About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம் 13
நித்யா திலீப்பிடம் சென்று “திலீப், எப்படியாவது அகத்தியன் சார் உயிரை காப்பாத்திடு. மேக்னா இப்போ பழைய மாதிரி இல்ல, என்னவோ போல பேசறா. அவளையும் கொலை பழியிலிருந்து காப்பத்தணும்” என்று கேட்டுக் கொண்டாள்.
“நான் உயிரை கொடுத்து காப்பாத்த ரெடியா இருக்கேன் நித்தி. என் பாஸ் தானே ஒத்துழைக்க மாட்டேங்கிறாரு” என்றான் சலிப்புடன்
மறுநாள் இளவரசி உடையில் தயாராகி வந்த மேக்னா, “ஹாய் அகத்தியன், இன்னைக்கு வில் பயிற்சி கொடுக்கற மாதிரி வீடியோ சூட் பண்ணிடலாமா?” என்றாள் ஆர்வமாக
“என் பாஸை கொலை பண்றதுக்கு எவ்வளவு ஆர்வம் பாரு உன் பிரெண்ட்க்கு” என்று நித்யாவின் காதருகே முணுமுணுத்தான் திலீப்
“ஓகே மோகனா, வா போகலாம்” என்று பேலஸின் பின்புறம் இருந்த தென்னந்தோப்பிற்கு அவளை அழைத்து சென்றான்.
“அகத்தியன் இப்போ பெயின் எப்படி இருக்கு? என்னோட வாளால தான் உங்களுக்கு காயமாச்சுனு கேட்டதும் மனசுக்கு ரொம்ப கஷ்டமா போயிடுச்சு. நேத்து திடீர்னு கண்ணெல்லாம் இருட்டிட்டு வந்துச்சு அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுனே எனக்கு சுத்தமா தெரியல. ஐயம் சாரி”
“ஹே மோகனா, பி கூல். எனக்கு எதுவும் இல்ல. ஐயம் ஆல்ரைட்” என்று அவள் கரத்தை அழுந்த பற்றினான்.
புன்னகையோடு அவன் தோளில் சாய்ந்து கொண்டு நடந்தாள்.
அவர்கள் பின்னாடியே சென்ற திலீப்பிற்கு இதை பார்த்து கடுப்பாக இருந்தது. “மேக்னா, நேத்தே உங்க இரண்டு பேரையும் என்னால ஒண்ணா கவர் பண்ண முடியல. தனித்தனியா போஸ் கொடுங்க ப்ளீஸ்” என்றான் சத்தமாக
ஒருமுறை அவனை அழுத்தமாக பார்த்து, “ஓகே” என்றாள் தோள்களை குலுக்கிவிட்டு
அந்த தென்னந்தோப்பிற்கு நடுவே மேக்னாவின் உயரத்திற்கு சரியாக இருந்த தென்னை மரங்களையும் அதிலிருந்த செவ்விளநீர் காய்களையும் பார்த்து அதிசயத்து போனாள்.
“அகத்தியன், என்ன இது? தென்னை மரம்னாலே ரொம்ப உயரமா தானே இருக்கும். இது என்ன குட்டையா இருக்கு, நானே பறிச்சுக்கலாம் போலயே”
“ஆமா மோகனா, செவ்வாங்கன் குட்டை தேங்காய் (Chowghat Orange Dwarf)
வகையை சேர்ந்தது. குறுகிய காலத்துல நமக்கு இளநீரை தரும்” என்றவன் அங்கிருந்த வேலையாளிடம் கண்காட்ட, உடனே அவன் வந்து அவர்கள் நால்வருக்கும் இளநீர் வெட்டி கொடுத்தான்.
“வாவ், டேஸ்ட் நல்லா இருக்கு” என்ற படி குடித்தவள் அங்கே மரத்தின் இளநீர்களுக்கிடையே ஓடிக் கொண்டிருந்த அணில்களை பார்த்தாள். அது ஒவ்வொரு இளநீராக கொறித்து பார்த்து கொண்டிருந்தது. அதன் அழகை ஓரக் கண்ணால் ரசித்தபடி அவளும் இளநீரை குடித்துக் கொண்டிருந்தாள்
செவ்விளநீரை பருகும் மேக்னாவின் செவ்விதழ்களை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் அகத்தியன். அண்ணாந்து அவள் இளநீர் குடிக்கும் போது சங்கு கழுத்து ஏறி இறங்கும் அழகை ரசித்து பார்த்தான். கைகளை கட்டிக் கொண்டு அங்கிருந்த உயரமான தென்னை மரத்தின் மேல் சாய்ந்து நின்றுக் கொண்டு அந்த ஐந்தரை அடி இளநீரை கண்களால் பருகி கொண்டிருந்தான்.
