About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம் 6
தென்மதுரையை அடைவதற்காகவும் குறிப்பாக மோகனாங்கியை அடைவதற்காகவும் பல அரசர்கள் போட்டி போட்டுக் கொண்டு போர் தொடுக்க வந்தனர். வந்தவர்கள் யாராலும் அரண்மனையை சுற்றியிருந்த பாதுகாப்பு அரண்களை கடக்க முடியவில்லை.
வந்தவர்களில் பலபேர் அரண்மனையை சுற்றியிருந்த அகழிகளில் விழுந்து முதலைகளுக்கு பலியாகினார்கள். அகழி நீண்டதாக இருந்ததால் அதை தாண்டி யாராலும் கோட்டைக்குள் செல்லவே முடியவில்லை. அதற்கு பின் வேறுவழியில்லாமல் வேங்கையனுக்கு ஒற்றர்கள் மூலம் ஓலை அனுப்பினார்கள். அதில் மோகனாங்கியை திருமணம் செய்துக் கொள்ள ஆவலாக இருப்பதாகவும், அதற்காக சுயம்வரம் ஏற்பாடு செய்தால் அவர்கள் வர தயாராக இருப்பதாகவும் செய்தி வந்த வண்ணம் இருந்தது.
ஒரு பக்கம் தினமும் கோட்டை சுவரை அடைய போராடும் போர்வீரர்கள், இன்னொரு பக்கம் தினம் ஒரு ஓலைச்சுவடி வந்த வண்ணம் இருக்கவே வேங்கையன் சோர்ந்து போனார். “பேசாமல் உங்க பெண்ணுக்கு சுயம்வரம் நடத்துங்க. யார் சிறந்த வீரனா இருக்கானோ அவனை அவளுக்கு கல்யாணம் செய்து வையுங்க” என்று நிலவழகி வலியுறுத்த தொடங்கி விட்டார்.
ஆனால் மகளோ, “தந்தையே, ஓலை அனுப்பியவர்கள் எல்லாருமே நம் நாட்டின் மேல் போர் தொடுக்க முயன்று முடியாமல் போனவர்கள். இப்போது என்னை திருமணம் செய்து நாட்டை அடைய குறுக்குவழியை தேடுகிறார்கள். சுயம்வரத்திற்கு நான் ஒரு போதும் ஒத்துக் கொள்ள மாட்டேன்” என்றாள் திட்டவட்டமாக
“அப்போ என்ன செய்யவதாய் உத்தேசம்? பழுத்த மரத்தின் மீது தினம் ஒரு கல்லடி படுவது போல, நம் கோட்டையின் மீது தினமும் போர்புரிய யாராவது வந்துக் கொண்டே இருக்கிறார்கள். எத்தனை நாளைக்கு தான் வெளியே சென்று போர் செய்யாமல் கோட்டைக்குள்ளே பதுங்கி இருப்பது? வேங்கையன் பெட்டையன் ஆகி விட்டான் என்று ஊரார் தூற்ற மாட்டார்களா?” பொரிந்து கொட்டினார் நிலவழகி
“நாம் இனியும் வெளியே செல்லாமல் இருந்தால், அன்னை சொல்வது போல பயந்து பதுங்கி இருப்பதாக ஆகிவிடும். அப்பா நாம் போருக்கு தயாராகலாம். போர் முரசை கொட்ட சொல்லுங்கள். நானும் களம் இறங்குகிறேன்” என்றாள் மகள் தந்தையை பார்த்து
“மோகனா நீ போய் போர் செய்ய போறீயா?” என்ற அதிர்ந்த அன்னையை பார்த்து
“நம்ம குமரி கண்டத்துல பெண் அரசிகளே இல்லையா என்ன? நிறைய பெண் ஆட்சியாளர்கள் இருந்ததால தானே குமரி கண்டம்னே பேர் வந்தது. அப்படி இருக்க நான் ஏன் பதுங்கி இருக்கணும்? நானே நேரில் போர் செய்ய போகிறேன்” என்றாள் மோகனாங்கி நெஞ்சை நிமிர்த்தி
“அம்மா மோகனா உன் தைரியமும் விவேகமும் எனக்கு நெகிழ்ச்சியை கொடுக்குது. ஆனா போர் செய்ய அது மட்டும் போதாது. நம்முடைய போர்வீரர்களிடம் நீ பெற்ற வில் பயிற்சியும் வாள் பயிற்சியும் யானை பசிக்கு சோளப்பொறி போன்றது. நீ கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு” என்றார் வேங்கையன் இருமிக் கொண்டே
