும், சித்ராவுக்கு உதட்டோரம் இருந்த புன்னகை வெட்க புன்னகையாக மாறியது.
 
சித்ரா: என்ன அப்படி பாக்குறீங்க?
 
தாமஸ்: பரவால்ல... நீ கூட அழகா தான் இருக்க?
 
சித்ரா வலது புருவத்தை உயர்த்தி, கோபத்தில்,
 
"அதென்ன.... நீ கூட... ஏதோ போனால் போகுதுன்னு சொல்றீங்க. மார்னிங் டிபன் குடுக்கலாம்னு வந்தேன். உங்களுக்கு டிபன் கிடையாது..."
 
சித்ரா பாதி கோலத்தில் எழும்பினாள்.
 
தாமஸ்: கோச்சுக்காதம்மா பர தேவதை... ஏதோ வார்த்தை அப்படி வந்துருச்சு. உனக்கு என்னடி செல்லம்.. நீ கோவில் சிற்பம் தான்... என்னை வேணும்னா கட்டிக்கயேன். நான் ப்ரீ தான்.
 
சித்ரா அவனைப் பார்த்தாள்.
 
"நீங்க சொன்ன விஷயத்தை அக்கா கிட்ட சொல்லவா?"
 
கையை எடுத்து தலைக்கு மேலே பெரிய கும்பிடு போட்டான்.
 
சித்ரா: பெரிய சல்மான் கான் bare body ஆ நிற்கிறார்... போய் சட்டை எடுத்து போடுங்க...
 
அப்போதுதான் சட்டை போடாமல், வெற்று மார்புடன் நின்றிருப்பது தாமஸுக்கு தெரிந்தது.
 
சித்ரா: இன்னைக்கு அமாவாசை. தாத்தாவுக்கு படையல். மத்தியானம் சாப்பாட்டுக்கு வந்துருங்க.
 
தாமஸ்: ஓஹோ!!! அதனால தான் நம்ம வீட்டு முன்னாலயும், மனசிறங்கி கோலம் போடுறியா? போடுறது தான் போடுற, ஒழுங்கா கலைநயத்தோடு போடு.
 
நீயே போடு என்பது போல் கோலமாவை அவனிடம் நீட்டினாள்.
 
"நாங்கல்லாம் கோலம் போட ஆரம்பிச்சா... நீங்க சீன் அவுட் ஆயிருவீங்க, ஹே ஹேய்...பொழைச்சு போங்க. சரி, முடிச்சுட்டு உள்ள வா? உன் கிட்ட கொஞ்சம் பேசணும்..."
 
வீட்டுக்குள் சென்று ஏதோ ஒரு சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டான்.
 
சற்று நேரத்தில் டிபன் கூடையை எடுத்துக் கொண்டு சித்ரா உள்ளே வந்தாள். அவன் எதைப் பற்றி பேசப் போகிறான் என்று அவளுக்கு தெரியும்.
 
தாமஸ்: பார்வதிபுரத்தில் என் பிரண்டு கிளினிக் வச்சிருக்கான்னு சொன்னேன்ல... வர்ற வாரம் அங்க போலாம். டாக்டரை பார்த்து கிளியர் பண்ணிடலாம், அதுவரைக்கும் சமாளிச்சுக்கோ...
 
பேசும்போதே அவன் பார்வை அனிச்சையாக அவள் வயிற்றைப் பார்த்தது. அவன் பார்வையின் போக்கை பார்த்ததும், சித்ராவும் வயிற்றில் கை வைத்தாள். 
 
அதெப்படி! ஒரு மாசம் கூட ஆகவில்லை, அதுக்குள்ள வா மேடிட்டு விடும். வாய்ப்பில்லை.
 
சித்ரா சற்று கலக்கமாக:   வாந்தி மயக்கம்ன்னு கொஞ்சம் டயர்டா இருக்கு. அக்கா கண்டுபிடிச்சிடுவாங்களோன்னு பயம். அவங்க சாதாரண ஆள் இல்லை. இருந்தாலும் சமாளிச்சுக்குவேன். சீக்கிரமா கூட்டிட்டு போங்க... என்றாள்.
 
தாமஸ்  dont worry... ரெண்டு மூணு நாள் தானே. அது வரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. ஆல்ரெடி பேசிட்டேன். 
 
சித்ரா:  எக்காரணத்தை முன்னிட்டும் அக்காவுக்கு தெரியக்கூடாது.  அவங்களால தாங்க முடியாது.
 
தாமஸ்: நான் தான் சொல்லிட்டேனே,  விஷயம்  நம்ம ரெண்டு பேரை தவிர யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை...
 
சித்ராவின் கண்களில் திரண்டிருந்த கண்ணீரை பார்த்து விட்டு தாமஸ் பதறினான்.
 
"என்னம்மா? என்ன ஆச்சு?"
 
தாமஸ் ஏன் அவள் மீது அவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்? இவ்வளவு மனிதாபிமானத்தோடு இன்றைக்கும் மனிதர்கள் இருக்கிறார்களா என்ன? மனதில் நிரம்பி வழியும் அன்போடு இருப்பவர்களை பார்க்கும்போது அவளது இதயம் நெகிழும்.
 
அம்மாவும் அப்பாவும் அன்பை கொட்டினார்கள். அவர்கள் திடீரென்று இல்லாமல் போய்விட்டார்கள். தாத்தா பாசத்தை கொட்டினார். அவரும் இல்லை. அரவிந்த் அன்பானவன் போல் நடித்தே ஏமாற்றினான்.
 
அன்பாய் இருப்பவர்கள் எல்லாருமே அவர்கள் வாழ்க்கையில் இருந்து விலகிப் போய் விடுகிறார்கள். அல்லது ஏமாற்றுகிறார்கள்.
 
தாமஸ்: அழாதேம்மா... கண்ணை தொடச்சிக்கோ.. நான்தான் ஒரு பிரச்சனையும் வராமல் பாத்துக்குறேன்னு சொல்றனே.
 
"அதுக்காக அழலை... எங்ககிட்ட அன்பா இருக்கிறவங்கல்லாம் பாதியிலேயே விட்டுட்டு போயிடறாங்க. அதை நினைச்சு பார்த்தேன். தாங்க முடியல. நீங்க நினைச்சு வந்தது நடக்கலைன்னா கூட... எங்களை விட்டுட்டு போயிட மாட்டீங்களே?" 
 
அவள் குரலில் இருந்த ஏக்கம்... நிஜம்.
 
தாமஸ் அவளை நெருங்கினான். அவள் கண்களைத் துடைத்து விட்டு, கன்னத்தில் தட்டினான்.
 
"பாதில விட்டுட்டு போறதுக்காக இங்க வரல...கண்டிப்பா போக மாட்டேன்.'
 
சித்ரா நிமிர்ந்து தாமஸின் முகத்தை பார்த்தாள். அவன் கண்களில் தெரிந்த அன்பும், அரவணைப்பும், ஆதரவும் அவளை என்னமோ செய்தது. 
 
ஏனோ தெரியவில்லை. மறுபடியும் அவளுக்கு அழுகை வந்தது. தாமஸ் ஆறுதலாக அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான்.
 
மேற்கொண்டு ஏதோ பேச வாய் திறந்த தாமஸ், எதேச்சையாக கதவை நோக்கி திரும்ப, வாசலில் கார்த்தி நின்றிருந்தாள். 
 
தாமஸ் பிடித்திருந்த கைகளை பட்டென்று விட்டான்...சித்ரா அவசரமாக கண்களை துடைத்துக் கொண்டாள்.
 
கார்த்தி முகத்தில் குழப்பம், சந்தேகம், கதம் என கலவையான உணர்வுகள்.
 
அதே நேரம்,
 
ராகினியின் ரூமுக்குள் எட்டி பார்த்த பிரபாவதி முகத்தில் திடீர் கவலை.
 
ரூமுக்குள் ட்ரெஸ்ஸிங் டேபிள் முன்னால் அமர்ந்திருந்த ராகினி, வெளியே கிளம்புவதற்காக தயாராகிக் கொண்டிருந்தாள். பவுடர், சென்ட், இன்ன பிற அழகு சாதனங்கள் தூள் பறந்தது.
 
கதவருகே காலடி சத்தத்தை கேட்டுதும் ராகினி திரும்பி பார்க்க,
 
பிரபாவதி: என்னடி சீவி சிங்காரிச்சிட்டு அப்படி  எங்க கிளம்பிட்டு இருக்க?
 
ராகினி எதுவும் பேசாமல் லிப்ஸ்டிக் தீற்றி கொண்டிருக்க,
 
பிரபாவதி: புருஷன்காரன்  விலக்கி வச்சி ஒரு வருஷம் ஆச்சு. 20 லட்ச ரூபா பணம் கொடுத்தாதான் குடும்பம் நடத்துவேன்னு சொல்றான் அந்த போக்கத்த பய...  இந்த நேரத்துல இப்படி ஜோடிச்சிட்டு எங்க தாண்டி கிளம்புற?
 
ராகினி திரும்பி பார்க்காமல், "என் பிரண்டு கூட நாகர்கோவிலுக்கு சினிமா பாக்க போறேன்.."
 
பிரபா: அது யாரு பிரன்ட்? எனக்கு தெரியாத பிரண்டு, அப்படி என்ன சினிமா வேண்டி கிடக்கு. கண்ட கண்ட நேரத்தில் ஊர் சுத்திட்டு இருக்க? நீ போற போக்கு சரில்ல சொல்லிட்டேன்.
 
ராகினி: நீ ஊரெல்லாம் சுத்துறியே,  எங்க போறன்னு கேக்குறானா? அதே மாதிரி நான் எங்க போறேன்னு நீ கேட்காதே. அந்தாளு கேட்ட பணத்தை கொடுத்து, அவன் வாயை அடைக்கிறதுக்கு தெரியல. என் கிட்ட கேள்வி கேட்க வந்துட்டியா?
 
பிரபாவதிக்கு கோவம் சர்ரென்று உச்சி மண்டைக்கு ஏற,
 
"எல வெங்க சிறுக்கி, நான் வம்பளக்குறதுக்காகவா ஊர் சுத்திட்டு இருக்கேன். உனக்கு  நல்லது நடக்கணுமே எதிர்காலத்துக்கு உனக்கு ஏதாவது செய்யணுமேன்னு போறேன். அவன் கேட்கிற பணத்தை கொடுக்க முடியாம இல்லை.  கொடுத்தாலும் குடி  சீட்டுன்னு  தான் வீணா போகும். அதுக்கு பதிலா, வேற ஏதாச்சும் உனக்கு செய்யலாம்ன்னு பார்த்தா, நீ இந்த பேச்சு பேசுற. எக்கேடோ கெட்டுப்போ சனியனே..", என்று சொல்லிவிட்டு, விருட்டென்று அங்கிருந்து நகர்ந்தாள்.
 
ராகினியை எந்த வகையிலும் அவள் அம்மா சொன்னது பாதிக்கவில்லை. அலங்காரம் முடிந்ததும், சார்ஜில் போட்டிருந்த மொபைலை எடுத்து கொண்டு வீட்டை விட்டு கிளம்பினாள்.
 
"பாவாடை சட்டையில... டும் டும் டும் ஜோதிகா மாதிரி இருக்கிறா கார்த்தி... சூப்பர்ல்ல", என்று நிலைமையை சமாளிப்பதற்காக தாமஸ் சொல்ல...
 
ஆமா ஆமா என்று சித்ரா வழிந்தாள்.
 
கார்த்தி இருவரையும் மாத்தி மாத்தி பார்த்தாள்.
 
தாமஸ்: ஆமா நீ எப்ப வந்த?
 
டாக்டர் கிட்ட கூட்டிட்டு போறதை பற்றி பேசும்போதே வந்து விட்டாளோ என்று அவனுக்கு பயம்.
 
கார்த்தி: " எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்", என்றாள்.
 
என்ன என்பது போல் தாமஸ் அவளைப் பார்த்தான்.
 
கார்த்தி: இல்ல... நான் முதல்ல, நீங்க அகல் அக்காவை தான் லவ் பண்றிங்களோனு நினைச்சேன். ஆனா நீங்க நெருக்கமா பழகுவதை பார்த்தா, சித்ராக்காவை லவ் பண்ற மாதிரி தெரியுது. உண்மையிலே நீங்க  யாரைத்தான் லவ் பண்றீங்க? தயவு செய்து சொல்லிருங்க?
 
சித்ரா அப்பாடா என்று பெருமூச்சு விட்டாள்.
 
தாமஸ் சித்ராவை பார்க்க,
 
"அவ தான் கேட்கிறாள்ல... பதில் சொல்லுங்க?",
 
அவளுக்கு ஏற்கனவே உண்மை தெரியும். முழு உண்மை அல்ல. பாதி உண்மை.
 
தாமஸ் சிலுவை அடையாளம் போட்டுக் கொண்டான்.
"சரியான சந்தர்ப்பம் வரும்போது உண்மையை சொல்லலாம்ன்னு நினைச்சேன். ஆனா இதுக்கு மேல உண்மைய மறைக்க முடியாது. நான் எல்லாத்தையும் சொல்லிடுறேன். ஆனா யாரும் கோவிச்சுக்க கூடாது... முக்கியமா கார்த்தி கோச்சிக்க கூடாது..."
 
கார்த்தி சந்தேக பார்வையுடன்: கோச்சுக்க மாட்டேன், சொல்லுங்க... என்றாள்.
 
தாமஸ்: உன்னை தான் லவ் பண்றேன்.
 
கார்த்தி ஜெர்க்காகி,
"யாரு.... என்...னையா...?"
 
தாமஸ்: ஆமா, உன்ன எப்போ ஃபர்ஸ்ட் டைம் பார்த்தேனோ, அப்போதிலிருந்து மனசை பறிகொடுத்துட்டேன். உன்னைத்தான் லவ் பண்றேன்... நீ இப்ப என்னோட இடுப்பு உயரம் தான் இருக்கிறதுனால, முழு வளர்ச்சி அடையிற வரைக்கும் வெயிட் பண்ணலாம்னு நினைச்சேன். அப்பதானே ஹைட் மேட்சிங்கா இருக்கும். ஆனா அதுக்குள்ள நீ force பண்ணதனால உண்மையை சொல்லிட்டேன். தயவு செய்து என்னை கல்யாணம் பண்ணிக்க... மாட்டேன்னு மட்டும் சொல்லிடாத... 
என்று சிரிக்காமல் சீரியஸாக சொன்னான்.
 
நெஜமா  சொல்றானா, பொய் சொல்றானா என்று புரியாமல் கார்த்தி முழித்துக் கொண்டிருக்க, சித்ரா மட்டும் திரும்பி, சிரிப்பை அடக்கி கொண்டாள்.
 
கார்த்தி: என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே?
 
தாமஸ்: உண்மையை பேசினா, உலகம் நம்புதா பார்...so sad.
 
கார்த்தி: ஐயோ!!! நான் மாட்டேன்பா... எனக்கு சூர்யா மாதிரி பாய் பிரண்டு தான் வேணும். ஜெயம் ரவி வேண்டாம்...
 
தாமஸ்:  அப்படியெல்லாம் நீ சொல்லக்கூடாது. என்னை ஏமாத்திறாத.... என்று கையை நீட்டிக்கொண்டு அவளை கட்டி பிடிக்கும் போசில் போக, 
 
கதவருகே நின்றிருந்த கார்த்தி திரும்பி,
"ஐயையோ... நான் மாட்டேன் .." என்று தலை தெரிக்க ஓடினாள்.
 
சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்த சித்ரா சத்தமாக சிரிக்க, தாமசும் அவள் சிரிப்பில் கலந்து கொண்டான்.
 
மதியம் 11 மணி
 
பார்முலா நம்பர் 37 ஐ ஹெட் மாஸ்டரிடம் பிரயோகித்து விட்டு, ஸ்கூலில் இருந்து வெளியே வந்த தாமஸ், திருமுடிக்கு கால் செய்தான்.
 
"நான் எங்க இருப்பேன்? கழுதை கெட்டா குட்டி சுவர் டீக்கடையில தான் இருக்கிறேன்.."
 
பைக்கில் ரஸ்தா காடு நோக்கி கிளம்பினான்.
 
டீக்கடையில் உட்கார்ந்து வெட்டி கதை பேசிக் கொண்டிருந்த திருமுடியை பிக்கப் செய்து கொண்டு, கிளம்பினான்.
 
அவர்கள் போவதை பார்த்துக் கொண்டிருந்த அந்தோணி, வரி வரியாக பேப்பர் படித்துக் கொண்டிருந்த அமிர்தத்திடம், 
 
"இந்த இரண்டு பயல்களும் என்னமோ செய்றானுங்க. முனிய பத்தி விசாரிச்சுட்டு திரியிறானுங்க. பிரச்சனை வராம இருந்தா சரி.."
 
பைக் மேட்டு தெருவை நோக்கி செல்லாமல், அதற்கு முந்தின கட்டிங்கிலேயே வளைந்து கடற்கரைக்கு செல்லும் முள்ளு காட்டை நோக்கி சென்றதும்,
 
திருமுடி: எங்க சார் போயிட்டு இருக்கோம்?, என்று கேட்டான்.
 
தாமஸ்: ரொம்ப நாளா முனி கோயில பாக்கணும்னு நினைச்சுகிட்டு இருந்தேன்.  அங்க தான் போறோம்.
 
திருமுடி: பொழுது சாஞ்சப்புறம்  கூப்பிட்டு வந்து என்னை சாவடிக்காமல், நல்ல வேளையா பகலில் கூட்டிட்டு வந்தீங்களே!!!
 
தாமஸ் பதில் பேசாமல் பைக்கை ஓட்டிக் கொண்டிருக்க... திடீரென்று திருமுடி, " நிறுத்துங்க சார், நிறுத்துங்க" என்று கத்த,  தாமஸ் பைக்கை நிறுத்தினான்.
 
திருமுடி பைக்கில் இருந்து இறங்கி முள்ளு காட்டை தாண்டி, தென்னந்தோப்புக்கு போகும் வழியை பார்த்துக் கொண்டிருந்தான். தூரத்தில் யாரோ ஒரு பெண் சென்று கொண்டிருந்தாள்.
 
தாமஸ்: அங்க என்ன பாத்துட்டு இருக்கே?
 
திருமுடி: பிரபாவதி அத்தை  மவ மாதிரி தெரியுது. இந்நேரத்துல இவ எதுக்கு மேக்கால போறா?
 
