All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

காற்றில் நிறம் கருப...
 
Notifications
Clear all

காற்றில் நிறம் கருப்பு - (Story Thread)

Page 1 / 2
 

Dennis jegan
(@dennisjegan)
Trusted Member Author
Joined: 1 month ago
Posts: 41
Topic starter  

டென்னிஸ் ஜெகன், ஊர் கன்னியாகுமரி.

 

படித்தது உயிர்வேதியல்,  உளவியல் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் LLB. 15 வருடத்திற்கு மேல் MNC கம்பெனிகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி இருக்கிறேன். பின்னர் அதை விட்டுவிட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளாக வழக்குரைஞராக இருக்கிறேன். 

 

தமிழ்ப் படைப்பிலக்கிய வளர்ச்சியில் தீவிர இலக்கியத்தைப் போலவே, வெகுஜன இலக்கியத்திற்கும் மிக முக்கிய இடமுண்டு. அதிலும் குறிப்பாக, சிறுவயதிலிருந்தே crime/ thriller  மற்றும் horror  கதைகள் மட்டும் தான் எனக்கு பிடிக்கும்... வேறு genre கதைகளை நான் படித்தது கூட கிடையாது.

 

என் எழுத்தின் ஆரம்ப புள்ளியாக, Paranormal psychologyயில் ஆராய்ச்சி ரீதியிலான ஆர்வம் இருந்ததால்,  கட்டுரைகள் நிறைய எழுதிருந்தேன். கொரோனா லாக்டவுன் காலகட்டம் முடியும் தருவாயில், "நீ தான் நல்லா கதை சொல்றியே, எழுதினால் என்ன?" என்று நண்பர்கள் தூண்டிவிட... எனக்கு ஏற்பட்ட அமானுஷ்ய அனுபவங்களை இரண்டு வருடங்களுக்கு முன்னால், முகநூலில் எழுத ஆரம்பித்தேன். அது எனக்கு நல்ல வாசகர் வட்டத்தை உருவாக்கி கொடுத்தது.

 

பணி நிமித்தமாகப் பல இடங்களுக்குச் சென்று, சமூகத்தின் பலதரப்பட்ட மக்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. நான் பழகிய மனிதர்களையும், எனக்கு கிடைத்த அனுபவங்களையும், சுற்றியுள்ளோர்க்கும் ஏற்பட்ட அனுபவங்களையும் எழுத ஆரம்பித்தேன். அதன் பிறகு சிறுகதைகள், தொடர்கதைகள் என பிரதிலிபி, முகநூல், டெலிகிராம் என்று கிடைத்த இடத்தில் எல்லாம் எழுதினேன். கடந்த இரண்டு வருடங்களில், 30 தொடர்களும் நிறைய சிறுகதைகளும்  எழுதிவிட்டேன்.

 

வெகுஜன ரசனைக்கும், பொழுதுபோக்கிற்கும் தான், நான் எழுதுகிறேன். என் கதைகளில் இலக்கியத்தியோ, நாவல் அமைப்பையோ, கட்டுமானத்தையோ எதிர் பார்க்காதீர்கள். ஏனென்றால் நாடகபாணி, ரேடியோ ஒலி சித்திரம் மற்றும் திரைக்கதை அமைப்பு என கலந்து கட்டி தான் கதை எழுதுகிறேன். ஒரு நாவலை இப்படித்தான் எழுதவேண்டும் என்று அந்த சட்ட திட்டமும் கிடையாது. நாவல் இஷ்டப்பட்டால் தன்னை எப்படி வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளும். படிப்பவர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் குறிக்கோள்.

 

எழுதுவதால் எதையோ உருவாக்குகிறோம்; எதையோ நோக்கி பயணிக்கிறோம்; எதையோ அடைகிறோம். இந்த பயணம், பிடித்து போய்  ஆரம்பித்து இருக்கிறேன்.

 

இது சிறுவயதில் - என்னவாக ஆகப் போகிறோம் என்கிற தேடல் கொண்டு வந்து சேர்த்த இடம். இன்னமும் தேடலின் வரம்புகளும் வரையறைகளும் விஸ்தரித்துக் கொண்டே தான் இருக்கின்றன.

This topic was modified 4 weeks ago by KC Novels Admin

   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Trusted Member Author
Joined: 1 month ago
Posts: 41
Topic starter  

கருப்பு 1

வருடம்: 2015

 

இரவு பெய்த மழையின் காரணமாக சோம்பலாக விடிந்து கொண்டிருந்தது. ஈரம் காயாத சாலைகள், ஆங்காங்கே சிறு குட்டைகளாக தேங்கியிருந்த தண்ணீர், மழையில் நனைந்திருந்த மரங்கள், மரங்களுக்குள் சோம்பல் முறித்துக் கொண்டிருந்த பறவைகள், கடற்கரையோர மூங்கில் மற்றும் தென்னை மரங்கள். கடற்கரை காற்று, ஓயாமல் வீசும் கடல் அலைகள், காற்றில் எப்போதும் இருக்கும் ரீங்காரம். இவைதான் ரஸ்தாகாடு ஊரின் அடையாளங்கள்.

 

ரஸ்தாகாடு ஊர், கன்னியாகுமரியில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும், யாருக்கும் தெரியாத ஒரு  கடற்கரை கிராமம். பக்கத்தில் பெரிய ஊர் என்றால் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அஞ்சுகிராமம் தான். டிஜிட்டல் இந்தியா இன்னும் அதிகம் எட்டி பார்க்காததால், நேரத்தை பற்றி கவலைப்படாத ஊர். பாதி பேருக்கு மீன் பிடிப்பது தான் முக்கிய தொழில். மீதி பேர் பக்கத்தில் இருக்கும் அஞ்சு கிராமத்துக்கும், நாகர்கோயிலுக்கும் வேலைக்கு செல்பவர்கள்.

 

கிராமத்தைப் பற்றி சீக்கிரமே தெரிந்து கொள்வீர்கள்... முதலில் அகல்யாவை பார்த்து விடுவோம்.

 

வேண்டாம். அகல்யா முக்கியமான வேலையில் இருக்கிறாள்.

 

அகல்யாவை பார்க்கும் முன் அவள் இருக்கும் வீடு.

 

வீடு என்று சொல்வதே தவறு. கிராமத்து மாளிகை என்று தான் சொல்ல வேண்டும். பல கதைகள் கேட்ட பெரிய திண்ணை போன்ற சிட் அவுட், அதற்கடுத்து இரு கதவிட்ட தலைவாசல்.

 

வீட்டின் நடுநாயகமாய் முற்றம். முற்றத்தை சுற்றி நான்கு பக்க தாழ்வாரம். இடப்பக்க தாழ்வாரத்தின் பக்கத்தில் தேக்கு மர பீரோ கொண்ட பெரிய கூடம். கூடத்தின் இரண்டு மூலையிலும் இரண்டு அறைகள். உள் தாழ்வாரம் கடந்தால் ஒரு சிறிய கூடமும், அதன்பின் இடப்பக்கம் சேமிப்பு அறை. அங்கே பழையகால பித்தளை பாத்திரங்களான

கொப்பரை, குண்டான், உருளி மற்றும் திருக்கை, உலக்கை, குந்தாணின்னு நிறைய இருந்தது.

 

வலப்பக்கம்  சின்னதா ஒரு கிச்சன். அதுக்குபக்கமாவே இன்னொரு பெரிய மாஸ்ட்டர் கிச்சன். ஆட்டுக்கல், அம்மிக்கல், பிரிட்ஜ், வாஷிங் மிஷின், வாஷ்பேசின், கேஸ் அடுப்பு என்று பழமையும் புதுமையும் கலந்திருந்தது. இரண்டுக்கும் இடையில் கொல்லைப்புற வாசல் என அந்தக் காலத்து சகல சாமுத்ரிகா லட்சணமும் பொருந்திய வீடு.  பர்மா தேக்கு தூண்கள், கதவு ஜன்னலுக்கு திருமலை செம்மரம், விட்டங்களுக்கு பண்ருட்டிப் பலாமரம், என ரசனையுடன் கட்டப்பட்ட வீடு.

 

பின் வாசல் ஒட்டிய கொட்டகையில், பண்டிகை மற்றும் விசேஷங்களுக்கு என்று சமைக்க வெளி சமையற்கூடம். அதற்கடுத்தது கிணற்றங்கரை. பெரியகிணறு நிறைய தண்ணீருடன் இருந்தது, பக்கத்தில் துணி துவைக்கர கல். தென்னை, வாழை, பப்பாளி என  கிணத்தடியை சுற்றி ஒரு சின்னதா ஒரு  தோட்டம்.

 

வீட்டு முன்னால் ஃபுட்பால் கிரவுண்ட் அளவுக்கு எக்கச்சக்கமான இடம். அங்கேயும் ஒரு சிறு தோட்டம் இருந்தது. செம்பருத்தி பூக்கள் புன்னகைத்துக் கொண்டிருந்தன. இரவு மழையில் நனைந்திருந்த நந்தியாவட்டை செடிகள் குளிர் சிரிப்பு சிரித்தன. கோழிக்கொண்டை, வாடாமல்லி, பந்திப்பூ செடிகளும் தோட்டத்தை நிறைத்திருந்தன. காம்பவுண்ட் சுவரோரம் நடப்பட்டிருந்த முல்லைக்கொடி சுவருக்கு வெளியே எட்டி பார்த்துக் கொண்டிருந்தது. தெருவெங்கும் முல்லை வாசம் வீசிக்கொண்டிருந்தது.

 

வீட்டு முன்னாலிருந்த பெரிய சிட் அவுட்டில் போடப்பட்டிருந்த ஈஸி சேரில், வெள்ளெழுத்து கண்ணாடியுடன் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார் பெரியவர் பெரிய கருப்பன். அழுக்கு உறைந்து, வெள்ளை நிறத்தில் இருந்து எப்போதோ மாறியிருந்த பனியன். மார்பு தெரிந்த இடமெல்லாம் எலும்புகள் உடம்பை விட்டு தள்ளி இருந்தன. 70 வயதை தாண்டிய தேகம். தலையில் வெள்ளி கொத்துகள். ஆங்காங்கே விசுவாசமாய் ஒரு சில கருப்பு முடிகள்.

 

சமையல் கட்டில் கடா முடாவென சத்தம். அடுப்பின் மேல் வாணலி. வாணலியில் தாளிக்கும் புகை. நெற்றியில் வியர்வை, உதட்டில் கோபம். வெயிட்... இவள் அகல்யா இல்லை. 

 

"கார்த்தி", என்று குரல் கொடுத்தாள் சித்ரா.

 

இவள் அகல்யாவின் தங்கை சித்ரா. இயற்கையாகவே நல்ல பெரிய கண்கள். இமைகளை அடிக்கடி படபடத்துக் கொள்வாள்.  நட்சத்திரம் மின்னும் கண்கள்... காதுகளில் ஜிமிக்கி திமிர்த்தனமாய் தனியாக பேசிக் கொண்டிருக்கும். இரட்டை பின்னல், பாவாடை தாவணி. சித்ராவை ஒரு முறை பார்த்தவர்கள், நிச்சயமாக மறுமுறை பார்க்க திரும்புவார்கள்.

 

ஜன்னலுக்கு வெளியே, சற்று தூரத்தில் நீட்டி கொண்டிருந்த மரக்கிளையில், ரெண்டு பெயர் தெரியாத பறவைகள் அமர்ந்து கீச் கீச் என்று சத்தமிட்டு கொண்டிருந்தன. அதை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். வெயிட்.... இவளும் அகல்யா இல்லை.

 

"கார்த்தி... கூப்பிட்டது கேட்டுச்சா இல்லையா?..." என்றாள் சித்ரா.

 

கார்த்திகா. அகல்யாவின் கடைக்குட்டி தங்கை. சித்ராக்கா கூப்பிட்டது அவள் காதில் விழவில்லை. கார்த்திகாவை பார்த்து அந்த பறவைகள் கீச் கீச் என்று சங்கீதக் குரலை வெளிப்படுத்தின. கார்த்திகா ஆர்வமாக அதை பார்த்துக்கொண்டே இருந்தாள். இரண்டு பறவைகளுக்கும், அவள் இதுவரைக்கும் ஒரு பருக்கை உணவு கூட தந்ததில்லை. இருந்தும் அவளைப் பார்த்து கொஞ்சம் கூட பயப்படாமல், அன்புடன் குட் மார்னிங் சொல்லிக் கொண்டிருந்தன. கார்த்திகா அந்த பறவைகளைப் பார்த்து விசிலடித்தாள்.

 

கார்த்திகா அஞ்சு கிராமத்தில் ஒரு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி. படிப்பை பற்றி பேசினால் அவளுக்கு பிடிக்காது. அதனால் விட்டு விடுவோம்.  சூர்யாவை பற்றி பேசுங்கள், ரொம்பவே பிடிக்கும். கார்த்திகாவுக்கு பிரட் நிற சருமம்.  குழந்தைத்தனம் மாறாத முகம். ஈர பளபளப்புடன் உதடுகள். ஒற்றைப் பின்னலாக போடப்பட்ட முடி, கீழ் முதுகு வரை நீளும். கார்த்திகா இருக்கும் இடத்தில், 100 அடி சுற்றளவில் யார் இருந்தாலும், அவர்களுக்கும் கார்த்திகாவின் உற்சாகம் பற்றிக்கொள்ளும்.

 

"அடியே கார்த்தி... கூப்டது காதுல விழல.. பாத்திரம்ல்லாம் கழுவிட்டியா????", அடுப்பில் கிளறிக் கொண்டு சித்ரா மூன்றாவது முறையாக கத்த,

 

அய்யய்யோ என்று கிணற்றடிக்கு கார்த்திகா பதறி ஓடினாள்.

 

"சே!!! இந்த வீட்ல நம்ம சொல்றத கேக்குறதுக்கு யாருமே இல்ல", என்று சலித்தபடியே சித்ரா கிளறிக் கொண்டிருந்தாள்.

 

கூடத்தின் மூலையில் இருந்த ஒரு அறையில், நெகிழ்ந்திருந்த உடையை சரி செய்து கொண்டிருக்கும் ஒரு சந்தன நிற அழகி. இவள் தான்... இவளே தான் அகல்யா. 