“சரி பயிற்சி கொடுக்க சிறந்த ஆசானை ஏற்பாடு செய்யுங்க. சீக்கிரமே கற்றுக் கொள்கிறேன்”
வேங்கையன் தன் காவலாளிகளை அழைத்து, “ஒரு மிக சிறந்த வீரனை கண்டுபிடிச்சு கூட்டிட்டு வாங்க. அவன் எந்த நாட்டின் அரசனாகவோ, இளவரசனாகவோ, ஏன் எந்த நாட்டையும் சேர்ந்தவனாக கூட இருக்க கூடாது”
“ஏன் இப்படி ஒரு நிபந்தனை அரசே? அரசாங்கத்தை சேர்ந்திராத வீரனை எப்படி கண்டுபிடிக்க முடியும்? அப்படியே கண்டுபிடித்தாலும் அவன் போர் செய்யுமளவுக்கு அனைத்து பயிற்சியையும் பெற்றிருப்பானா?” என்று அரசவை மந்திரி சந்தேகமாக கேட்க,
“ஏன் கிடைக்கமாட்டாங்க? நம்முடைய ஏழுமதுரை பிரதேசங்களை தவிர்த்து ஏழுமலைபிரதேசங்களுக்கு சென்று அங்கிருக்கும் சிறந்த வீரனை கண்டுபிடித்து கூட்டிக் கொண்டு வந்தால், அவர்களின் போர்முறை வித்தியாசமாக இருக்கும். அதே சமயம் நான் போருக்கான பயிற்சி மேற்கொள்வதும் ரகசியமாக இருக்க வேண்டும். அதற்காக தான் அரசர் அப்படி சொல்கிறார். சரி தானே அரசே?” என்று மோகனா தந்தையை பார்த்து கேட்க,
அவர் மகளை மெச்சுதலாக பார்த்து புன்னகைத்தார். அதற்கு பின் அரசவை ஊழியர்கள் சாதாரண மனிதர்களாக புலம் பெயர்வது போல குமரி கண்டத்தின் ஏழு மலை பிரதேசங்களுக்கு ஒவ்வொருவராக பிரிந்து சென்று சிறந்த வீரனை தேட ஆரம்பித்தனர்.
ஏழுமலை பிரதேசங்களுக்கு சென்ற ஏழு காவலாளிகளும் ஏழு பேரை கூட்டிக் கொண்டு அரசவைக்கு வந்தனர். அவர்களில் சிறந்தவர் யார் என்று கண்டறிய ஏழுபேருக்கும் நடுவே பல வகையான போட்டிகள் நடத்தப்பட்டது. அரசர் மற்றும் பொதுமக்களின் முன்பு ஒரு பெரிய திடலில் ஏழு பேரும் போட்டிக்கு தயாராக இருக்க, அவர்களை அரண்மனையின் கோட்டை வெளிப்பிடிப்பில் (பால்கனி) இருந்த அரியாசனையில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் மோகனாங்கி.
பண்டைய கால போர்முறைகளான வில், வாள், வேல் ஆகியவற்றை கொண்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அனைத்திலும் வீரன் ஒருவன் தொடர்ந்து வெற்றி பெற்றான். காளை, குதிரை, யானை என்று தொடர்ந்து எதை அனுப்பினாலும், அவற்றை அடக்கி தான் ஒரு சிறந்த வீரன் என்பதை நிருபித்திருந்தான் ஒருவன். அமர்ந்திருந்த மோகனாங்கி எழுந்து நின்று அந்த வீரனின் முகத்தை எட்டிப்பார்த்தாள்.
அவனும் அதே நேரம் நிமிர்ந்து அவளை தான் பார்த்தான். ஆனால் அவள் முகம் திரை வழியாக அவனுக்கு தெளிவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் அவன் பலம் அறிய பிறகு அவர்கள் நாட்டின் போர் வீரர்களை மொத்தமாக அனுப்பி ஆயுதம் இன்றி மற்போர் நடத்த கட்டளை இட்டாள். அவனை சுற்றிலும் ஆயுதங்களோடு ஆட்கள் சூழ்ந்திருக்க, நிராயுதபாணியாக நின்றிருந்த அந்த வீரனோ தன் விரல்களால் எதிராளியின் உடம்பில் ஆங்காங்கே அழுத்தம் கொடுத்தான். அனைவரும் வலி தாங்காமல் சுருண்டு விழ, புதுவிதமான அவனின் அணுகுமுறையை கண்டு தன்னை மறந்து கைத்தட்டினாள் மோகனாங்கி!
