About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
நரசிம்மன் சற்றே உரக்கச் சிரித்தால் கூட, “கூடப்பிறந்த தங்கச்சி வாழ்க்கையைக் கெடுத்துட்டு எப்படித்தான் உன்னால் சிரிக்க முடியுதோ.” என்று பேசி பேசியே அவனை நோகடித்தார் மல்லிகா.
உயிரும், உணர்வும் இருந்தும் இல்லாதவனைப் போல் சுற்றிக்கொண்டிருந்த காதலனைப் பார்க்க முடியாமல் தங்கள் திருமணப் பேச்சை எடுத்தாள் பாரி. அவன் அனுபவிக்கும் வேதனையில் இருந்து தங்கள் திருமணம் அவனைக் காக்கும். குறிஞ்சிக்கும் அவள் வயதை ஒத்த ஒரு பேச்சுத்துணை கிடைக்கும். மருமகளிடம் மகனை விட்டுக்கொடுக்க முடியாத மாமியார் வசவுகளைக் குறைப்பார் என்று பல வகையில் யோசித்து அந்த முடிவுக்கு வந்தாள்.
நரசிம்மனுக்கும் அந்த யோசனை பிடித்திருந்தது. தங்கைக்கு இருக்கும் வலிப்பு நோய் கட்டுக்குள் வராமல் அவளுக்கு இன்னொரு திருமணம் பற்றி யோசிக்க முடியாது. தன் திருமணம் வீட்டில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் என்று நம்பி தாய், தகப்பனிடம் விஷயத்தைச் சொன்னான்.
மல்லிகா ஆடித்தீர்த்துவிட்டார். “என் பொண்ணு கட்டிக்கிட்ட புருஷனைப் பறிகொடுத்து என்ன நிலையில் இருக்கா. நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு அவ முன்னாடி அங்கும் இங்கும் திரியப்போறியா?
அவ வாழ்க்கையைக் கெடுத்த உனக்கு இன்னொரு பொண்ணு கூட கொஞ்சிப் பேசி பழக ஆசை வருதுன்னா நினைக்கவே அசிங்கமா இருக்கு.” என்க, “என்னைப் பத்தி அப்படித்தான் நினைச்சுக்கிட்டு இருக்கீங்களா மா?” நரசிம்மன் கேட்ட நொடி மல்லிகாவுக்கு என்னவோ போல் இருந்தது.
இருந்தாலும் இது தான் இறங்கிப் போக வேண்டிய நேரம் இல்லை என்று நினைத்து, “உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வரவ என் பொண்ணை ஏதாவது சொன்னா அவ தாங்குவாளா? குறிஞ்சிக்கு கல்யாணம் ஆகாம உன் கல்யாணத்துக்கு நான் ஒத்துக்க மாட்டேன்.” என்று போர்க்கொடி தூக்கினார்.
வெங்கடாச்சலமும் மனைவியின் பேச்சை ஒத்தே பேசினார் என்பதால் ஆதரவுக்கு ஆள் இன்றி தனித்து நின்றான் நரசிம்மன்.
அப்போது அவனுக்குத் தோள் கொடுத்தாள் குறிஞ்சி. “இந்த உலகத்தில் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது லயன். கூடவே மத்தவங்களை திருப்திப்படுத்துவற்காக மட்டுமே நீ பிறக்கல. உன் வாழ்க்கை தான் உனக்கு முக்கியம். நீ பாரியைக் கல்யாணம் பண்ணிக்கோ. நல்ல பொண்ணு உன்னை நல்லாப் பார்த்துப்பா. உன்னோட வாழ்க்கை நல்லா இருக்கும்.” என்று சொல்லி தமையன் மனதைக் குளிர்வித்தாள்.
தங்கையின் வார்த்தைகள் கொடுத்த உத்வேகத்தின் அடிப்படையில் பாரியிடம், தங்கள் காதலைப் பற்றி அவர்கள் வீட்டில் சொல்லச் சொன்னான் நரசிம்மன்.
அப்போது தான் பாரி படிப்பை முடித்து வேலையில் சேர்ந்திருந்த நேரம். தன் வீட்டில் பெரிதாக எதிர்ப்பு இருக்காது என்கிற நம்பிக்கையில் ஒருநாள் இரவு அனைவரும் இருக்கும் நேரம் தன் காதலைப் பற்றி சொன்னாள்.
அவள் நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வகையில் பெரிதாக எந்த எதிர்ப்பும் இன்றி நரசிம்மனை வீட்டிற்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்தார் மகாவிஷ்ணு.