 

அப்படி என்ன முக்கியமான வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் என்று தானே கேட்கிறீர்கள். தூங்கிக் கொண்டிருந்தாள். வேலைக்கு போகாத இந்த இரண்டு மாதம் தான்... அவளுக்கு நன்றாக தூங்குவதற்கு நேரம் கிடைக்கிறது.

 

அகல்யாவின் அழகு ஒரு கவிதைக்கு நிகரானது. பெரிய கண்கள் அவள் குடும்ப சொத்து போலிருக்கிறது. இதழ்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் சிரிக்க தெரியும் என்று அறிவிக்கும் ஸ்பெஷல் கண்கள். ரோஜா உதடுகள்.  சீரான பற்கள். வாத்ஸ்யாயானர் சொன்ன லட்சணங்களுடன் நெற்றி, மூக்கு, உதடு.... உடலின் வளைவுகள், மேடுகள், சரிவுகளை வர்ணிக்க ஆரம்பித்தால் வர்ணித்துக் கொண்டே இருக்கலாம். லிப்ஸ்டிக், பவுடர், ஷாம்பூ, சென்ட், நகை என்று எந்தவித செயற்கையும் அருகில் சேர்க்கப் பிரியப்படுவதில்லை. இயல்பாகவே அகல்யா ஒரு மப்பும் மந்தாரமுமான அழகி.

 

ரூமை விட்டு வெளியே வந்தாள் அகல்யா. கூடத்தில் இருந்த சுவரில் அப்பாவும் அம்மாவும் புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு புது செம்பருத்திப் பூ அவர்களுடன் சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்தது. சித்ரா காலையிலேயே பூ மாற்றி வைத்து விட்டாள் போலிருக்கிறது. அப்பா அம்மா இருந்த நாட்களின் நினைவு, அவள் கண் முன்னால் நிழலாடியது.

 

அப்பா ரத்ன சபாபதி இந்த ஊரிலேயே பெரிய மிராசுதாரர். ஏகப்பட்ட சொத்துக்கள். பணத்துக்கு பஞ்சம் இல்லை. அம்மா, அவருக்கு ரெண்டாம் மனைவிதான். பாட்டியின் கட்டாயத்துக்காக பெரியம்மா ராஜலட்சுமியை கல்யாணம் செய்து கொண்டார். ஆனால் அப்பா காதலித்தது அம்மா புஷ்பவல்லியை தான். அம்மாவின் முகத்தை, அவள் முத்தங்களை, அவள் அரவணைப்பை,

பொய்க் கோபத்தை, சமாதான வார்த்தைகளை... எப்படி மறக்க முடியும்??? அம்மா, அவர்களுக்கு நிழல் கொடுத்த ஆலமரம். ஆலமரம் விழுந்து விட்டால் யார் தான் தாங்கிக் கொள்ள முடியும்???

 

பெரியம்மாவை கல்யாணம் செய்து கொண்டாரே தவிர, அப்பா முழு நேரமும் இந்த வீட்டில் தான் இருப்பார். அப்பா கையைப் பிடித்துக் கொண்டு சாலையில் நடந்தது, அவளை உப்பு மூட்டை தூக்கிக் கொண்டு அப்பா தோட்டத்தில் ஓடியது, பள்ளிக்கூட வாசலில் காத்திருந்து அவளை கூட்டி வருவது என எத்தனையோ அன்பு கணங்களை பொக்கிஷமாக நினைவு அடுக்குகளில் பாதுகாத்து வருகிறாள் அகல்யா. 10 வருடங்களுக்கு முன்னால், அவர்களின் குலதெய்வம்  இசக்கி கோவில் திருவிழாவுக்கு போய்விட்டு இரவு வரும்போது, அவள் அப்பாவும் அம்மாவும் ஒரு கார் விபத்தில் இறந்து போனார்கள். அப்போது அகல்யாவுக்கு 16 வயது, சித்ராவுக்கு ஓரளவுக்கு விவரம் தெரியும். ஆனால் கார்த்திகா, அப்போது சிறு குழந்தை 4 வயது தான் இருக்கும்.

 

விபத்தைப் பற்றி ஊருக்குள் பல்வேறு கதைகள் பேசினார்கள். சொத்து பிரிப்பதில் பிரச்சனை வந்தது. அதைப் பற்றில்லாம் அகல்யா கவலைப்படவில்லை. அப்பாவும், அம்மாவும் போன பிறகு என்ன இருக்கிறது?  தோட்டம், துறவு, பெரிய வீட்டை பெரியம்மாவும், அவள் மகன் முத்துப்பாண்டியும் எடுத்துக் கொண்டார்கள். வாய்க்காலுக்கு பக்கத்தில் இருக்கும் நிலங்களை அத்தை பிரபாவதி எடுத்துக் கொண்டாள். இப்போது இருக்கும் மேட்டு வீட்டையும், இதற்கு பக்கத்தில் இருக்கும் காவண வீட்டையும் இவர்களுக்கு கொடுத்துவிட்டார்கள்.

 

பெரியம்மாவும், அண்ணன் முத்துப்பாண்டியும் சொத்துக்களில் ஒரு நயா பைசா கூட கொடுக்காமல், துணை யாருமில்லாத இந்த மூன்று பெண்களையும் ஊரை விட்டு துரத்த பார்த்தார்கள். தாத்தா பெரிய கருப்பனும், ஊராரும் தலையிட்டதால் தான் இந்த வீடாவது கிடைத்தது. பக்கத்தில் இருந்த காவண வீட்டை கொடுத்ததற்கு காரணம், அது சண்டி முனிக்கு நேர்ந்து விட்ட வீடு. அதனால் இவர்கள் தலையில் கட்டி விட்டார்கள். எப்படியும் பெரியம்மா வளைத்து எடுத்த சொத்துக்கள் மூன்று தலைமுறைக்கு போதும். முத்துப்பாண்டி உபயத்தால், மூன்று தலைமுறையில் இரண்டு தலைமுறையில் கரைந்திருந்தன.

 

போட்டோவை பார்த்துக் கொண்டிருந்த அகல்யாவுக்கு, 

 

மீண்டும் மீண்டும் அப்பா அம்மாவின் ஞாபகங்கள் அதிகமாக, கண்ணோரத்தில் எந்த நேரத்திலும்  வழிந்து ஓட ஆயத்தமாயிருந்தது கண்ணீர்...

 

"அப்பா..... அம்மா.... நாங்க நல்லா இருக்கோம்... நீங்க எப்படிருக்கீங்க?????" என்றாள் போட்டோவை பார்த்து... வழக்கம்போல் பதில் சொல்லாமல், அவளை சிரித்தபடி, பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 

கண்ணீரை துடைத்துக் கொண்டு சமையல்கட்டை நோக்கி சென்றாள்.

 

"என்னடி டிபன் ரெடியா?"

 

"ரெடிக்கா... தோசை, தக்காளி சட்னி" என்றாள் சித்ரா.

 

கார்த்திகா பாத்திரங்களை கழுவி கிச்சனுக்குள்ள எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். அப்பா அம்மா இறந்த பிறகு... சித்ராவையும், கார்த்திகாவையும் பொறுப்பாக வளர்த்தது அகல்யா என்பதால், இருவருக்குமே அக்கா மேல் மரியாதை கலந்த பயம் உண்டு. அகல்யா திண்ணையில் இருக்கும் தாத்தாவை பார்ப்பதற்காக சென்றாள்.

 

வழக்கம்போல் நாளிதழை பார்வையால் மேய்ந்து கொண்டிருந்த தாத்தாவை பார்த்து,

 

"தாத்தா எனக்கு இன்னைக்கு நாகர்கோவில் போகணும். பழைய கம்பெனில PF க்கு எழுதி கொடுத்திருந்தேன். அது என்னாச்சுன்னு போய் கேக்கணும். நான் வருவதற்கு சாயங்காலம் ஆயிரும்."

 

பெரிய கருப்பன்: சரிமா, பார்த்து போய்ட்டு வா. நான் சொன்ன விஷயத்தை யோசிச்சியா?

 

அகல்யா: தாத்தா, அதெல்லாம் சரிப்பட்டு வராது.  தூத்துக்குடி  அத்தை, இவ்வளவு நாளா இந்த பக்கமே வரல. சின்ன வயசுல அவங்கள பார்த்தது. நாம கஷ்டப்படும் போதெல்லாம் வந்து எட்டி கூட பாக்கல...

 

தாத்தா ஏதோ சொல்ல வர,

 

அகல்யா அவரை பேசிவிடாமல் தொடர்ந்து பேசினாள். "சரிதான், கல்யாணி அத்தை பையன் கூட நான் சின்ன வயசுல ஸ்கூலுக்கு போய்ருக்கேன். விளையாண்டுருக்கேன். ஒண்ணா காடு கழனில்லாம் சுத்திருக்கோம். அதெல்லாம் விவரம் தெரியாத வயசு.     அவனுக்கு என் மேல கொள்ள ஆசை. இப்ப என்னை கல்யாணம் கட்டிக்க பிரியப்படுறான்னு சொன்னா எப்படி? நம்ம சித்ராவுக்கு 19 வயசு தான் ஆகுது. இப்பதான் ஃபர்ஸ்ட் இயர் போறா. காலேஜ் படிச்சு முடிக்கணும். கார்த்தி 10-ம் கிளாஸ் முடிக்கல. ரெண்டு பேருமே ஒரு இரண்டாங் கெட்ட வயசுல இருக்காங்க. அவங்கள யாரு பாத்துக்குவா??? எனக்கு அதுக்கு ஒரு பதில் சொல்லுங்க. கண்டிப்பா நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிறேன்.."

 

தாத்தா: அதுக்காக இல்லம்மா... ஏற்கனவே உனக்கு வயசு ஆயிட்டு போகுது. காலாகாலத்தில் பண்ண வேண்டிய விஷயங்கள் எல்லாம் பண்ணனும். இவங்க ரெண்டு பேரையும் பாத்துக்க ஆள் இல்லை என்பதற்காக உன் கல்யாணத்தை தள்ளி போட முடியுமா??? ஊருக்குள் அத்தை சும்மாதான் இருக்கிறா. அவளை கவனிச்சுக்க சொல்ல வேண்டியதுதான்.

 

அவர் சொன்னது அவருடைய மகள் பிரபாவதியை பற்றி...

 

அகல்யா வாய்விட்டு சிரித்தாள்... "யார் பிரபா அத்தையா??? நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. அவங்க நல்லவங்க தான்... இல்லன்னு சொல்லல. ஆனா அவங்களால ராகினியையே கவனிச்சுக்க முடியாம, அவ புருஷனை விட்டுட்டு வந்து வீட்டோட இருக்கிறா. சொத்து பிரிக்கும் போது கொடுத்த நிலத்தையும் பொண்ணு கல்யாணத்துக்காக வித்துக்கிட்டு இப்ப அம்போன்னு இருக்குறாங்க. இதுல நம்ம பொண்ணுங்கள அவங்க கவனிச்சிக்குவாங்களா, அதெல்லாம் சரிப்பட்டு வராது தாத்தா."

 

தாத்தாவுக்கு அவள் சொல்வதில் உள்ள நியாயம் புரிந்ததால், மேற்கொண்டு அதைப் பற்றி பேசாமல் மௌனமானார். ஆனாலும் மூத்தவளுக்கு வயதாகிக் கொண்டு போகிறதே என்று ஒரு சிறு ஆதங்கம்.

 

அகல்யா: நான் சொன்னது உங்களுக்கு ஏதாவது கோபமா?

 

அவளை கிட்டே வா என்று கூப்பிட, ஈசி சேரில் இருந்த தாத்தா அருகில் வந்தாள் அகல்யா. அவள் தலையை பாசமாக தடவி, கன்னத்தில் முத்தமிட்டார். அவர் கண்களில் ஈரத்தின் பளபளப்பு.

 

"உன்ன மாதிரி பொறுப்பான பொண்ணு மேல கோவப்பட முடியுமா??? நல்லா படிக்கிற பொண்ணு, தங்கச்சிங்களுக்காக படிப்பை விட்டே. நீயே சுயமா சம்பாதிச்சு தொலைதூர கல்வியில படிச்சே.  வேலைக்கு போய், சம்பாதித்து தங்கச்சிகளையும் நல்லபடியாக வளர்த்தே. உன்ன மாதிரி ஒரு அக்கா கிடைத்ததற்கு அவங்க கொடுத்து வச்சிருக்கணும்.. உனக்கும் காலாகாலத்தில் நடக்க வேண்டியது நடக்கணும் இல்லம்மா... அதனால்தான் கேட்டேன்.."

 

அகல்யா: என்ன தாத்தா, எல்லாமே நான் தனியா செஞ்ச மாதிரி சொல்றீங்க??? நீங்க எங்களுக்கு துணையா இல்லைனா, நாங்க என்ன பண்ணிருக்க முடியும். அப்பா கொடுத்த இந்த வீடு இருக்கு. எல்லாம் இருந்ததனால் தான் செய்ய முடிந்தது.

 

தாத்தா; சரி, உன்னோட பேக் பெயின் எப்படி இருக்கு?? வேற ஏதாவது வேலைக்கு போக போறியா???

 

அகல்யா: பேக் பெயின் குறைந்த மாதிரி தெரியல. மயிலாடி வைத்தியர் கொடுத்த மருந்து, தைலங்கள் தான் பயன்படுத்துறேன். ரெண்டு மூணு மாசம் வேலைக்கு போக முடியாதுன்னு தான் நினைக்கிறேன். கொஞ்சம் சிரமம் தான். இருக்கிற பணத்தை வைத்து சமாளிக்கணும்.

 

தாத்தா: அப்படின்னா நான் ஒண்ணு சொல்றேன்.. நீ கோவிச்சுக்க கூடாது.

 

அகல்யா: என்ன இது பீடிகை. சொல்லுங்க தாத்தா???

 

தாத்தா: நம்ம காவண வீட்டை வாடகைக்கு விட்டால் என்ன??? ஒரு சின்ன வருமானம் அதில் வருமே.

 

அகல்யாவுக்கு சின்னதாக அதிர்ச்சி.

 

"என்ன தாத்தா சொல்றீங்க??? நீங்க தான் முனி சாபமிட்ட வீடு. அதை விக்கவும் முடியாது. எதுவும் பண்ண முடியாது. மீறி வீட்டை கை வைத்தால் முனி அடித்து விடும். அப்படி இப்படிலாம் சொன்னீங்க???"