வெற்றி பெற்ற வீரன் நடுத்தர வயதாக இல்லாமல், இளைஞனாக இருப்பதால் யோசனையில் இருந்த அரசர், மகளின் கைத்தட்டலில் அவளின் விருப்பத்தை உணர்ந்தார். அவனையே மோகனாங்கிக்கு பயிற்சி தர உத்தரவு அளித்தார். அருகிலிருந்த அரசியாரும் தன் அதிருப்தியை சொல்ல, “நம்ம மோகனாவுக்கு யாரிடம் எப்படி நடந்துக்கணும்னு தெரியும். வந்திருக்கிறவன் வித்தியாசமான போர்முறையில் பயிற்சி பெற்று இருக்கிறான். அந்த பயிற்சியை நம் மகளும் கற்றுக் கொள்ளட்டுமே” என்று சொல்லி மனைவியின் வாயை அடைத்தார்.
அதற்கு பின் மோகனா அவனை பார்க்க விரும்புவதாக தன் தோழிகள் மூலம் அரசருக்கு சொல்லி அனுப்ப, வெற்றிப் பெற்ற வீரனை மற்ற காவலாளிகளோடு அனுப்பி வைத்தார்.
காவலாளிகள் அறைக்கு வெளியே நிற்க, அந்த வீரன் மட்டும் உள்ளே நுழைந்தான். மோகனா திரைக்கு அந்த பக்கம் அமர்ந்தபடி, சற்றே திரையை விலக்கி வந்திருந்தவனை ஆழ்ந்து பார்த்தாள். ஆறடிக்கும் மேலான உயரம், மாநிறம், அவன் அணிந்திருந்த தோலினால் ஆன ஆடையை மீறி, அவன் புஜங்களும், திண்ணிய மார்பும் புடைத்துக் கொண்டு அவன் வீரத்தை விளக்கியது. அவன் கண்களில் தெரிந்த தீர்க்கம் அவனுடைய மனஉறுதியையும் தன்னம்பிக்கையையும் பறைச்சாற்றின. இளவரசி முன்பு இருக்கிறோம் என்று கொஞ்சமும் அவனிடம் பயம் இல்லை. அசட்டையாக நின்றிருந்தாலும் அவனிடம் ஒரு வசீகரம் தெரிந்தது. மோகனா முதன்முறையாக கவனித்து பார்க்கும் முதல் ஆடவன் அவன் தான். ஆனால் அவனோ பார்வையை வேறு இடத்தில் பதித்து இருந்தான். “க்கும்” என்று கனைத்துக் கேள்விகளை கேட்க ஆரம்பித்தாள்.
“உங்க பெயர்”
“அகன்”
“இந்த பயிற்சி எல்லாம் யாரிடம் கற்றுக் கொண்டீர்கள்? உங்கள் குரு யார்? எங்களுடைய வீரர்களை எப்படி விரல்களால் தாக்க முடிந்தது?”
“நான் மலைப்பகுதியில் வாழும் சாதாரண மனிதன். அங்கே தவம் செய்து கொண்டிருந்த போகர் என்னும் சித்தரை காணும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவருக்கு நான் உதவிகள் செய்ய, அவர் சில கலைகளை எனக்கு சொல்லி கொடுத்தார். அவற்றில் நோக்கு வர்ம கலையும் அடங்கும். அந்த வர்மக்கலை மூலம் பிறரை தாக்கவும் முடியும் நோய்களை குணமாக்கவும் முடியும்”
“அப்படியா? வேறென்னவெல்லாம் தெரியும்?”
“போருக்கு தேவையான அனைத்தும் பயிற்சியும் தெரியும். அதை தவிர ஓவியம் வரைய தெரியும்”
“அப்படியானால் என்னையும் வரைய முடியுமா?”
“முடியும்”
“ஆனால் நான் திரைக்கு இந்தப்பக்கம் தான் இருப்பேன். என் வரிவடிவத்தை கொண்டு உங்களால் சரியாக என்னை வரைய முடியுமா?” என்றாள்.
“முயற்சி செய்கிறேன்” என்றவனுக்கு வரைவதற்கு தேவையான பொருட்கள் கொடுக்கப்பட்டது. மெல்லிய திரைவழியாக தெரிந்த மோகனாவின் வரிவடிவத்தை பார்த்து வரைய தொடங்கினான். சில மணி நேரத்தில் மொத்தமாக வரைந்து முடித்து பார்த்தவனின் கண்கள் அகல விரிந்து கொண்டது.