நிதானமாக இளநீரை ரசித்து குடித்தவள், திரும்பி அகத்தியனை பார்த்து “நல்ல டேஸ்ட், நீங்க இளநீர் குடிக்கலையா அகத்தியன்?” என்றாள்.
“இன்னும் இல்ல” என்பதாய் தலையாட்டியவன் விழிகள் இன்னுமே அவள் இதழ்களின் மேல் தான் அழுத்தமாக படிந்திருந்தது.
அதற்குள் திலீப் இடையிட்டு, “மேக்னா மொதல்ல உங்க போர்ஷனை எடுத்திடலாம்” என்று சொல்லி நித்யாவை பார்த்து கண்களை அசைக்க, அவள் வந்து மேக்னாவின் கண்களை ஒரு துணியால் கட்டினாள்.
“எதுக்கு நித்தி கண்ணை கட்றே”
“மேக்னா, உங்க கதைப்படி அகன் மோகனாங்கியின் கண்ணை கட்டிட்டு தானே வில் பயிற்சி கொடுத்தாரு. அதனால தான் உங்க கண்ணை கட்ட சொன்னேன். இப்போ நீங்க உங்க எதிர்ல இருக்கற தென்னை மரத்துல உட்கார்ந்து இருக்கிற அணிலை எய்ம் பண்ணுங்க. அந்த அணில் எந்த இளநீர்காய் மேல உட்கார்ந்து இருக்கோ, அந்த காயை நீங்க எய்ம் பண்ணி அடிக்கணும்.
பார்த்தீங்க இல்ல, அது ஒரு இடத்துல நிக்காம வேற வேற இடத்துக்கு போய்ட்டு வந்துட்டு இருக்கு. அதோட சவுண்டை கவனிக்கிற மாதிரி பாவனை செஞ்சு கரெக்டா அதை குறி பாருங்க, அந்த சீனை நான் வீடியோ எடுத்துக்கறேன்”
“ஐயோ, அந்த அணில் பாவம், நான் தப்பா அது மேல அம்பு விட்டா செத்துடுமே” என்றாள் மேக்னா
‘அணில் பாவம், என் பாஸ் மட்டும் என்ன தக்காளி தொக்கா’ என்று மனதிற்குள் அவளை வசைபாடியவன்,
“நீங்க, அம்பை விட வேணாம் எய்ம் மட்டும் பண்ணுங்க போதும், மத்தது எல்லாம் நான் பார்த்துக்கறேன்” என்றான்.
மேக்னாவும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் வில்லில் அம்பை பிடித்து, அணில் இருக்கும் திசையில் குறி பார்த்தாள். அணில் ஓரிடம் இல்லாமல் இங்குமங்கும் ஓடியது. அங்கே நிசப்தமாக இருந்ததால் அதன் ஒவ்வொரு அசைவையும் அவளால் உணரமுடிந்தது. அது போகும் திசைப்பக்கம் சரியாக தன் குறியை மாற்றிக் கொண்டு இருந்தாள்.
இத்தனை காலங்கள் கடந்தும் சொல்லி கொடுத்ததை நன்றாக நினைவு வைத்திருக்கிறாளே என்று அகத்தியன் ஆச்சரியத்துடன் தன்னை மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அணில் அவளை சோதிக்கும் படி ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தது
திடீரென்று திலீப் அகத்தியனை பிடித்து கீழே தள்ளினான். தரையில் விழுந்தவன் அப்படியே திரும்பி திலீப்பை பார்த்து, “திலீப், ஆர் யு மேட்? ஏன்டா என்னை தள்ளி விட்டே?” என்றான் கோபமாக
“சாரி பாஸ், இங்கே பாருங்க” என்று அவன் சாய்ந்து நின்றிருந்த மரத்தை காட்டினான்.
அதன்மேல் அம்பு குத்திக் கொண்டு இருந்தது. மேக்னா அணிலை குறி பார்ப்பது போல நின்றுவிட்டு, உடனே திரும்பி அவன் மேல் அம்பெய்திருக்கிறாள்.
நொடி பொழுதில் திலீப் அதனை புரிந்துக் கொண்டு, அவனை தள்ளிவிட்டிருக்கிறான் என்று புரிந்தது. அகத்தியன் இப்போது மேக்னாவை பார்க்க, அவள் தரையில் மயங்கி விழுந்திருந்தாள்.
நித்யா மேக்னாவை எழுப்புவதற்கு கையில் இருந்த தண்ணீர் பாட்டிலுடன் அவளிடம் சென்றாள்.