 

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் காவண வீடு, அவர்கள் வீட்டு காம்பவுண்டுக்குள்ளையே, சற்று தள்ளி, அமைந்திருந்தது. யாரும் அந்தப் பக்கம் போகாததால் செடி கொடிகள் சூழ்ந்து பாழடைந்து கிடந்தது. முனி வீடு என்பதால் இரவு யாரும் அந்த பக்கம் கூட செல்வதில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னால், இந்த இரு வீடுகளும் கட்டப்படும் போது,  மேட்டில் அமைந்திருந்ததால், இப்போது அகல்யா இருக்கும் வீட்டை மேட்டு வீடு என்பார்கள். 

 

பள்ளத்தில் அமைந்திருந்ததாலும், முன்பொரு காலத்தில் ஊரில் கல்யாண விருந்துகள் அடிக்கடி அந்த வீட்டில் நடந்து, கல்யாண பந்தல்கள் போடப்பட்டதால், அதை காவண வீடு என்கிறார்கள். மேட்டு வீட்டின் மினியேச்சர் வடிவம் தான் காவண வீடு.

 

தாத்தா: முனி சாபமிட்ட வீடு என்பது உண்மைதான். இருந்தாலும்... 

 

ஏதோ யோசனையோடு பேச்சை நிறுத்தினார்.

 

வாழ்ந்த  வாழ்க்கையின் மிச்சமாக எல்லா ஊர்களிலும், இதேபோன்று ஒரு பாழடைந்த வீடு இருக்கிறது. அதை பற்றிய கதைகள் சொல்வதற்கு ஆள் இருக்கும் வரையில் அந்த வீடுகளும் உயிரோடுதான் இருக்கும்.

 

தாத்தா ஈசி சேரில் இருந்து எழும்பினார். பக்கவாட்டில் திரும்பி காவண  வீட்டை பார்த்தார். அகல்யாவும் திரும்பி, காவண வீட்டை பார்த்தாள்.

 

இருவரும் தன்னைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது போல்... காவண வீடு அவர்களை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தது.

தொடரும்

 

உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது

https://kavichandranovels.com/community/dennis-jegans-novels-comments-and-discussions/&source=gmail&ust=1739971482333000&usg=AOvVaw1Q2trKHanmhSOxNHwV7uL 1"> https://kavichandranovels.com/community/dennis-jegans-novels-comments-and-discussions/

 

 


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Trusted Member Author
Joined: 1 month ago
Posts: 41
Topic starter  
கருப்பு 2
 
காவண வீட்டை பார்த்துக் கொண்டிருந்த பெரிய கருப்பன், சிறிது நேரம் எதுவுமே பேசாமல் நின்றிருந்தார், தான் சொன்னது சரியா தவறா என்று அவர் மீண்டும் ஒருமுறை யோசித்துப் பார்த்திருக்கக்கூடும்.
 
"அது உன்னுடைய சின்ன வயசுல நடந்த சம்பவம். அப்போ உங்க அப்பா, உன்னை காப்பாற்றுவதற்காக சண்டி முனியின் கோபத்திற்கு ஆளானான். அதிலிருந்து ஊருக்குள்ள இது முனி வீடுன்னு பேச்சாயிடுச்சு."
 
அகல்யா ஆர்வமாக: என்னை காப்பாற்றுவதற்காகவா??? இந்தக் கதை எனக்கு தெரியாதே. கொஞ்சம் டீடைலா சொல்லுங்க தாத்தா.
 
பெரிய கருப்பன்:  பல வருஷத்துக்கு முன்னால, ஊருக்குள்ள முனி ஓட்டம் ஜாஸ்தியா இருந்த காலகட்டம். இப்ப மக்கள் தொகை பெருகிடுச்சு. விஞ்ஞானம் வளர்ந்துடுச்சு. முனி ஓட்டம் பற்றிய பேச்செல்லாம் இல்லை.
 
20 வருஷத்துக்கு முன்னால, ஒரு நாள் இரவு 12 மணி இருக்கும். வீட்ல எல்லாரும் தூங்கிட்டு இருக்கிற நேரத்துல, திடீர்னு உங்க அம்மா உன்னை காணோம்னு சத்தம் போட, எல்லோரும் வீடு பூரா தேடிப் பார்த்தோம். வீட்டு பின்னால, காவண வீட்டுல, எல்லா இடமும் பார்த்தும் உன்னை காணல்லை. என்ன பண்றதுன்னு தெரியாம, ஆளுக்கொரு பக்கமா ஊருக்குள்ள தேடுவதற்காக கிளம்பி போனோம்.
 
இதே தெரு முனையில, நீ ரத்தம் கக்கி மயங்கி கிடந்தே. பதறிப் போய், தண்ணி தெளிச்சு எழுப்பி, உன் கிட்ட என்னன்னு கேட்டதுக்கு, நீ கண்ணெல்லாம் உருட்டிக்கிட்டு கத்திக்கிட்டு இருந்தே. அப்புறம் பதறியடிச்சு பூசாரி வீட்டுக்கு தூக்கிட்டு போனோம். அவரு உன்னை பார்த்துட்டு சண்டி முனி புடிச்சிருச்சுன்னு சொன்னாரு. நான் பூசாரியிடம் புடிச்சிருக்கா, அடிச்சிருக்கா என்று தெளிவாக கேட்டேன். அடிச்சிருந்தா ஆள் உயிரோடவே இருக்க வாய்ப்பு இல்ல. அதனால புடிச்சிருக்கு அப்படின்னார்."
 
அவளுக்கே இது புது தகவல் என்பதால், அகல்யா அதிர்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்தாள். இன்றைய காலகட்ட 2k கிட்ஸ்க்கு தெரிந்ததெல்லாம், ஆவி, பேய் என்ற வார்த்தைகள் மட்டும் தான். ஆனால் அமானுஷ்ய உலகில் விதவிதமான பேய்கள் இருப்பது பற்றில்லாம் அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆவி மற்றும் பேய் என்கிற வார்த்தைகளையே நாம் தவறாகத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
 
பெரிய கருப்பன் தொடர்ந்தார், "பூசாரி என்னென்னமோ பண்ணி பார்த்தார். சண்டி முனி ரொம்ப உக்கிரமாக இருந்ததால் விரட்ட முடியவில்லை. மற்ற முனிகளை மாதிரி சண்டி முனி  கிடையாது. எந்த நேரத்தில் என்ன பண்ணும்ன்னு சொல்ல முடியாது. ரெண்டு நாள் உனக்கு கடுமையான ஜுரம். தூக்கி தூக்கி போடும். சில நேரங்களில் கத்திக்கிட்டு முடிய புடிச்சு இழுத்துகிட்டு ரொம்ப மோசமா இருந்தே. நிலைமை மோசமாயிட்டே போச்சு. அப்பதான் விஜயாபதிலருந்து ஒரு சாமியாரை கூப்பிட்டு, முனியை விரட்டுவதற்காக, காவண வீட்டில் விசேஷ பூஜைகள் செய்ய ஆரம்பித்தார். தலை முடியை விரிச்சி போட்டுட்டு, கருப்பு உருவமா சாமியார் முன்னால முனி வந்துச்சு.
 
சாமியார் சண்டிமுனியிடம், இந்த குழந்தையை விட்டிரு. உனக்கு வேற என்ன வேணும்னு கேளு செய்கிறோம்ன்னார்.  அதற்கு முனி எனக்கு இருக்கிறதுக்கு இடமில்லை. கடற்கரையோரம் இருந்த சின்ன கோயிலும், ஒருத்தரும் கண்டுக்காம பாழடைஞ்சு போச்சு. எனக்கு இருக்குறதுக்கு இடம் வேணும்ன்னுச்சு. சும்மா இருக்கிற இந்த வீட்டை பயன்படுத்திக்கோ, என் புள்ளையை விட்டுருன்னு, உங்க அப்பா சொல்ல, அதன் பிறகு தான் முனி உன்னை விட்டு இறங்கி சமாதானமா போச்சு.
 
அதன் பிறகு உங்க அப்பா, முனியை வீட்டுக்குள் வரவிடாமல் இருப்பதற்காக, சாமியார்களை மந்திர கட்டு போட்டு வீட்டை பூட்டி வச்சிட்டாரு. கொஞ்ச நாள் கழிச்சு, வீட்டுக்குள் நுழைலாம்னு வந்த முனிக்கு, நுழைய முடியாமல் மந்திர கட்டு போட்டிருப்பதால் எக்கச்சக்க கோபம் வந்துருச்சு.  காவண வீட்டு முன்னால பயங்கர சத்தம். என்னை ஏமாத்தி நடுத்தெருவில் நிறுத்தின உன்னை சும்மா விடமாட்டேன். இந்த வீடும் ஆள் புழக்கம் இல்லாமல் மக்கி மண்ணா போகும். அரவங்களுக்கு ஆந்தைகளுக்கும் புகலிடமாக இருக்கும்ன்னு முனி சாபம் விட்டுருச்சு. அன்னையிலிருந்து இப்படித்தான் பாழடஞ்சி கிடக்கு. உன் அப்பனும் ஆத்தாளும் கார் விபத்தில் செத்தது கூட, முனி சாபத்தினால் தான்னு ஊருக்குள்ள எல்லாருமே பேசிக்கிட்டாங்க."
 
அகல்யா ஆச்சரியமாக: இவ்வளவு நடந்துருக்கு, ஆனா எனக்கு எதுவுமே ஞாபகத்தில் இல்லையே!!... என்றாள்.
 
பெரிய கருப்பு எதுவும் பேசாமல் நின்றிருந்தார். வீட்டுக்குள் இருந்து சித்ரா வெளியே வந்தாள்.
 
சித்ரா: அக்கா, தோசை சட்னி பண்ணி கிச்சன்ல வச்சிருக்கேன். சீக்கிரம் சாப்பிடுங்க. எனக்கு காலேஜுக்கு டைம் ஆயிடுச்சு. நான் கிளம்புறேன்.
 
அகல்யா: கார்த்தி ரெடியாகலையா???
 
சித்ரா: தெரியலக்கா. நான் வரேன்.
 
சித்ரா 8 மணி பஸ்சை பிடிப்பதற்காக அவசரம் அவசரமாக சென்றாள்.
 
அகல்யா வெளியில் இருந்தபடியே, "கார்த்தி ரெடி ஆயிட்டியா???" என்று சத்தமிட்டு கேட்க,
 
"ரெடியாயிட்டு இருக்கேன்க்கா..." என்று உள்ளிருந்து குரல் வந்தது.
 
அகல்யா தாத்தாவை பார்த்து,
"இவ்வளவு நடந்திருக்கு. அதன் பிறகும் நீங்க வீட்டை வாடகைக்கு விடுவதைப் பற்றி பேசுறீங்களே???  முனி வீடுன்னு எல்லாருக்கும் தெரியும். யார் வாடகைக்கு வருவாங்க?"
 
பெரிய கருப்பன்: இதெல்லாம் பல வருடங்களுக்கு முன்னால் நடந்த கதை. இப்போது இதையெல்லாம் யார் பார்க்கிறாங்க. அது மட்டுமில்லாமல் இவ்வளவு பெரிய வீட்டை வெறுமனே பூட்டி போட்டுருக்கோம். சும்மா பூட்டி போட்டுருந்தாலே, இன்னும் நிறைய கதைகள் சேர்த்து பேசுவாங்க. முதலில் யாருக்காவது வாடகைக்கு விடுவோம். பிரச்சினை இல்லன்னா, ரொம்ப நல்லது. முனி வீடுங்கற பெயரும் கொஞ்சம் கொஞ்சமா மாறிடும். நீங்க மூணு பேருமே பொட்ட புள்ளைங்க. நாளைக்கு உங்களுக்கு கல்யாணம் காட்சின்னு எதாவது செலவு வரும் போது, அந்த வீட்டை வித்து செய்வதற்கு சரியா இருக்கும். சும்மா பூட்டி போட்டு பாழடைஞ்சு போயிட்டுருக்கு. உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கட்டுமே. நான் சொன்னா, உங்க நல்லதுக்கு தானே சொல்லுவேன்.
 
அகல்யாவுக்கு தாத்தாவின் மாஸ்டர் பிளான் புரிந்தது. முதலில் வீட்டை வாடகைக்கு விட்டு டெஸ்ட் பண்ண வேண்டியது. எந்த பிரச்சினையும் இல்லன்னா, ஊருக்குள்ளும் முனி வீடுங்கற பெயர் மாறிவிடும். டெஸ்டிங் பண்ணும் போது வாடகையும் கிடைக்கும். பின்னால் வீட்டை விற்பதற்கும் வசதியாகவும் இருக்கும்.
 
அகல்யா: எல்லாம் சரி தாத்தா. இங்கே வீட்டு வாடகைக்கு யார் வருவாங்க???
 
ஸ்கூல் பையை தூக்கிக்கொண்டு, கார்த்திகா அவர்களுக்கு இடையே புகுந்து வேகமாக ஓடினாள்
 
கார்த்திகா: டாட்டா தாத்தா, அக்கா டாட்டா.
 
அகல்யா: ஏய் சாப்பிட்டியாடி....
 
கார்த்திகா: சாப்பிட்டேன்.... சாப்பிட்டேன்....
 
இரண்டாவது சாப்பிட்டேன் என்று அவள் சொல்லும் போது, கேட்டை திறந்து கொண்டு வெளியே ஓடிக் கொண்டிருந்தாள்.
 
பெரிய கருப்பன்; என்னம்மா இப்படி கேட்டுட்ட??? அணுமின் நிலையம் வந்ததிலிருந்து வாடகைக்கு வீடு தான் நம்ம சுற்றுப்புறங்களில் ரொம்ப டிமாண்ட். அஞ்சு கிராமம் அப்புறம் செட்டிகுளத்தில் வீடு வாடகைக்கு கிடைக்கிறது எல்லாம் ரொம்ப கஷ்டம். எல்லாம் சுற்றுப்புற கிராமங்களில் தான் பார்க்கிறாங்க. வாடகைக்கு ஆள் கண்டிப்பா கிடைப்பாங்க. அதெல்லாம் நீ ஒண்ணும் கவலைப்படாதே.
 
அகல்யா: குடியிருக்க வர்றவங்களுக்கு ஒண்ணும் ஆகாம இருந்தா சரிதான்.
 