அதுவரை அசுவாரசியமாக தன் போக்கில் கண்ணில் பதிந்த காட்சியை வரைந்தவனுக்கு மொத்தமாக வரைந்து முடித்தபின், அதில் தெரிந்த அழகியின் அழகில் உறைந்து நின்றான். முதன்முறையாக அவன் வரைந்த ஓவியத்தை அவனே ரசித்துக் கொண்டிருந்தான்.
வெகுநேரம் காத்திருந்து பொறுமையிழந்தவளாக “நீங்க வரைந்த ஓவியத்தை என் பக்கமாக திருப்புங்க, நானும் பார்க்கிறேன்” என்றாள்.
அவன் ஓவியத்தை திருப்பியதும், மோகனாவின் தோழிகள் திரையை விலக்கி அவன் எதிரே வந்து, “என்ன இது? மோகனாவை நேரில் பார்த்தது போல அப்படியே வரைந்து இருக்கீங்க? உண்மையை சொல்லுங்கள், ஏற்கனவே இளவரசியை பார்த்து இருக்கீங்களா?” என்று கேட்க
“ஒரு அனுமானத்தில் தான் வரைந்தேன். இந்த ஓவியத்தில் இருப்பது போல தான் உங்கள் இளவரசி இருக்கிறார் என்றால் பிரம்மன் படைத்ததிலேயே மிக சிறந்த அழகி அவர்தான்” என்றான் திரை வழியாக தெரிந்த அவள் முகத்தை உற்று நோக்கியபடி
‘என்ன தைரியம் இவனுக்கு? இளவரசி என்று கொஞ்சமும் பயமில்லாமல் என் அழகையே வர்ணிக்கிறானே’ என்று கோபம் வந்தாலும், அவன் திறமையால் வரையப்பட்ட தன் ஓவியத்தை அருகில் பார்க்க ஆவல் எழுந்தது. அதே நேரம் அவனுக்கும் தான் தான் வரைந்த நிழல் பிம்பத்தை நேரில் காணும் ஆவல் எழுந்தது.
“நீங்கள் போய் விருந்தினர் அறையில் ஓய்வெடுங்கள். எனக்கு பயிற்சி தரும் நாளை தந்தையிடம் பேசி உறுதி செய்துவிட்டு உங்களுக்கு செய்தி அனுப்பிகிறேன். பயிற்சி முழுவதும் திரைக்கு அந்த பக்கம் தான் நினைவிருக்கட்டும்” என்றாள்.
சம்மதமாக தலையசைத்து விட்டு காவலாளிகளுடன் சென்றான். அன்று இரவு முழுவதும் அவன் வரைந்த ஓவியத்தை பற்றி தான் நினைத்துக் கொண்டிருந்தான். இது அவனுடைய முதல் முயற்சி, திரைக்கு அந்தப்பக்கம் இருந்தவளின் முகம் சரியாக தெரியாவிட்டாலும், கண்கள், நாசி, உதடு, கன்னம் போன்றவற்றின் அமைப்பை வரைந்திருந்தான். அதில் இருப்பது போல தான் மோகனா இருப்பாளா? என்று நேரில் கண்டு விட எண்ணம் எழுந்தது.
அடுத்த இரண்டு நாட்களில் மோகனாவுக்கு வில் எப்படி பிடிக்க வேண்டும் வாளை எப்படி ஏந்த வேண்டும் என்று அனைத்தையும் ஒவ்வொன்றாக திரைக்கு அந்த பக்கம் இருந்து சொல்லி கொடுத்தான். அவளும் ஒரு முறை சொன்னாலே அதை அப்படியே பார்த்து புரிந்து கொண்டு சரியாக வாளை சுழற்றினாள். நாட்கள் நகர்ந்தே தவிர அவளை காணமுடியவில்லை.
“குதிரை பயிற்சி எல்லாம் இப்படி திரை மறைவில் கற்றுக் கொள்வது இயலாத காரியம். நான் இளைஞனாக இருப்பது தான் பிரச்சனை என்றால், வேறு யாராவது வயோதிகரை தான் நீங்கள் அழைத்து வந்திருக்க வேண்டும்” என்றான் ஒருநாள்.