தாமரைக்கு மூத்த மகள் என்ன நினைப்பாளோ என்று சின்ன சுணக்கம் இருந்தது. ஆனால் செம்பா தங்கையை வாழ்த்திவிட்டு, காதலிக்கும் அளவுக்கு எங்க பாரி பெரிய பொண்ணா ஆகிட்டாளா என்று சற்றே கிண்டலும் செய்தாள்.
அதில் சற்றே வெட்கப்பட்ட பாரியிடத்தில், நரசிம்மனை எங்கே எப்படிச் சந்தித்தாள், யார் முதலில் காதலைச் சொன்னது, எங்கெல்லாம் சென்று வந்திருக்கிறார்கள் என்று விவரம் கேட்டு இரவு முழுக்க அவளைத் துளைத்து எடுத்தனர் செம்பாவும், கண்ணனும்.
அடுத்த சில நாள்களில் ஆசைக்காதலன் நரசிம்மனைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்தாள் பாரிஜாதம். அவள் வாழ்வில் அவள் உளமாற சிரித்த கடைசி நாள் அன்று தான்.
“அம்மா நான் சொன்னேன் இல்ல இவர் தான் லயன் அதாவது நரசிம்மன்.” துள்ளலாக தன் காதலனை அறிமுகப்படுத்தி வைத்தாள் பாரிஜாதம்.
மகாவிஷ்ணு, தாமரை, கண்ணன், செம்பருத்தி நால்வருமே இருக்க, சற்றும் தயக்கம் இல்லாமல் நரசிம்மன் அருகே அமர்ந்து கொண்டாள் பாரி. அதை நரசிம்மனும் இரசித்தான்.
ஆனால் அது தாமரைக்கு இரசிக்கவில்லை. தன் முதல் பெண் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நிற்கும் போது, அவள் கண் முன்னால் காதலனுடன் நெருக்கமாக இருப்பவள் தன் இரண்டாம் பெண்ணாகவே இருந்தாலும் அது வேண்டாத செயலாகவே தெரிந்தது அவருக்கு.
நரசிம்மன் படிப்பு, வேலை, பெற்றோர், உடன்பிறந்தோர் என்று விசாரணை போய்க்கொண்டு இருந்தது. முதல் தங்கையைப் போல் இரண்டாம் தங்கைக்கும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக கண்ணன் குடைந்து குடைந்து கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தான்.
அந்த இடத்திலேயே இன்ஸ்டாகிராம் ஐடி வாங்கி, அதில் இருந்த நரசிம்மனின் புகைப்படத்தை எடுத்து தன் நண்பர்களுக்கு அனுப்பி விசாரிக்கச் சொன்னான் கண்ணன்.
அவன் செய்வது அனைத்தும் புரிந்தாலும் அமைதியாகவே இருந்தான் நரசிம்மன். அவனும் ஒரு தங்கைக்கு அண்ணன் என்பதால் கண்ணனின் நடவடிக்கைகள் எதுவும் அவனுக்குத் தவறாகத் தெரியவில்லை.
நரசிம்மனின் தகுதி, அழகு அதைவிட முக்கியமாக அவனின் பொறுமை அந்த வீட்டில் யாருக்குப் பிடித்ததோ இல்லையோ செம்பருத்திக்கு மிகவும் பிடித்தது.
தன் பங்கிற்கு திருமணத்திற்குப் பிறகு மனைவிக்கும், அம்மாவுக்கும் பிரச்சனை வந்தால் எப்படி சமாளிப்பீர்கள் என்பது போல் சில கேள்விகளை அவள் கேட்டு வைக்க, அதற்கும் பொறுப்பாக நியாயமாகப் பேசினான் நரசிம்மன். அது அவளை மேலும் மேலும் கவர்ந்தது என்றே சொல்ல வேண்டும்.
முந்தைய நாள் அழைத்திருந்த உறவுக்காரப் பெண்ணொருத்தி, “நீ தப்பு பண்ணிட்ட செம்பா, இந்தக் காலத்தில் குடி, சூது இல்லாத ஆண்கள் ரொம்பக் கம்மி. பொறுப்பான, சாந்தமான ஆண்கள் அதை விடக் கம்மி. அன்பு, அழகு, குணம், பணம் னு எல்லாம் இருக்கும் கோவர்தனை ரொம்ப சில்லி ரீசன் சொல்லி விவாகரத்து பண்ணி இருக்க.
உன்னோட பெயர் ரிலேட்டிவ் சர்க்கிளில் ரொம்பக் கெட்டுப் போய் இருக்கு. இனி உனக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்குமாங்கிறது சந்தேகம் தான்.” என்று ஆதங்கத்தைக் கொட்டி இருக்க, அந்த வார்த்தைகளின் தாக்கமும் சேர்ந்து அவளை மொத்தமாக நரசிம்மன் பக்கம் திரும்பி இருந்தது. இது எதுவும் தெரியாமல் சம்பிரதாய பேச்சுகள் முடிந்த பின்னர் சாப்பிட்டுக் கிளம்பினான் நரசிம்மன்.