தொடரும்
 
 
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது
 
 
 

   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Trusted Member Author
Joined: 1 month ago
Posts: 41
Topic starter  
கருப்பு 3
 
பெரிய கருப்பன்: எங்கள மாதிரி, அந்த காலத்து ஆட்கள் தான், இதையெல்லாம் பார்க்கிறாங்க. இப்ப இருக்குற பசங்களுக்கு பேயாவது பிசாசாவது. அதுவும் அணு மின் நிலையம் வந்ததால நிறைய வட நாட்டு பசங்க வீடு தேடி சுத்திட்டு இருக்காங்க. ஒரு பிரச்சனையும் வராது. நம்ம ஊரோ, வெளியூரோ நல்ல ஆளா பார்த்து குடி வைக்க வேண்டியதுதான்.
 
கேட் திறக்கப்படும் சத்தம் கேட்க, இருவரும் திரும்பி பார்த்தார்கள். தெருமுனையில் குடியிருக்கும் ரிட்டையர்டு வாத்தியார் சுந்தர்ராமன் வந்து கொண்டிருந்தார்.
 
அகல்யா: உங்களுக்கு கம்பெனி வந்தாச்சு. சரி, நான் நாகர்கோவில் போறதுக்கு ரெடியாகிறேன்.
 
சுந்தரராமன் அஞ்சுகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாத்தியாராக வேலை பார்த்து, ரிட்டையர்டு ஆகி, எட்டு வருடங்களுக்கு மேலாகிறது. மனைவி சரஸ்வதி ஹவுஸ் வைஃப். பார்ப்பதற்கு பஞ்சத்தில் அடிபட்டவர் போலவே இருப்பார். ஆனால் மாதந்தோறும் கவர்மெண்ட் பென்ஷன் கிடைக்கிறது. நோயோ, வேறு பிரச்சினைகளோ கிடையாது. காலையில் டீக்கடையில் போய், பேப்பரை வரிக்கு வரி படிக்க வேண்டியது, அரசியலில் ஆரம்பித்து ஊர் பிரச்சினைகளை அலசி ஆராயும் சம்பவம் நடக்கும். பின்னர், டிபன் சாப்பிட்டு வந்து பெரிய கருப்பனிடம் கொஞ்ச நேரம் பேச வேண்டியது. மதியம் வீட்டுக்கு போய் சாப்பிட்டுவிட்டு, தூக்கம் போட வேண்டியது. சாயங்காலம் டிவி சீரியல்கள். இதுதான் அவருடைய அன்றாட பொழுதுபோக்கு.
 
அவருடைய ஒரே மனக்குறை. ஒரே பெண் ஹேமா ஒரு கிறிஸ்டின் பையனை காதலித்து, சுந்தர்ராமனின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் ஓடிப்போய் கல்யாணம் செய்ததுதான். இன்று வரை ஹேமாவையும், மாப்பிள்ளையையும் வீட்டில் சேர்க்கவில்லை. ஹேமாவை பற்றி பேசுவதை கூட அவர் விரும்புவதில்லை.
 
சேரை இழுத்து போட்டு உட்கார்ந்தார் சுந்தர்ராமன்.
 
பெரிய கருப்பன் செய்தித்தாளை அதன் மடிப்புகளில் சரியாக மடித்து மேஜையின் மேல் வைத்துவிட்டு: "வாய்யா, என்ன விசேஷம்?", என்றார்.
 
பேச்சுக் கச்சேரி ஆரம்பித்தது.
 
அகல்யா அவள் அறைக்கு சென்று சேலையை திருத்தமாக கட்டிக்கொண்டு தலைவாரிக் கொண்டு, சேலை நிறத்திற்கு பொருத்தமாக, நெற்றிப்பொட்டும், வளையல்களும், காதணிகளுமாய் வெளியே வந்தாள். பேசிக் கொண்டிருந்த இருவரிடமும் விடை பெற்றுக்கொண்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி சென்றாள்.
 
அவர்கள் வீடு இருக்கும் மேட்டு தெரு சற்று விஸ்தாரமானது. மொத்தம் ஐந்தே வீடுகள் தான். தெருவின் ஒருபுறம் காவணவீடு, அதைத்தொடர்ந்து மேட்டு வீடு, அதற்கடுத்து சுந்தரராமன் சார் வீடு,  சிங்கப்பூர்காரர் வீடு, கடைசியில் ராயப்பன் வீடு. சிங்கப்பூர் காரர் திருவிழாக்களுக்கு மட்டுமே ஊருக்கு வருவார். மற்ற நேரங்களில் வீடு பூட்டப்பட்ட நிலையில் இருக்கும். ராயப்பனுக்கு சொந்தமாக ஐந்து பைபர் படகுகள் இருக்கின்றன. தெருவின் மறுபுறம் வரிசையாக மரங்கள். அதனால் மேட்டு தெரு, இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாமல் வெறிச்சோடி இருக்கும்.
 
அகல்யா மேட்டு தெருவை கடந்து கீழத்தெரு பெரிய வீதியில் நுழைந்தாள். பெரிய வீதியில் இருந்த வேப்ப மரத்தினடியில், அமர்ந்திருந்த சடைசாமி அவளைப் பார்த்து கறை பற்களுடன் சிரித்தான். சடை சடையாக முடி, கிழிந்து கந்தலாகி போன துணி எங்கிருந்து வந்தான் என்றே தெரியாது. ரொம்ப நாட்களாகவே இங்கேதான் சுற்றிக் கொண்டிருக்கிறான். சில நேரங்களில் அவனைப் பார்க்கும்போது பாவமாக இருக்கும். சில நேரங்களில் பயமாக இருக்கும்.
 
கீழத்தெரு என்பது பொதுவான பெயர் பொதுவான பெரிய வீதியிலிருந்து, சீப்பு பற்கள் போல, பத்துக்கும் மேற்பட்ட தெருக்கள் கடற்கரை நோக்கி நீளும். கீழத்தெரு முதல் வீதி, கீழத்தெரு ரெண்டாவது வீதி என்று அழைப்பார்கள். மீன்பிடிப்பவர்கள் அதிகம் இருக்கும் தெரு. அதனால் ஒரு சில வீடுகளின் முன்னால் கருவாடு காய்ந்து கொண்டிருக்கும். அரை டவுசர் சிறுவர்கள் பட்டத்தை காற்றில் இழுத்து கொண்டு ஓடி கொண்டிருந்தார்கள். கடற்கரை மாதா கோயில் மணி அடிக்கும் சத்தம் கேட்டது. அய்யய்யோ மணி 9 ஆகிவிட்டதா? 9.15 பஸ்சை பிடித்தால் தான், பத்து மணிக்கு நாகர்கோவில் சரியாக போய் சேர முடியும்.
 
பெரிய வீதி வீடு ஒன்றின் திண்ணையில், ஊர் கதை பேசிக் கொண்டிருந்த இரண்டு கிழவிகளில், தஞ்சாவூர் கிழவி, அகல்யாவை பார்த்து,
 
"வேலைக்கு மறுபடியும் போறியா?" என்று கேட்க,
அதற்கு அகல்யா பேச்சை வளர்க்க விரும்பாமல், "இல்ல பாட்டி... வேறொரு வேலையா நாகர்கோவில் போறேன்", என்று சொல்லிவிட்டு நடையை கட்டினாள்.
 
பெரிய வீதியை கடந்து மெயின் ரோட்டை அடைந்தாள். தூரத்தில் பஸ் ஸ்டாப் தெரிந்தது. ஒன்றிரண்டு பேர் நின்றிருந்தனர். தடதடவென புல்லட் சத்தம். முத்துப்பாண்டி தான் வந்துகொண்டு இருந்தான். ரொம்ப காலமாகவே பேச்சு வார்த்தை இல்லாததால் எந்த வித ரியாக்ஷனும் இல்லாமல் அகல்யா சென்று கொண்டிருந்தாள். புல்லட் அவளை நெருங்கியதும், வேகம் குறைந்தது. அவளருகே நிறுத்தினான். அகல்யாவும் நின்றாள்.
 
முத்துப்பாண்டி கடுப்பாக: இத பாரு உன் கிட்ட கொஞ்சம் பேசணும்.. என்றான்.
 
அவன் திடீரென்று நிறுத்தி பேசியது, அவளுக்கு ஆச்சரியமாக இருந்தாலும், "சொல்லுங்கண்ணா", என்றாள்.
 
அவன் முகத்தில் பாசமோ, அங்கீகாரமோ எதுவும் இல்லை. அவளை நேரில் பார்க்க பிடிக்காதவன் போல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு பேச ஆரம்பித்தான். மூச்சில் லேசாக சாராய நெடி.
 
"வீட்டுக்கு வந்து பேசணும்னு தான் நினைச்சேன். தாத்தா இருப்பாரு, சரி அதான் வெளியில் பார்த்து பேசலாம்னு வந்தேன். சுத்தி வளைக்காம நேரா விஷயத்துக்கு வர்றேன். பல வருஷமா நீங்களும் பயன்படுத்தாமல், முனி வீடு சும்மா பூட்டி தானே கிடக்குது. அதை எனக்கு கொடுத்துடுங்க. என்னால முடிஞ்சத உங்களுக்கு தந்துடறேன்."
 
அகல்யாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்போதுதான் காவண வீட்டை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அதற்குள் இவனுக்கு மூக்கு வேர்த்து விட்டது.
 
அகல்யா: தேவைக்கு அதிகமாகவே உங்களுக்கு சொத்தெல்லாம் இருக்கு. அப்புறம் எதுக்கு நீங்க அந்த வீட்ட கேக்குறீங்க?? அது மட்டுமில்லாமல் முனி வீட்ட வாங்கி என்ன பண்ண முடியும்?
 
முத்துப்பாண்டி: அந்த வீட்டில் முனி இருந்தால் கூட அதை எப்படி விரட்டுறதுன்னு  எனக்கு தெரியும்?
 
அகல்யா: இது உனக்கே நியாயமா இருக்காண்ணா??? நாங்க மூணு பொட்ட புள்ளைங்க. நீங்களா பார்த்து தான் இந்த வீட்டை எங்களுக்கு கொடுத்தீங்க. இப்ப அதையும் கேட்டா எப்படி?? எங்களுக்கு நீ நல்லது பண்ண வேண்டாம். கெடுதல் எதுவும் செய்யாமல் இருந்தா போதும். தாத்தா சம்மதிக்க மாட்டார். அவர் சம்மதித்தாலும் நான் சம்மதிக்க மாட்டேன்.
 
"உங்களை எப்படி ஒத்துக்க வைக்கிறதுன்னு எனக்கு தெரியும்???", என்று  சொல்லிவிட்டு, பைக் கிக்கரை உதைத்த உதையில், அவனின் எரிச்சல் தெரிந்தது. புல்லட் விருட்டென்று செல்ல, அகல்யா பஸ் ஸ்டாப் நோக்கி நடந்தாள்.
 
மேட்டு வீடு
 
கிரீச் கிரீச் சென்று இரவு பூச்சிகளின் சத்தம் கேட்டுக் கொண்டிருக்க, காற்றில் குளிர் எக்கச்சக்கமாக கலந்திருந்தது. மேட்டு தெரு வெறிச்சோடி கிடந்தது. காம்பவுண்ட் சுவரில் படர்ந்திருந்த முல்லை கொடியின் வாசம், மேட்டு தெரு பூராவும் நிறைந்திருந்தது. காவண வீடு இருட்டுக்குள் மூழ்கியிருந்தது.
 
மேட்டு வீட்டு திண்ணையில், சேரில் இருந்த பெரிய கருப்பன், "எதுக்காக திடீர்னு வந்து காவண வீட்டை பற்றி பேசினான் அவன்?" என்றார் யோசனையாக....
 
சிட் அவுட்டின் மரச்சுவரில் அகல்யா சாய்ந்து நின்றிருந்தாள்.
 
"எனக்கே ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு தாத்தா???"
 
தாத்தா: என்ன நடந்தாலும் சரி, அவனுக்கு இந்த வீடு போக கூடாது. இப்ப வரைக்கும் யோசிச்சிட்டு தான் இருந்தேன். அவன் வந்து கேட்டதுக்கப்புறம் முடிவே பண்ணிட்டேன். சும்மா இருக்கிறதுனால தானே கேட்கிறான். சீக்கிரமாவே வீட்டை சுத்தப்படுத்தி, வாடகைக்கு விடுவதற்கு நான் ஏற்பாடு பண்றேன்.
 
அகல்யா: நீங்க முடிவே பண்ணிட்டீங்களா???
 
தாத்தா தீர்மானமாக ஆமாவென்றார்.
 
சிட் அவுட்டில் எரிந்து கொண்டிருந்த டியூப் லைட்டின் வெளிச்சம், முன்னாலிருந்த தோட்டத்தில் முழுவதுமாக ஊடுருவ முடியவில்லை.
 
பேசிக் கொண்டிருந்த அகல்யா எதார்த்தமாக காவண வீட்டை பார்க்க, அதிர்ந்தாள். இரண்டு வீட்டுக்கும் நடுவே செடிகள் உயிர்வேலி போல் நின்றிருக்கும். அந்த வேலி அருகே ஏதோ ஒரு கருப்பு உருவம் நின்றிருப்பது போல் தோன்றியது.
 
அகல்யா துணுக்குற்று போய் கூர்ந்து பார்த்தாள். 
 
உண்மைதான்... ஏதோ ஒரு உருவம், இருட்டுக்குள் நின்றபடி அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தது.
 
அகல்யா திடுக்கிட்டாள்.
 
தொடரும்
 
 
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது
 

   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Trusted Member Author
Joined: 1 month ago
Posts: 41
Topic starter  

கருப்பு 4

 

அகல்யா காவண வீட்டையே பார்த்துக் கொண்டிருப்பதை தாத்தா பார்த்ததும், "ஏம்மா என்னாச்சு?" என்று கேட்க,

 

அகல்யா: அங்கே யாரோ இருட்டுக்குள்ள நிக்கிற மாதிரி இருக்கு தாத்தா... என்று கிசுகிசுத்தாள்.

 

தாத்தா திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்க, அதற்குள்ளாக அகல்யா வீட்டுக்குள் சென்று டார்ச் லைட்டுடன் வெளியே வந்தாள்.

 

அகல்யா டார்ச் லைட் அடித்து பார்க்க, வேலி செடிகள் அசைந்தது போல் தோன்றியது.