தாமஸ்: அவங்க தோப்புக்கு போவாளா இருக்கும்?
 
திருமுடி: அவங்களுக்கு ஏது தோப்பு? கொஞ்ச நிலம் மட்டும் கிடக்குது. எவனும் ஆக்கிரமிச்சிட கூடாதுன்னு வேலி போட்டு குடிசை  போட்டுருந்தாங்க. அங்க இவளுக்கு இந்நேரத்துல என்ன வேலை?
 
தாமஸ்: அவ நிலத்துக்கு போவாளா இருக்கும்?
 
திருமுடி: இல்ல சார், உங்களுக்கு இந்த ஃபீல்டுல எக்ஸ்பீரியன்ஸ் இருக்காது. எனக்கு நல்லாவே தெரியும். மதியமோ, ராத்திரியோ நம்ம ஊர்க்காரங்க மேற்கு பக்கம் போனாலே, மேட்டர் தான். ஏன்னா மேக்கால தென்னந்தோப்பு, முள்ளுக்காடுன்னு மறைவான இடங்கள் ஜாஸ்தி. அதனால அந்த பக்கமா ஒதுங்குவாங்க. இவ இந்த டைம்ல போற ஜாடையே சரியில்லை.  சரி, இவ விஷயத்தை அப்புறம் விசாரிப்போம். வாங்க நம்ம வேலையை பார்ப்போம்.
 
இருவரும் கிளம்பி முனி  கோவிலை நோக்கி, தெற்கு பக்கமாக கடற்கரைக்கு போகும் வழியில் சென்றார்கள்.
 
முனி கோயிலில் அன்றைக்கு ராத்திரி மீன் கூடைகளை  பார்த்த பிறகு, திருமுடி அந்த பக்கமே போகவில்லை.
 
பைக்கை தள்ளியே நிறுத்திவிட்டு, கன்னா பின்னாவென்று  வளர்ந்திருந்த கருவை முட்களையும், உடை மரங்களையும் கவனமாக தவிர்த்து, நடுவில் இருந்த ஒற்றையடி பாதை வழியாக முனி கோயிலை நோக்கி சென்றார்கள். பாம்புகள் தோல் உரித்து போட்டிருந்தன. ஓந்தான்கள் அவர்கள் பாதையில் குறுக்கிட்டன.
 
ரொம்ப நாட்கள் கவனிப்பாரற்று கிடந்ததால், அந்த சிறிய கோவிலை சுற்றி கட்டப்பட்டிருந்த சுற்றுசுவர் கற்கள் பெயர்ந்து இருந்தது.
 
சண்டிமுனி சிலை. செம்மண் பூசியபடி சிதிலமடைந்து சிறிய பீடத்தின் மேல் நின்றிருந்தது. மூர்க்கத்தனமான கண்கள், முறுக்கு மீசை, தோள்களைத் தொடும் சங்கிலி போன்ற கூந்தலுடன்  பார்த்தாலே பயமுறுத்தும் விதத்தில் இருந்தது. சிலைக்கு பின்னாலேயே ஒரு முள் முறுக்கு மரமும், பெரிய கருவேல மரமும் காய்ந்து நின்றிருந்தது.
 
திருமுடி: சார் எவனும் இப்பமெல்லாம் இந்த பக்கமே வர்றதில்லை. அதுவும் குறிப்பா, இப்ப முனி பாய்ச்சல் ஆரம்பிச்சதுக்கப்புறம் ஒரு பய கூட வரமாட்டான்.
 
தாமஸ் அந்த சிலையை சுற்றி சுற்றி பார்த்தான், சிலைக்கு பின்னால் இருந்த மரத்துக்கடியில், திருமுடியின் சைக்கிள் கிடந்தது.
 
"சார் அங்க பாருங்க என் சைக்கிள்..."
 
இருவரும் சென்று பார்க்க, சைக்கிள் ஐ சி யு வில் அட்மிட் பண்ண வேண்டிய நிலையில் எல்லா பகுதிகளும் சேதமடைந்து கிடந்தது. மரத்தின் கிளையில் கேமரா தொங்க விடப்பட்டிருக்க, காற்றில்  ஆடிக்கொண்டிருந்தது.
 
தாமஸ் வேகமாக சென்று கேமராவை எடுத்தான். கேமராவும் சேதமடைந்திருக்கும் என்று அவன் எதிர்பார்க்க, ஆனால் எந்த சேதமும் இல்லாமல் பரிசுத்தமாக இருந்தது.
 
தாமஸ் ஆச்சரியமாக: கேமராவுக்கு எந்த டேமேஜும் இருந்த மாதிரி தெரியலையே...
 
திருமுடி: முனி ஐயாவுக்கு என் சைக்கிள் மேல அப்படி என்ன வன்மம்?
 
தாமஸ் கேமராவை எடுத்து வரிசையாக போட்டோக்களை பார்த்தான். எல்லாம் அப்படியே இருக்க, பரபரப்பாக கடைசியாக ரெக்கார்ட் செய்யப்பட்ட வீடியோவுக்கு வந்தான். 
 
நேற்றிரவு எதற்காக கேமராவை செட் செய்தானோ, அந்த வீடியோவை எடுத்து பார்க்கும் போது...
 
அவன் முகம் ஒரே நொடியில் இருளடைந்து, கலவரமானது.
 
தொடரும்
 
 
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது
 
 
This post was modified 1 week ago by Dennis jegan

   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 2 months ago
Posts: 81
Topic starter  
கருப்பு 40
 
பரபரப்பாக கேமராவில் வீடியோவை திரும்பத் திரும்ப தாமஸ் பார்த்துக் கொண்டிருக்க,
 
திருமுடி: என்ன சார் அப்படி பாக்குறீங்க? நைட் ஏதாவது சம்பவங்கள் ரெக்கார்டு ஆகிருக்கா?
 
"கரெக்டா 12:10 ல இருந்து நீயே பாரு....", என்று அவனிடம் தாமஸ் கொடுத்தான், திருமுடி வாங்கிப் பார்த்தான்.
 
கேமராவை மரத்தின் கிளையில் வைத்திருந்ததால் டாப் ஏங்கிளில் தெரு தெரிந்தது. சிசி டிவியில் தெரிவது போல் காட்சிகள் தெரிய, குப்பை காகிதம் ஒன்று இடம் பெயர்ந்து பறந்து கொண்டிருந்தது. கைவிடப்பட்ட தெருவை சிறிய அளவு புழுதி காத்து நிரப்பியிருந்தது.
 
தாமஸ் சொன்னது போல் 12: 10க்கு, கேமராவில் அசைவு. காற்று வேகமாக அடித்து மரம் அசைந்ததால், கேமரா அசைய ஆரம்பித்தது... திருமுடியின் நெஞ்சுக்குள் பயக் கீறல்... அரை பனை உயரத்திற்கு ஏதோ ஒரு கருப்பு காற்று தடதடவென சுழன்று வந்தது. சாதாரணமாக பார்த்தால், சுழற் காற்று போல் தான் தெரியும். வேகமாக வந்த கருப்பு காத்து காவண வீட்டு முன் வந்ததும், சடன் பிரேக்கடித்தது போல் நின்றது. முன்பக்கமாக சுழன்று கொண்டிருந்த காற்றின் சுழற்சி அப்படியே சைடு வாக்கில் திரும்பி காவண வீட்டை நோக்கி சுழண்டது. ஒரு சில நொடிகள் தான்.... விஷ் என்று பெரிய இருள் போர்வை போல், இறக்கையை விரித்த காற்று, மரத்தின் மேல் படர்ந்தது. அதோடு வீடியோ ரெக்கார்டிங்  முடிந்திருந்தது.
 
திருமுடி திடுக்கிட்டு போய் இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
 
பின்னர் சுதாரித்து,
 
"சார் நான் தான் சொன்னேனே... இதைத்தான் காத்து கருப்பு, சண்டி முனி, முனி காத்துன்னு பல பேரு சொல்றோம். இப்ப நீங்க கேட்ட ப்ரூப் உங்களுக்கே கிடைச்சிருச்சு. அடுத்தது என்ன பண்ண போறீங்க?", பதட்டமாக கேட்டான்.
 
தாமஸ் அதிர்ச்சியை ஜீரணித்துக் கொண்டு,
"முனி பாய்ச்சல்ன்னா நைட்டு ஜாக்கிங் போற மாதிரி, தெரு தெருவா சுத்தி ஓடும்னு சொன்னாங்க. இது take diversion மாதிரி, நின்னு திரும்பி வீட்டுக்குள்ளல்லாம் நுழையுதே.. அதான் யோசிச்சிட்டு இருக்கேன்.."
 
திருமுடி: சார் முனியும் பேய் தான்.... முனி பாய்ச்சல்ன்னா வேட்டைக்கு போற மாதிரி தான். காவண வீடு, மேட்டு வீட்டுக்குள்ள முனி நுழையலாம். ஏன்னா காவண வீடு அதற்கு நேர்ந்து விட்ட வீடு. அதை திரும்ப கைப்பற்றிக்கொள்ள முயற்சிகள் கண்டிப்பாக பண்ணும். அது இருக்க வேண்டிய வீட்லதான் இப்ப நீங்க இருக்கீங்க. அதனால உங்களுக்கு நிச்சயமா ஆபத்து. தயவு செய்து இனிமே ஆபத்தோட விளையாடாதீங்க... இதுவரைக்கும் உங்களுக்கு ப்ரூப் கிடைக்கல. இப்பதான் கிடைச்சிருச்சே... நான் வேணும்னா இதே ஏரியால வேற வீடு பார்க்கிறேன். உடனடியா காலி பண்ணிருங்க.."
 
தாமஸ் நெற்றி வியர்த்து, யோசித்துக்   கொண்டிருந்தான். கிராமத்தில் இருக்கும் முனிகளுக்கும் டிஜிட்டல் கேமரா என்னவென்று தெரியுமா என்ன? திருமுடியின் சைக்கிளை சிதைத்து போட்ட முனி, கேமராவில் ரெக்கார்ட் ஆன காட்சியை,  நான் பார்க்க வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் விட்டு விட்டு போயிருக்கிறதா?
 
திருமுடி: கருப்பன் தாத்தா கிட்ட எவ்வளவோ சொன்னேன். காவண வீட்டை விட்டுருங்க, கை வைக்காதீங்கன்னு கெஞ்சினேன். கேட்கல. தேவையில்லாம கை வச்சாரு. ஊரே இப்ப கலகலத்து போய் நிக்குது. இனிமே நிச்சயமா காவண வீட்டை விலைக்கு வாங்க எவனும் வரமாட்டான். அவர் ஆசையும் நிறைவேறப் போவதில்லை. பாவம் அந்த பொண்ணுங்க! அம்போன்னு நிக்க போகுது.
 
தாமஸ் அவன் புலம்பலுக்கு பதில் சொல்லவில்லை என்றாலும், அவன் தலை அனிச்சையாக  இல்லை என்பது போல் ஆடிக்கொண்டே  இருந்தது. திருமுடியின் கருத்தில் உடன்பாடு இல்லை என்பது அவனுடைய செய்கையிலேயே தெரிந்தது. 
 
தாமஸ்: சகாயராஜ் கிட்ட  முனி கோவிலை சீரமைக்கிறதுக்கு என்ன நடவடிக்கை எடுத்தாங்கன்னு கேக்கணும்.  கருப்பன் தாத்தா குடும்பத்திற்கு குலதெய்வம் யாரு?
 
திருமுடி: சரியா தெரியல. கருப்பன் தாத்தாவும், ராமன் வாத்தியாரும் வெட்டிமுறிச்சான்  இசக்கி  கோவிலுக்கு தான் வழக்கமா போவாங்க. எதுக்கு கேட்டீங்க?
 
தாமஸ்: குல தெய்வத்துக்கு ஒரு பூஜை போட சொல்லணும்.
 
திருமுடி: கரெக்டு தான்.
இனிமே அவங்க குலதெய்வம் தான் அவங்களை காப்பாத்தணும்.. வேற வழியே இல்லை. நீங்க இந்த பிரச்சினையில் இதுக்கு மேல தலையிட வேண்டாம்.
 
தாமஸ் முகம் குழப்பத்தில் வெகுவாக கலைந்திருந்தது. அதனால் அவனுக்கு பதிலளிக்கவில்லை.
 
அதே நேரம்,
 
கூடத்தின் சுவரில், அப்பாவும், அம்மாவும், தாத்தாவும் போட்டோவில்  சிரித்துக் கொண்டிருந்தார்கள்.  புது செம்பருத்திப் பூக்கள் அவர்களுடன் சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்தது.   போட்டோக்களுக்கு முன்னால் கை கூப்பி வணங்கியபடி அகல்யா நின்றிருந்தாள். அவள் கண்ணோரம் நீர் துளிர்த்திருந்தது. மனக்குமுறல்களை வேண்டுதல்களாக கொட்டிக் கொண்டிருந்தாள்.
 
கார்த்தி குருவிக்கு சோறு வைத்து, ஏதோ பேசியபடி இருந்தாள். தாத்தா இறந்த தீட்டு கழிந்து, வரும் அமாவாசை என்பதால், பூஜை செய்து படைத்திருந்தார்கள். சித்ரா தோட்டத்தில், காக்காவுக்கு வடை பாயசத்தோடு ஒரு தட்டில் சோறு வைத்தாள்.
 
எங்கேயோ மரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த இரண்டு காக்கைகள் பறந்து வந்து கொத்தியது.
 
சித்ரா போனை எடுத்து, தாமஸுக்கு கால் செய்தாள்.
 
"எங்க இருக்கீங்க?"
 
"ஸ்கூல்ல..."
 
"ஸ்கூல்லயா??? காத்தடிக்கிற சத்தம் கேக்குது. வெளியே இருக்கிற மாதிரில்ல தெரியுது..."
 
"ஸ்கூலுக்கு பின்னால கிரவுண்ட்ல இருக்கேன்..."
 
"ஓ..... சரி, மத்தியானம் ஒரு மணிக்குள்ள லஞ்சுக்கு வந்துருங்க..."
 
"சரிமா வந்துடறேன்", என்று சொல்லிவிட்டு, செல்போனை அமைதியாக்கினான்.
 
திருமுடி: போன்ல யாரு?
 
தாமஸ்: சித்ரா போன் பண்ணினா, கருப்பன் தாத்தாவுக்கு படைக்கிறாகளாம்  அதனால மத்தியானம் சாப்பிட கூப்பிட்டுருந்தா...
 
திருமுடி சட்டென்று குரலை உயர்த்தி: ஊருக்குள்ள நான் ஒரு பெரிய மனுஷன்.. அதெல்லாம் விட அவங்களுக்கு சொந்தம் வேற. என்னை கூப்பிட்டாளா பாத்தீங்களா? என்ன சின்ன புள்ள தனமா இருக்கு. இன்னைக்கு மத்தியானம் எனக்கும் லஞ்ச் அங்க தான்... அவங்க கூப்பிடாமலே நான் வருவேன். என்ன பண்றாங்கன்னு பாப்போம்.
 
என்று கோபமாக இருப்பது போல் பிரதானமாக காட்டிக் கொண்டாலும், சோறு தான் முக்கியம் என்பது அவன் முழித்த முழியில் தெரிந்தது.
 
இருவரும் கிளம்பி பைக்கில் போய்க்கொண்டிருந்த போது, முள்ளு காட்டை தாண்டி, தென்னந்தோப்புக்கு போகும் வழி வந்ததும், திருமுடி நிறுத்துங்க சார் நிறுத்துங்க சார் என்று மறுபடியும் சொன்னான்.
 
தாமஸ் பைக்கை நிறுத்திவிட்டு,
"இப்ப என்னப்பா ஆச்சு?: என்று கேட்க,
 
திருமுடி: சார் நீங்க எதுக்கும் தோப்பு பக்கமா பைக்க விடுங்க... மேக்கால கருப்பு தாத்தா நிலம் இருக்கு. ராகினி அநேகமா அங்க தான் போயிருப்பா. அங்க போய் ஒரு பார்வை பாத்துட்டு வந்துருவோம்.
 
தாமஸ் எரிச்சலாக: இந்த கதைக்கு இதெல்லாம் தேவையா? சப்ஜெக்ட்டை  பத்தி மட்டும் பேசுவோம்.
 
திருமுடி: கதைக்கு முக்கியமா இல்லையோ... எனக்கு இந்த சப்ஜெக்ட் ரொம்ப முக்கியம். வண்டியை விடுங்க சார்.
 
தோப்பு ஆரம்பிக்கும் பகுதிக்கு பைக் சென்றது. தாமஸ் பைக்கை ஒரு ஓரமாக நிறுத்த, திருமுடி இறங்கி, முன்னால் விரு விருவென்று நடக்க ஆரம்பித்தான். தாமஸ், இது தேவையில்லாத வேலை என்று நினைத்தாலும், வந்தாச்சு கம்பெனி கொடுப்போம் என்று ரீதியில் அவன் பின்னால் விட்டேத்தியாக சென்றான்.
 
திடீரென திருமுடி ஒரு தென்னை மரத்தின் பின்னால் ஒளிவதை பார்த்ததும், என்னமோ ஏதோ என்று தாமசும் ஒரு தென்னை மரத்தின் பின்னால் ஒளிந்தான். தூரத்தில்  ஒடைமுள் சூழ்ந்த வெற்று நிலம் தெரிந்தது. அதன் ஓரமாக ஒரு குடிசை. குடிசைக்கு வெளியே யாரோ வருவது போல் தெரிய, தாமஸ் கூர்ந்து பார்த்தான். முந்தானையை உதறி போட்டுக் கொண்டு ராகினி வெளியே வந்தாள். அவளுக்கு பின்னே யாரோ ஒருவன் வெளிப்பட்டான்.
 
யார் இவன்? ஊருக்குள் இவனை பார்த்ததே இல்லையே என் தாமஸ் யோசித்துக் கொண்டிருக்க, இருவரும் சிரித்து பேசியபடியே பிரிந்து சென்றார்கள். அவன் மறுபக்கமாக திரும்பி நடந்து சென்றான். ராகினி அவர்கள் நின்றிருந்த தென்னந்தோப்பு வழியாக வந்தாள். 
 