“நித்யா, வெயிட். நான் மோகனாவை பார்த்துக்கிறேன். நீங்க எல்லாரும் அவங்கவங்க ரூமுக்கு போங்க, 5 மினிட்ஸ் டைம் யாரும் இங்க இருக்க கூடாது” என்றான்
“பாஸ், உங்களை எப்படி தனியா விட்டுட்டு போறது” என்ற திலீப்பை முறைத்தான்.
“நீ என் உயிரை காப்பாத்தற அளவுக்கு நான் உன்னை விட நோஞ்சானும் இல்ல, முட்டாளும் இல்லனு நம்பறேன். நான் எல்லாத்துக்கும் தயார்னு தான் நின்னுட்டு இருந்தேன். நீ என்னை தள்ளிவிட்டு தான், என் உயிரை காப்பாத்தினதா நீ நினைச்சா அதுக்கு நான் பொறுப்பில்ல”
“சாரி பாஸ்” என்று தலைகுனிந்தான்.
“எல்லாரையும் கூட்டிட்டு பேலஸ்குள்ள போ, நான் மோகனாவை அழைச்சிட்டு வர்றேன்”
“இல்ல சார் ரிஸ்க் வேண்டாம். மேகி இப்போ முன்ன மாதிரி இல்ல. நீங்க தனியா அவளை ஹாண்டில் பண்ண முடியாது” என்றாள் நித்யா
அகத்தியன் நித்யாவுக்கு பதில் சொல்லாமல் திலீப்பை முறைத்தான்.
“நித்யா, தயவு செஞ்சு என் கூட வா, பாஸ் பாத்துப்பாரு” என்று அவள் கையை பிடித்து இழுத்துச் சென்றான்.
எல்லோரும் அங்கிருந்து கண்மறையும் வரை சென்றபின், “மோகனா, மயங்கினது போல நடிச்சது போதும், அவங்க எல்லாம் போயிட்டாங்க, எழுந்திரு. இப்போ நான் தனியா தான் இருக்கேன். உன்னை யாரும் தடுக்க மாட்டாங்க. கமான்! எழுந்து வந்து என்னை கொன்னுடு” என்றான்
மேக்னா அசையாமல் படுத்திருந்தாள்.
“மோகி எனக்கு நல்லா தெரியும், நீ எப்போ அட்டை வாளுக்கு பதிலா ஒரிஜினல் வாளை கேட்டியோ, அப்பவே உன் கண்ணை பார்த்தேன். அதுல பழி வெறி தெரிஞ்சது. எப்பவோ உனக்கு போன ஜென்மம் நினைவு வந்திருக்கு. அது எப்போனு தான் தெரியல. மத்தவங்களுக்காக நீ மேக்னாவாவும் மோகனாங்கியாவும் மாறி மாறி நடிக்க வேண்டாம். மனசு வலிக்குது. உன் அழகை மட்டுமில்ல, உன்னோட குழந்தை தனத்தையும், அறிவையும் அதுல இருந்த அப்பாவி தனத்தையும் உன் நேர்மையையும், வீரத்தையும் பார்த்து உன்னை உயிருக்கு உயிரா நேசிச்சேன்.
அப்படி பார்த்த உன்னை இந்த மாதிரி என்னால பார்க்க முடியல. நீ எதுக்காக நடிக்கணும்? என்கிட்ட வந்து, நீ செத்துடு அதுதான் எனக்கு நிம்மதினு சொல்லியிருந்தா, உடனே உயிரை விட்டு இருப்பேனே. இப்படி பொய்யா நடிக்காதே மோகனா. ரொம்ப வலிக்குது, என்னால முடியல. அதை விட என்னை கொன்னுடு” என்றான் வலிமிகுந்த குரலில்
“உயிருக்குயிரா நேசிச்சவங்க நடிச்சு ஏமாத்தினா அதோட வலி எப்படி இருக்கும்னு இப்போ புரியுதா அகன்?” என்றபடி எழுந்து அமர்ந்தாள் மேக்னா
கண்களில் வலியோடு அவளை பார்த்தான் அவன்.
“என்னோட நிலைமையை இப்போ உணர முடியுதா? என்கிட்ட வந்து தென்மதுரை நாடு தான் உனக்கு வேணும்னு சொல்லியிருந்தா, ஏன் எதுக்குனு கேள்வி கேட்காம கொடுத்திருப்போமே. எதுக்காக நடிச்சு, என் குடும்பத்தை அழிச்சீங்க அகன்? என் வயித்துல ஜனிச்ச கரு என்ன பாவம் பண்ணிச்சு?”