 

"இருங்க, தாத்தா போய் பாத்துட்டு வரேன்...."

 

"இருட்டுல தனியா போகாதமா... நானும் வரேன்."

 

"என்ன பெரிய இருட்டு!  நம்ம வீட்டு இருட்டு தானே. நீங்க இங்கேயே இருங்க நான் போய் பார்த்துட்டு வரேன்..."

 

"சிக்னியை எங்கே காணல்லை"

 

"அது ரோட்ல எங்கயாச்சும் படுத்திருக்கும்"

 

சிக்னி கார்த்திகாவின் வளர்ப்பு நாய்.

 

அகல்யாவை டார்ச் லைட் வெளிச்சம் வழிநடத்த, சிட்டவுட்டில் இருந்து இறங்கி, இடது பக்கமாக திரும்பி காவண வீட்டை நோக்கி நடந்தாள். இரவு நேரங்களில் எவ்வளவோ தடவை, இந்த பக்கமாக வந்திருக்கிறாள் அவளுக்கு எதுவுமே தோன்றியதில்லை. ஆனால் இம்முறை வித்தியாசமான ஒரு உணர்வு தோன்றியது.

 

காவண வீட்டை சூழ்ந்திருந்த இருள்,  நெகிழ்வு தன்மையாக இருப்பது போலவும், பிசுபிசுத்துக் கொண்டிருப்பது போலவும், அவளை உறிஞ்ச முயற்சிப்பது போலவும் உணர்ந்தாள். டார்ச் லைட்டின் வெளிச்சம் காவண வீட்டின் மேற்புற கூரைகளில் ஊர்ந்து நகர, தடதடவென ஏதோ மெல்லிய அதிர்வுகள். காவண வீடு அவளுக்கு தெரியாமல் எதையோ மறைத்து வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தது.

 

சே! என்ன இது எனக்கு வரும் யோசனைகள் எல்லாம் வழக்கத்துக்கு மாறாக இருக்கிறது!!! செடி வேலியை அடைந்து, செடிகளை நகர்த்தினாள். மேட்டு வீட்டை விட காவண வீடு பள்ளத்துக்குள் இருப்பதால், மண்ணாலான படிக்கட்டுகளில் இறங்கி, காவண வீட்டை நோக்கி நடந்தாள்.

 

தாத்தா வீட்டுக்குள்ள இருந்து, "என்னாச்சும்மா..?" என்று சத்தமாக கேட்க, 

 

"ஒண்ணுமில்ல தாத்தா. சும்மா பார்த்துகிட்டு இருக்கேன்."

 

"இருட்டுல போகாதம்மா. செடிகளுக்குள் ஏதாவது பூச்சி பொட்டு இருக்கும். நீ வந்துரு. காலையில பார்த்துக்கலாம்."

 

"சரிரிரிரி...."

 

சுற்றிலும் டார்சடித்து பார்த்தாள் அகல்யா.

 

காவண வீடு இருட்டுக்குள் உறைந்திருந்தது. கதவில் சிறிய பூட்டு மோனநிலையில் தொங்கிக் கொண்டிருந்தது.

 

எக்ஸாம் ஹாலில் மேற்பார்வையாளர் முதுகுக்கு பின்னால், மாணவர்கள் கிசுகிசுவென பேசி காப்பியடிக்க முயற்சிக்கும் போது, மேற்பார்வையாளர் திரும்பி பார்த்தால், சட்டென்று மாணவர்கள் அமைதியாவது போல், அகல்யா வீட்டை பார்க்கும் போது வீடு அமைதியானது போல் தோன்றியது.

 

சிட் அவுட்டுக்கு வந்த சித்ரா, அக்கா எங்கே என்று கேட்க, காவண வீட்டில் ஏதோ சத்தம் கேட்டது. பார்க்க போயிருக்கிறாள் என்று தாத்தா சொன்னார்.

 

சித்ரா: அக்கா இருட்டுக்குள்ள என்ன பண்ணிட்டு இருக்க?? நான் வரட்டுமா?? என்று சத்தமிட்டு கேட்டாள்.

 

அகல்யா: வேணாம், வேணாம். நான் வந்துட்டேன்.

 

வீடு வழக்கம் போல் தான் இருக்கிறது. தாத்தா சொன்ன கதைகளை கேட்டு தான், எனக்கு இப்படி தோணுது போல... அகல்யா சிரித்தபடி, மேட்டு வீட்டை நோக்கி நடந்தாள்.

 

அகல்யாவின் முதுகுக்கு பின்னால்,

 

அதுவரை உறைந்திருந்த காவண வீடு கிசுகிசுக்க ஆரம்பித்தது.

 

அகல்யா மேட்டு  வீட்டின் சிட்டவுட்டை அடைந்தாள்.

 

தாத்தாவும், சித்ராவும் என்ன விஷயம் என்பது போல் பார்க்க...

 

"யாரோ நின்னுட்டு இருந்த மாதிரி இருந்துச்சு.

போய் பார்த்தேன். யாருமே இல்ல", என்றாள்.

 

தாத்தா: நாளைக்கு யாரையாச்சும் வேலையாட்களை கூட்டிட்டு வந்து, செடி கொடி எல்லாம் வெட்டி, வீட்டை சுத்தப்படுத்தணும். திருமுடி கிட்டயும் விஷயத்தை சொல்லிடுறேன். அவனே வீடு புரோக்கர்கள் கிட்ட சொல்லிடுவான். தேவைனா வீட்டுக்கு ஒரு பூஜையும் பண்ணிடலாம். ஒரு பிரச்சனையும் இருக்காது. சரி, சரி, நேரமாச்சு நீங்க போய் தூங்குங்க.

 

அகல்யாவும், சித்ராவும் வீட்டுக்குள் சென்றார்கள்.

 

ரஸ்தாகாடு கடற்கரை

இரவு 12 மணி

 

நிலா வெளிச்சத்தில் கடற்கரையை ஒரு பெரிய வளைவாகப் பார்க்க முடிந்தது. அமைதியான கடல்,  கரை நோக்கி அலைகளை கட்டுப்பாடுடன் வீசி எறிந்து கொண்டிருந்தது. கரையெங்கும் பாறைகள் மண்டிய,  ஒட முள்ளு நிறைந்த முள்ளுக்காடு. அதற்கிடையே பச்சை புல்வெளிகள். அதற்கடுத்து வானுயர தென்னை மரங்கள் நிறைந்த தென்னந்தோப்புக்கள். தோப்புக்குள் ஒன்றிரண்டு இரவு காக்கைகள் கத்திக்கொண்டே இருந்தன.

 

கடற்கரைகளில் நிறைய பைபர் படகுகள் கரை முழுக்க நின்றன. இரவு மீன் பிடிக்க சென்ற நான்கைந்து பைபர் படகுகள் கரைக்கு வந்துகொண்டும் இருந்தன. கடற்கரையில் முன்பக்கம் திறந்தபடி இருக்கும் பெரிய ஓலை கொட்டகை. உள்ளே ஒரு பல்பு சோபையாக மஞ்சள் வெளிச்சத்தை பரப்பிக் கொண்டிருந்தது. குடிசைக்கு வெளியே பக்கவாட்டில் பத்துக்கும் மேற்பட்ட மீன்கள் நிறைந்த கூடைகள் இருந்தன. கொட்டாய்க்குள் மூன்று பேர் பேசிக் கொண்டிருந்தனர். கொட்டாயை சுற்றி பலவிதமான மீன்பிடி வலைகள்.

 

சகாயராஜ் பீடி புகையை வெளியிட்ட படி," இன்னைக்கு ரொம்ப மீன் படலை போலிருக்கு", என்றான்.

 

அந்தோணி: ஆமாண்ணே. ஆளுக்கு 2000 ரூபாய் தேறும். அயலையும், சாளையும் தான் பத்து கூடை இருக்கு.

 

திருமுடி: நேத்து மஞ்ச பாறை நிறைய மாட்டுச்சு.

 

மூவரும் கீழத்தெருவை சார்ந்தவர்கள். அந்தோணிக்கும், சகாயராஜ்க்கும் பைபர் படகுகள் இருந்தன. திருமுடி அவ்வப்போது அவர்களுடன் மீன்பிடிக்க போவான். திருமுடிக்கு வேறு தொழில்களும் இருந்தன. பணம் வரும் எந்த விஷயத்தையும் அவன் விட்டு வைப்பதில்லை.

 

மூவரும் பேசிக்கொண்டிருந்த போது ஒரு நாய் அவர்களை கடந்து சென்று கூடைகளை மோப்பம் பிடிக்க, திருமுடி  ஒரு கல்லெடுத்து நாயின் மேல் எறிந்தான். நாய் வள் வள் என்று வலியில் கத்திகொண்டே, தூரத்தில் போய் நின்று, கேவல் சத்தத்தை எழுப்பிக் கொண்டிருந்தது.

 

மூவரும் பேச்சுக்கச்சேரியை தொடர்ந்து கொண்டிருந்தார்கள். கரையை நோக்கி வந்து கொண்டிருந்த பைபர் படகுகளின்  வெளிச்சம் சமீபித்திருந்தது.

 

கேவல் சத்தம் எழுப்பிக் கொண்டிருந்த நாய் திடீரென ஊளையிட ஆரம்பிக்க, மென்மையாக வீசிக் கொண்டிருந்த காற்று, திடமாகி, கருப்பாக மாறியிருந்தது.

 

அந்தோணி: இந்த பயலுக சீக்கிரம் வந்துட்டானுங்கன்னா, வீட்டுக்கு போய் சாப்பிட்டு படுத்துரலாம். நாளைக்கு காலைல வலைக்கு போக வேண்டிருக்கு.

 

திருமுடி: உனக்கு என்னவே??? நேரம் தவறாமல் சாப்பாடு ரெடியா  இருக்கும். கொடுத்து வச்சவன். நமக்கு அப்படியா?

 

குடிசைக்கு பக்கவாட்டில் வைக்கப்பட்டிருந்த மீன் கூடைகளில், 2 கூடைகள் தானாகவே நகர்ந்து சென்றதை அவர்கள் கவனிக்கவில்லை. மண்ணில் நகர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் எழும்பி பறந்து சென்றன.

 

சகாயராஜ்: இதுல கொடுத்து வைக்க என்ன இருக்கு? நீ பேசாம கல்யாணம் பண்ணிக்கோ. யாரு வேண்டாங்கிறா?

 

திருமுடி: சித்தப்பு, நிலையான வருமானம் இல்லை. இதில் கல்யாணம் ஒரு கேடா?

 

சகாயராஜ்: கதை விடுறியா? பொட்டி கடை பக்கம் எதுக்கு அடிக்கடி போறேன்னு எங்களுக்கு தெரியாதா என்ன??...

 

திருமுடி: சேச்சே! அப்படில்லாம் ஒண்ணுமில்ல. கொஞ்சம் கொடுக்கல் வாங்கல் இருக்கு.

 

சகாயராஜ்: பாத்து ஒழுங்கா நடந்துக்கல. அடுத்தவன் வாய் வச்ச பண்டத்த போய் நீயும் வாய் வைக்காத... தண்டமா போயிருவ. உன்ன பத்தி ஏதாவது தப்பா நியூஸ் வந்துச்சு, பொளந்துருவேன்.

 

சகாயராஜ் திருமுடிக்கு சித்தப்பா முறை என்பதால், அவனுக்கு கொஞ்சம் பயம் உண்டு.

 

கசவாளி பயலுக எப்படியாவது மோப்பம் புடிச்சிருரானுங்களே!! இவனுங்கள எப்படி சமாளிக்கி......

.......

 

எதார்த்தமாக மீன் கூடைகளை திரும்பிப் பார்த்த திருமுடி திடுக்கிட்டான்.

 

"என்ன ரெண்டு கூடையை காணல்லை?..."

 

திருமுடி எழும்பி வந்து பார்க்க, கூடைகள் பக்கம் இருந்து அழுத்தமான காலடித்தடங்கள் மணலில் பதிந்திருந்தன. திருமுடி கூர்ந்து நோக்கினான். காலடித்தடங்கள் இருட்டுக்குள் சென்றது.

 

தூரத்தில் யாரோ இரண்டு கூடையை தூக்கிக் கொண்டு ஓடுவது போல் தெரிந்தது.

 

"எவனோ ரெண்டு கூடையை தூக்கிட்டு ஓடுராம்ல... சீக்கிரம் வாங்கல."

 

மற்ற இருவரும் டார்ச் லைட்டுகளை எடுத்துக்கொண்டு பதறி எழும்பினார்கள்.

 

திருமுடி முன்னால் ஓட, மற்ற இருவரும் பின்னால் ஓடி வந்தார்கள். கடற்கரை மணல்மேடுகளை தாண்டி மூவரும் ஓடினார்கள். தலை மேல் இரண்டு கூடைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்தபடி  யாரோ சுமந்து கொண்டு ஓடிக்கொண்டிருந்தார்கள். இருட்டுக்குள் அரைகுறையாக தான் தெரிந்தது.

 

மணல்மேடுகள் தாண்டியவுடன், ஒடமுள்ளுகாடு வந்தது. எக்கு தப்பாக வளர்ந்திருந்த முள்ளு மரங்கள். பார்த்துப் போகவில்லை என்றால் கூரிய மூட்கள் முகத்தை பதம் பார்த்து விடும்.

 

சகாயராஜ்: எவன்டா அந்த தா... ளி... முள்ளு காட்டுக்குள்ள எடுத்துட்டு  ஓடுறது???

 

.... என்று ஓடியபடியே மூச்சிரைக்க கேட்டான்.

 

முள்ளு காட்டுக்குள் சுத்தி சுத்தி ஓடினார்கள். சரசரவென அவர்கள் காலடி சத்தம், முள்ளுக்காடு பூராவும் எதிரொலித்தது. முன்னால் விரட்டிச் சென்ற திருமுடி திடீரென நின்றான்.

 

பின்னால் விரட்டி வந்த அந்தோனியும், சகாராஜும்... திருமுடி நின்றிருப்பதை பார்த்ததும் அவனருகே ஓடிச் சென்று நின்றார்கள்.

 

திருமுடி பீதியில் உறைந்து போய் நின்றிருந்தான். எதைப் பார்த்து இப்படி பயந்து போய் நிற்கிறான் என்று புரியாமல், இருவரும் அவன் பார்க்கும் திசையை பார்த்தார்கள்.