ராகினி வரவர... தென்னை மரத்தின் பின்னால் ஒளிந்திருந்த இருவரும், சைடு வாங்கி அவளுக்கு தெரியாதவாறு மறைந்து கொண்டார்கள். ராகினி உற்சாக நடை போட்டபடி, அவர்களைக் கடந்து ஊரை நோக்கி செல்லும் பாதையில் சென்றாள்.
 
அவள் சென்ற பிறகு, திருமுடி தாமசை நோக்கி வந்தான். அவன் முகத்தில் குழப்ப ரேகைகள்.
 
தாமஸ்: யாரவன்?
 
திருமுடி: துரைராஜ். அவ புருஷன் தான். இவங்க ரெண்டு பேரும் இப்ப கொஞ்ச நாளா பிரிஞ்சு இருக்காங்க. கல்யாணத்தின் போது கொடுத்த பணம், நகைகளை குடி, சீட்டு, வியாபாரம்ன்னு தொலைச்சிட்டான். இன்னும்  20 லட்ச ரூபா பணம் கேட்டு இவளை வீட்டுக்கு அடிச்சு விரட்டிட்டான். ராகினி வாழாவெட்டியா இருந்தாலும் பரவால்ல, இனிமே அவனை நம்பி ஒத்த பைசா தர மாட்டேன்னு அத்தை உறுதியா நின்னுட்டாங்க. ரெண்டு பேருக்கும் அறுத்து கட்டிட்டு, அவளுக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்கலாமான்னு கூட யோசிச்சாங்க. என்கிட்டயும் மாப்பிள பாக்குறத பத்தி பேசினாங்க.   இதுக்கு இடையில இவங்க ரெண்டு பேரும் இப்படி ரகசியமா சந்திக்க வேண்டிய அவசியம் என்ன?
 
தாமஸ்: ஒருவேளை துரைராஜ் கூடவே மறுபடியும் சேர்ந்து வாழ விரும்புறாளோ என்னவோ?
 
திருமுடி: இல்ல சார், எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு...
 
தாமஸ்: சரி வா... போற வழியில் அப்படியே சந்தேகப்பட்டுக்கிட்டே போவோம். சித்ரா சாப்பிட கூப்பிட்டுட்டா... லேட்டாச்சுன்னா கோவிச்சுக்குவா.
 
சாப்பாடு என்றதும், சந்தேகத்தை ஓரம் கட்டி விட்டு திருமுடி அவனுடன் கிளம்பினான்.
 
மேட்டு வீடு,
மதியம் ஒரு மணி
 
தாமசும், திருமுடியும் போட்டி போட்டுக் கொண்டு சாப்பிடுவதை.. அகல்யாவும், சித்ராவும், கார்த்தியும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
 
திருமுடி எப்படி சாப்பிடுவான் என்று ஏற்கனவே அவர்களுக்கு தெரியும். ஆனால் வாத்தியாரும் வெளுத்து கட்டுவார் என்பதை இப்போதுதான் பார்த்தார்கள்.
 
சாம்பார், வத்த குழம்பு, ரசம், தயிர், மோர், கூட்டு அவியல் பொரியல், அப்பளம், வடை என்று தூள் பறந்தது.
 
சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது,
 
"கல்யாணத்துக்கு முன்னால கை நனைக்க கூடாதுன்னு தான் நினைச்சேன்... ஆனா நீங்க கூப்பிட்டீங்களேன்னு வந்துட்டேன்", என்று தாமஸ் சொல்ல... அகலும் சித்ராவும் அதிர்ச்சியாக அவனை பார்த்தார்கள்.
 
தாமஸ் அவர்களை நிதானமாக ஒரு பார்வை பார்த்து, "கார்த்தி உங்ககிட்ட விஷயத்தை சொல்லலையா? காலையிலேயே கார்த்திகிட்ட ப்ரபோஸ் பண்ணிட்டனே... ஹைட் தான் பிரச்சனை. அதனால்தான் அவ வளரட்டும்ன்னு வெயிட் பண்றேன். அவள கட்டி வைக்கிறதுல உங்களுக்கும் ஆட்சேபனை இல்லையே.." என்று கேட்க,
 
கார்த்தி மாட்டேன் போ என்று தலையாட்டினாள்.
 
அகல் சிரித்தபடி,
"எங்களுக்கு ஆட்சேபனையே இல்லை... பொண்ணுக்கு புடிச்சிருந்தா தாராளமா கட்டிக்குங்க.."
 
என்று சொல்லிவிட்டு சித்ராவை பார்த்தாள். சித்ராவை சீண்டுவதற்காக தான் இப்படி பேசுகிறான் என்று அகல் நினைத்துக் கொண்டாள்.  
 
ஒரு கவளத்தை உள்ளே தள்ளி முழுங்கி விட்டு, தாமஸ், "சாம்பார் யார் வச்சது?" , என்று கேட்க,
 
அகல்: ஏன் எல்லாமே நான் தான் பண்ணினேன்... என்றாள்.
 
தாமஸ் கிளாசில் இருந்த தண்ணியை குடித்துவிட்டு, கிளாசை அகல்யாவிடம் நீட்டினான்.
 
"ஒரு கிளாஸ் சாம்பார் கொண்டு வாங்க?"
 
"சாம்பார்க்கு எதுக்குங்க கிளாஸ்?"  
 
"இல்ல, ரெண்டு கிளாஸ் குடிச்சிக்கிறேனே... இந்த மாதிரி ஒரு சாம்பாரை நான் என் வாழ்க்கையில் சாப்பிட்டதே இல்லை", என்று சொல்ல.... அகல்யா முகத்தில் புன்சிரிப்பு.
 
திருமுடி மைண்ட் வாய்ஸ்: அடப்பாவி, அக்காவை கவுத்துட்டானே!!!.. இப்ப நம்ம பர்பாமென்ஸ் பாரு தம்பி...
 
திருமுடி கிளாஸ்லருந்து தண்ணியை எடுத்து மடக் மடக்கென்று குடித்துவிட்டு, கிளாசை நீட்டினான்.
 
"ஒரு கிளாஸ் கார குழம்பு கொண்டு வாங்க... என் வாழ்க்கையில இப்படி ஒரு கார குழம்பை நான் சாப்பிட்டதே இல்லை."
 
சித்ரா: அது கார குழம்பு இல்ல... வத்த குழம்பு.
 
திருமுடி ஜெர்க்காகி,
"ஏதோ ஒரு குழம்பு...இந்த மாதிரி ஒரு குழம்பை நான் சாப்பிட்டது இல்ல... கொண்டு வாங்களேன்...."
 
தாமஸ்: வேணாம், அவசரப்பட்டு வத்த குழம்பை குடிச்சேன்னு வச்சுக்க.... பின்னால பிச்சிக்க போகுது.
 
அனைவரும் சிரித்தார்கள்.
 
சாப்பிட்டு முடித்து விட்டு, கொல்லைப்புறமாக தாமஸ் கை கழுவிக் கொண்டிருக்க, துண்டை எடுத்துக் கொண்டு வந்து சித்ரா கொடுத்தாள். 
 
"அப்பப்பா... எவ்ளோ பொய்.  உங்க வாயைத் திறந்தாலே பொய்தான் வருமா?"
 
தாமஸ்: என்ன பொய் அப்படி சொல்லிட்டாங்க?
 
சித்ரா: எதுக்கு ஸ்கூல இருக்கிறேன்னு பொய் சொன்னீங்க. முனி கோயிலுக்கு தானே போயிருந்தீங்க? திருமுடி எல்லாத்தையும் சொல்லிட்டான்.
 
தாமஸ் துண்டை அவளிடம் திருப்பி கொடுத்துவிட்டு, "எல்லாம் உங்க நல்லதுக்கு தான் பண்றேன்", என்றான்.
 
சித்ரா: வேண்டாம் டாம்ஸ்... ஆபத்தான காரியத்தில் ஈடுபடாதீங்க. உங்களுக்கு ஏதாவது ஒன்னுனா எங்களால் தாங்க முடியாது...
 
தாமஸ் அவளுக்கு பதில் சொல்வதற்குள், பின்புற வாசலில் காலடி சத்தம் கேட்க, அகல்யா வந்து கொண்டிருந்தாள். சித்ரா அவசரமாக தாமஸிடமிருந்து விலகி வீட்டை நோக்கி சென்றாள்.
 
காவண வீடு 
மதியம் 2 மணி.
 
சிகரட்டின் கடைசி இழுப்பை இழுத்து விட்டு ஜன்னல் வழியாக வெளியே எரிந்த திருமுடி,
 
"சித்தப்பு கிட்ட முனி கோயிலை சீரமைக்கிற விஷயம் என்னாச்சுன்னு கேட்டுகிட்டு, காவன வீட்டை நீங்கள் காலி பண்ணிட்டீங்கன்னா பிரச்சனை ஓரளவுக்கு அமர்ந்துரும். உங்களுக்கும் பக்கத்தில் எங்கேயாவது வேற வீடு பாத்துட்டா, முனி பிரச்சனையிலிருந்து எஸ்கேப் ஆயிடலாம்.
 
தாமஸ்: இல்லை திருமுடி நல்லா யோசிச்சு பார்த்துட்டேன். இப்படி செஞ்சா கருப்பன் தாத்தாவோட ஆசை நிறைவேறாமல் போய்டும். பிரச்சனைக்கு சரியான தீர்வு கண்ட மாதிரி வராது. பயந்து ஓடின மாதிரி தான் இருக்கு. அதனால எனக்கு அதுல விருப்பமே இல்லை.
 
திருமுடி, 'அய்யோ மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சே' பார்வை பார்த்தான்.
 
தாமஸ் முகத்தில் தெளிவும், முடிவெடுத்த தீர்க்கமும் தெரிந்தது.
 
"ஆமா, நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்... அந்தப் பொண்ணுங்களுக்கு இருக்கிற மெயின் பிரச்சினை காவண வீடு தான். அதை சரி பண்ணாம, நான் வந்த நோக்கம் நிறைவேறாது..."
 
திருமுடி: அதுக்காக என்ன பண்ண போறீங்க? முனி கூட நீங்க நேரடியா மோத முடியுமா என்ன?
 
தாமஸ்: சரி பண்றதுன்னா   நேருக்கு நேரா மோதிக்கிட்டு இருப்பாங்களா? நான் என்ன சினிமா ஹீரோவா? நம்ம ஆயுதமே மூளை தான். அதை சரியா பயன்படுத்தினாலே போதும். இந்த பிரச்சனையிலிருந்து அகல்யா குடும்பத்தையும், இந்த ஊரையும் காப்பாத்திர்லாம்.
 
தாமஸ் இந்த ஊருக்கு வந்த காரணமும், அவன் செய்த  சம்பவங்களையும் வைத்து, அவன் மூளைக்காரன் தான் என்று ஏற்கனவே திருமுடிக்கு தெரியும். ஆனால் முனி விஷயம் ஆபத்தானதாச்சே!
 
திருமுடி: சார் உங்க நல்லதுக்கு சொல்றேன்...  இதுவரைக்கும் நீங்க பண்ணதெல்லாம் மனுஷங்களோட, அதனால ஓகே.. ஆனா முனியோட விளையாடாதீங்க...
 
தாமஸ் அவனைப் பார்த்து சிரித்தான். அவன் கண்களில் மூளை மின்னியது.
 
தாமஸ்: முனியுடன் நேரடியாக விளையாடுவதற்கு நான் என்ன பைத்தியக்காரனா? என் சார்பா வேற ஒருத்தரை சப்ஸ்டியூட்டா இறக்க போறேன்.
 
திருமுடி, " இவன் என்ன சொல்கிறான்?" என்று புரியாமல் தாமசை பார்த்தான்.
 
"தயவு செய்து என்ன செஞ்சாலும் சொல்லிட்டு செய்ங்க... எனக்கு ரொம்ப பயமாருக்கு?"
 
"சொல்றேன்,  சொல்றேன், சொல்லாம எங்க போக போறேன்..."
 
தாமஸ் கண்களில் இரையை குறிவைத்த வேட்டைக்காரனின் வீரியம் தெரிந்தது.
 
அடுத்தது வேற ஏதோ ஒரு  சம்பவம் பண்ண போறான் என்று மட்டும் திருமுடிக்கு புரிந்தது.
 
தொடரும்
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது.

   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 2 months ago
Posts: 81
Topic starter  
கருப்பு 41
 
மாலை 5 மணி
 
அகல்யாவும் ஹேமாவும் அஞ்சு கிராமத்துக்கு போய்விட்டு பஸ்ஸில் இருந்து, இறங்கி மேட்டு தெருவை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். பெண்களுக்குண்டான தனிப்பட்ட பர்ச்சேஸ். இருவர் கையிலும் ஆளுக்கொரு பை. பள்ளி நாட்களைப் பற்றி பேசி பேசி ஓய்ந்து இருந்தார்கள்.
 
ஹேமாவுக்கு பழைய நிம்மதி திரும்பியிருந்தது. நிறைய நேரம் கிடைத்ததில் அவளுக்கு ரொம்ப சந்தோஷம் வேலைக்கு போக வேண்டாம், குழந்தையை கவனித்துக் கொள்ள, சமைத்து போட அம்மா இருக்கிறாள். பத்திரிகைகளில் வரும் அழகு குறிப்புகளை பார்த்து அழகுபடுத்திக் கொள்ள முடிகிறது. சாவதானமாக எண்ணெய் குளியல் போட முடிகிறது. காலையில் தூங்கி, மதியம் ரசித்து சாப்பிட்டு, மாலையில் நண்பர்களுடன் பேசி, இரவு சீரியல் பார்ப்பதற்கு நேரம் இருக்கிறது. வாழ்க்கை ரம்யமாக மாறும் என்று அவள் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை.
 
வெளிர் பச்சையில் பூ போட்ட சுடிதார் அணிந்து, பச்சை பசேலென அகல்யாவும், லைம் எல்லோ சுடிதாரில் மஞ்ச குருவியாய் ஹேமாவும் வந்தார்கள்.
 
கடல் காற்று சிலு சிலுவென்று ஊருக்குள் புகுந்து மஞ்சள் வெயில் மாலையை குளுமையாக்கி இருந்தது. சாலையோரம் உதிர்ந்திருந்த சரக்கொன்றை பூக்கள் அவர்களைப் பார்த்து சிரித்தன. அவர்கள் பதிலுக்கு சிரித்தார்கள்.
 
திண்ணையில் உட்கார்ந்து பழக்கம் போட, ஆள் இல்லாமல் ரோட்டை வெறித்து கொண்டிருந்த தஞ்சாவூர் கிழவி, இருவரும் ஜோடி போட்டு வருவதை பார்த்ததும்,
 
"ஏகி!!! ரெண்டு பேரும் ஜோடியா எங்க போயிட்டு வர்றீங்க?"
 
ஹேமா குறும்பாக: ஹான், உனக்கு மாப்பிள்ளை பார்க்க போயிருந்தோம்...
 
கிழவி பதிலுக்கு,
"மாப்பிள்ளை நல்ல நெடுநெடுன்னு உயரமா... இந்தா காவண வீட்ல இருக்காரே.. அந்த தம்பி மாதிரி பாருங்க... அப்பதான் சோக்கா இருக்கும்..", என்று வெற்றிலை காவி படிந்த பற்களைக் காட்டி சிரித்தாள்.
 
அகல்யா சிரிக்க,
 
ஹேமா: கிழவிக்கு ஆசைய பாரு... என்றாள்.
 
இருவரும் அங்கிருந்து நகர்ந்தார்கள்.
 
எதிரே பைக்கில் நெடு நெடுவென உயரமாய், பளிச்சென்று, முன் நெற்றியில் தலைமுடி புரள கண்ணை பறிக்கிற சிரிப்புடன் சோக்காக தாமசை பார்த்ததும்,
 
ஹேமா: இந்தா வந்துட்டாரு, உன் ஆளு. நூறு ஆயுசு அவருக்கு...
 
அகல்யா ஹேமாவின் வயிற்றில் இடித்தாள்.
 
"என் ஆளா? என்னடி பேசுற?...", கடிந்து கொண்டாள்.
 
தாமஸ் அகலை பார்த்து, புன் சிரிப்பை உதிர்த்துவிட்டு  கடந்து சென்றான்.
 
ஹேமா: சும்மா நிறுத்துடி, உன்னை எவ்வளவு நாளா எனக்கு தெரியும்? நீ அவன பாக்குற பார்வையும், அவனைப் பத்தி பேசும்போது முகத்துல வர்ற மாற்றமும் நான் கவனிக்காம இல்லை.
 
அகல்யா ஹேமாவை முறைத்தாள்.
 
"அப்படியெல்லாம் எதுவும் இல்லை. ஆக்சுவலா சித்ராவுக்கு தாமஸ் மேல ஒரு ஈடுபாடு இருக்கிற மாதிரி  தெரியுது. ரெண்டு பேரும் காதலிச்சாங்கன்னா நான் மறுப்பு சொல்ல போறதில்லை. தாமஸ் மாதிரி பொறுப்பான பையனை பார்க்கிறது ரொம்ப கஷ்டம்.. அதுதானே தவிர வேற ஒண்ணும் இல்ல.."
 
இருவரும் பேசியபடியே மேட்டு தெருவை நோக்கி நடந்தார்கள்.
 
ஹேமா:  சித்ராவை தாமஸ் பார்க்கிற பார்வையும், உன்னை பார்க்கிற பார்வையும் கவனிச்சேன். எனக்கென்னவோ சித்ராவை சாதாரணமாகத்தான் பார்க்கிறார்... உன்னை பார்க்கிற பார்வை தான் ஸ்பெஷலா இருக்கு...
 
அகல்யாவுக்கு ஏனோ உள்ளுக்குள் சிலிர் என்றிருந்தது. இருந்தாலும், காட்டி கொள்ளாமல்,
 
"நீ புதுசா ஏதாவது கிளப்பி விடாதே. என்கிட்ட சாதாரணமா தான் பேசுறாரு... சித்ராவுக்கு தான் அவர் மேல விருப்பம் இருக்கிற மாதிரி தெரியுது. அதனால் இந்த டாபிக்கை விட்ரு..."
 
"ஓஹோ!!! அப்படியா கதை, எனக்கு இங்க வந்ததுலருந்தே ஒரு சந்தேகம். உன்கிட்ட சொல்லலாமா இல்லையான்னு தெரியல. இப்போ சித்ரா அளவுக்கு பேச்சு வந்துட்டதனால சொல்லிடுறேன்..."
 