அடுத்தடுத்த நாள்கள் பாரியோடு சேர்த்து செம்பருத்தியும் நரசிம்மனைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தாள். தங்கை ஆசை ஆசையாய் காதலித்தவன் என்று பார்க்காமல், தங்கை மூலமாக தன் வீட்டிற்கு அறிமுகமானவன் என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள் செம்பருத்தி.
அவன் வேலை செய்யும் இடம், அவன் நட்பு வட்டாரம், அவன் குணம் எனப் பல இடங்களில் தனக்குத் தெரிந்தவர்கள் மூலம் விசாரித்தாள். எதையும் அவள் மறைத்துச் செய்யவில்லை. வீட்டினர் அனைவரின் முன்னாலும் தான் செய்தாள். அன்பான அக்காவாக தங்கையின் நலனுக்காக விசாரிக்கிறாள் என்று தான் நினைத்தனர் அவள் குடும்பத்தினர்.
“அக்கா நீ ரொம்ப யோசிக்கிற. என்னோட லயன் சொக்கத்தங்கம். முட்டி மோதி கடைசியில் என்னோட செலக்ஷனை நீ பாரட்டத்தான் போற பார்.” பெருமையாய் சொன்ன தங்கையைப் பார்க்கும் போது நெஞ்சில் சுருக்கென்று ஏதோ செய்தது. ஆனால் இழுத்துப் பிடித்து தன் பழைய நிலைக்கு வந்தாள் செம்பருத்தி.
தாமரைக்கண்ணனுக்கு நரசிம்மன் மீது பரம திருப்தி. அதை அப்படியே வீட்டில் சொல்ல அனைவருக்கும் சந்தோஷம். இதைக் கேட்ட செம்பருத்தி தன் முடிவில் இன்னும் தீர்மானமானாள்.
அவள் கேட்டிருந்த இடங்களில் இருந்தெல்லாம் தகவல்கள் வந்து சேர அனைத்தும் அவள் எதிர்பார்ப்பை அப்படியே பூர்த்தி செய்தது. இனி தான் தனக்கு வேலை அதிகம் என்று புரிந்து முதலாவதாக தன் தாயை சந்தித்தாள்.
“நரசிம்மனை எனக்குப் பேசுங்கம்மா.” என்ற பெரிய மகளின் குரலில், கையில் இருந்த சமையல் பாத்திரத்தை கீழே போட்டார் தாமரை. அவருக்கு செம்பா மீது அலாதி அன்பு தான். அதற்காக அவள் செய்ய நினைப்பது பாவம் என்று அறியாதவர் இல்லையே.
சில நொடிகள் பனி ஏரியில் உறைந்த மீனாய் செயலற்று நின்றவர் சுதாரித்து, “தப்பு செம்பா. அவர் பாரி ஆசைப்பட்டவர்.” என்க, “காதலிச்சவங்களைத் தான் கல்யாணம் பண்ணனும் னா உலகத்தில் பாதி பேருக்குக் கல்யாணம் நடக்காது. வேற கல்யாணம் ஆகி வாழ ஆரம்பிச்சுட்டா பாரி தன்னால் நரசிம்மனை மறந்திடுவாம்மா.” ஆணித்தரமாகச் சொன்னாள் செம்பருத்தி.
“இப்படியெல்லாம் பேசாத டி. எங்க காலத்துக்கு அப்புறம் நீயும், அவளும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்கணும் னு நாங்க நினைச்சுக்கிட்டு இருக்கோம். யாரோ ஒருத்தருக்காக நீங்க அடிச்சுக்கப் போறீங்களா?” தவிப்பாய் சொன்னார் தாமரை. செம்பருத்தி இப்படிப் பேசுகிறாள் என்று தெரிந்தாலே வீட்டில் குருசேத்திரப் போர் துவங்கிவிடும் என்பது அவர் அறிந்த கதை தானே.
“இப்பவும் அந்த நினைப்பில் மாற்றம் வேண்டாம் மா. அவ என் தங்கச்சி. அவளை நான் அப்படியே விட்டுட மாட்டேன். அவளுக்கு இதைப் பத்தி பேசி புரிய வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு. பொறுப்பான பொண்ணு, விட்டுக்கொடுத்துப் போகக் கூடிய பொண்ணு தான். கண்டிப்பா புரிஞ்சுப்பா.
நரசிம்மனுக்கும் எனக்கும் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் நானே அவளுக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பேன்.” அத்தனை உறுதியாகச் சொன்னாள் செம்பா.