 

சகாயராஜ்: என்னாச்சு? என்னாச்சு?... என்று கேட்க,  திருமுடி சற்று தூரத்தில் கை காண்பித்தான்.

 

முள்ளு காட்டுக்குள் அனாதரவாக கிடந்த சண்டி முனியின் சிலை முன்னால், இரண்டு மீன் கூடைகளும் அமர்த்தலாக இருந்தன.

 

சகாயராஜ் பதட்டமாக, "என்னலே, என்ன பார்த்த???", என்று கேட்டான்.

 

அந்தோணி: கூடையை தூக்கிட்டு வந்த திருட்டு பய, இங்கே வச்சுட்டு ஓடிட்டானா?

 

திருமுடி எச்சில் விழுங்கியபடியே, "கூடையை தூக்கிட்டு ஓடுனவன சரியா பாக்க முடியல. ஆனா எனக்கு என்னவோ... யாரும் தூக்கிட்டு ஓடுன மாதிரியே தெரியல. வெளிச்சமான பகுதியைக் கடக்கும் போது, ஏதோ கருப்பு காத்துல, கூடைகள் மிதந்து போன மாதிரி தான் தோணுச்சு."

 

அந்தோணி: என்னல சொல்ற... கருப்பு காத்தா?... என்று அதிர்ச்சியானான்.

 

அவர்கள் டார்ச்சுகள் தூரத்தில் தெரிந்த சண்டி முனியின் சிலையை நோக்கி வெளிச்சத்தை பாய்ச்ச,

 

குரோதம் கொப்பளிக்கும் விழிகள், முறுக்கு மீசை, தோள்களைத் தொடும் சங்கிலி போன்ற கூந்தலுடன்  செம்மண் பூசியபடி சிதிலமடைந்து சிறிய பீடத்தின் மேல் நின்றிருந்தது சண்டிமுனி சிலை. ரொம்ப நாட்கள் கவனிப்பாரற்று கிடந்ததால், அந்த சிறிய கோவிலை சுற்றி கட்டப்பட்டிருந்த சுற்றுசுவர் கற்கள் பெயர்ந்து, சுவர் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் இருந்தது.

 

சகாயராஜ்: என்னல இது புது பிரச்சனை? கொஞ்ச காலமாக ஊருக்குள்ள முனி ஓட்டம் பத்தின செய்திகள் எதுவுமே இல்லை. இப்ப எப்படி திடீர்னு முனி ஓட்டம் ஆரம்பிச்சது? எவன் முனியை கிளப்பி விட்டானோ?

 

அவர்கள் மூவரில் அந்தோணி கொஞ்சம் விவரம் தெரிந்தவன். கல்லூரி படிப்பு வரை படித்தவன்.

 

அந்தோணி: முனி ஓட்டம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனா முனி இருந்துகிட்டே தான் இருக்கும். ஒரு சில மீன்கள், கோடைகால வேக்காளத்தை சமாளிக்க, நீண்ட தூக்கத்தை போடுதில்ல. தண்ணியே இல்லன்னாலும், நுரையீரல் மீன்கள் வருஷகணக்கா மண்ணுக்குள்ள மறஞ்சி கிடக்குதுல்ல. அதே மாதிரி முனியும் எங்கேயோ மறைந்து, நீண்ட தூக்கத்தில் இருந்திருக்கும். இப்ப முழிச்சிருக்கு. இல்லை யாரோ முழிக்க வச்சிருக்காங்க.

 

சகாயராஜ்: அய்யய்யோ!!! என்னாக போகுதோ???

 

பல வருடங்களுக்கு முன்னால் முனி ஓட்டத்தின் நடுவே குறுக்கிட்டவர்கள், ரத்தம் கக்கி இறந்த கதை, இன்னும் வேறு கதைகள் எல்லாம் அவர்களுக்கு நினைவுக்கு வந்தது.

 

திருமுடி பதட்டமாக சுற்றிலும் பார்த்தபடி: எதுக்கு அதெல்லாம் இங்கருந்து பேசிகிட்டு...முதல்ல வாங்க இங்கருந்து போயிடலாம்... என்றான்.

 

மீன் கூடைகளை அங்கேயே போட்டுவிட்டு, மூவரும் அந்த இடத்தை விட்டு, விட்டால் போதுமென்று ஓடினார்கள்

 

தொடரும்

 
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது
 

   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Trusted Member Author
Joined: 1 month ago
Posts: 41
Topic starter  
கருப்பு 5
 
மேட்டு வீடு
மறுநாள் காலை 8 மணி
 
அகல்யா தூங்கி எழும்பி, ரூமை விட்டு வெளியே வரும்போது, திண்ணையில் பேச்சு குரல்கள் கேட்டது. பிரபாவதி அத்தையின் குரல். காலையிலே வந்துவிட்டாள் போலிருக்கிறது. அத்தை வந்தாலே  ஏதோ முக்கியமான செய்தி சொல்லத்தான் வந்திருப்பாள். அனேகமாக முத்துப்பாண்டி அண்ணன் காவண வீட்டை மறுபடி கேட்டது அவளுக்கு தெரிந்திருக்கலாம்.
 
அகல்யாவுக்கு பிரபாவதி அத்தையை பிடிக்கும். ஆனால் அத்தை பேச ஆரம்பித்தாள், நிறுத்த மாட்டாள். அது அவளுக்கு இருக்கும் வியாதி.
 
பிரபாவதி அத்தையின் பேச்சு குரல் கேட்டது.
 
"எந்த காரணத்தை முன்னிட்டும் அந்த கசவாளி பயலுக்கு வீட்டை கொடுத்துடாதீங்க. இருக்கிற சொத்துக்கள் போதாதாமா? அனேகமா அந்த சிமெண்ட் கம்பெனி காரங்க தான் தூண்டிவிட்டுருக்கணும்.
 
பெரிய கருப்பன்: சிமெண்ட் கம்பெனி காரங்களா?
 
பிரபாவதி: ஆமப்பா, சுத்திலும் இருக்கக்கூடிய நிலங்களை, வீடுகளை நிறைய வளர்ச்சி போடறாங்க. அனேகமா இந்த சுற்று வட்டாரத்தில் சிமெண்ட் கம்பெனி  வரப்போகுதுன்னு நினைக்கிறேன். சும்மா கிடக்கிற இந்த வீட்டை வளைச்சு போட்டா குடோன் மாதிரி ஏதாவது கட்டிக்குவாங்களா இருக்கும்.
ரொம்ப நாளாகவே, சாம்கோ சிமெண்ட் கம்பெனி அந்தப் பகுதியில் புதிதாக ஒரு பாக்டரி ஆரம்பிக்கப் போகும் பேச்சு அடிபட்டு கொண்டு தான் இருக்கிறது
 
பிரபாவதி: பொண்டாட்டி புள்ளைய வச்சு ஒழுங்கா வாழ தெரியல. அவளை தினமும் போட்டு அடிச்சதுனால, அவ புள்ளையை தூக்கிட்டு பிறந்து வீட்டுக்கு போய், இப்ப விவாகரத்தும் பண்ணிட்டா. இவன்ல்லாம் எங்க உருப்பட போறான். மைனியும் அவனுக்கு நல்ல புத்தி எதுவும் சொல்றதில்லை. நீங்க வீட்டை வாடகைக்கு விடனும்ன்னு நினைச்சது சரிதான்."
 
கிச்சனில் இருந்து வந்த தாளிக்கும் மணம் சித்ரா வேலை செய்து கொண்டிருப்பதை காட்டியது ... காலை டிபன் மட்டும் தான் சித்ராவின் பொறுப்பு. மதியமும் இரவும் அகல்யாவின் டியூட்டி. பாவம்! அவள் காலேஜ்க்கு போய்க்கொண்டு, காலை  சமையலையும் கவனிப்பது சிரமமாகத்தான் இருக்கும். அவளுக்கு நைட் டியூட்டி மாத்தி கொடுத்து விட வேண்டியது தான்.
 
அகல்யா வாசலை நோக்கி சென்று,  அத்தையை பார்த்து,
 
"வாங்க அத்தை", என்றாள்.
 
"வா மக்களே,  வேலையை விட்டு நின்னுட்டேன்னு கேள்விப்பட்டேன். அடுத்தது வேலைக்கு போறியா... இல்ல..."
 
"இல்ல அத்தை... போகணும். அந்த கம்பெனியில் ஒரு சில பிரச்சனைகள். அதனால நின்னுட்டேன். வேற நல்ல வேலையா பாத்துட்டு இருக்கேன்."
 
"வாம்மா... வந்து என் பக்கத்துல உக்காரு. உன்கிட்ட ஒரு சில விஷயம் கேக்கணும்..."
 
அகல்யா, அத்தையின் பக்கத்தில் இன்னொரு சேர் எடுத்து போட்டு உட்கார்ந்தாள்.
 
அத்தை: நம்ம தூத்துக்குடி கல்யாணி அத்தை இருக்கிறாங்கல்ல, நேத்து போன் பண்ணிருந்தா. அவ பையன் ரிஷிகுமாருக்கும் உன்னை கட்டி வைக்கிற விஷயமா பேசிகிட்டு இருந்தா. அவனுக்கும் உன்ன ரொம்ப புடிச்சிருக்குன்னு சொன்னாங்க. குமார் ஏதோ கம்ப்யூட்டர் இன்ஜினியர்ன்னு சொன்னா. நல்ல வேலை, சம்பளம். வசதியான குடும்பம். நீ என்ன சொல்ற?"
 
அகல்யா தாத்தாவை ஒரு பார்வை பார்த்தாள். தாத்தா அவளை பார்ப்பதை தவிர்த்தார்.
 
பின்னர் அத்தையை நோக்கி, "எனக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு விருப்பம் இல்ல. சித்ரா காலேஜ் முடிக்கட்டும். கார்த்திகா இன்னும் சின்ன புள்ள. எங்க வீட்டை பொறுப்ப கவனிச்சுக்கிறதுக்கு ஆள் இல்லை. அதனால இன்னும் ரெண்டு மூணு வருஷம் போகட்டும். அதுவரைக்கும் கல்யாணத்தை பத்தி பேச்சு எடுக்காதீங்க."
 
அத்தை:  இல்ல, எதுக்காக சொல்றேன்னா...
 
அகல்யா இடைமறித்து,"அத்தை ப்ளீஸ்.... இதான் என்னோட இறுதி முடிவு. திரும்பத் திரும்ப கேட்கிறதினால், பெரியவங்க பேச்சை மதிக்காம நான் பேசுற மாதிரி இருக்கு. அதனால தயவு செய்து அதை பற்றி இனிமேல் கேட்காதீங்க. விட்ருங்க", என்றாள், கையெடுத்து கும்பிட்டு...
 
அத்தை: மக்களே, உன்ன பத்தி எங்களுக்கு தெரியாதா??? எல்லாம் உனக்கு ஒரு நல்லது நடக்கணுமேன்னு ஆதங்கத்தில் கேட்கிறது தான். சரி, நீயா பேசுற வரைக்கும் இனிமே இந்த பேச்சை எடுக்கல. தூத்துக்குடி அத்தை கிட்ட போன் பண்ணி நான் சொல்லிடுறேன்.
 
அத்தை கண்களில் லேசாக நீர் திரண்டிருந்தது.
 
சுந்தர்ராமன் கேட்டை திறந்து உள்ளே நுழைந்தார். அவர் பின்னால் மூன்று வேலையாட்கள் மம்பட்டி, கோடாரி  சகிதமாக வந்தார்கள்.
 
சுந்தர் ராமன் அவர்களிடம் வந்து, "வேலையை ஆரம்பிக்க சொல்லட்டுமா?"
 
தாத்தா சரியென தலையாட்ட, சுந்தர்ராமன் அவர்கள் மூவரையும் கூட்டிக்கொண்டு காவண வீட்டை நோக்கி சென்றார்.
 
சற்று நேரத்தில் சித்ராவும், கார்த்திகாவும் கிளம்பி விட... காவண வீட்டில் செடி கொடிகளை அப்புறப்படுத்தி, சுத்தப்படுத்தும் பணி ஜருராக ஆரம்பித்தது.
 
காலை 9 மணி
 
நாகர்கோவில் உமன்ஸ் காலேஜ் பஸ் ஸ்டாப்பில் வந்து இறங்கிய சித்ரா, அதற்கு எதிர் புறமாக இருக்கும் டீக்கடையில் நிற்கும் இளைஞனை பார்த்தாள்.
 
அவள் பார்வையில் படும் இடத்தில் நின்றிருந்த அந்த இளைஞன் கையில் டீ கிளாசை வைத்திருந்தான். நீட்டாக டிரஸ் பண்ணிருந்தான். சட்டை பையில் கூலிங் கிளாஸ் மூக்கை வெளியே நீட்டியிருந்தது. சித்ரா அவனை பார்ப்பதை அவன் பார்த்ததும், அவனுக்கு லேசாக பதட்டம் ஏற்பட்டது.
 
ஒரு வாரமாக நடக்கிறது. வழக்கமாக எத்தனை மணிக்கு, எந்த பஸ்ஸில் வந்து இறங்குவாள் என்று அவன் தெரிந்து வைத்திருக்கிறான்
காலையில் வருகிறான், சாயங்காலம் காலேஜ் முடிஞ்சு போகும்போது வந்து நிற்கிறான். எதுவும் பேசாமல் தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டே இருக்கிறான்.
 
அனேகமாக என்னை லவ் பண்ணுகிறான் போலிருக்கிறது. அவனைப் பார்த்த ஞாபகம் கூட அவளுக்கு இல்லை. எங்கே பார்த்து எப்படி லவ் பண்ண ஆரம்பித்தான்??? என்னைப் பற்றி இவனுக்கு என்ன தெரியும்? எப்படி இந்த பசங்களுக்கு பார்த்ததுமே லவ் வருதுன்னு தெரியலையே?
 
பாவம்! அவன் நேரம் மிகவும் மோசமாக இருக்கிறது!!! இல்லையென்றால் போயும் போயும் என் பின்னால் சுற்றுவானா? 
 
சித்ராவுக்கு அவனைப் பார்த்தால் கோபத்தை விட, சிரிப்பு தான் வந்தது. 
 