அகல்யா: என்னடி பெருசா பில்டப் பண்ற... விஷயத்த சொல்லு.
 
ஹேமா: தாமசை இதுக்கு முன்னால, எங்க ஆபீஸ்ல ஒரு தடவை பார்த்துருக்கேன். இங்க வந்ததுலருந்து தாமஸ் கூட ஒண்ணு ரெண்டு தடவ பேசியிருக்கேன்.  எங்க ஆபீஸ்க்கு வந்து இருக்கீங்களான்னு தாமஸ்கிட்ட கேட்டேன். ஒரு கேஸ் விஷயமா வந்தேன்னு சொன்னாரு.. என் சந்தேகம் என்னன்னா, என்னை போன்ல ஒருத்தன் மிரட்டினான்ல அவன் குரலும், தாமஸ் குரலும் அச்சு அசலா ஒரே மாதிரி இருக்கு. 
 
நடந்து சென்ற அகல்யா படக்கென்று நின்று விட்டாள். ஹேமாவும் நிற்க,
 
அகல்யாவை குழப்பமாக பார்த்தாள். பின்னர்
 
"நான் கூட ஒரு தடவை பேசினேன். எனக்கு எப்படி தோனலையே? வீணா ஏதாவது கற்பனை பண்ணாத..."
 
"இல்ல அகல், நீ ஒரு தடவை தான் பேசின, அதுவும் டென்ஷன்ல பேசுனதனால அவன் வாய்ஸை கவனிச்சுருக்க மாட்ட... ஆனா நான் பல தடவை பேசிருக்கேன். எனக்கு அவன் குரலை வாழ்நாளில் மறக்கவே முடியாது. நிச்சயமா சொல்றேன், அவன் குரலும் தாமஸ் குரலும் ஒரே மாதிரி இருக்கு... சித்ரா விஷயத்தில் முடிவெடுப்பதற்கு முன்னால அவர பத்தி முழுசா விசாரிக்கணும்."
 
"குரல் ஒரே மாதிரி இருந்தா ஒரே ஆள் ஆயிடுவாங்களா? தாமஸ் எப்படிப்பட்ட ஒரு ஜென்டில்மேன்... உன்னை எதுக்காக தாமஸ் மிரட்டணும் உன்னை எப்படி தெரியும்? சம்பந்தமே இல்லையே.  இந்த பேச்சை விட்டுரு..."
 
ஹேமா: நான் சும்மா சொல்ல மாட்டேன்னு உனக்கு தெரியும். மனசுக்குள்ள ரெண்டு நாளா உறுத்திகிட்டே இருந்துச்சு. உன்கிட்ட சொல்லிட்டேன், அவ்வளவுதான். மத்தபடி சும்மா குற்றம் சாட்டணும்னு எனக்கு என்ன வேண்டுதலா? சந்தேகம்னு வந்துட்டா விசாரிக்கிறது தப்பில்லையே.
 
அகல்: இல்லை ஹேமு. அவரை நம்பி பெட்ரூம் வரைக்கும் விட்டுருக்கேன். அப்படின்னா நீ புரிஞ்சுக்கணும். இதுவரைக்கும் எவ்வளவோ ஆம்பளைங்கள பார்த்திருக்கோம், பேசிருக்கோம். கொஞ்ச நேரத்திலேயே யார் யார் எப்படி, எதற்காக பேசுறாங்கன்னு புரிஞ்சிடும். ஆனா தாமஸ் எங்க கிட்ட தப்பா ஒரு பார்வை, அனாவசியமா ஒரு பேச்சு பேசினதில்லை. முகத்தை தாண்டி பார்த்ததே கிடையாது. அதனால நீ சொல்றத ஏத்துக்கவே முடியல. இனிமே அவர பத்தி இப்படி பேசாதே..."
 
ஹேமாவுக்கு சங்கடமாகப் போனது.  தாமஸ் சார்பாக அகல்யா இவ்வளவு தூரம் பேசுவாள் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
 
"ஏண்டி கோச்சிக்கிற? குரல் தானே ஒரே மாதிரி இருக்குன்னு சொன்னேன். அவரா பேசினார்ன்னு சொன்னேன். இருந்தாலும், ஆம்பளைங்களை அவ்வளவு சீக்கிரம் நம்பிடாத. யாரும் அவ்ளோ யோக்கியர்கள் இல்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் வரைக்கும் தான் ராமர்கள், கிடைச்சுதுன்னா அவ்வளவுதான் முகமூடி கிழிஞ்சிடும். எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை வச்சி பொதுவா சொன்னேன்பா.. நீ என் மேல கோபப்படாதே..."
 
ஹேமாவுக்கும் அவளுக்கும் எந்த விஷயத்திலும் வாக்குவாதம் வந்ததே கிடையாது. இருவருக்கிடையில் இருக்கும் கெமிஸ்ட்ரியால், எடுக்கும் முடிவுகளும் ஒரே மாதிரி இருக்கும். இருவருக்கிடையே யாராவது ஒரு விஷயம் சொல்லி கேட்கவில்லை என்றால், இருவருக்குமே கஷ்டமாக போய்விடும்.
 
ஹேமா எடுத்த முடிவுகளில் அகல்யா அவளுடன் ஒத்துப்போகாத ஒரே விஷயம், ஸ்டீபன். அதையும் மீறி ஹேமா அவனை திருமணம் செய்து கொண்டாள். திருமணம் கானல் நீராக போனது. இப்போது ஹேமா அவளுடன் ஒத்துப்போகாத ஒரே விஷயம், தாமஸ்.
 
இருவரும் மேட்டு தெருவுக்குள் நுழைந்தார்கள். அகல்யா எதுவும் பேசாமல் அமைதியாகவே வந்தாள்.
 
அவளின் அமைதி, ஹேமாவுக்கு கொஞ்சம் அவஸ்தையாகவே தான் இருந்தது.
 
ஏதாவது பேசுடி!!!
 
என்றாள் ஹேமா மனசுக்குள்.
 
அகல்யா பேசவில்லை. ஏதோ முடிவெடுத்த அமைதி தான் தெரிந்ததே தவிர எதையும் யோசித்தது மாதிரியும் தெரியவில்லை. எதுவும் பேசாமல் இருவரும் இணையாக நடந்தார்கள்.
 
மேட்டு வீடு வந்ததும், கேட்டை திறக்கப் போன அகல்யா  திரும்பி, ஹேமாவை ஆழமாக பார்த்தாள்.
 
"ஹேமு, நீ எனக்கு நல்லது தான் சொல்லுவேன்னு எனக்கு தெரியும். நான் கோவிச்சுக்கெல்லாம் இல்லை. ஆனா தாமஸ் விஷயத்தில் கார்த்தி அவரை நல்லவர்ன்னு சொல்றா, சித்ரா அவரை முழுசா நம்புறா, அதனால நானும், அவங்க நினைக்கிற மாதிரி அவர் இருக்கணும்னு ஆசைப்படுறேன்...", என்று சொல்லிவிட்டு ஹேமாவை மேலும் கூர்மையாக பார்த்தாள்.
 
"சரி அப்புறம் பார்க்கலாம்", என்று விகற்பம் இல்லாமல் சிரித்தபடி சொல்லிவிட்டு, கேட்டை திறந்து உள்ளே சென்றாள்.
 
கேட் வாசலிலேயே, ஹேமா யோசித்தபடி ரொம்ப நேரம் நின்றிருந்தாள். அதுவரை இந்த விஷயத்திற்கு அவள் ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கவில்லை. சந்தேகம் என்றளவுக்கு மட்டும் தான் இருந்தது. ஆனால் அகல்யாவும் மற்றவர்களும் அவன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை, அப்பா அவன் மேல் வைத்திருக்கும் மரியாதை, ஏனோ அவளுக்கு உறுத்தலாக இருந்தது.
 
என்னமோ சரியில்லை. என்ன செய்யலாம்?
 
யோசித்தபடியே வீட்டை நோக்கி சென்றாள்.
 
அஞ்சுகிராமம்
மாலை ஆறு மணி
 
பஸ் ஸ்டாண்ட் முன்னால் இருக்கும் டீ கடையில் தாமஸும் திருமுடியும் சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள். ரோட்டில் வாகனங்களின் பரபரப்பு. பஸ் ஸ்டாண்டு சுத்தியுள்ள பகுதி என்பதால், மக்கள் கூட்டத்துக்கு பஞ்சம் இருக்காது.
 
திருமுடி ஒரு வடையை எடுத்து இரண்டு பேப்பருக்கு நடுவில் வைத்து பிழிந்து, பேப்பரில் இருந்த எண்ணெயை மறுபடியும் வடை சட்டியில் பிழிந்து விட்டான். மாஸ்டர் அவனை முறைத்து பார்க்க,
 
"என்ன மாஸ்டர் முறைக்கிறீங்க? எல்லாம் ரீசைக்கிளிங் மெத்தட். எண்ணை வேஸ்டா போக கூடாதுல்ல..."
 
தாமஸ் பக்கம் திரும்பி, திருமுடி, " சொல்ல மறந்துட்டேன். ராகினி புருஷன் துரைராஜ் நம்பர் கிடைச்சிடுச்சு. போன் பண்ணி எதுக்கு ஊர் பக்கம் அடிக்கடி வர்றேன்னு விசாரிச்சு பாக்கணும்...", என்றான்.
 
தாமஸ்: ப்ச்... என்னதான் இருந்தாலும் அவ புருஷன். பணம் கேட்டு அவளை அடிச்சு விரட்டி விட்டுட்டான். பொண்டாட்டி ஆசையில நேரடியா வீட்டுக்கு போனா, அத்தைக்காரி திட்டுவா. அதனால ரகசியமா சந்திக்கிறார்களா இருக்கும். இப்படி ஒரு புருஷன் தேவையா இல்லையான்னு ராகினி தான் முடிவு பண்ணனும். நமக்கு என்ன இருக்குது இதுல?
 
திருமுடி: அடுத்தவங்க மறைக்கிற விஷயத்தை கிளறி பாக்குறதுல ஒரு பேரானந்தம் இருக்கு. உங்களுக்கு சொன்னா புரியாது... நமக்கு என்னன்னு விட்டிருந்தன்னா உங்க விஷயம் எனக்கு தெரிஞ்சுருக்குமா? 
 
தாமஸ்: ராகினியை விடு, சப்ஜெக்ட்க்கு வா. சகாயராஜ் முனி கோவில் விஷயமா என்ன சொன்னாரு?
 
திருமுடி: நல்ல விஷயம் தான் சொன்னார். அடுத்த வாரத்திலருந்து கோவில் சீரமைக்கும் பணியை ஆரம்பிச்சுருவாங்கன்னு நினைக்கிறேன். சீரமைப்பு பணிகளுக்காக ஊர்ல வீட்டுக்கு 500 ரூபாய் வரி போட்டுருக்காங்க. முனிக்கு இருக்குறதுக்கு இடம் கிடைச்சிருச்சுன்னா, முனியோட கோப பாய்ச்சல் குறைஞ்சிடும்னு நினைக்கிறேன்.  நீங்க யாரோ சப்ஸ்டியூட் இறக்கி சம்பவம் பண்றேன்னு சொன்னிங்களே, என்ன சம்பவம்? எப்ப பண்ணுவீங்க?
 
தாமஸ் பதில் சொல்ல வாய் திறக்கும் முன்,
 
"இங்கதான் இருக்கீங்களா?" என்று ஒரு குரல் கேட்க, கக்கத்தில் ஒரு லெதர் பேக்கை  வைத்தபடி சுந்தரராமன் வாத்தியார் தென்பட்டார். கண்களில் களைப்பு, நடையில் தளர்ச்சி.
 
தாமஸ்: சார் வாங்க, டீ சாப்பிடுங்க. என்ன சார் ரொம்ப டயர்டா இருக்கீங்க?
 
சுந்தரராமன் தலையாட்ட, திருமுடி மாஸ்டரை பார்த்து,
 
"வித்தவுட் டீ ஒண்ணு", என்றான்.
 
சுந்தர் ராமன்: ஆமா சார், உங்க கூட பேசணும்னு நினைச்சுகிட்டு இருந்தேன். பென்ஷன் விஷயமாக அலைஞ்சிட்டு இருந்ததுனால, முடியல. நல்லவேளை உங்களை பார்த்தேன்...
 
தாமஸ்: என்ன சார்? ஏதாவது முக்கியமான விஷயமா?
 
பாக்கெட்டில் இருந்து கர்ச்சீப் எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டார். ஏதோ மிகப்பெரிய பாரத்தை சுமந்து கொண்டிருக்கும் அழுத்தம் அவர் முகத்தில் தெரிந்தது.
 
ராமன் தயங்கி தயங்கி ஆரம்பித்தார்.
 
"சடை சாமி இறந்து போவதற்கு முந்தின நாள் ராத்திரி அவனை நான் பார்த்தேன். முனி ஓட்ட நேரத்துல, வீட்டு வாசல்ல ஏதோ சத்தம் கேட்குதேன்னு வீட்டு கேட் பக்கமா வந்து எட்டிப் பார்க்கும்போது, அடிச்சு புடிச்சு ஓடி வந்தான். என்னடா விஷயம்னு கேட்டதுக்கு, கருப்பன் தாத்தா சாவுக்கு முனி காரணமில்லைன்னு அவனாவே சொன்னான். அதிர்ச்சி அடைஞ்ச நான், வேற  யாருன்னு கேட்டப்ப....
 
ஒரு நொடி நிறுத்திய ராமன் வாத்தியார் இருவரையும் பார்க்க,
 
"வேற யாரு?" என்று பதட்டமாக தாமஸும் திருமுடியும் ஒரு சேர கேட்டார்கள், இல்லை, கத்தினார்கள்.
 
ராமன் வாத்தியார் சுத்திலும்  பார்த்தார். டீக்கடையில் ஆங்காங்கே நின்று மக்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். இவர்களை யாரும் கவனிக்கவில்லை.
 
ராமன்: ராகினியோட... அப்படின்னு சொல்லி நிறுத்திட்டான்... மேல சொல்லுன்னு நான் கேட்டதுக்கு, அவன் சொல்ல வர்றதுக்குள்ள முனி ஓட்டம் ஆரம்பிச்சுருச்சு, முனி வந்துருச்சுன்னு சொல்லிட்டு ஓடினான். அதுதான் அவனை கடைசியா பார்த்தது.
 
விஷ ஊசி போட்டது போல், தாமசுக்கும் திருமுடிக்கும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
 
தாமஸ்: என்ன சார் ராகினியோட... அப்படின்னா ராகினி அம்மாவா, புருஷனா, இல்ல வேற யாராவதா? யாருன்னு சந்தேகப்படுறது?
 
திருமுடி: ராகினி புருஷன் அவள ரகசியமா சந்திக்கிறத பார்த்தோம்... ரெண்டு பேருக்குள்ள என்னமோ ஓடிக்கிட்டு இருக்கு. சப்ஜெக்ட்க்கு முக்கியமில்ல, முக்கியமில்லன்னு சொன்னிங்களே, பாருங்க இப்ப எவ்வளவு முக்கியமா வந்து நிக்குது.
 
சுந்தர் ராமன்: துரைராஜை எங்க பார்த்த நீ?
 
மேற்கால தோப்பு குடிசையில், இருவரும் ரகசியமாக சந்திப்பதை திருமுடி சொன்னான்.
 
தாமஸ்: என்ன சார் நீங்க? எவ்ளோ முக்கியமான விஷயம் இதை இவ்வளவு நாள் வெளியில சொல்லாம விட்டுட்டீங்களே?
 
ராமன் தர்ம சங்கடமாக இருவரையும் பார்த்தார். "தப்புதான். திருமுடி கிட்ட சொல்லலாம்னு தான் நினைச்சேன். ஆனா ஆதாரம் இல்லாமல், யாரையும் குற்றம் சாட்டுர மாதிரி ஆயிரக்கூடாதுன்னு தான் வெளியில சொல்லல. இப்ப கூட வெளியில் சொல்லிருக்க மாட்டேன். நேத்து ராத்திரி கருப்பன் கனவுல வந்து அழுதான். மனசே கேட்கல. அதனால சொல்லிட்டேன். சடை சாமி சொன்னது மட்டும் வச்சி, ஆதாரமில்லாமல் அவங்களை எதுவும் பண்ண முடியாதே!"
 
திருமுடி: அதுக்கு முதல்ல ராகினியோடன்ன.... ராகினியோட அம்மாவா, புருஷனா, யாருன்னு தீர்மானம் பண்ணனும். அதுவே தெரியலையே. அதன் பிறகு ஆதாரம் வேணும். அதன் பிறகு தானே வெளிப்படையாக குற்றம் சாட்ட முடியும்? கருப்பன் தாத்தாவை கொன்னவங்க தான் சடசாமியையும் கொன்றுக்கணும். விஷயம் ரொம்ப சிக்கலா போகுதே!
 
ராமன்: சடை சாமி சொன்னதையே முதல்ல உண்மைன்னு எடுத்துக்க முடியுமா? அந்தக் குழப்பமும் இருந்தது.
 
திருமுடி கோபக் குரலில்,  "என்ன சார் நீங்க? அவன் எதுக்கு சும்மா சொல்ல போறான்? எல்லாரும் நினைக்கிற மாதிரி அவன் ஒன்னும் பைத்தியக்காரன் கிடையாது. யார்கிட்டயும் பேச கூடாதுன்னு தான் அமைதியா இருந்தானே தவிர, பேச தெரியாதவன் இல்லை. அது மட்டும் இல்லாம,  உண்மையை சொல்ல போற சமயத்துல செத்தும் போயிட்டான். பாவம், அவன் கொலைக்கு காரணம், இந்த உண்மைய தெரிஞ்சதுனால கூட இருக்கலாம். இதை இப்படியே விடக்கூடாது. ஆனா எல்லாத்துக்கும் ஆதாரம் வேணுமே!"
 
திருமுடி உண்மையான ஆதங்கத்துடன் பேசியபடியே தாமசை பார்க்க,
 
தாமஸ் சத்தமில்லாமல் சிரித்தான்.
 
திருமுடி: என்ன சார் சிரிக்கிறீங்க? முரட்டு சம்பவக்காரன் வேற... சிரிக்கிறத பார்த்தாலே என்னமோ பண்ண போறீங்கன்னு தெரியுது.
 