“ஊர் சிரிக்கும் டி. சொந்தக்காரங்களுக்கு என்ன பதில் சொல்றது.” என்க, “நான் எதிர்பார்க்கும் படியான மாப்பிள்ளை அமையாம இரண்டு வருஷமா நம்ம குடும்பமே திண்டாடிக்கிட்டு இருக்கோம். உன்னோட, அப்பாவோட சொந்தத்தில் என் வயசில், என்னோட மூத்தவங்க எத்தனை பையன்கள் இருக்காங்க. யாரும் என்னைப் பெண் கேட்டு வரலையே. இவ்ளோ தான் மா சொந்தக்காரங்க இலட்சணம்.” விரக்தியாகச் சொன்னாள் செம்பருத்தி.
மகளின் விரக்திப் பேச்சு அந்த தாயை கொஞ்சம் அசைத்துப் பார்த்தது. “அந்தப் பையன் ஒத்துப்பாரா மா.” என்க, “அதுக்கும் என்கிட்ட ஒரு யோசனை இருக்கு மா. அவருக்கு ஒரு தங்கச்சி இருக்காங்க இல்லையா?
அவர் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, அந்தப் பொண்ணை கண்ணன் அண்ணன் கல்யாணம் பண்ணிப்பாருன்னு சொன்னா அவர் ஒத்துக்க வாய்ப்பிருக்கு மா.” தன் மதியூகத்தைக் காட்டினாள் செம்பருத்தி.
“பைத்தியம் மாதிரி பேசாதம்மா. அந்தப் பொண்ணு ஏற்கனவே கல்யாணம் ஆகி புருஷனை இழந்தவ. கூடவே வலிப்பு நோய் உள்ளவ. அவளை மாதிரி ஒருத்தியை எதுக்காக என் பையன் கல்யாணம் பண்ணிக்கனும்.” வேகமாகக் கேட்டார் தாமரை.
“உன் பொண்ணு நானும் அப்படியொரு நிலையில் தானேம்மா இருக்கேன். எனக்கு கல்யாணம் ஆகாத பையன் வேணும் னு கேட்கும் போது உனக்கு அது நியாயமாத் தானே தோணுச்சு. இப்ப மட்டும் என்ன?
வலிப்பு நோய், அது கொஞ்சம் பிரச்சனை தான். ஆனா ஒருவேளை அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வந்த அப்புறம் அந்த பொண்ணுக்கு இப்படி ஒரு நோய் வந்தா அதுக்காக அவங்களை ஒதுக்கியா வைப்போம். அந்த மாதிரி நினைச்சு பார்த்துக்க வேண்டியது தானேம்மா.
கொஞ்சம் யோசிச்சு பாருங்க. கல்யாணம் ஆகாத ஒருத்தரை தான் கல்யாணம் பண்ணிக்கனும் னு நான் இருக்கேன். இதுக்கு பையன் ஒத்துக்கிட்டாலும், மாமியாருக்கு மனசில் குறை இருக்கத்தான் செய்யும். அதை வைச்சு என்னை ஏதாவது சொல்லிக்கிட்டே தான் இருப்பாங்க.
ஆனா நரசிம்மன் விஷயம் அப்படி இல்லம்மா. குறிஞ்சி இங்க வாழ்ந்தா அவங்க அம்மா என்னை நல்லபடியாப் பார்த்துப்பாங்க. நான் சந்தோஷமா நிம்மதியா வாழ்வேன் மா.” என சுயநலத்தின் உச்சமாய் நின்றாள் செம்பருத்தி.
“இதெல்லாம் வேண்டாம் மா. உனக்கு நல்ல பையனாப் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது அப்பாவோட, அண்ணனோட கடமை. தங்கச்சி வாழ்க்கையை தட்டிப் பறிக்க நினைக்காதம்மா.” அதட்டலாகச் சொல்ல வேண்டியதை கெஞ்சலாகச் சொல்லி தவறு செய்தார் தாமரை.
“எத்தனை வயசில் மா கல்யாணம் பண்ணி வைப்பாங்க. இப்பவே என்னோட வயசு இருபத்தியெட்டு. இன்னும் எத்தனை வருஷம் நான் காத்திருக்கணும் னு தெளிவா சொல்ல முடியுமா உன்னால். நான் எதிர்பார்க்கிற மாதிரி மாப்பிள்ளை அமையவே இல்லன்னா நான் என்ன பண்றது.
நான் யாருக்கு என்னம்மா தப்பு பண்ணேன். நீங்க சொன்ன மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணதால் தானே இன்னைக்கு இப்படி நிக்கிறேன். இப்ப என்னோட விருப்பத்துக்கு ஏத்த வகையில் கல்யாணம் பண்ண நினைக்கிறதில் என்ன தப்பு.”