என்றைக்காவது ஒரு நாள் அவனை கூப்பிட்டு அட்வைஸ் பண்ண வேண்டும். பஸ் ஸ்டாப்பில் இருந்து நடந்து, காலேஜ் வாசலில் நுழைந்து, உள்ளே சென்றாள்.
 
சித்ரா இதழோரம் சிரிப்பை பார்த்ததும் அந்த இளைஞன் முதலில் குழம்பினான், பின்னர் உற்சாகமானான். 
 
மேட்டு வீடு, காலை 11:00 மணி
 
வேலையாட்கள் இரண்டு பேர் காவண வீட்டை சுற்றியிருந்த புதர்களை, செடிகளை வெட்டிக் கொண்டு இருந்தார்கள். வீட்டின் பின்பக்கம் யாரும் பயன்படுத்தாததால், ரொம்ப அடர்த்தியாக பிடிவாத புதர்கள் வளர்ந்திருந்தன. ஒருவன் வீட்டுக்குள் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தான்.
 
அவர்களுக்கு டீ போட்டுக் கொடுத்து, அகல்யா மேற்பார்வை செய்து கொண்டிருந்தாள்.
 
வீட்டின் பின்பக்கமாக அடர்ந்த புதர்களை வெட்டி கொண்டிருந்தவன், 
 
திடீரென அரிவாளை தூக்கி போட்டுவிட்டு, ஹோவென சத்தமிட்டான்.
 
மற்றொரு வேலையாளும், அகல்யாவும் அதிர்ந்து போய் வீட்டின் பின்பக்கமாக பார்க்க...
 
பயந்து போய், தலை தெறிக்க ஓடி வந்தான்.
 
தொடரும்
 
 
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது
 

   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Trusted Member Author
Joined: 1 month ago
Posts: 41
Topic starter  
கருப்பு 6
 
அகல்யா அதிர்ச்சியாக என்னாச்சு என்று அவனைக் கேட்க, ஓடி வந்தவன் "பாம்பு, பாம்பு" என்று பதறினான்.
 
மற்றொரு வேலையாள், 
"என்னைக்கு இருந்தாலும் ஆபத்து தாம்மா. அதனால அதை அடிச்சுருவோம்... ஏலே கிருஷ்ணா ஓடியால", என்று கத்த, வீட்டுக்குள் வேலை செய்து கொண்டிருந்த கிருஷ்ணன் ஓடி வந்தான். மூன்று வேலைக்காரர்களும், ஆளுக்கொரு கம்பை தூக்கிக் கொண்டு அடிக்க சென்றார்கள்.
 
அகல்யா அவர்களுடன் செல்லாமல் தள்ளியே நின்றிருந்தாள். நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள். பாம்பை அடிக்கச் சென்றவர்கள், அடிக்காமல் புதருக்கு பின்னால் எட்டிப் பார்த்துக் கொண்டே நின்றார்கள். ரொம்ப நேரமாக அவர்கள் அப்படியே நிற்க,
 
அகல்யா: என்னண்ணே என்னாச்சு... என்று சத்தமிட்டாள்.
 
உறைந்து போய் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே.... என்று அகல்யா சென்று அவர்களுக்கு பின்னால் நின்று எட்டிப் பார்க்க... அதிர்ந்தாள்.
 
புதருக்கு பின்னால், ராஜநாகம் ஒன்று மற்றொரு சிறிய மண்ணுளிப் பாம்பை கடித்து இரையாக்க முயன்று கொண்டிருந்தது. மண்ணுளிப் பாம்போ தப்பிக்க வளைந்து நெளிந்து துள்ளி கொண்டிருந்தது. ராஜநாகம் ஆக்ரோஷமாக அதை வாயால் கவ்வியது. மண்ணுளிப் பாம்பு முடிந்தவரை போராடியது. ஒருவேளை தப்பித்தாலும்கூட, இனிமேல் அதனால் உயிர்வாழ முடியாது. இந்நேரம் கடித்த நஞ்சு அதன் உடலில் ஏறி இருக்கும்.
 
புதரிலிருந்து மெதுவாக நகர்ந்து வெளியே வந்தது நாகம். மண்ணுளி பாம்பின் பிடியை அது விட்டிருக்கவில்லை. மண்ணுளிப் பாம்பு கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிக் கொண்டிருந்தது.
 
தெளிவான தலை, வட்ட வடிவக் கண்கள். பழுப்பு நிறத்தில் மஞ்சள் பட்டைகள் கழுத்தில் ஆரம்பித்து வால் நோக்கி செல்ல செல்ல மங்கி, வால் பகுதி கன்னங்கரேர்னு இருந்தது.
 
அவர்கள் பார்த்துக் கொண்டிருப்பதை நாகம் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. மண்ணுளிப் பாம்பை சிறிது சிறிதாக விழுங்க ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் ஒன்றரை அடி நீளம் கொண்ட மண்ணுளிப் பாம்பின் உடல் முழுவதும் ராஜநாகத்துக்குள் சென்றது. பாம்பு மெல்ல கரிய நெளிவுடன் அங்கிருந்து நகர்ந்தபோது, கம்புடன் நின்ற கிருஷ்ணன் அதை வழிமறிக்க முன்னால் கால் வைத்தான். அவனை கவனித்த நாகம்,
வளைந்து தேங்கி நின்றது.   வழியை மறிக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டது போல், நின்ற விதத்திலேயே அதன் பெருஞ் சீற்றம் தெரிந்தது.
 
மண்ணோடு இருந்த தலை மேலெழுந்து காற்றை உறிஞ்சுவது போல், செவிள்களை உப்பியது. 
 
கழுத்து மெல்ல பெரிதாக ஆரம்பிக்க, இருபுறமும் அது சிறகுபோல விரிந்து, படமெடுத்தது. திரண்டு மேலெழுந்த தலையுடன், சொடுக்கப்பட்ட சாட்டை போல் உடல் வேகமாக அசைந்தது. ஆக்ரோஷமாகப் படமெடுத்து,  புதர்கள் அதிர சீறியது.
 
கிருஷ்ணன் முன் வைத்த காலை பதறி போய் எடுத்துப் பின்னால் நகர, மற்றவர்கள் பீதியில் அரண்டு போய், ஓரமாக ஒதுங்கி நின்றார்கள்.
 
பளபளப்பான செதில்களுடன், ஈரக் கரிய உடலுக்குள் எலும்பு வளையங்கள் ஓடி நெளிந்தன. தலையைத் திருப்பித் திருப்பி அனைவரையும் சுற்றிப் பார்த்தது. நீளமான நாக்கு கொடுக்கு போல் நெளிய, காவண வீட்டை ஒரு முறை வெறித்துப் பார்த்தது.
 
பின்னர், தலையை மண்ணோடு தடவியபடி ஊர்ந்து, அவர்களை கடந்து சென்று, காவண வீட்டின் வாசலை அடைந்தது. 
 
ஒரு நொடி நின்ற நாகம், ஏதோ ஒன்றின் உத்தரவுக்கு கட்டுப்பட்டது போல், வாசல் வழியாக வெளியேறியது. 
 
அனைவரும் வாசலுக்கு ஓடி சென்று எட்டிப் பார்க்க, எதிரே இருந்த மரங்களுக்குள் சென்று மறைந்தது.
 
ஒன்றிரண்டு நிமிடங்கள் அனைவரும் பேச்சற்று நின்றிருந்தனர்.
 
அதன் பிறகு வேலையாள் ஒருவன் "எவ்வளவு பெருசு பாத்தியா?"
 
கிருஷ்ணன்: ஆமா முத்து, எப்படியும் 10 அடி இருக்கும்.
 
முத்து: நல்லவேளை, யாருக்கும் ஒண்ணும் ஆகல... இவ்வளவு புதர்கள் இருந்தா பாம்பு வரத்தான் செய்யும். எல்லாத்தையும் வெட்டி மட்டமாக்கிடுறோம்... அம்மா கொஞ்சம் போட்டு குடுங்க.... என்று அகல்யாவை பார்த்து சொன்னான்.
 
அதிர்ச்சியில் இருந்து மீளாமல் பாம்பு போன திசையையே பார்த்துக் கொண்டிருந்த அகல்யா,
 
"ஹ்ம்ம்ம்... என்ன சொன்னீங்க?"
 
முத்து திரும்ப சொன்னான்.
 
அகல்யா: சரிண்ணே வேலையை நல்லபடியா பண்ணுங்க.
 
கிருஷ்ணன்: கொஞ்ச நேரம் பொறுங்கம்மா. பதட்டம் இன்னும் போகல... என்று பீடியை எடுத்து பத்த வைத்தான்.
 
முத்து:  நமக்கு தெரிஞ்ச ஒருத்தன் இருக்கான். பாம்பு வராமல் இருப்பதற்கு மந்திர கட்டு போடுவான் அவன கூட்டிட்டு வரேன்.
 
அகல்யா சரி என்றாள்.
 
நேற்று இரவு தானே... இருட்டில் இங்கே வந்து எட்டி பார்த்து விட்டு சென்றோம். எக்கு தப்பாக ஏதாவது நடந்திருந்தால், என் தங்கச்சிங்களுக்கு யார் இருக்கா??? என்று நினைத்துப் பார்க்கும்போது அகல்யாவுக்கு குப்பென்று வியர்த்தது
 
மூவரும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பாம்புகளை பற்றியும், சமீப காலங்களில் அதனால் இறந்தவர்களை பற்றியும், பேசிக்கொண்டு இருந்தனர். பீடி புகை காற்றில் வளைய வந்தது.
 
கொஞ்ச நேரம் கழித்து, மறுபடியும் வேலை செய்ய ஆரம்பித்தார்கள். இந்த முறை சற்று கவனத்தோடு...
 
காவண வீட்டை பார்த்துக் கொண்டிருந்த அகல்யாவுக்கு, என்னமோ சரி இல்லையென்று தோன்றியது.
 
தொடரும்

உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது

https://kavichandranovels.com/community/dennis-jegans-novels-comments-and-discussions/

 

 


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Trusted Member Author
Joined: 1 month ago
Posts: 41
Topic starter  

கருப்பு 7

 
நாகர்கோவில் மகளிர் கல்லூரி
மாலை 3 மணி
 
காலேஜ் வாசலுக்கு சித்ரா வந்தபோது, பஸ் ஸ்டாப்க்கு எதிர் டீக்கடையில் அந்த இளைஞன் நின்றிருப்பது தெரிந்தது.  கடந்த ஒரு வாரமாக அவனை பார்க்க முடிகிறது. டீக்கடையில் நிற்கிறான், அவள் காலேஜுக்குள் போவதை பார்க்கிறான், வைத்த கண் வாங்காமல் பார்க்கிறான், அவள் உள்ளே போனதும் போய்விடுகிறான். திரும்பவும் சாயங்காலம் இதே கதைதான். 
 
அவனை நினைத்து பரிதாபம் தான் வந்தது. பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தாள் சித்ரா.
 
சர்ரென்று ஏதோ ஒரு மோட்டார் பைக் அவளை உரசி கொண்டு வருவது போல்  பின்பக்கமாக வர, அதிர்ச்சியில் சைடில் நகர்ந்தாள் சித்ரா.
"குட் ஈவினிங் பேபி", என்று சொன்னபடி மோட்டார் பைக்கில் வந்து அவளருகில் நிறுத்தி, கால்களை ஊன்றினான் அரவிந்த்.
 
"எப்படி கரெக்ட் டைமுக்கு வந்தேன், பாத்தியா?"
 
அவனைப் பார்த்ததும் முதலில் ஆச்சரியமான சித்ரா, 
 
மறு நொடி,
 
"காலேஜ் வாசலுக்கு ஏன் வர்றீங்க? யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க. மெசேஜ் பண்ணிருந்தா, நான் பஸ் ஸ்டாண்ட்ல வெயிட் பண்ணுறேன்னு சொல்லிருப்பேனே", என்று சித்ரா கடுக்கடுத்தாள்.
 
"என்ன பேபி கோச்சுக்கிற... உன்னை சர்ப்ரைஸ் பண்ணலாம்னு தான் சொல்லாம வந்தேன்", என்றான் அரவிந்த் கொஞ்சலாக.
 
அவன் சொன்னதை கேட்டதும், சித்ராவுக்கு கோபம் மாறி சிரிப்பு வந்தது.
 
பைக்கில் ஏறி உட்கார்ந்தபடி பஸ் ஸ்டாப்பில் திரும்பி பார்த்தாள். பைக்கில் ஏறி உட்கார்ந்தபடி பஸ் ஸ்டாப்பில் திரும்பி பார்த்தாள். பஸ் ஸ்டாப்பில் இருந்த இளைஞன் கண்களில் குழப்பம். மக்கள் கூட்டத்திற்கு பின்னால் போய் ஒளிந்து கொள்வதற்கு முயற்சி செய்தான்.
 
பைக்கில் இருப்பவன் என்னுடைய ஆள். இனிமேல் என் பின்னால் வராதே என்று அவனுக்கு எப்படி தெரியப்படுத்துவது??? பாவம்!!! என் பின்னால் சுற்றி எதற்காக அவன் நேரத்தை வீணாக்க வேண்டும். பைக் பின்னால் ஏறி உட்கார்ந்தவள், அரவிந்தின் இடுப்பில் கை போட்டு அவனை அரவணைத்தபடி சாய்ந்து, கொண்டாள்.
 
பஸ் ஸ்டாப் இளைஞன் முகம் மாறியது.
 
அரவிந்த்: என்ன இன்னைக்கு ரொமான்ஸ் மூடு ஜாஸ்தியா இருக்கு போல...
 
சித்ரா: அதெல்லாம் ஒண்ணுமில்ல. பைக்கை எடுங்க சீக்கிரம்.
 
பைக் டவர் ஜங்ஷனை நோக்கி விரைந்தது. வழியில் இருந்த ஸ்பீடு பிரேக்கர்களை முழுவதுமாக பயன்படுத்திக் கொண்டான். சித்ரா அதை கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை.
 
"இவ்வளவு தூரம் தேடி எனக்காக வந்திருக்கான். சின்ன பையன் ஆசைப்படுறான், பொழைச்சு போகட்டும்..." என்று நினைத்ததால், அவள் கண்டு கொள்ளவில்லை.
 