தாமஸ்: "முனி சம்பவத்தை அடுத்தது வச்சுக்கலாம். முதல்ல இந்த சம்பவத்தை பண்ணிருவோம்...", என்றான்.
 
தொடரும்
 
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது.

https://kavichandranovels.com/community/dennis-jegans-novels-comments-and-discussions/


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 2 months ago
Posts: 81
Topic starter  
கருப்பு  42
 
மறுநாள் காலை 11 மணி
 
கிருஷ்ணகுமார் பாலிகிளினிக் பார்வதிபுரத்தின் விறுவிறுப்பான மெயின் ரோடு டிராபிக்கை தவிர்த்து விட்டு, உள்பக்கமாக இருந்த தெரு ஒன்றில் பளபளப்பாக வீற்றிருந்தது. இரண்டு மாடி பாலி கிளினிக் சமீபத்தில் தான் செயல்பட ஆரம்பித்திருக்கிறது என்று அதன் சிமெண்ட் பூச்சிலும், அழுக்கடையாத காரிடர்களிலும், சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த வண்ண காகிதங்களிலும், அன்பாக பேசும் நர்சுகள், புன்சிரிப்புடன் இருக்கும் ரிசப்ஷனிஸ்டுகள் மூலமாக தெரிந்தது.
 
கிரவுண்ட் ஃபுளோரில் கடைசிலிருந்தது gynaecologist அறை.
 
டேபிள் மேல் டாக்டர் ருக்மணி என்ற நேம் போர்டு முறைக்க, டேபிளுக்கு பின்னால் சிரிப்பை தொலைத்து விட்டு டாக்டர் அமர்ந்து இருந்தாள். அவளுக்கு எதிரே தாமஸும் சித்ராவும் உட்கார்ந்திருந்தார்கள். சித்ராவுக்கு உள்ளுக்குள் நடுக்கம்.
 
டாக்டர் பேப்பரில் ஏதோ எழுதியபடி, "இப்போ இருக்கிற பசங்களுக்கு எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாலேயே அவசரம்... சொன்னா எங்க கேக்குறாங்க? டாக்டர் கிருஷ்ணகுமார் உங்க ஃப்ரெண்ட்ங்கறதுனால ரூல்ஸ் எல்லாம் மாற்ற முடியாது. Consent ஃபார்ம் ல ஹஸ்பண்ட்ன்கிற இடத்துல நீங்க சைன் போட்டு தான் ஆகணும். நாளைக்கு எங்களுக்கு பிரச்சனை வரக்கூடாது. புரியுதுங்களா?", என்றாள்.
 
தாமஸ்: புரியுது டாக்டர். நீங்க சொல்றபடி செஞ்சிடறேன்.
 
டாக்டர்: Ok then... இன்னைக்கே ப்ரோசீஜர் முடிஞ்சிடும். 10 வீக்ஸ்க்கு கம்மியா தான் இருக்கிறதுனால in clinic  அபார்ஷன் தேவை இல்லை. Abortion pills ம் ஆன்டிபயாட்டிக்சுமே போதும்.
எதுக்கும் பிளட், யூரின் டெஸ்ட் எடுத்துக்கலாம், அல்ட்ரா சவுண்டும் பார்த்துக்கலாம். ஓகேவா?
 
தாமஸ்: ஓகே டாக்டர்.
 
டாக்டர்: நீங்க கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணுங்க.
 
தாமஸ் ஓகே டாக்டர் என்று சொல்லிவிட்டு, சித்ராவின் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு, எழும்பினான். சித்ரா அவனை கலவரமாக பார்க்க, ஒன்னும் பிராப்ளம் இல்ல என்பது போல் கண்காட்டிவிட்டு,  வெளியே சென்றான். ஏற்கனவே. என்ன பேச வேண்டும் என்று அவளுக்கு ட்ரெயினிங் கொடுத்து தான் கூப்பிட்டு வந்திருக்கிறான்.
 
வெளியே வந்த தாமஸ், எதுக்கும் கிருஷ்ணகுமாரை பார்த்து விடுவோம் என்று எதிரே வந்த வார்டு பாயிடம்,
"சீப் டாக்டர் இருக்காரா?" என்று கேட்க, 
 
"அவர் ரூம்ல இருப்பாருங்க. ஃபர்ஸ்ட் ஃப்ளோர்" என்று கை காட்டிவிட்டு நகர்ந்தான்.
 
தாமஸ் மாடிப்படிகளில் ஏறி, முதல் மாடியில் டாக்டர் கிருஷ்ணகுமார் என்று போர்டு வைத்திருந்த ரூம் கதவை நெருங்கினான். 
 
உள்ளே பேச்சு குரல்கள் கேட்டது. 
 
'யாரோ பேசண்ட்டிடம் பேசிட்டிருக்கான் போல...'
 
அதனால் ரூமுக்கு வெளியே போடப்பட்டிருந்த பெஞ்சில் தாமஸ் அமர்ந்தான்.
 
தாமஸ் அமைதியாக யோசனையில் ஆழ்ந்தான். அவன் நினைத்து வந்த வேலை எதிர்பார்த்த விதத்தில் தான் சென்று கொண்டிருந்தது. இன்னும் ஒரு சில விஷயங்கள் மட்டும் தான், அதையும் முடித்து விட்டால், அகல்யாவை நெருங்கிவிடலாம்.
 
அகல், உன்கிட்ட எப்போ ஐ லவ் யூ சொல்ல போறேன்????
 
எனக்கு...
 
மேற்கொண்டு அவன் யோசிப்பதற்குள், ரூம் கதவு திறக்கப்பட, கையில் கட்டு போட்ட ஒரு பெரியவர்  வெளியே வந்தார். தாமஸ் எழும்பி உள்ளே நுழைந்தான்.
 
அவனைப் பார்த்ததும், கிருஷ்ணகுமாரின் முகத்தில் சம்பிரதாய சிரிப்பு.
 
"டேய், வெண்ண மவனே, இன்னைக்கு நான் வரேன்னு சொல்லிருக்கேன். என்னை  வாசலுக்கு  வந்து நீ வரவேத்திருக்க வேண்டாமா?"
 
"ஆமா பெரிய கவர்னர் இவரு... வரவேற்கிறாங்க. உனக்கு பதினோரு மணி அப்பாயிண்ட்மெண்ட் ருக்மணி கொடுத்திருக்கிறது எனக்கு எப்படி தெரியும்? நீ எனக்கு போன் பண்ணி இன்பார்ம் பண்ண வேண்டாமா?"
 
"Oh sorry KK...நான் தான் மறந்துட்டேன்."
 
"டேய் உண்மைய சொல்லு. நிஜமாகவே அவ யாரையோ நம்பி ஏமாந்துட்டாளா? இல்ல, நீ தான் வேலையை காமிச்சிட்டியா?"
 
சிறு வயதிலிருந்தே இருவரும் நண்பர்கள். அவர்களுக்குள் சகஜமாக பேச ஆரம்பித்தார்கள்.
 
அதே நேரம்,
 
மேட்டு வீட்டுக்கு வெளியே வாடகை கார் ஒன்று நின்றிருக்க, 
 
அகல்யா கேட்டை பூட்டி விட்டு, காரின் முன் சீட்டில் போய் ஏறிக்கொண்டாள்.
 
காருக்குள்ளே பின் சீட்டில் சுந்தர் ராமனும், சரஸ்வதியும், ஹேமாவும், ஹேமா மடியில் காவியாவும் இருந்தார்கள்.
 
சுந்தர்ராமன்: எப்படியும் சித்ராவும் கார்த்தியும் சாயங்காலம் தானே வருவாங்க. அதுக்குள்ள வந்துடலாம்.
 
அகல்யா: அது ஒண்ணும் பிரச்சனை இல்ல, அங்கிள். ஆனா அவசர அவசரமா இதை பண்ணனுமா அதான் யோசிக்கிறேன். கொஞ்சம் யோசிச்சு செய்வோமே.
 
டிரைவர் காரை ஸ்டார்ட் செய்து கிளப்ப, மேட்டு தெருவை கடந்து, மெயின் ரோட்டுக்கு விரைந்தது.
 
ராமன்: அவசரம்ல்லாம் இல்லம்மா. ரொம்ப நாளாவே கோயிலுக்கு போய் பொங்கல் வைக்கணும்னு நினைச்சுக்கிட்டே தான் இருக்கிறேன். வீடு நேர்ச்சை விஷயம் தாமஸ் தம்பி ஐடியா.. காவண வீட்டை அம்மனுக்கு மாத்தி நேந்துருவோம். முனிய எதிர்க்கறதுக்கு இசக்கியை களம் இறக்கிடலாம்ன்னு சொன்னாரு. பத்திரம் எடுத்துட்டு வந்தியா? அம்மனோட காலடியில் வைத்து பூஜை பண்ணனும்.
 
அகல்யா முகத்தில் சஞ்சல ரேகை,
 
"எடுத்துட்டு வந்தேன்... ஆனா எதுக்காக இதெல்லாம்ன்னு தான் புரியல..."
 
ராமன்: என்னமா புரியல... காவண வீட்டுக்கு முனி வரக்கூடாதுன்னா வீட்டை குலதெய்வத்துக்கு நேர்ந்து விடுவது தான் சரி. ஏதோ எப்பவோ ஒரு காலத்துல, உன் உயிரை காப்பாற்றுவதற்காக அவசரப்பட்டு முனிக்கு கொடுக்கிறதா கருப்பன் சொல்லிட்டாரு... செய்ய முடியல. எல்லாம் உனக்கு தெரியும். கருப்பன் சாவுக்கு முனி காரணமோ, என்ன காரணமோ ஆனா நிச்சயமா இந்த வீடு தானே காரணம்.  இப்ப பிரச்சனையை எசக்கி கிட்ட விட்டுட்டு, வீட்டை  நேந்து விட்டா, நமக்கு பதிலா அவ பாத்துக்குவா. தாமஸ் சார் சொல்றது சரிதான்... எல்லாம் ஒரு நம்பிக்கை தானே. முனிக்கும் அதோட கோயிலை சரி பண்ணி கொடுத்துடலாம். இரண்டு விஷயத்தையும் செஞ்சிட்டால், காவண வீட்டில முனி ஓட்டம் இனிமே இருக்காது. ஏற்கனவே ஊர் சார்பா முனி கோவிலை சீரமைக்க நடவடிக்கை எடுத்தாச்சு. நீ அதை இதை யோசிச்சு இனிமே குழப்பிக்க வேண்டாம். எல்லாம் நல்லபடியா நடக்கும்.
 
ஹேமா: ஆமாண்டி, எனக்கும் அதான் சரின்னு படுது.
 
அகல்யாவுக்கு என்னமோ அவசரப்படுகிறோமோ என்று உள்ளுக்குள் தோன்றியது. தாமஸ் சொன்ன ஐடியா என்று வேறு சொல்லி விட்டார்கள். செய்யாமல் இருக்க முடியாது.
 
அகல்யா தயக்கமாக, "எல்லாரும் சொல்றீங்க. எனக்கு இன்னமும் குழப்பமா தான் இருக்கு.  நீங்க எனக்கு நல்லது தான் சொல்லுவீங்க. அதனால நான் செய்றேன்...."
 
ஹேமா சிரித்தபடி,
"அதானே, பெரியவங்க சொன்னா எதிர்த்து பேசாம கேட்கணும்.. என்னை மாதிரி", என்று சொல்ல,
 
அகல்யா அவளைப் பார்த்து செல்லமாக முறைத்தாள்.
 
கொட்டாரம் பெருமாள்புரத்தை நோக்கி கார் விரைந்து கொண்டிருந்தது.
 
மதியம் 3 மணி
 
கிளினிக் வளாகத்துக்குள்ளே பார்க்கிங்கில் நிறுத்தி வைத்திருந்த பைக்கருகே தாமஸ் வந்து நின்றான். அவன் அருகே வந்த சித்ராவுக்கு பழைய உற்சாகம் திரும்பியிருந்தது. 
 
தெரியாமல் செய்த பாவத்தின் சின்னம் அவளிடம் இருக்கப் போவதில்லை. பழையபடி சின்னக்குயில் சித்ராவாக மாறி இருந்தாள்.
 
சித்ரா: இவ்வளவு சுலபமா முடியும்னு நான் நினைக்கல. பெரிய இக்கட்டில் இருந்து என்னை காப்பாத்திட்டீங்க. எங்க குடும்பத்தை காப்பாத்திட்டீங்க. தேங்க்யூ Toms.
 
தாமஸ்: இத பாருமா, அதெல்லாம் சரி. பிரச்சனை சரியாயிடுச்சுன்னு இனிமே அடுத்த ரவுண்டு பாய் பிரண்டு, லவ்வுன்னு சுத்தாத. சும்மா சும்மா வந்து ஹஸ்பண்டுன்னு கையெழுத்து போட முடியாது.
 
சித்ரா கடுப்பாக அவன் தோளில் அடித்தாள்.
 
"நான் என்ன, எப்ப பாரு பாய் ப்ரெண்ட் கூட ஊரை சுத்திட்டு இருக்கிறவளா? உங்களுக்கு தான் என்ன நடந்துச்சுன்னு தெரியும்ல்ல. அப்புறம் என்ன?"
 
என்றாள் கோபக் குரலில்,
 
"கோச்சுக்காதம்மா, ஐஸ்கிரீம் வாங்கி தரேன்  ஓகேவா... என்ன இருந்தாலும் உங்க அக்காவ கட்டிக்க போறவன், மச்சினி கூட விளையாட கூடாதா?"
 
சித்ரா: நினைப்புதான்... அவங்க ஒத்துக்குவாங்களான்னு பார்ப்போம். எப்பா!!! எவ்வளவு பொய்.  இப்போ என்னோட ஹஸ்பண்ட்ன்னு சொன்ன வரைக்கும் எல்லாமே பொய். வாய தொறந்தாலே பொய். 
 
தாமஸ்: பொய்மையும் வாய்மை யிடத்த 
புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்...
 
சித்ரா:  போதும் போதும், ஆமா உங்க உண்மையான பேரு தான் என்ன? தயவு செய்து இப்பவாவது சொல்லுங்களேன். நீங்க சொல்ற வரைக்கும் அக்கா கிட்ட சொல்ல மாட்டேன்.
 
தாமஸ்: நீ இவ்வளவு கேக்குறதுனால சொல்றேன். தயவுசெய்து வெளியில சொல்லிராத.
 
சித்ரா: யார்கிட்டயும் சொல்ல மாட்டேன், ப்ராமிஸ்.... என்று தலையில் அடித்தாள்.
 
சில நொடிகள் நிதானித்து, அவளை ஆழமாக பார்த்தான்.
 
சித்ரா உண்மையை கேட்பதற்கு தயாரானாள்.
 
தாமஸ் மூச்சை நன்றாக இழுத்து விட்டு, மேலே வானத்தைப் பார்த்து, பின்னர் சித்ராவை பாவம் போல் பார்த்தான்.
 
கடைசியாக "தாமஸ்" என்றான்.
 
சித்ரா வெறுப்பாக கத்தினாள்: ஐயோ முடியல... காது வலிக்குது. எப்ப தான் உண்மையை சொல்ல போறீங்கன்னு பாப்போம். தெரியாம கேட்டுட்டேன், வாங்க சாமி போலாம்.... என்று கையெடுத்து கும்பிட்டாள்.
 
தாமஸ் சிரிப்பை அடக்கிக் கொண்டு, பைக்கில் ஏறி ஸ்டார்ட் செய்ய, சித்ரா பின்னால் ஏறிக் கொண்டாள். 
 
சித்ராவை பொருத்தவரை தாமஸ் யார், என்ன என்று தெரியாது. அக்காவை காதலிப்பதால், தனக்கும் தன் குடும்பத்திற்கும் உதவிகள் செய்கிறான் என்றளவுக்கு மட்டுமே தெரியும்.  அவன் சொன்னால், என்ன வேண்டுமானாலும் செய்வாள்  என்றளவுக்கு நல்ல அபிப்பிராயம் எகிறி இருந்தது.
 
பைக் கிளினிக் வாசலை விட்டு வெளியே வந்து, மெயின் ரோட்டை நோக்கி சென்று, டிராபிக்கில் கலந்தது.
 
அதே தெருவில் இருந்த பெட்டி கடையில், நுங்கு சர்பத் குடித்துக் கொண்டிருந்த அந்தோணி, பைக்கில் போய்க்கொண்டிருக்கும் இருவரையும் பார்த்தான். இடைவெளியே இல்லாமல், தாமஸுக்கு பின்னால் நெருக்கமாக சித்ரா  இருந்தது உறுத்தியது.
 
"காதல் ஜோடி போல சிறகடித்து பறக்கிறார்களே.."
 
"இவர்கள் எதற்கு கிளினிக்கை விட்டு வெளியே வருகிறார்கள்?"
 
சந்தேகப்பொறி அவனுக்குள் பற்றி கொண்டு எரிய, கிளாஸில் இருந்த சர்பத்தை படக்  படக்கென்று குடித்து அணைத்து விட்டு கிளாசை வைத்தான்.
 
காவணவீடு 
மாலை 7 மணி
 
இசக்கி அம்மன் கோவிலில் நடந்த விஷயங்களை சுந்தர் ராமன் விளக்கிக் கொண்டிருந்தார். தாமஸ் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருக்க, திருமுடி ஆர்வம் இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தான்.
 
ராமன்: எப்படியோ நீங்க சொன்னபடி எல்லாம் செஞ்சு முடிச்சாச்சு... நாங்களும் குலதெய்வத்துக்கு செய்ய வேண்டிய பொங்கல், பூஜை எல்லாம் ரொம்ப நாளா பெண்டிங் இருந்துச்சு. எப்படியோ முடிச்சிட்டோம். இனிமே அந்த ஆத்தா விட்ட வழி.
 
திருமுடி முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது.
 
"இதுதான் சப்ஸ்டியூட் பிளேயரை இறக்கி விடுறேன்ன்னு சொன்னீங்களா?  நானும் பெருசா ஏதாச்சும் செய்யப் போறீங்க, முனியோட நேருக்கு நேரா, நீங்களோ, இல்லை வேறு யாரோ மோத போறாங்க அனல் பறக்க போகுதுன்னு  எதிர்பார்த்தேன்... நீங்க என்னடானா, முனி கூட இசக்கிய கோர்த்து விட்டுட்டு, சைலெண்டா ஓரம் கட்டிடீங்க", என்றான்.
 