“இதுக்கு நான் என்ன பதில் சொன்னாலும் உனக்கு சமாதானமா இருக்காது. தண்டனை கொடுத்தா தான் உன் மனசு ஆறும்னா உன் கையால என்னை கொன்னுடு மோகி. ஆனா கொஞ்சம் கொஞ்சமா சாகடிக்காம இதோ இந்த துப்பாக்கியால சரியா என் நெத்தியில குறி வச்சு சுடு, உடனே செத்துடுவேன்” என்றவன் அவளை எழுப்பி நிற்க வைத்து அவள் கையில் துப்பாக்கியை திணித்தான்.
“கமான் மோகனா, வரும்போதே என் சாவுக்கு யாரும் காரணம் இல்ல, வாழ பிடிக்காம தற்கொலை பண்ணிக்க போறேன்னு எழுதி கையெழுத்து போட்டுட்டு தான் வந்தேன். என்னை சுட்டுட்டு துப்பாக்கியை என் கையில வச்சிட்டு நீ கிளம்பி போயிடு. லீகலா உனக்கு எந்த பிரச்சனையும் வராது”
முதலில் அதிர்ந்தாலும் கண்களில் வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டு துப்பாக்கியை தன் இருகைகளால் பற்றி, அகத்தியனை நோக்கி குறிபார்த்தாள்.
அகத்தியன் கைகளை கட்டிக்கொண்டு நெஞ்சை நிமிர்த்தி மேக்னாவையே அழுத்தமாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
“சாகப்போற குற்றவாளிக்கு கூட கடைசி ஆசை என்னனு கேப்பாங்க. என்னோட கடைசி ஆசையை நிறைவேத்துவியா மோகனா?”
“சாகறவரைக்கும் என் கூட வாழணும்னு சொல்ல போறீங்க, அதானே?” என்றாள் நக்கலாக
“இல்ல, அஞ்சே நிமிஷம் போதும், அதுக்கப்புறம் நீ என்னை சுட்டுடலாம்” என்றபடி அவளருகே வந்தான்.
“கிட்ட வராதீங்க, சுட்டுடுவேன்” அவளை தாக்க வருகிறானோ என்று நடுங்கும் கைகளால் துப்பாக்கியை அழுந்த பிடித்தாள். அவன் அவள் கண்களையே அழுத்தமாக பார்த்தபடி நிதானமாக நெருங்கி நின்றான்.
துப்பாக்கியின் முனை அகத்தியனின் நெஞ்சில் குத்தி நின்றது. மேக்னா கொஞ்சமாக அழுத்தினாலும் துப்பாக்கியிலிருக்கும் தோட்டா அகத்தியனின் நெஞ்சை கிழித்து விடும் அபாயம் இருந்தது. அதிர்ச்சியோடு அவனை விழிவிரித்து பார்த்தாள்.
அவனோ தன் நீண்ட கரங்களை அவள் முகத்திற்கு நேராக நீட்டி இரு கன்னங்களையும் அழுந்த பற்றி, அவளை தன்னை நோக்கி வேகமாக இழுத்தான். “என்ன பண்றீங்க?” என்று கோபமாக எழுந்த அவளுடைய வார்த்தைகள் அகத்தியனின் இதழ்களுக்குள் சிக்கிக் கொண்டது.
ஆம், செவ்விளநீரின் சுவையில் ஊறியிருந்த அவளின் செவ்விதழ் சுவையைும் சேர்த்து சுவைத்துக் கொண்டிருந்தான். இதழ்களின் வழியாக அவள் இதயத்திற்குள் சென்று விட துடித்தவன் போல அவள் இதழ்களுக்குள் தஞ்சம் புகுந்திருந்தான். உயிரை உருக்கும்படி நீண்ட நெடிய ஆழ்ந்த இதழ் அணைப்பு.
மோகனாவின் அகத்திற்குள் எங்கோ புதைந்திருந்த அகன் மேலான காதல், மெல்ல மெல்ல உயிர் பெற்று, இதோ நான் இங்கே இருக்கிறேன் என்பதாய் அவள் நெஞ்சில் ஒரு வலி தோன்றியது. இல்லை இதை வளரவிடக்கூடாது என்று தன்னை அவனிடமிருந்து விலக்கி கொள்ள உடலை முறுக்கினாள்.
அதில் அவள் விரல்கள் துப்பாக்கியையும் தன்னிச்சையாக அழுத்திவிட, அங்கே டாமல் என்ற வெடிச்சத்தம்!
(தொடரும்)
Latest Post: வனமாலி - (Comment Thread) Our newest member: Ghanaselvi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page