“நான் எதிர்பார்த்த அத்தனை குணங்களோட கண் முன்னாடி இருக்கார் நரசிம்மன். அவரை விட்டுட்டா நான் காலத்துக்கும் கல்யாணம் ஆகாம உன் பொண்ணா தான் இருப்பேன் பரவாயில்லையா உனக்கு.” தன் பிடியில் உறுதியாய் நின்றாள் செம்பருத்தி.
“பாரி பாவம் டி.” என்க, “அவ என்னம்மா பாவம். அவளுக்கு என்ன குறைச்சல். அழகா இருக்கா, நல்லா படிச்சிருக்கா, நல்ல குணமான பொண்ணு. நரசிம்மனை விட்டா கூட அவளுக்கு ஆயிரம் வரன் வரும். ஆனா எனக்கு யார் மா வருவா. நான் எனக்குப் பிடிச்ச வாழ்க்கை வாழனுமா இல்ல உன் பொண்ணா செத்துப் போகணுமாங்கிறதை யோசிச்சு ஒரு முடிவெடு.” என்றதோடு அறைக்குள் சென்றாள்.
முல்லையோடு கோவில் வந்திருந்த பாரிஜாதத்திற்கு நெஞ்சம் அடித்துக்கொண்டே இருந்தது. ஏதோ தவறு நடக்கப் போவது போல் உள்ளுணர்வு உணர்த்த, நீயே துணை என்று தெய்வத்திடம் மனக்குறையை இறக்கி வைத்துவிட்டு வழக்கம் போல் முல்லையின் வழவழ பேச்சை கேட்டுக்கொண்டு இருந்தாள்.
இங்கே, வீட்டின் காலிங்பெல் சத்தம் கேட்க தாமரை சென்று கதவைத் திறந்தார். ஒருமுறை மட்டுமே பார்த்திருந்தாலும் நரசிம்மன் முகம் நன்றாக நினைவில் பதிந்திருந்தது அவருக்கு. வாங்க மாப்பிள்ளை என்று சொல்ல வந்தவர் அவன் முகத்தில் இருந்த கோபத்தைப் பார்த்ததும் தணிந்தவராக அமைதியாக இருக்க, அவன் உள்ளே வந்தான்.
அவனைத் தொடர்ந்து விஷ்ணு, கண்ணன் என இருவரும் வரவும் மூத்தமகள் எதையோ செய்து வைத்துவிட்டாள் என்பதைப் புரிந்துகொண்ட தாமரை தன் கணவனைச் சாந்தப்படுத்தும் நோக்கில் அவர் அருகே செல்லப்பார்க்க, எதைப் பற்றிய யோசனையும் இல்லாமல் நரசிம்மனைப் பார்த்ததும் எழுந்து நின்ற செம்பாவை ஓங்கி அறைந்துவிட்டார் விஷ்ணு.
“அப்பா.” செம்பா பதற, “என்ன நெஞ்சழுத்தம் உனக்கு. தங்கச்சி கட்டிக்கப் போறவர்கிட்ட என்ன பேச்சு பேசி இருக்க.” ஆங்காரமாகக் கேட்டார்.
“என்ன தப்பாக் கேட்டுட்டேன். எத்தனையோ இடங்களில் அக்காவைப் பொண்ணு கேட்டு வந்து தங்கச்சியைக் கல்யாணம் பண்ணிக்கிறாங்க தானே. அதே மாதிரி இங்க கொஞ்சம் வித்தியாசமா தங்கச்சியைப் பொண்ணு கேட்டு வந்தவரை நான் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறேன்.
இதில் என்னோட நல்லது மட்டும் இல்ல பாரியோட நல்லது, அவரோட நல்லது, அவர் தங்கச்சியோட நல்லதுன்னு எல்லாம் இருக்கு. நான் ஒன்னும் எடுத்தோம் கவிழ்த்தோம் னு பேசல. எல்லாத்தையும் யோசிச்சு தான் பேசுறேன். நான் சொல்றதைக் கொஞ்சம் பொறுமையாக் கேட்டா, என் யோசனை உங்களுக்கே பிடிக்கும்.” குரல் உயர்த்தினாள் செம்பருத்தி.
“அவர் பாரிக்கு பார்த்த மாப்பிள்ளை இல்லை. பாரி காதலிக்கிற மனிதர்.” கண்ணன் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல, “நீயும் கூடவா இந்தக் காதல் என்கிற வார்த்தையை நம்புற. காதல் எல்லாம் வயசில் வருவது தான். அதுக்காக காதலிச்சவங்க எல்லோரும் கட்டாயம் கல்யாணம் பண்ணிக்கனும் னு இல்லை.