நல்ல என்டர்டெயின்மென்ட் மிஸ் ஆகிப்போச்சே என்ற வருத்தம் அவன் குரலில் தெரிந்தது.
 
தாமஸ்: விஷயம் சுழுவா முடியனுமா? இல்ல, அனல் பறக்கற என்டர்டைன்மெண்டுக்காக எல்லாரும் மண்டைய ஒடச்சிக்கிட்டு சாகணுமா?  இப்போ பண்ண ஐடியாவே நல்லா ஒர்க் அவுட் ஆகும் பாரு. வீட்டை இசக்கி அம்மனுக்கு நேந்து விட்டுட்டாங்கன்னு தெரிஞ்சுச்சுன்னா முனி ஓட்டம் இருக்கவே இருக்காது.
 
திருமுடி சந்தேகமாக, 
"அது  சரிதான் சார், காவண வீட்டில் முனி ஓட்டம் இருக்காது. ஆனா ஊருக்குள்ள முனி ஓட்டம் இருந்துட்டே தானே இருக்கும். அதை தடுக்க முடியாதே..."
 
தாமஸ்: அதுக்கும் ஏதாவது பொங்கல் சீக்கிரமா வைப்போம்.
 
திருமுடி: முனிக்கு பொங்கல் வச்சிட்டீங்க Ok, ராகினி அண்டு கோவுக்கு பொங்கல் வைக்கலையே.
 
தாமஸ்: வச்சிட்டா போச்சு... லேட் பண்ண வேண்டாம், இன்னைக்கே வச்சுருவோம்.
 
திருமுடி பதட்டமாகி,
"சார் எதை பண்ணாலும் சொல்லிட்டு செய்யுங்க. நீங்க என்னென்ன பண்ணுவீங்கன்னு யோசிச்சு யோசிச்சே மண்டை வெடிக்குது. பிபி ஏறுது.
 
தாமஸ் சிரித்தான்:  கருப்பன் தாத்தாவையும், சடசாமியையும் கொலை பண்ணது ராகினியா, அவ புருஷனா, இல்ல அவங்க கூட்டாளியா, யாரு பண்ணிருப்பாங்கன்னு சரியா தெரியல... நம்மகிட்ட ஆதாரமும் இல்லை. போலீஸ்காரங்க ஆதாரம் கிடைச்சுதுன்னா ஆளை கண்டுபிடிச்சிடுவாங்க. சில சமயம், அக்யூஸ்டை கண்டுபிடிச்சதும் ஆதாரத்தை தேடிக்குவாங்க... நாம இரண்டையும் ஒரே சமயத்தில் பண்ணிருவோம்.
 
ராமன் சந்தேகமாக: முடியுமா உங்களால? என்று கேட்க,
 
திருமுடி: என்ன சார் அப்படி கேட்டுட்டீங்க? சாரை பத்தி உங்களுக்கு தெரியாது. அவரு....
 
தாமஸ்: திருமுடி போதும் போதும்.... கிளைமாக்ஸ் நெருங்கிட்டோம், வீணான பில்டப் எல்லாம் வேண்டாம். சப்ஜெக்ட்க்கு வா... கொஞ்சம் பழைய ஐடியா தான். ஆனா கரெக்டா பண்ணா நிச்சயமா ஒர்க் அவுட் ஆகும்.
 
திருமுடியும், ராமன் வாத்தியாரும் ஆச்சரியமாகி, "எப்படி??" என்று ஒரு சேர கேட்க,
 
"அடுத்த எபிசோடுல சொல்றேனே", என்றான் தாமஸ்.
 
தொடரும்
 
 
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது.
 

   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 2 months ago
Posts: 81
Topic starter  
கருப்பு 43
 
திருமுடி கடுப்பாக: அடுத்த எபிசோடே வந்துருச்சு இப்பவாவது சொல்லுங்க...
 
அதற்குள் வாத்தியார் இடைமறித்து, முத்துப்பாண்டியின் துஷ்டி சமயத்தில் அவள் அம்மா அகல்யாவிடம் சொன்ன விஷயத்தை சொன்னார். 
 
திருமுடி: வெங்க பய, முனிக்கு பயந்து அருணாக்கயிற இடுப்புல கட்டிக்கிட்டு, நம்மகிட்ட பெரிய சண்டியர் கணக்கா சீன் போட்டுக்கிட்டு இருந்தானா?
 
தாமஸ்: முத்துப்பாண்டி மற்றும் ராகினி, அவ புருஷன் இந்த மூணு பேருக்குள்ள ஏதோ தொடர்பு இருக்கு. முதலில் செத்த ரெண்டு ஊருக்காரங்க சாவுக்கு வேணும்னா முனி காரணமாக இருக்கலாம். ஆனால் கருப்பன் தாத்தா, சடசாமி, முத்துப்பாண்டி சாவுல நிறைய மர்மம் இருக்கு. என்னை அடிக்க வந்த அந்த ரெண்டு சிமெண்ட் கம்பெனி ஆட்கள் பேரை மறந்துட்டேன். அவங்களுக்கும் இதுல தொடர்பு  இருக்கலாம். முனி பேரை சொல்லி தான் விளையாடி இருக்காங்க.
 
ராமன் வாத்தியார்: அவங்க யாருன்னு எனக்கு தெரியும். ஒருத்தன் சிமெண்ட் கம்பெனியின் இந்த ஏரியா இன்சார்ஜ் பேரு ராகவன், இன்னொருத்தன் அவனுடைய கைத்தடி மாணிக்கம்.
 
திருமுடி: சரி சப்ஜெக்டுக்கு வாங்க. ஆதாரத்தை எப்படி ரெடி பண்ணுவீங்க?
 
தாமஸ் இருவரையும் அர்த்தத்துடன் பார்த்தான். அவன் கண்களில் குசும்புத்தனத்தையும் தாண்டி துஷ்டதனம் வெளிப்பட்டது.
 
"குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுருக்கும்ன்னு சொல்லுவாங்க, கேள்விப்பட்டு இருக்கியா?  அப்படின்னா இந்த விஷயத்தில் குறுகுறுத்தா... அது குத்தமுள்ள நெஞ்சு தானே?"
 
திருமுடி: ஓஹோ என்று ராகமாக இழுத்துவிட்டு....
 
புரியுது, புரியுது.... ஆசாமியை எப்படி குறுகுறுக்க வைக்க போறீங்க?
 
தாமஸ்: பழைய ஐடியா தான்.  அதிலேயே குறுகுறுக்க வச்சிடலாம். ஒர்க் அவுட் ஆகலனா... அடுத்தது ப்ளான் பி ஒண்ணு ரெடியா இருக்கு.
 
தாமஸ் பேசிவிட்டு ரூமுக்குள் சென்று ஒரு பழைய மொபைலையும், சிம் கார்டையும் எடுத்துக் கொண்டு வந்தான். சிம் கார்டை அதில் போட்டு, போனை ஸ்விட்ச் ஆன் பண்ணினான்.
 
திருமுடி m.v:  மொபைல் ரொம்ப அடி வாங்கிருக்கே. ஹேமா உட்பட, நிறைய பேருக்கு இந்த டுபாக்கூர் போன்ல தான் பொங்கல் வச்சிருப்பான் போல. இந்த மொபைல் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதோ!
 
தாமஸ்: ராகினி, அவ அம்மா, அவ புருஷன், முத்துப்பாண்டி அம்மா எல்லார் நம்பரும் குடுங்க. முடிஞ்சா அந்த சிமெண்ட் கம்பெனி நபர்கள் நம்பரும் குடுங்க. எல்லாருக்கும் ஒரு பொங்கல் மெசேஜை தட்டி விடுவோம்.
 
திருமுடி பதட்டமாக,
"சார்... மெசேஜ் என்ன போட போறீங்க?"
 
தாமஸ்: கன்டென்ட் இது தான்... கருப்பன், சடசாமி விஷயம் எனக்கு தெரியும். ஆதாரம் இருக்கிறதால நான் பேசாம வாய மூடிட்டு இருக்கணும்னா, எனக்கு தேவையானதை செஞ்சு கொடுக்கணும். இன்னைக்கு நைட்டு பத்து மணிக்கு, வழக்கமா நீங்க ரகசியம் பேசுற இடத்துக்கு வந்துரு.
 
ராமன் வாத்தியாரும் திருமுடியும் ஆளுக்கொரு பக்கமாக பார்த்து, கூட்டி கழித்து கணக்கு போட்டார்கள். இருவரின் முகமும், விடுகதைக்கான விடையை கொஞ்சம் கொஞ்சமாக கண்டுபிடிக்கும் குழந்தையின் முகம் மலர்வது போல, மலர்ந்தது.
 
திருமுடி: ஓஹோ இப்ப புரியுது... கருப்பன் தாத்தா, சடசாமி கொலையில் சம்பந்தப்பட்டவங்க யாரா இருந்தாலும், மெசேஜை பார்த்ததும் குறுகுறுப்பு அதிகமாகும், யார்ரா இவன்னு டென்ஷனாவாங்க. தேடி வருவாங்க. ஆனா மடக்குவதற்கு ஆதாரம் நம்ம கிட்ட எங்க இருக்கு?
 
தாமஸ் சிரித்தான்.
 
"ஆதாரம் இல்லைன்னு நமக்கு மட்டும் தானே தெரியும். அவங்களுக்கு தெரியாதுல்ல. குற்றமில்லாதவர்களா இருந்தா, எதுக்காக இப்படி ஒரு மெசேஜ்னுன்னு தெரிஞ்சவங்க கிட்ட வெளிப்படையா கேட்கலாம். வாத்தியார் கிட்ட, அகல்யா கிட்ட சொல்லலாம்... இன்னும் வேற யார் கிட்டயாவது சொல்லலாம்.
 
ஆனா குத்தமுள்ள பார்ட்டி நைசா நைட்டு வருவாங்க. அதிலேயே அவங்கதான் இந்த கொலைல சம்பந்தப்பட்டவங்கன்னு கன்ஃபார்ம் ஆயிடும். அதுக்கப்புறம் அவங்கள பேச வச்சியே ஆதாரத்தை டேப் பண்ணி, வீடியோ ரெக்கார்டும் பண்ணிடுவோம்... இந்த ஐடியாவே ஒர்க் அவுட் ஆயிடும். ஒரு வேளை ஒர்க்கவுட் ஆகலனா, இதைவிட அடுத்தது பெரிய பிட்டா ஒண்ணு வச்சிருக்கேன்..."
 
திருமுடி ஆர்வமாக,
"அது என்னது? சொல்லுங்களேன்.."
 
தாமஸ்: அது கொஞ்சம் வெயிட் பண்ணனும், பட்ஜெட் இதைவிட ஜாஸ்தி. அதில்லாம சண்டி முனியையே களம் இறக்க வேண்டி வரும்... உன்னோட உதவியும் தேவைப்படும். அப்புறம் விலாவரியா சொல்றேன்.
 
அவன் சொன்னதைக் கேட்டதும் திருமுடி ஜெர்கானான். 
 
நம்மள வச்சி டெஸ்டிங் கிஸ்டிங் ஏதாவது பண்ணிருவானோ? 
 
திருமுடி முழித்த முழியை பார்த்ததும்,
 
தாமஸ்: பயப்படாத, உனக்கு என் மேல நம்பிக்கை இருக்குல்ல?
 
அவன் முடிக்கும் முன்னரே அதிரடியாக 
திருமுடி: இல்லவே இல்ல. சத்தியமா கிடையாது.... என்று உறுதியான குரலில் சொல்ல,
 
தாமஸ்: வெரி குட்... அதுதான் வேணும். அப்போ முதல்ல பிளான் பியை செஞ்சுருவோம்.
 
திருமுடி மறுபடியும் ஜெர்க்காகி, "இல்ல இல்ல.. எனக்கு உங்க மேல நிறையவே நம்பிக்கை இருக்கு.. ஹி ஹி..."
 
தாமஸ், தல ஸ்டைலில், "அது" என்றான்.
 
"இப்போதைக்கு முதல் பிட்டு ஒர்க் அவுட் ஆகுதான்னு பார்ப்போம். சம்பந்தப்பட்ட பார்ட்டிங்க  எல்லார் நம்பரையும் குடுங்க. ஒருத்தர் விடாம அனுப்புவோம்."
 
அனைவரும் போனை எடுத்து, நம்பரை தேடிக் கொண்டிருக்க,
 
தாமஸ் நம்பருக்கு ஏதோ ஒரு கால் வந்தது.
 
புது நம்பர்.
 
யார்ரா இந்த நம்பருக்கு கால் பண்றது?
 
"ஹலோ..."
 
"வணக்கம் சார், hbdc  பேங்க்ல இருந்து பேசுறேன். கிரெடிட் கார்டு விஷயமா... உங்களுக்கு ஃப்ரீ கிரெடிட் கார்டு sanction ஆகிருக்கு. அத பத்தி சொல்லலாமா?", என்றது ஒரு ஐஸ்கிரீம் குரல்.
 
தாமஸ் கடுப்பாக, "மாடு மேய்க்கிறவங்களுக்கல்லாம் ப்ரீ கிரெடிட் கார்டு கொடுக்குறீங்களா?"
 
"என்ன சார் சொல்றீங்க?"
 
"ஆமாம்மா... நான் மாடு மேய்ச்சிட்டு தான் இருக்கேன். நாலு கறவை மாடு, நாலு எருமை மாடு. எனக்கு எதுக்கு கிரெடிட் கார்டு?... பால்கார்டு இருந்தா குடுங்க", என்று சொல்லிவிட்டு எரிச்சலில் காலை கட் செய்தான்.
 
திருமுடி: இவளுக வேற, நேரம் கெட்ட நேரத்துல,  கிரெடிட் கார்டு,  மயிறு கார்டுன்னு டென்ஷன் படுத்துவாளுக.
 
ராமன் வாத்தியாரும், திருமுடியும் சம்பந்தப்பட்டவர்கள் நம்பரை எல்லாம் கொடுக்க, ஒவ்வொருத்தருக்காக மெசேஜ் அனுப்பினான்.
 
தாமஸ்: வெற்றிகரமா அனுப்பியாச்சு... இன்னிக்கி பத்து மணிக்கு என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.
 
மறுபடியும் ஏதோ ஒரு நம்பர்லருந்து போன்.
 
தாமஸ்: ஏதோ ஒரு பார்ட்டி குறுகுறுக்குதுன்னு நினைக்கிறேன்...
 
மெசேஜ் அனுப்புன நம்பர்களில், ஏதோ ஒரு நம்பரா என்று செக் பண்ணினான். இல்லை. 
வேறு ஏதோ ஒரு நம்பர்.
 
போனை ஸ்விட்ச் ஆஃப் செய்தான்.
 
எதிரே நின்றிருந்த இருவரையும் பார்த்து, 
 
"நோ கால்ஸ்... யாரா இருந்தாலும், 10 மணிக்கு நேரா வரட்டும். அப்பதான் தொக்கா தூக்கலாம்..."
 
திருமுடி:  சார் எனக்கு ஒரு சந்தேகம். ரகசிய இடம்னு மெசேஜ்ல அனுப்பிருக்கீங்களே!!! அது அந்த குடிசையா?
 
தாமஸ்: அதை aim பண்ணி தான் அனுப்புனேன்... எல்லா சதி திட்டமும் அந்த குடிசையை சுத்தி தான் நடக்குதுன்னு நினைக்கிறேன்.
 
(இருவரையும் பார்த்து) ஆள புடிக்கிற வரைக்கும் விஷயம் வெளிய கசிஞ்சிரக்கூடாது ஜாக்கிரதை.... என்றான்.
 
அதே நேரம்,
 
காலை கட் செய்த ஹேமா நெற்றியில் துளிர்த்திருந்த வேர்வை துளிகளை துடைத்தாள். நிச்சயமா அவன் குரல் தான். 
 
வாட்ஸ்அப்பில் அகல்யாவுக்கு கால் ரெக்கார்டிங்கை அனுப்பினாள்.
 
சற்று முன்னர், தாமஸ் நம்பருக்கு கிரெடிட் கார்டு கம்பெனியிலிருந்து கால் செய்வது போல் பேசியது, அவள்தான்.
 
உடனடியாக அகல்யாவுக்கு கால் செய்தாள்.
 
அகல்யா காலை அட்டென்ட் செய்ததும்,
 
"அகல், உனக்கு வாட்ஸ் அப்ல ஒரு கால் ரெக்கார்டிங் அனுப்பிருக்கேன். அதை கேட்டுப்பாரு. எனக்கு அடிக்கடி கால் பண்ணி டார்ச்சர் பண்ண அதே நம்பருக்கு இன்னைக்கு எதேச்சையா செக் பண்றதுக்காக கால் பண்ணினேன். இவ்வளவு நாள் ஸ்விட்ச் ஆப்ல இருந்துச்சு, இன்னைக்கு போனை அட்டென்ட் செய்து பேசினான். தயவு செய்து இது தாமஸ் குரல் இல்லைன்னு மட்டும் சொல்லிறாத.."
 
அவள் போனை வைத்ததும், ஹேமா உதட்டில் வெற்றி புன்முறுவல்.  எதையோ சாதித்த திருப்தி அவள் முகத்தில் தெரிந்தது. அட்டகாசமாக விசிலடித்தபடியே சந்தோஷமாக ரூமை விட்டு வெளியே சென்றாள்.
 
கால் ரெக்கார்டிங்கை திரும்ப திரும்ப கேட்டுப் பார்த்த அகல்யாவுக்கு குழப்பமாக இருந்தது. நெஞ்சு படபடவென அடித்தது. ஒரு பாட்டில் தண்ணீரை காலி செய்தாள். நிச்சயமா தாமஸ் குரல் மாதிரி தான் இருக்கு. அதுல சந்தேகமே இல்லை.
 
தாமஸ் எதற்காக இப்படில்லாம் செய்யணும்? அதுவும் எங்கேயோ இருக்கும் ஹேமாவை அவருக்கு முதலில் எப்படி தெரியும்?  எதற்கு அவளை செக்ஸ் டார்ச்சர் கொடுக்கணும். 
 
இல்ல... எங்க தாமஸ் அப்படிப்பட்டவர் இல்லை. வாய்ப்பே இல்லை. அவளே சமாதானம் சொல்லிக் கொண்டாள்.
 