மோகனாங்கியும். திரைக்கு அந்த பக்கமிருந்து அனைத்தையும் பயிற்சி பெறமுடியாது என்பதை உணர்ந்தே இருந்தாள். அன்று அரசரை சந்திக்க சென்றாள். வயது மூப்பின் காரணமாக மிகவும் சோர்ந்திருந்தார் வேங்கையன். நிலவழகியும் கவலையாக இருந்தார். அப்போது தான் அகனுக்கு மருத்துவமும் தெரியும் என்பது நினைவு வர, அவனை அழைத்து வரச்சொல்லி ஆள் அனுப்பினாள்.
அகன் கொடுத்த வர்மகலை மருத்துவத்தினால், சில மணிநேரத்திலேயே வேங்கையன் எழுந்து அமர்ந்தார். அடுத்து வந்த நாட்கள் அவன் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்க, அவர் உடல்நலம் நன்றாகவே தேறியது. நிலவழகியும் அகனை நன்றியோடு பார்த்தார்.
“அகன், நீ செய்த உதவிக்கு உனக்கு எதாவது செய்ய வேண்டும் போல தோன்றுகிறது. உனக்கு என்ன வேண்டும் என்று கேள்?” என்றார் வேங்கையன்.
“எனக்கு எதுவும் வேண்டாம் அரசே. இளவரசிக்கு திரைக்கு பின்னாலிருந்து என்னால் முழுமையாக பயிற்சி அளிக்க முடியவில்லை. அவர் என்னுடன் வாள் சண்டை போட்டால் தான் முழுமையாக கற்றுக் கொள்ளமுடியும். திரை எனக்கு ஒரு தடையாக இருக்கிறது. உங்களுக்கு என் மேல் நம்பிக்கை இருந்தால் நேரில் பயிற்சி அளிக்க அனுமதிக்க வேண்டும்” என்றான்.
அகன் வேங்கையனுக்கு மருத்துவம் செய்யும் போது அருகில் மோகனா இருந்தாள். அகனின் கண்கள் சற்றும் அலைபாயவில்லை. கருமமே கண்ணாக இருந்தான். திறமையோடு கண்ணியமும் அவனிடத்தில் கண்டவருக்கு, இப்போது அகன் மேல் முழுநம்பிக்கை வந்திருந்தது.
“மோகனா விளையாடுவதற்காகவே ஒரு எழில்மிகு காட்டை வடிவமைத்து இருக்கிறேன். அங்கே ஆண்களுக்கு இதுவரை அனுமதி அளித்தது இல்லை. அவளுக்கு குதிரை ஏற்றம் முதல் அனைத்து பயிற்சியையும் மற்றவர்களுக்கு தெரியாமல் சொல்லிக் கொடுக்க வேண்டுமானால், அந்த இடம் தான் சரியாக இருக்கும். நாளை முதல் நீ அவளுக்கு நேரில் பயிற்சி கொடுக்கலாம். நீ அங்கே செல்ல வேண்டுமானால் இந்த கணையாழியை காவலாளியிடம் காட்டு. நான் மோகனாவை நாளைக்கு அங்கே தயாராக இருக்க சொல்கிறேன்” என்று அவன் கையில் ஒரு கணையாழியை கொடுத்தனுப்பினார் அரசர்.
அதை வாங்கி கொண்டு சென்றவனுக்கு செயற்கையாக வடிவமைக்கப்பட்ட காட்டை பார்க்கும் ஆவல் எழுந்தது, கூடவே அன்றே மோகனாங்கியையும் திருட்டுதனமாகவாவது பார்த்து விட வேண்டும் என்று தோன்ற அரண்மனைக்கு பின்னால் இருந்த காட்டுபகுதியின் நுழைவாயிலுக்கு சென்று கணையாழியை காண்பித்தான்.
காவலாளி அதிர்ச்சியடைந்தாலும், அவனை உள்ளே செல்ல அனுமதித்தான்.
வழிநெடுகிலும் விதவிதமான மரங்களும் பலவகையான வண்ண மலர்களும் பூத்து குலுங்கின. அவற்றின் வாசம் அகனின் நாசியை துளைக்க, காதில் நீரோட்டத்தின் ஒசைக் கேட்டது. அதை பார்ப்பதற்காக முன்னே நடந்து சென்றான்.
இருபக்கமும் தென்னை மரங்கள் சூழ்ந்திருக்க நடுவில் நதிபோல நீரோடை அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது. அந்த நீரோடையை பின்பற்றி நடந்தவன், கடைசியாக அங்கே இருந்த பெரிய குளத்தை பார்த்தான். குளத்திற்குள் யாரோ நீந்துவது போல தெரிந்தது. அங்கிருந்த தென்னை மரத்தின் ஓரத்தில் மறைவாக நின்றான்.