கல்யாணம் ஆனா எல்லாம் மறந்திடும். சோகம் வந்தா தொலைச்ச வாழ்க்கையை நினைச்சு வருத்தப்படுவதும், சந்தோஷம் வந்தா தான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை தான் சிறந்ததுன்னு நினைக்கிறதும் தான் மனித இயல்பு. எல்லாம் சரியாகிடும்.” நரசிம்மனைப்பார்த்தபடி சொல்லி இருந்தாள்.
அவளிடம் பேசக்கூடப் பிடிக்காமல் பாரிக்கு அழைத்து வீட்டிற்கு வரச்சொன்னான் நரசிம்மன். அவன் குரலில் கோபம் இருப்பது போல் தெரிய, எதற்கென்று புரியாமல் போனாலும் வேகமாகத் தன் இல்லத்திற்கு வந்து சேர்ந்தாள்.
வீட்டின் நடுவில் அனைவரும் அமர்ந்திருப்பதைப் பார்த்து குழம்பியவளாக, “கண்ணா அண்ணா, செம்பா நீங்க இந்நேரத்துக்கு இங்க என்ன பண்றீங்க. வேலைக்குப் போகல.” என்றபடி நரசிம்மன் அருகே வந்து நின்றாள்.
“உன் அக்காவுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கனுமாம்.” விஷயத்தைப் போட்டு உடைத்தான் சிம்மன்.
“லயன், விளையாடுவதற்கு இடம் பொருள் ஏவல் இருக்கு. இப்படியெல்லாம் செய்யாதீங்க.” விஷயத்தின் வீரியம் புரியாமல் பேசினாள் பாரி.
“விளையாட்டு இல்ல பாரி, நிஜம் தான். கொஞ்ச நாள் முன்னாடி வரை என்னோட நல்லதுக்காக நரசிம்மன் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லா இருக்கும் னு நினைச்சேன்.
ஆனா இவரோட அப்பாகிட்ட பேசின பிறகு தான் புரியுது. உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் நடந்தா உன்னோட வாழ்க்கை நல்லா இருக்காதுன்னு. அந்த வகையில் என் முடிவு தான் எல்லோருக்கும் சரி.” என்ற செம்பருத்தி வார்த்தையை முடிக்கவில்லை,
“வாயை மூடுங்க. யாரைக் கேட்டு என் அப்பாவைப் போய் பார்த்தீங்க. கொஞ்சம் கூட சென்ஸ் இல்லையா உங்களுக்கு. மகளோட வாழ்க்கையைப் பத்தி கவலையில் இருக்கும் ஒருத்தர்கிட்ட போய் உங்க அண்ணனை வைச்சு என்ன மாதிரியான ப்ளே பண்ணி இருக்கீங்க. பாரியோட கூடப்பிறந்த அக்காகிட்ட இவ்வளவு கன்னிங்னெஸ் இருக்கும் னு நான் எதிர்பார்க்கல.” உரத்த குரலில் அழுத்தமாகச் சொன்னான் நரசிம்மன்.
“சிம்மன் எதுக்காக இவ்வளவு கோபம். நான் உங்ககிட்ட என்னோட ப்ரப்போசலை எடுத்து வரும் போது எனக்கு உங்க பக்கம் இருந்து ஒரு சப்போர்ட் இருந்தா நல்லா இருக்கும் னு தோணவும் தான் நான் உங்க அப்பாவைப் போய் பார்த்தேன். அவர் நான் சொன்னதும் ஒத்துக்கிட்டார். நீங்க தான் குதிக்கிறீங்க.” என்றாள் செம்பருத்தி.
“செம்பா.” கோபத்தில் பாரி கத்த, “பாரி, அக்கா டி.” என்றார் தாமரை.
“அக்கான்னா அக்கா மாதிரி நடந்துக்கணும். என் வாழ்க்கையைப் பங்கு போட எத்தனை தூரம் திட்டம் போட்டு இருக்கா இவ.” நெஞ்சு கொதித்தது பாரிக்கு.
“என்னைப் பார்த்து பேசு பாரி. நான் உனக்கு நல்லது பண்ண தான் நினைக்கிறேன்.” என்றாள் குறிஞ்சி.
“எது நல்லது? என் லயனை என்கிட்ட இருந்து பிரிச்சு நீ கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறது தான் நல்லதா? அவரை நான் எந்தளவு காதலிக்கிறேன்னு உனக்குத் தெரியுமா?” பாரி கத்த,
“காதல் எல்லாம் விஷயமே இல்ல பாரி. அதைத் தாண்டின எத்தனையோ விஷயங்கள் கல்யாண வாழ்க்கைக்குத் தேவை. உனக்கும், சிம்மனுக்கும் கல்யாணம் ஆனா நீ ரொம்பக் கஷ்டப்படுவ.” என்றவளை எதைக்கொண்டு அடித்தால் நலம் என்று யோசிக்கும் அளவு போய்விட்டாள் தங்கை.