கட்டிலில் போய் உட்கார்ந்தாள். படபடப்பாகவே இருந்தது. எழும்பினாள். டேபிளில் இருந்த புத்தகத்தை எடுத்து படித்தாள். டென்னிஸ் ஜெகன் எழுதின ஏதோ ஒரு நாவல்... சகிக்கவில்லை. புத்தகத்தை பட்டார் என்று மூடினாள். மனசுக்குள் ஏதோ இனம் புரியாத பாரமாக இருந்தது. ரூமுக்குள் அங்கும் இங்கும் உலாத்தினாள். கால் ரெக்கார்டிங் பற்றிய நினைப்பை அவளால் மாற்ற முடியவில்லை.
 
ஹாலில் கார்த்தி டிவி பார்த்துக் கொண்டிருக்க, அவளுடன் போய் உட்கார்ந்து டிவி பார்த்தாள்.
 
சந்தேகப்பட்டு குழம்பிக் கொண்டிருப்பதை விட... நாளைக்கு நேருக்கு நேராக விசாரித்து, குழப்பத்தை தீர்த்து விடுவது தான் நல்லது.
 
Yes, அதுதான் சரி.... என்ற முடிவுக்கு வந்தாள்.
 
இரவு பத்து மணி
 
டயட்டில் இருந்து இளைத்து போன நிலா வானில் மெல்லிய வெளிச்ச வட்டமடித்து இருந்தது. லேசான ஊதக்காத்து.
 
தென்னந்தோப்பில், தென்னை மரங்கள் இருட்டுக்குள் ரகசியம் பேசிக் கொண்டிருந்தன. ஒரு தென்னை மரத்துக்கு பின்னால் இருட்டில் தாமஸ் பதுங்கி இருந்தான். அங்கிருந்து பார்க்கும்போது குடிசையின் விஷுவல் அவனுக்கு தெரிந்தது.
 
குடிசைக்குள் திருமுடி டென்ஷனை போக்குவதற்காக கத்திரி சிகரெட் குடித்துக் கொண்டிருந்தான். ஏற்கனவே பல டகல்பாஜி வேலைகள் அவன் செய்திருந்தாலும், இந்த மாதிரி வேலைகள் அவனுக்கு புதுசு. அதனால் கொஞ்சம் லப்பு டப்பு எகிறி இருந்தது.
 
திருமுடி குடிசையை சுற்றி பார்த்தான். கோரம் பாய், இரண்டு அழுக்கடைந்த தலகாணி, கொடியில் கிழிந்த லுங்கி ஒன்று, காய்ந்த மல்லிகைச் சரம், இரண்டு, மூன்று துருப்பிடித்த பெட்டிகள், குடிசையை ஒரு மணல் திண்டு இரண்டாகப் பிரித்தது. மணல் திண்டின் மேல் இரண்டு அலுமினிய பாத்திரங்கள், டம்ளர்கள் இருந்தன. 
 
இதுபோக கரப்பான் பூச்சிகள்,  இரண்டு பல்லி பெருமக்கள் எல்லாம் இருந்தார்கள். ஓரமாக மணல் தரையில் பெருச்சாளி விட்டைகளுக்கு அருகே, ஏதோ ஒரு பாக்கெட் கிடக்க, திருமுடி போய் குனிந்து எடுத்தான். பயன்படுத்தப்படாத காண்டம் பாக்கெட்.
 
இந்த குடிசையை, துரைராஜ் உண்மையிலேயே சின்ன வீடா தான் பயன்படுத்துறான் போலிருக்கு.
 
பொண்டாட்டி கூட கசமுசா பண்றதுக்கு எதுக்கு ஆணுறை?
 
வெளியே தென்னை மரத்தின் பின்னால் இருட்டுக்குள் இருந்த தாமஸ் வாட்சில் டைம் பார்த்தான். மணி 10:15. அவனுடைய குவாட்ஸ் வாட்சின் முள் டிக் டிக் டிக் என்று இதயத்துடிப்பை போல் நகர்ந்து கொண்டிருந்தது.
 
ஆசாமி குடிசைக்குள் நுழைந்து திருமுடியுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போது, மறைத்து வைத்திருக்கும் வீடியோ கேமராவில் காட்சிகளையும், அவன் வைத்திருக்கும் மொபைலில் பேச்சுவார்த்தையையும் ரெக்கார்ட் செய்த பிறகு, தாமஸ் திடீரென்று உள்ளே நுழைந்து ஆச்சரியத்துக்குள்ளாக்கி வீழ்த்துவது தான் திட்டம்..
 
ஒருவேளை "குறுகுறுப்பு மெசேஜ் திட்டம்" பெயிலியர் ஆனால், சண்டி முனி கோவில் ரிஓபனிங் அன்று எல்லோரும் வருவார்கள்.
 
Plan B பிரகாரம் திருமுடி மேல் சண்டி முனியை இறக்கி, 
 
"என் பெயரை பயன்படுத்தி, இந்த ஊரில் செய்யத் தகாத செயல்களை செஞ்சிருக்காங்க. அப்படி செஞ்சவங்க, என் கோவிலுக்கு வந்து, இன்னும் ஒரு வாரத்தில் என் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கணும். இல்லன்னா வீடு தேடி போயாவது அவங்கள பொலி போடாம விட மாட்டேன்...", என்று சொல்ல வைத்து விட்டால் போதும். சண்டி முனி மேலிருக்கும் பயத்தில், சம்பந்தப்பட்ட ஆசாமி, யாரும் இல்லாத நேரத்தில் அல்லது இரவில் வந்தாவது காலில் விழுந்து வணங்குவான், கோழி அமுக்குற மாதிரி அமுக்கி விடலாம், அதுவும் இல்லையென்றால்... அடுத்தது Plan C... பட்ஜெட் இன்னும் எகிறும்."
 
அவன் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில், தூரத்தில் காலடி சத்தம் கேட்டது.
 
தாமஸ் இருட்டுக்குள் பதுங்கினான். நிழல் உருவமாய் கையில் டார்ச் லைட்டுடன் யாரோ வந்து கொண்டிருந்தார்கள்.
 
டார்ச் லைட் வெளிச்சம் குடிசையை நோக்கி தான் அடித்தது. தாமஸ் மொபைலில் கிசுகிசுத்தான்.
 
" பார்ட்டி யாரோ வராங்க, ரெடியாயிரு.."
 
சரக்... சரக்.. காலடி சத்தம் நெருங்கியது.
 
தாமஸ் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்க,  நிழல் உருவம் அவனை நெருங்கியதும்.. அதிர்ந்து போனான்.
 
கண்களை தேய்த்துக் கொண்டு மறுபடியும் பார்க்க...
 
வந்தது பிரபாவதி அத்தை.
 
தொடரும்
 
 
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது

https://kavichandranovels.com/community/dennis-jegans-novels-comments-and-discussions/

This post was modified 3 days ago by Dennis jegan

   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 2 months ago
Posts: 81
Topic starter  
 

கருப்பு 44

பிரபா அத்தையை பார்த்து குழம்பி போன தாமஸுக்கு என்ன நினைப்பதென்றே  தெரியவில்லை. 

பின்னர் சுதாரித்து,

"பிரபா அத்தை வர்றாப்புல. ஸ்கிரிப்ட் அதேதான். பேர மட்டும் மாத்திக்க... போன் ஆன்லயே இருக்கட்டும்', என்று போனில் பரபரப்பாக கிசுகிசுத்தான்.

குடிசைக்குள் இருந்த திருமுடி திகைத்தான். 

பிரபாவா??? எப்படி???

கொலைகாரனுக்கு ஆப்பு வைக்கணும்னு நினைச்சா நமக்கே ஆப்பா மாறிடுமோ!

கருப்பு தாத்தா கொலை சமாச்சாரங்கறதால, ராகினி மெசேஜ் விஷயத்தை பிரபா அத்தை கிட்ட சொல்லி,  எவன் அதுன்னு நேர்ல பாக்குறதுக்கு வெறியோட வந்துட்டாளோ? ஐயையோ!!

கருப்பு தாத்தா கொலை விஷயத்துல ஆதாரம் இருக்குன்னு, வாக்குமூலம் கொடுத்த மாதிரி, மெசேஜ் அனுப்பிருக்கோமே.  எக்குத்தப்பா நாம இந்த மர்டர் மேட்டர்ல மாட்டிக்க கூடாதே!!!

சரக் சரக் சத்தம் குடிசையை நெருங்கியதும், அலர்ட் ஆனான்.

சரி வந்தது வந்தாச்சு. சமாளிச்சுருவோம்.

குடிசை கதவை பட்டா ரென்று தள்ளி திறந்தபடி தலையை குனிந்து உள்ளே நுழைந்த பிரபா, உள்ளே திருமுடி நின்றிருந்ததை பார்த்ததும், திகைத்தாள். முகம் இருண்டது.  சமாளித்து திகைப்பை துடைத்தெடுத்தாள்.

இவன் எப்படி இங்கே என்று விசாரத்துடன் நோக்கி, நிசாரமாக மாறி, காரசாரமாக ஆனது அவள்  பார்வை. மாற்றங்கள் அனைத்தும் மைக்ரோ நொடிகளில்...

தென்னந்தோப்பில் மறைந்திருந்த தாமஸ், 

குடிசைக்குள் பிரபா நுழைந்ததும், நுனிக்காலில் ஓடி, 

லப்... சக்... டப்...சக்

இதயத்துடிப்பும் காலடி சத்தமுமாய் மிக்ஸ் ஆகி, 

குடிசைக்கு பின் பக்கமாக வந்து நின்றான். ஏற்கனவே பிரித்து வைத்திருந்த ஓலையின் துளை வழியாக பார்த்தான். மற்றொரு கேப்பில் சொருகி வைத்திருந்த வீடியோ கேமரா வேலை செய்து கொண்டிருக்கிறதா என்று பார்த்தான். கமுக்கமாக ஆனால் ஆர்வத்துடன் காட்சிகளை விழுங்கி கொண்டிருந்தது.

தெனாவட்டாக பேசுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்த திருமுடிக்கு ஸ்கிரிப்ட் மறந்து போனது.  பிரபாவதி பாக்குற பார்வையை பார்த்ததும், குழைந்து, குரலை தாழ்த்தி பேசினான்.

"அத்தை.... வந்து நான், எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்..."

பிரபாவதி சுற்றிலும் ஒரு முறை பார்வையை ஓட்டினாள். குடிசைக்குள் வேறு யாரும் இல்லை என்பது உறுதியானதும்,

பிரபா: நான் இதுல சம்பந்தப்பட்டிருக்கிறது உனக்கு எப்படில தெரியும்? எந்த வழியில தெரிஞ்சுகிட்ட? 

பதட்டத்தில் வார்த்தையை விட்டதும், அவசரமாக நாக்கை கடித்துக் கொண்டாள்.

சுளீர் ரென்று சாட்டையால் அடிபட்டது போல் திருமுடி நிமிர்ந்தான்.

வழக்கமாக அவள் இருப்பை எவனுமே பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அவள் குரலில் இவ்வளவு கடினத்தன்மை இருக்கும் என்பதை திருமுடி இப்போதுதான் உணர்ந்தான்.

சின்னதா திரவாங்கனை மீனு மாட்டுமுன்னு  பார்த்தால், திமிங்கலமே மாட்டும் போலிருக்கே.

திருமுடியின் பாடி லாங்குவேஜில் அதிரடி மாற்றம். தயக்க சட்டையை தூர எறிந்து விட்டு, தெனாவெட்டு டி-ஷர்ட் மாட்டிக் கொண்டான்.

"தப்பு... தப்பு... எப்படி தெரியும்?  வழி என்ன? சுழி என்ன? அப்படியெல்லாம் நீங்க கேள்வி கேட்கக்கூடாது. நான் கேட்கிற கேள்விகளுக்கு தான், நீங்க பதில் சொல்லணும்... உன்னை கேரக்டர் ஆர்டிஸ்ட்... செட் ப்ராபரிட்டின்னு எல்லாரும் நினைச்சா... நீ தான் மெயின் வில்லன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்.."

வெளியே நின்று ஓட்டை வழியாக பார்த்துக் கொண்ட தாமஸ் M.V: 

"என்ன இவன் ஸ்கிரிப்ட்டை மாற்றி என்னவோ பேசுகிறான்? எப்படி பெர்பாம் பண்ண போறானோ?"

பிரபா அமர்த்தலாக கேட்டாள்: உன்கிட்ட ஆதாரம் இருக்குன்னு நான் எப்படி நம்புறது?...

திருமுடி: நேரா விஷயத்துக்கு வந்துட்டீங்களா? சூப்பர், அப்படித்தான் இருக்கணும். உங்க சமாச்சாரம் எல்லாம் இந்த மெமரி கார்டுல வீடியோவா இருக்கு. (வலது கையை நீட்டி கார்டை காண்பித்தான்) இதே மாதிரி  இன்னும் ஒரு மெமரி கார்டு, அப்புறம் தப்பித்தவறி மெமரி கார்டு corrupt ஆயிரக்கூடாதுங்கறதுக்காக  ஒரு பென் டிரைவ்ல  காப்பி எடுத்து, நமக்கு வேண்டப்பட்ட ஒருத்தர்கிட்ட கொடுத்து வச்சிருக்கேன்.

அவன் சொல்ல சொல்ல பிரபா நெற்றி சொத சொதப்பாய் வியர்த்து, திருதிருவென முழித்தாள். அவள் போடும் அவசர கணக்குகள்,  எல்சிடி டிஸ்ப்ளேவில் தெரிவது போல், நெற்றியில் தெரிந்தது.

"நான்... வேற வழி... நீ..."

வார்த்தைகளுக்கு திணறினாள்.

திருமுடி: இருங்க, இருங்க... டென்ஷன் ஆகாதீங்க. அப்படியெல்லாம் மாட்டி விட்ற மாட்டேன். அதனால எனக்கு என்ன லாபம்? எனக்கும் இதுல ஏதாவது பிரயோஜனம் இருக்கணும்ல. எவ்வளவு நாள் தான் சும்மா ஓட்டாண்டியா சுத்திட்டு இருக்கிறது? போலீஸ்ல மாட்டி விட்றதுன்னு நினைச்சிருந்தா வீடியோ எடுத்தன்னைக்கே கொண்டு போய் கொடுத்திருக்க மாட்டேனா?

பிரபா பதில் சொல்லாமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

திருமுடி: இந்நேரம் லாஜிக்கா நீ ஒரு கொஸ்டின் கேட்டுருக்கணும்ல? அதெப்படி கரெக்டா சம்பவத்தை வீடியோ எடுக்க முடிஞ்சுது? கேட்டுருக்கணும்ல்ல. வெரி வெரி இம்பார்டன்ட்  கொஸ்டின் ஆச்சே? நீ பாட்டுக்கு நான் சொல்றதை கேட்டு முழிச்சுக்கிட்டு நிக்குற? என்ன பெருசா வில்லத்தனம் பண்ணி கிழிச்ச நீ.. அட போம்மா.

பிரபா அவனை பிரபஞ்ச வெறுப்புடன் பார்க்க, மரியாதை தேய்ந்து போய், திருமுடி ஒருமையில் பேசினான்.

"நானே சொல்றேன். மேட்டு தெருவுல முனி நடமாட்டம் இருக்கிறதால தாமஸ் வாத்தியாரு அதை படம் பிடிக்கிறதுக்கு மரத்து மேல வீடியோ கேமரா வச்சாரு. அடுத்த நாள் பார்த்தால், கேமராவை காணல. 2 நாள் கழிச்சு முனி கோவில் பின்னால, கேமராவை கண்டுபிடித்தோம். கேமரா டேமேஜ் ஆகி இருந்ததால, வாத்தியார் போட்டுட்டு போயிட்டாரு. நான் மனசு கேட்காம ஆக்கர் கடைக்கு போட்டு காசு வாங்கலாமேன்னு தூக்கிட்டு போனேன். வீட்டுக்கு போய் குடைஞ்சி பார்த்தா, மெமரி கார்டு டேமேஜ் ஆகாம இருந்துச்சு. எடுத்து பாத்தா முனி மாட்டல, நீங்க பண்ண சம்பவம் மாட்டிக்கிச்சு.  என்னைக்காவது நமக்கு உதவுமுன்னு பத்திரமா வச்சுக்கிட்டேன். இப்போ உதவுது. நான் பெருசா எதுவும் கேக்க மாட்டேன். 10 லட்சம் ரூபாய். ஒன்லி 10 லாக்ஸ். இந்த மெமரி கார்டு, பென்டிரைவ் எல்லாம் உன் கைல கொடுத்துட்டு ஒதுங்கிக்கிறேன்."

பிரபா அவனைப் பார்த்த பார்வையில் சந்தேகம் இன்னும் ஒட்டிக்கொண்டிருந்தது. பிரபாவுக்கு ஈரட்டியான நிலை. பேச்சுவார்த்தையை மேற்கொண்டு எப்படி  தொடர்வது என்று தடுமாறுவது தெரிந்தது.

வந்ததுமே வார்த்தையை விட்டுருக்க கூடாது! வேற மாதிரி பேச்சுவார்த்தை ஆரம்பிச்சிருக்கணும். தப்பு பண்ணிட்டேன்!

இவனை நம்புறதா? வேண்டாமா?

பிரபா: உனக்கும் இந்த விஷயத்திற்கும் என்ன சம்பந்தம்ன்னு விசாரிக்கறதுக்கு  வந்தா, நீ என்னையே போட்டு பாக்குறியா? மெமரி கார்டை குடு. ஃபோன்ல போட்டு பார்க்கிறேன். அப்படி என்னதான் ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்கேன்னு பார்க்கிறேன்.

தாமஸ் மைண்ட் வாய்ஸில் கத்தினான்:  அய்யய்யோ மாட்னான். எப்படி சமாளிக்க போறானோ? ஏதாவது பேசி டைவர்ட் பண்ணுடா.....

திருமுடிக்கு திக்கென்று இருந்தது. பாயிண்ட்டை புடிச்சுட்டாளே! 

வலுவா ஏதாவது பிட்ட போட்டு திசை திருப்பணுமே... இதயமும் மூளையும் ஓவர் டைம் வேலை செய்தது.

திருமுடி: அதுக்கு என்ன நல்லா போட்டு பாரு. அதுக்கு முன்னால நானே உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்ன்னு நினைச்சேன்.