அவன் நினைத்தது போல சற்று நேரத்தில் நீரில் முழ்கியிருந்த மோகனா மூச்சிற்காக மேலெழுந்து வந்தாள். அந்தி நேரத்து சூரிய ஒளி வெளிச்சத்தில் மோகனாவை முதன் முறையாக நேரில் பார்த்தான். தலையிலிருந்து நீர் அவள் முகம் முழுவதும் வழிந்து கழுத்து வழியாக மேல்சட்டையில்லாத அவளுடைய வெண்ணிற புடவைக்குள் புகுந்து கொண்டது. அவள் முகத்தை மட்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசைப்பட்டவன் இப்படி ஒரு தரிசனத்தை நிச்சயமாக எதிர்ப்பார்க்கவில்லை.
அவள் அழகை காண இருகண்கள் போதவில்லை அவனுக்கு. அவன் வரைந்த ஓவிய சிற்பம் உயிர்பெற்று கண்ணெதிரே நீராடிக் கொண்டிருப்பது போல தோன்றியது. பூரண நிலவாக அவள் முகம் ஜொலிக்க, அவள் அழகில் தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
வெகுநேரம் குளத்திற்குள் நீராடி விட்டு எழுந்தவள், நீரோடையில் முழங்கால் வரை இருந்த நீரில் அன்னமென நடந்து வந்தாள். குளத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்த மீன்கள் எல்லாம் அவள் கால் அழகை கண்டு அவளை சுற்றி வலம் வர, சிரித்துக் கொண்டே தன் தலைக்கு மேல் வளைந்து இருந்த தென்னை மரத்தில் ஏறி படுத்துக் கொண்டாள்.
கைகளை மட்டும் நீருக்குள் விட்டு மீன்களுக்கு விளையாட்டு காட்டினாள். அவை அவளை கடிக்க வரும்போது கையை எடுப்பதும், பின் மீண்டும் கையை உள்ளே விடுவதுமாக சின்ன குழந்தை போல விளையாடி கொண்டிருந்தாள்.
தேவ குமரியாக இருந்தவளின் யெளவனத்தை கண்டு மலைப்பதா? நீரில் விளையாடிக் கொண்டிருக்கும் அவளின் குழந்தை தனத்தை ரசிப்பதா? அந்த காட்சியே அவ்வளவு ரம்மியமாக இருந்தது. தன் பிறவிபலனை அடைந்தது போல உணர்ந்தான் அகன்.
மோகனா இப்போது மரத்தை ஒரு கையால் பற்றிக்கொண்டு நீரோடைக்குள் கால்கள் படும்படி தொங்கி கொண்டிருந்தாள். அதில் அவள் அங்கவனப்புகள் எல்லாம் அகனின் கண்களுக்கு விருந்தாகின.
ஏகாந்த நிலையில் அவளை மெய்மறந்து ரசித்து இருந்தவனுக்கு சில நிமிடங்கள் கழித்தே அவள் பயத்தில் அலறுவது உறைத்தது. என்னவென்று பார்வையை சுழலவிட்டான். நீரோடையில் ஒரு முதலை அவளுக்கு மிக அருகாமையில் வந்துக் கொண்டிருந்தது.
ஒரு கையால் தொங்கி கொண்டிருந்தவளால் சட்டென்று மரத்தில் ஏற முடியவில்லை. கால்களை மட்டும் தூக்கி கொண்டிருந்தாள். கைவழுக்கி நீரில் விழுந்தால் முதலைக்கு பலியாக வேண்டியது தான். வெகுநேரம் அப்படியே தொங்கி கொண்டிப்பது சாத்தியமில்லை. அவள் தனிமையில் குளிக்கிறாள் என்று யாரும் இப்போதைக்கு அங்கே வரமாட்டார்கள். அது நினைவிற்கு வர உயிர் பயத்தில் மரத்தை பற்றியிருந்த கையும் வழுக்கியது.
தென்மதுரையின் கடைசி வாரிசு முதலைக்கு இரையாகி சாக போகிறதா? கூடாது. “காப்பாத்துங்க” என்று உச்சஸ்தாயில் கத்தினாள்
(தொடரும்)
Latest Post: காற்றின் நிறம் கருப்பு - (Comment Thread) Our newest member: Ghanaselvi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page