“குறிஞ்சிக்கு நல்லபடியா கல்யாணம் ஆகி குழந்தை பிறக்கும் வரை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன், ஒருவேளை கல்யாணம் ஆனாக் கூட பிரம்மச்சரிய விரதம் இருப்பேன்னு நரசிம்மன் உள்ளுக்குள் பிரமானம் எடுத்திருக்கார் அது உனக்குத் தெரியுமா?” என்க, அதிர்ச்சியோடு நரசிம்மனைப் பார்த்தாள் பாரி.
“உன்கிட்ட சொல்லக் கூடாதுன்னு இல்ல பாரி. சொல்ற சூழ்நிலை அமையல. தப்பு தான். ஆனா இதனால் என்ன பெருசா ஆகிடப் போகுது.” என்றான் நரசிம்மன்.
“என்ன ஆகிடுமா? என் தங்கச்சி சின்னப்பொண்ணு. அவ மனசுக்குள்ள ஆயிரம் கனவுகள் இருக்கும். அது எதுவும் அவ கல்யாண வாழ்க்கையில் நிறைவேறாதுன்னு வந்தா அவளால் எப்படி சந்தோஷமா வாழ முடியும். ஏங்க மாட்டாளா?
உங்களுக்கு நடுவில் பிரச்சனை உருவாக அந்த ஏக்கம் ஒன்னு போதுமே. பிரச்சனை வராத வரைக்கும் தான் காதல் எல்லாம். பிரச்சனை வந்தா காதல் எல்லாம் காத்துக்கு சமம்.” நரசிம்மனிடம் சொன்னவள்,
“நான் சொல்வதைக் கேளு பாரி. உன்னால் இவர் கூட வாழ முடியாது. கல்யாணம் முடியாத முதிர்கன்னிகளுக்குத் தாம்பத்ய சுகம் தேவைப்படாது. ஆனா கல்யாணம் ஆகி புருஷன் பக்கத்தில் இருந்தா கட்டாயம் தேவைப்படும். அது கிடைக்காமப் போனால் நீ அவரை வெறுக்கவே ஆரம்பிச்சிடுவ.” என்றாள் செம்பருத்தி.
“அதனால் நீ அவரைக் கல்யாணம் பண்ணிக்கப் போறியா அக்கா. அவரைக் காதலிக்கிற என்னால், அவருக்காக என்ன வேண்ணா செய்யத் தயாரா இருக்கும் என்னால் அவரோட வாழ முடியாது. அவருக்காகக் காத்திருக்க முடியாது.
ஆனா உன்னால் வாழ முடியுமோ. உன்னால் மட்டும் காத்திருக்க முடியுமோ. நீ என்ன வானத்தில் இருந்து குதித்த தெய்வப் பிறவியா? உன்னால் மட்டும் எல்லாம் சாத்தியம் ஆவதற்கு.” கொதிக்கும் வெந்நீர் ஊற்றைப் போல் வந்தது பாரியின் வார்த்தைகள்.
“அது அப்படி இல்ல பாரி. நான் வாழ்க்கையில் அடிபட்டவ. என்னால் அவர் மனசைப் புரிஞ்சுக்க முடியும். அவருக்கு ஏற்ப நடந்துக்க முடியும். காத்திருக்க முடியும்.
ஆனால் நீ இளரத்தம். உன்னால் இதெல்லாம் முடியாது. உன் மனசை விட உன் உடம்புக்கு ஆசைகள் அதிகம் இருக்கும். அந்த ஆசைகளுக்கு நீ அணைபோட்டாலும் அது ஒருநாள் உடைந்து உனக்கும் நரசிம்மனுக்கும் நடுவில் பெரும் சண்டையா முடியும். ஆனா நான் ஏற்கனவே உடைந்த அணை தான். என்னால் தாக்குப் பிடிக்க முடியும்.” செம்பருத்தி சொல்லி முடிப்பதற்கு முன்னால் அவளை அறைந்திருந்தாள் பாரி.
“ச்சீ இத்தனை கேவலமானவளா என் கூடப்பிறந்த அக்கா.” என்று முகம் சுழித்தாள்.
“பாரி தப்பா பேசாத. அக்கா உன் மேல் இருக்கும் அக்கறையில் தான் சொல்றா.” அப்போதும் மூத்த மகளுக்கு ஆதரவாக வந்தார் தாமரை.