பிரபா சொல்லு என்பது போல், தலையாட்டி சைகை செய்தாள்

திருமுடி: காவண வீட்டை ஆட்டைய போடணும்னு நினைச்சுகிட்டு இருந்தேன். அதனால தான் நம்ம ஆளையே அங்க வாடகைக்கு வெச்சேன். தாத்தா இருந்தா வீட்டை வளைக்க முடியாது. இப்போ நீ அந்தாள போட்டு தள்ளுனதுனால எங்களுக்கு ஈஸியா போச்சு. எப்படிப் பார்த்தாலும், நீ நம்ம ஆளு தான்.  இருந்தாலும் எனக்கு பணம் முக்கியம்,  நீ கொடுத்தா கையோட ஆதாரங்களை ஒப்படைச்சிருவேன். வேலை முடிஞ்சிரும். உன் வழியில நீ போலாம், என் வழியில நான் போவேன். இப்படி ஒரு சம்பவம் நடந்ததே யாருக்கும் தெரியாது... என்ன சொல்ற?

பின்னிட்டான்.... தாமஸ் சத்தம் வராமல் சொடக்கு போட்டான்.

பிரபா ரொம்ப யோசிக்காமல், சரியென மெதுவாக தலையாட்டினாள்.

"இப்படி திடுதிப்புன்னு கேட்டா பணத்துக்கு எங்க போவேன். இந்த நிலத்தை வித்தா தான் கிடைக்கும்.  கொஞ்சம் பொறுமையா இரு, ரெடி பண்ணி தரேன்.."

திருமுடி; உன் கிட்ட பணம் இல்லைன்னு எனக்கும் தெரியும். ஆனால்  எப்படியும் இந்த நிலத்துக்கு 40 லட்சமாவது  மினிமம் கிடைக்கும். நான் கேட்கிறது வெறும் 10 லட்சம் தான். என்னை ஏமாத்தணும்னு நினைக்காத. 

ஆமா என்றும், இல்லை என்றும் சொல்லாமல் வெறுமனே தலையாட்டினாள்.

தூண்டில கடிச்ச மீனு, வசமா சிக்க மாட்டேங்குதே!

திருமுடி: "எனக்கு என்ன குழப்பமா இருக்குன்னா எதுக்காக கருப்பன் தாத்தாவையும், சடசாமியையும் போட்டே?"

"அதெல்லாம் உனக்கு எதுக்கு? பணத்தை வாங்கினோமா,  ஆதாரத்தை கொடுத்தோமானு போயிட்டே இரு.."

"இல்ல, பணம் ஒருத்தனுக்கு முழு சேடிஸ்பேக்சன் தராதுல்ல. ரொம்ப நாளா எனக்கு  மண்டையை குடைஞ்சுட்டிருக்க விஷயம் அதுதான்... நீ சொல்லலைன்னா, அதுக்கு ஒரு பத்து லட்சம் தனியா கேக்க வேண்டிருக்கும் பரவால்லையா?"

பிரபா உதடு மடித்து, பற்களை கடித்து, கோப மூச்சு விட்டாள். நெற்றியில் விரலால் கீறி கொண்டாள். தீயில் பொசுக்குவது போல் அவனை பார்த்துவிட்டு, கோபத்தை கட்டுப்படுத்துவதற்காக, பற்கள் இடுக்கில் மாட்டிக்கொண்ட பாக்கை எடுப்பது போல், நாக்கால் வாய்க்குள் உழற்றினாள்.

"எல்லாம் என் தலையெழுத்து... இந்த வயசுல எனக்கு இதெல்லாம் தேவையா?" தலை உயர்த்தி மேலே தொங்கி கொண்டிருந்த மஞ்ச பல்பை பார்த்தாள்.

பத்தே வரியில் அவள் சொன்ன விஷயம்... இங்கே

பிளாஷ்பேக்காக,

கருப்பன் தாத்தா சம்பவம் நடந்த அதே நாள், 

இதே இடம், இதே நேரம்.

மஞ்ச பல்பை பார்த்தபடியே பிரபா ஜாக்கெட்டை போட்டுக் கொண்டாள். அவள் பாவாடை முடிச்சு போடும் இடத்தில் வரி வரியாக இருக்க, பக்கத்தில் படுத்திருந்த முத்துப்பாண்டி அந்த இடத்தை தடவிக் கொண்டிருந்தான்.

அவன் கையை தட்டி விட்டு, அவிழ்ந்து கிடந்த சேலையை கட்டி, சரி செய்து கொண்டு, மாராப்பை எடுத்து மேலே போட்டாள்.

முத்து பாண்டியிடம்,

"என்னல ரெண்டு தடவைக்கே இப்படி கொளஞ்சி போயிட்ட... முதல்ல இருந்த வேகம் குறைஞ்சுகிட்டே போகுது, ஃபர்ஸ்ட் குடியை நிறுத்து. இப்படியே போச்சுன்னா ரெண்டு நிமிஷத்துக்கு கூட தாங்க மாட்டே..."

முத்துப்பாண்டி எதுவும் பேசாமல், எழும்பி, அவிழ்ந்து கிடந்த சாரத்தை கட்டிக் கொண்டான்.

பிரபா: சொல்லணும்னு நினைச்சேன், சாயங்காலம் அப்பா நம்மள பார்த்த பார்வையே சரியில்ல. அவருக்கு ஏதோ சந்தேகம் வந்துருக்கணும். குடிசை முன்னால, மண்ணுல புல்லட் டயர் தடத்தை பார்த்துட்டு, புல்லட்ல யாரு இங்க வர்றது? முத்துப்பாண்டி வருவானான்னு கூட கேட்டார். நான் ஏதேதோ சொல்லி சமாளிச்சிட்டேன். அவரு முன்னால கூடவா, என்ன கடிச்சு திங்கிற மாதிரி பாப்ப? கொஞ்சமாவது அறிவு இருக்கா?

பாண்டி: என்னை பண்ண சொல்ற? இவ்வளவு வயசுலயும் இப்படி நிமிர்ந்து நின்னா பாக்க மாட்டாங்களா?... 

என்று எந்த இடத்தை குறிப்பிட்டானோ, அந்த இடத்தில் கை வைத்தபடி பேசினான்.

அவள் கையை தட்டி விட்டாள்.

"போதும் எடு கைய.. ஒரு சின்ன பயல வீட்டை விட்டு காலி பண்ண வைக்கிறதுக்கு உனக்கு துப்பில்லை... இந்நேரம் வேலையை முடிச்சிருக்க வேண்டாமா?"

"அவன் நீ நினைக்கிற மாதிரி சாதாரண வாத்தியார் கிடையாது. ஏதோ பெரிய திட்டத்தோட வந்திருப்பான் போல.."

"என்ன திட்டத்தோட வந்தாலும், இந்த சமயத்துல அவன தீர்த்துட்டேனா... பழி முனி மேல போய் விழும் புரியுதா?"

பாண்டி பெருமூச்சு விட்டபடி, தலையாட்டினான்.

"என் பொண்ணையும் கட்டி வச்சி, உன்னை கைக்குள்ள வச்சுக்கலாம்னு பார்க்கிறேன். நீ என்னடான்னா அவளை கட்டிக்காம, ஊர் ஊரா சுத்திட்டு இருக்கியே..."

"இத பாரு அந்த வேலையெல்லாம் வச்சுக்காத... சொத்தும் பணமும் கையில வந்துச்சுன்னா.. ஆளுக்கு பாதி பிரிச்சிட்டு, இந்த மாதிரி அப்பப்ப ராத்திரி வந்தமா, சந்தோஷமா இருந்தோமான்னு போயிட்டே இருக்கணும். அவள கல்யாணம் பண்ணி வச்சி வீட்டோட மாப்பிள்ளையாக்கி உறவு கொண்டாடுற வேலையெல்லாம் வேண்டாம். அது மட்டுமில்லாம உன்கிட்ட இருக்குற குவாலிட்டி, அவகிட்ட இல்ல.. புரிஞ்சுதா.." என்று கண்ணடித்தான்.

பிரபா பதில் சொல்வதற்குள், குடிசை வாசலில் காலடி சத்தம் கேட்க... இருவரும் அதிர்ச்சியாக தலையை உயர்த்தி பார்த்தார்கள். 

தட்டார்... வெளியே இருந்து யாரோ கதவை எட்டி உதைத்தார்கள்.

"எச்சிக்கல நாய்களா... வெளிய வாங்கல.."

பெரிய கருப்பனின் குரல்.

பாண்டிக்கு தூக்குவாரி போட்டது. பிரபா இதயம் ஒருமுறை தடம் புரண்டு நிமிர்ந்தது. இருவரும் பதட்டமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

பிரபா என்ன செய்யலாம் கண்களால் கேட்க, பாத்துக்கலாம் என்று அவன் தலையசைத்தான்.

"நீங்க ரெண்டு பேரும் உள்ள இருக்கறது எனக்கு நல்லாவே தெரியும். சாயங்காலம்  வரும் போதே பாண்டி புடிக்கிற சிகரெட் துண்டுகளை பார்க்கும்போதே சந்தேகப்பட்டேன்..இப்ப வெளியே வரப் போறீங்களா இல்லையா?"

முத்துப்பாண்டி தலை குனிந்தபடியே வெளியே வர, அவனுக்கு பின்னால் பிரபா வெளியே வந்தாள். 

கருப்பனின் முகம் தீப்பிழம்பாக கனன்று கொண்டிருக்க, ரோட்டில் புணர்ந்து கொண்டிருக்கும் நாய்களை பார்ப்பது போல் அவர் முகத்தில் அருவருப்பு.

மாத்தி மாத்தி இருவரையும், வெடி வைத்து கொளுத்தும் ஆக்ரோஷத்துடன் பார்த்தார்.

பிரபா சமாளிக்கும் விதமாக: "என்னப்பா இந்த நேரத்துல? தூக்கம் வரலையா? நாங்க சும்மா நிலத்தை விக்கிறதை பத்தி பேசுறதுக்காகவும் வந்தோம்.. வேற ஒண்ணுல்ல....", என்று பதட்டம் கலந்த, பீதி கலந்த, தர்ம சங்கட சிரிப்பு சிரித்தாள்.

கருப்பன்: சீ!! வாய மூடு நாயே. குடியை கெடுக்க வந்த பாவி. எல்லாம் எனக்கு தெரியும். உங்க முழியை பார்த்ததுமே எனக்கு சாயங்காலமே சந்தேகம், அத்தைய பாக்குற மாதிரியா இவன் பார்த்தான்.. கேடு கெட்ட உறவு உனக்கு தேவையா?... இந்த வயசுல உனக்கு எதுக்குடி இவ்வளவு *** அரிப்பு!!!

பிரபா, கண்டுபிடிக்கப்பட்டதை உணர்ந்தாள். வேறு வழி இல்லை. கண்ணீர் சுரப்பிகள் அவசரமாக வேலை செய்தன. 

"ஐயோ அப்பா, என்ன மன்னிச்சிடுங்க.. இவன் மிரட்டி பணிய வச்சிட்டான்", என்று அழுதபடி ஓடிப்போய் அவர் காலில் விழ,

கருப்பன் எட்டி அவள் மாரில் உதைத்தார். ஐயோ என்று அவள் மண்ணில் உருண்டாள்.

கருப்பனுக்கு கோபாவேசம் தாங்காமல் உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன. என்ன சொல்வதென்று தெரியாமல் உர்ரென்று உறுமியபடி அங்கும் எங்கும் நடந்தார். பேராத்திரத்தில் அவரின் கன்னத்து சதைகள் எல்லாம்  துடித்துக் கொண்டிருந்தது. முத்துப்பாண்டி எதுவும் பேசாமல், முறைப்புடன் கை கட்டியபடி நின்றிருந்தான்.

"தாய் மாதிரி நினைக்க வேண்டிய அத்தை கிட்ட இப்படி முறை தவறி நடக்கிறதுக்கு எப்படில உனக்கு மனசு வந்துச்சு?..

தூ....நக்கற நாய்க்கு செக்குக்கும், சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியவா போகுது?"

பிரபா எழும்பாமல், மண்ணில் முகம் புதைத்து குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருக்க, 

கருப்பன்:  நானும், என் பேத்திகளும் உன்னை எவ்வளவு உயரத்தில் வச்சிருந்தோம். மூதி!!! நம்ம குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய அவ பெயரை தேடி கொடுத்துட்டே.  அருவா கொண்டு வந்திருந்தா கண்டம் துண்டமாக வெட்டி போட்டுருப்பேன். பாவம், அந்த  வாத்தியாரு, நம்ம குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையை அவர் பிரச்சனையா எடுத்துக்கிட்டு சரி பண்ணனும்னு நினைக்கிறாரு. அவரையே கொலை பண்ண முயற்சி பண்றீங்களா? உங்களை சும்மா விடமாட்டேன்... நேரா போலீஸ்க்கு தான் போகப்போறேன். ஃபிராடு, கொலை முயற்சின்னு கைது செஞ்சி உள்ள வச்சா தான் நீங்க திருந்துவீங்க..."

சொல்லிவிட்டு இருவரையும் பார்க்க பிடிக்காமல், விருட்டென்று திரும்பி நடக்க ஆரம்பித்தார். 

பிரபா: அப்பா... அப்பா... என்று கதற,

அவர் திரும்பி கூட பார்க்கவில்லை.

அவள் முத்துப்பாண்டியிடம் கண்ணை காட்ட .... அவன் ஓடி சென்று அவர் கைகளை பிடித்தான். "விடுல கையை", என்று கையைத் தட்டி விட்டு, மறுபடியும் நடந்தார். மறுபடியும் அவன் கையைப் பிடித்து இழுத்து, இந்த தடவை பலத்தை காண்பித்து முறுக்கினான்.

"யோவ் மரியாதை கொடுத்து பேசிட்டு இருக்கோம்... உன்பாட்டுக்கு போயிட்டே இருந்தா என்ன அர்த்தம்? கொஞ்சம் நில்லு", என்று ஒருமையில் எகத்தாளமாக பேச... வேகமாக திரும்பிய கருப்பன், அவன் கன்னத்தில் பொளேரென்று  ஒன்னு வைத்தார். 

முத்து பாண்டி ரெண்டு சுத்து சுத்தி கீழே விழுந்தான்.

"பொசக்கெட்ட பயலே... கைய மடக்கி குத்தினேன்னு வச்சுக்க... உடம்புல இருக்குற ரத்தம் அவளத்தையும் கக்கி செத்துருவ. அவளோ கோவத்துல இருக்கேன். என் கண்ணு முன்னால நிக்காத, பேசாம போயிரு....", என்று சொல்லிவிட்டு, விசுக் விசுக் என்று நடக்க ஆரம்பித்தார்.

முத்துப்பாண்டி தூசியை தட்டி கொண்டு எழும்பினான்.  அவர்களைப் திரும்பி பார்க்க கூட பிடிக்காமல், கருப்பன் மனவெறுக்கையில் சென்றார்.

அவர் நிலத்தை தாண்டி, தென்னந்தோப்புக்குள் ஏறும் போது, தடதடவென பின்னால் சத்தம் கேட்க, கருப்பன் நின்றார்.  

இந்த எச்சிகலைகளை மறுபடியும் திரும்பி பார்க்கணுமா என்ற வெறுப்பில், மெதுவாக திரும்பினார்.

தட்ட்ட்ட்....

அவர் புற மண்டையில் கம்பியால் அடி விழ...

க்ரக்... கீறல் விழுந்தது.

ஆ!!!! என்று அலறிய கருப்பன் தலையில் கை வைத்தபடி திரும்பினார். முத்துப்பாண்டி தான் நிற்பான் என்று எதிர்பார்த்து, அவன் கழுத்தை நெரிப்பதற்காக கையை நீட்டிப்படியே திரும்ப, கையில் இரும்பு கம்பியுடன் பிரபா நிற்பதை பார்த்ததும், உச்சக்கட்டமாக அதிர்ந்தார்.

அவளைத் தொடக் கூட கைக்கூசியது. சே!!!!நீட்டிய கைகள் தளர்ந்து தொங்கியது.

"உன்னை எவன் இந்த சமயத்துல வர சொன்னது? சாவு...", என்று ஆங்காரமாக கத்தியபடி, 

அவர் துள்ள துடிக்க, மண்டையில் பட் பட்டென்று அடித்தாள். கருப்பன் சுருண்டு கீழே விழுந்தார். மண்டை உடைந்து பிளக் பிளக் என்று ரத்தம் வந்தது. வலியால் சிறிது நேரம் முனகி கொண்டு இருந்தவரின் இயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது.

அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்த முத்துப்பாண்டி, அவர்கள் அருகில் ஓடி வந்தான்.

"என்ன இப்படி பண்ணிட்ட?"

"வேற என்ன பண்றது? உன்னையும் என்னையும் பாத்துட்டான். இனிமே இவன் உயிரோட இருந்தா, நம்மள நிம்மதியா இருக்க விட மாட்டான்.." கொஞ்சம் கூட இரக்கமற்ற குரலில் பதிலளித்தாள்.

முத்துப்பாண்டி மூச்சி இருக்குதா என்று கருப்பனை திருப்பி போட்டு பார்த்தான். மூச்சுப் பேச்சு இல்லை. நிலை குத்திய அவர் கண்களில் உயிர் இல்லை. 

"ஆளு செத்துட்டான்..."

பிரபா எதுவுமே யோசிக்காமல், "இவனை தூக்கிட்டு போய் மேட்டு தெரு அவன் வீட்டு வாசலில் போட்டுடுவோம். யாராவது பார்த்தா முனி இவனை அடிச்சிருச்சுன்னு நினைச்சுக்கட்டும்..."

முத்துப்பாண்டி பதட்டமாக, "மேட்டு தெருவுக்கு தூக்கிட்டு போகும்போது யாராவது பாத்துட்டா என்ன பண்றது?"

பிரபா: 12 மணிக்கு மேல தூக்கிட்டு போனா, பிரச்சனையே இருக்காது. முனி பயத்துல ஒரு பய இருக்க மாட்டான்..  கவலைப்படாதே.

தென்னந்தோப்பில் இருந்த தென்னை மரங்கள் நடந்த சம்பவத்தை ரகசியமாக உள்வாங்கிக் கொண்டன. காற்று விஷ் விஷ் என்று சத்தமிட்டபடி அடித்து, பாவ கறையை துடைத்து கொண்டிருந்தது.

தொடரும்

உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது


   
ReplyQuote
Page 3 / 4

You cannot copy content of this page