“மண்ணாங்கட்டி. எது எனக்கு நல்லது. நான் காதலிக்கிற, என்னோட எதிர்காலமா நான் நினைக்கிற ஒருத்தரை என்கிட்ட இருந்து பிரிக்கிறது தான் எனக்கு நல்லதா?” வெகுண்டெழுந்தாள் பாரிஜாதம்.
“நான் எதார்தத்தைப் பேசுறேன் பாரி. காதல் எல்லாம் மாயாஜால வார்த்தை. அதே மாதிரி ஆணும், பெண்ணும் சமம். இரண்டு பேரும் சம அளவு உரிமையோடும், அதிகாரத்தோடும் வாழ்வோம் என்பதெல்லாம் நிஜத்தில் நடக்கிற காரியம் இல்லை.
குடும்பம் நல்லபடியா நடக்க புருஷன், பொண்டாட்டி இரண்டு பேரில் ஒருத்தர் அப்பர் ஹேண்டா இருக்கணும், இன்னொருத்தர் அவருக்கு கீழே இருக்கணும். அது தான் அவங்க இரண்டு பேருக்குமே நல்லது. உன்னால் நரசிம்மன் கூட அப்படியொரு வாழ்க்கை வாழ முடியாது டி.
நீ சுதந்திர விரும்பி. உன்னால் அவரோட ஒத்து வாழ முடியாது. எல்லாத்துக்கும் மேல அவரோட அம்மாவை உன்னால் சமாளிக்கவே முடியாது. உன்னோட துடுக்குத் தனத்துக்கு நாளும், பொழுதும் அவங்ககிட்ட சண்டைக்கு தான் போவ. உனக்கும், அவர் அம்மாவுக்கும் நடுவில் மாட்டிக்கிட்டு தினம் தினம் நரசிம்மன் சித்தரவதை அனுபவிக்கணுமா சொல்லு.
இந்த சமுதாயத்தில் நான் வாங்காத பேச்சே கிடையாது. என்னால் எதையும் பொறுத்துப் போக முடியும். நாலையும் யோசிச்சு தான் சொல்றேன் பாரி. நீ ஒதுங்கிடு. உனக்கு நான் வேற ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்க்கிறேன்.” செம்பருத்தி சொல்ல, பாரியின் கோபம் முழுக்க அம்மாவின் பக்கம் வந்தது.
“எங்க இருந்தும்மா இவளையெல்லாம் பெத்த?” என்க, “எனக்கு என்னவோ அவ சொல்றதிலும் விஷயம் இருக்குன்னு தோணுது.” என பாரி சற்றும் எதிர்பாராத வார்த்தைகளை உதிர்த்தார் தாமரை.
“உன் பாரபட்ச புத்தியைக் காட்டிட்ட இல்ல. உன் ஆசைப்பொண்ணு வாழத்தெரியாம வாழ்ந்து பிழையாகிப் போய் வந்ததா, அவ மேல் பரிதாபப்பட்டு என்கிட்ட இருந்து என்னோட சந்தோஷத்தைப் பிடுங்கிக் கொடுத்து என்னை யாரோன்னு நிக்க வைக்கப்போறியாம்மா. அப்பா, கண்ணாண்ணா நீங்களும் இவளுக்கு உடைந்தையா?” விரக்தியின் உச்சத்தில் பேசினாள் பாரி.
“எந்த ஜென்மத்தில் யார் குடியைக் கெடுத்தேனோ சொந்த தங்கச்சி குடியைக் கெடுக்க நினைக்கும் பொண்ணு எனக்கு பிறந்திருக்கா. நான் எப்படிடா இந்த அசிங்கத்துக்கு ஒத்துப்போன். அப்பா நான் இருக்கேன். உனக்கும் நரசிம்மனுக்கும் தான் கல்யாணம்.” உறுதி கொடுத்தார் மகாவிஷ்ணு.
“அவ எதிர்காலத்தை நினைச்சு பயத்தில் என்னென்னவோ பண்ணிட்டா பாரி. அவளைத் தப்பா நினைக்காத. எனக்கும் அவ மேல வருத்தம் அதிகமாவே இருக்கு. ஆனா நான் உன்பக்கம் தான் நிற்பேன்.” என்றான் கண்ணன்.
அதே கண்ணன் அடுத்த சில நாள்களில், தானே முன்னின்று செம்பருத்தி மற்றும் நரசிம்மனுக்கு பதிவுத் திருமணம் செய்து வைத்து, அவர்களை புதுமண ஜோடியாக தனக்கு அறிமுகப்படுத்தி வைப்பான் என்பதை பாரி கனவிலும் நினைத்திருக்கவில்லை.
Latest Post: பாய்மரக் கப்பல் - Story Thread Our newest member: Manjula Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page