பெண்களுக்கு இந்த மாதிரி சில்மிஷங்கள் எல்லாம் தெரியாமல் இல்லை. அவர்களுக்கு எல்லாமே தெரியும். ஏதோ ஆசைப்படுகிறார்கள், செய்துவிட்டு போகட்டும் என்று பெருந்தன்மை தான், சில நேரங்களில் கேட்காமல் இருப்பதற்கு காரணம். ஆனால் பல நேரங்களில் அவர்கள் கேட்பதற்கு காரணம், ஆண்கள் தங்களை தப்பாக எடை போட்டு விடக்கூடாது என்பதற்காக தான். என்ன இவள் ஒன்றுமே பேசாமல் இருக்கிறாள்?? ஓஹோ!!! இவளுக்கு இது பிடித்திருக்கிறது போலிருக்கிறது என்று பல ஆண்கள் முட்டாள்தனமாக நினைப்பதுதான் காரணம். அதுவும் அவர்களுக்கு தெரியும். 
 
ஆக மொத்தத்தில் எல்லாமே தெரியும்.
 
அரவிந்த்: வர்ற மண்டே காலேஜுக்கு லீவு போட்டுரு. திருப்பரப்பு பால்ஸ் போறதுக்கு பிளான் பண்ணிருக்கேன். பைக்லயே போகலாம். செம ஜாலியா இருக்கும்.
 
சித்ர பதறினாள்..."அய்யய்யோ நான் மாட்டேன்."
 
அரவிந்த்: ஏன் பயப்படுற... வழக்கமா காலேஜுக்கு வர டைமுக்கு வா. ஃபால்ஸ்க்கு போயிட்டு ஈவினிங்குள்ள திரும்ப வந்துரலாம். ஒரு பிரச்சனையும் வராது.
 
சித்ரா: உங்களுக்கு என்ன ஈசியா சொல்லிட்டீங்க. எனக்குல்ல திக்கு திக்குன்னு இருக்கும். எங்க அக்கா லேசுபட்ட ஆள் கிடையாது. அவ கிட்ட பொய் சொல்றதெல்லாம் ரொம்ப கஷ்டம் கண்டுபிடிச்சிடுவா.
 
பைக் வடசேரி பஸ் ஸ்டாண்ட் தாண்டி, புத்தேரி நோக்கி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தது.
 
அரவிந்த்: எவ்வளவு நாள் கேட்கிறேன். ஒரு நாள் ட்ரிப் தானே. ஏதாவது சொல்லிட்டு வா, போயிட்டு வரலாம். உன் கூட ஒரு நாள் ஸ்பென்ட் பண்ணனும்ன்னு எனக்கு ஆசையா இருக்காதா என்ன? யோசிச்சுப் பார்.
 
சித்ரா யோசிக்க ஆரம்பித்தாள்.
 
இரண்டு நாட்களுக்கு பிறகு ரஸ்தா காடு
மாலை 5 மணி
 
மாலையின் வீரியமற்ற வெயில் ரஸ்தா காடு வீதிகளை நனைத்து கொண்டிருந்தது. வீட்டை விட்டு வெளியே வந்த சுந்தர்ராமன் சுற்றிலும் பார்த்தார். எதிரே மரங்களுக்கிடையே வளர்ந்திருந்த நந்தியாவட்டை செடியின் பூக்கள் வெயிலில் சோர்ந்து போயிருந்தன.
 
அவர் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு சற்று முன், தெருவை நிரப்பிக் கடந்து போன மாட்டு வண்டியின் ஜல்ஜல் ஒலியை கேட்டதும், யார் வீட்டு மாட்டு வண்டி என்று யோசித்தார். எதிலும் அவருக்கு ஆர்வம் உண்டு. எல்லாவற்றிலும் மூக்கை நுழைப்பார். வாத்தியாராக இருந்து ரிட்டயர் ஆகிவிட்டாலும், வாத்தியாருக்குண்டான குணாதிசயங்கள் அவருக்கு போய்விடவில்லை.
 
தெருவில் இறங்கி நடந்தவர், காவண வீட்டை கடக்கும்போது வேலை நடந்து கொண்டிருக்கிறதா என்று பார்த்தார். யாருமில்லை. அவர்கள் அப்பவே வேலையை முடித்துவிட்டு கிளம்பியிருக்க வேண்டும். கீழ வீதி தெருக்களை கடந்து மெயின் ரோட்டுக்கு வந்தார். ஜோசப் டீக்கடையில், நான்கைந்து பேர் பேசிக் கொண்டிருந்தனர். டீக்கடை பக்கத்தில் இருந்த ஆலமரத்தில் பறவைகளின் சத்தம் கேட்க ஆரம்பித்து இருந்தது.
 
டீக்கடையை நெருங்கியதும், வாங்க சார் என்றான் ஜோசப்.
 
ஏற்கனவே டீக்கடையில் இருந்தவர்கள் சுவாரஸ்யமாக ஏதோ பேசிக் கொண்டிருக்க,
சுந்தரராமன், "என்னல செல்லப்பா, என்ன விஷயம்???", என்று கேட்டார்.
 
செல்லப்பன்: ரெண்டு நாள் முன்னால ராத்திரி கடற்கரையில, எவனோ களவாணி பய, ரெண்டு மீன்  கூடைகளை திருடிட்டு போக முயற்சி பண்ணிருக்கான். நம்ம அந்தோணி கோஷ்டி வெரட்டிட்டு போயிருக்காங்க. பய முள்ளு காட்டுக்குள்ள ஓடிருக்கான். இவனுங்களும் விரட்டிட்டு போயிருக்காங்க கடைசில பாத்தா சண்டி முனி சிலை பக்கத்துல மீன் கூடை கிடந்திருக்கு. அதை பார்த்து மிரண்டு ஓடி வந்துருக்காங்க.
 
சுந்தர்ராமன் லேசாக துணுக்குற்றார்.
 
"முனி சிலை பக்கத்துலயா? மீன் கூடையை தூக்கிட்டு போனது திருட்டு பசங்க தானே?"
 
செல்லப்பன்: இருட்டுல யாரு தூக்கிட்டு போனதுன்னு சரியா தெரியல. யாராவது திருட்டு பசங்களா தான் இருக்கணும். ஆனா இவனுங்க விரட்டிட்டு போனப்ப, மீன் கூடைகள் முனி சிலை பக்கத்துல கிடந்திருக்கு. அதனால மிரண்டு போய் ஓடி வந்துட்டானுங்க. நம்ம பசங்கள பத்தி தெரியும்ல, ஒண்ணுன்னா பத்தா சொல்லுவானுங்க.
 
அமிர்தம்: அப்படியெல்லாம் லேசு பாசா சொல்லிட முடியாது. ரொம்ப காலத்துக்கு முன்னால, நம்ம ஊருக்குள்ள அந்த முனி என்ன ஆட்டம் போட்டுச்சு தெரியுமா?
 
அதுவரை அமைதியாக இருந்த பெரியவர் தங்கதுரை, "உண்மைதான்... அந்த முனி நல்லது, கெட்டது, பாவம், புண்ணியம் எல்லாம் பார்க்காது. அதை கோபப்படுத்தினால் அவ்வளவுதான். இருளாயி கோயில் இருக்குல்ல அது எப்படி வந்துச்சுன்னு தெரியுமா?"
 
சுந்தர்ராமன்: கடற்கரைக்கு போற வழியில இருக்குதே அந்த கோவில் தானே?
 
தங்கதுரை: ஆமா அதேதான்.
 
செல்லப்பன்: ஆலமரத்தடியில் ஏதோ ஒரு காலத்துல அல்பாயுசுல இறந்துபோன ஒரு கர்ப்பஸ்த்ரீக்கு, சின்னதா, யாரோ,  எப்பமோ கோவில் கட்டியிருக்காங்க. சின்ன புள்ளைங்க யாரும் அந்த பக்கம் பொழுது சாஞ்சப்புறம் போக கூடாதுன்னு சொல்லுவாங்க. அவ்வளவு தான் தெரியும்.
 
தங்கதுரை: ரொம்ப காலத்துக்கு முன்னால, எங்கேயோ இருந்து கால்நடையா, ஒரு கர்ப்பிணி கடற்கரை வழியா, கையில் ஒரு துணிப்பொட்டலத்துடன் வந்திருக்கிறா.  மாசி மாச வெயில் மண்டையைப் பிளக்க, கடற்கரையில் இருந்து ஊருக்கு வர்ற வழியில இருக்கிற அந்த ஆலமரத்தடியில் நிழலுக்காக உட்கார்ந்திருக்கிறா. நடந்து வந்த களைப்பில் அவளுக்கு அப்படியே தூக்கம் வந்திருக்கு. தூங்கியவள் தூங்கியவள்தான், எந்திருக்கவே இல்லை. முனி அடிச்சு அந்தப் பெண் இறந்துட்டதா நெனச்சு, நம்ம ஊர் மக்கள் அவள் உடலை அடக்கம் பண்ணிருக்காங்க. ஒரு மாதம் கழித்து அந்தப் பெண் நம்ம ஊர்ல இருந்த ஒரு சின்னப்பொண்ணு மேல  இறங்கி தன் கதையைச் சொல்லியிருக்கிறா.
 
“என் பெயர் இருளாயி. என் ஊர் தூத்துக்குடி பக்கம். சொந்த பந்தம் யாருமில்ல. என் புருஷன் என்னைத் தினமும் அடிச்சி கொடுமைப்படுத்துவான். ஒவ்வொரு நாளும் வேதனை. எங்கே போறதுன்னு தெரியல்லை. அங்கேயே என்னத்தையாச்சும் அரைத்துக் குடித்துச் செத்திருப்பேன். வயித்துல புள்ள இருந்ததால, அங்கிருந்து தப்பி வேற ஊரில் கூலி வேலை செய்து என் பிள்ளையை வளர்த்து ஆளாக்கலாம் என்றுதான் கிளம்பி வந்தேன். வந்த இடத்தில் முனி ஓட்டத்தில குறுக்கிட்டதால... என்னை இப்படி அடிச்சிருச்சு. ரொம்ப கோவக்கார முனியா இருக்கு. மாசி மாசம் சிவராத்திரிக்கு என்னைக் கும்பிடுங்க. எனக்குக் குழந்தைகள் மேல் ரொம்ப ஆசை.  எந்தக் குழந்தையாவது நான் இருக்கிற பக்கம் வந்தா, அவங்கள நான் புடிச்சுக்குவேன்", என்று சொல்லிட்டு மறஞ்சுட்டா.
 
அந்த ஆலமரம் பக்கத்துல ஒரு பெண் படுத்திருப்பதுபோல சிலை செஞ்சு வச்சு, சுத்தியும் சின்னதா கோவில் கட்டினாங்க. அங்க கோயில் கட்டினதால, அந்தப் பக்கமாக அதிகமாக இருந்த முனி ஓட்டம் குறைஞ்சு, மறுபக்கம் அதிகமாச்சு.
 
கதையைக் கேட்ட அனைவரும் அதிர்ந்தார்கள். தலைவிரி கோலமாக நிற்கும் பெண் போல, ஆலமரத்தின் தோற்றம் அனைவர் மனதிலும் வந்து போனது.
 
செல்லப்பன்: ஒரு கர்ப்பமான பொண்ணுன்னு கூட அந்த முனி பரிதாப படலையா?.. என்று கேட்டான்.
 
தங்கதுரை: அதான் சொன்னேனே... அந்த முனி, நல்லது கெட்டது, பாவ புண்ணியம், ஆம்பள பொம்பள, சின்னவங்க பெரியவங்க, எதுவும் பார்க்காது. அதை கோபப்படுத்தினால் அவ்வளவுதான். அந்த முனிய கும்பிடுற கூட்டம் ஒன்று, ரொம்ப காலத்துக்கு முன்னால நம்ம ஊருல இருந்துச்சு. பின்னர், அவர்கள் பொழப்பு தேடி, வெவ்வேறு ஊருக்கு சென்றதால், முனி கோவிலை கவனிச்சுக்கிறதுக்கு ஆள் இல்லாமல் போச்சு. அதன் பிறகு ரொம்ப நாள் முனியை பற்றி பேச்சே இல்லை. முனிய சேவிக்கிறதுக்கு  நம்ம ஊர்ல ஆள் என்கிறதால, முனியும் வேறு ஊருக்கு போயிருச்சுன்னு பேசிக்கிட்டாங்க.
 
செல்லப்பன்: அந்த அந்தோணி கோஷ்டினால, இப்ப திடீர்னு முனிய பத்தின பேச்சு ஆரம்பிச்சு இருக்கு.   இது எங்க போய் முடியப் போகுதோ தெரியல...
 
அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த சுந்தர்ராமனுக்கு வயிற்றுக்குள் பயப்பந்து உருண்டது.
 
தொடரும்
 
 
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது
 
 

   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Trusted Member Author
Joined: 1 month ago
Posts: 41
Topic starter  
கருப்பு 8
 
மேட்டு வீடு
இரவு 9 மணி
 
எந்தவித அசாதாரண சம்பவங்களும் இல்லாமல் ஒரு வாரம் கடந்தது. இரவு பூச்சிகளின் சத்தம் மேட்டு தெருவை முழுமையாக ஆக்கிரமித்து இருந்தது. இரவு வானில் பல்வேறு வெளிச்சத் தாரகைகள். அவர்கள் வெளிச்சங்களை எல்லாம் ஓரங்கட்டும் வகையில் ஒரே ஒரு நிலா. தெருக்களில் நின்றிருந்த நாய்கள் என்னவோ நினைத்துக் கொண்டு அவ்வப்போது குறைத்துக் கொண்டிருந்தன. மேட்டு தெருவில், மரங்களின் காற்றும், கடற்கரையிலிருந்து ஊருக்குள் நுழைந்த ஓசோன் காற்றும், கூட்டணி அமைத்து குளிர்வித்துக் கொண்டிருந்தன.
 
இரவு உணவு சாப்பிட்டு விட்டு, திண்ணை சேரில் அமர்ந்திருந்த பெரிய கருப்பன், ஈரமான வெற்றிலையை வேட்டியில் துடைத்துவிட்டு சுண்ணாம்பு தடவிக் கொண்டிருந்தார். கிணற்றடியில் இருந்த கல்லில், கை வைத்து சாய்ந்து நின்றபடி, எதையோ கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் கார்த்திகா. அவளைத் தேடிக் கொண்டு கொல்லைப்புறமாக வந்த சித்ரா, அமைதியானாள்.
 
அவளுக்கு பின்புறத்தை காண்பித்தபடி, குனிந்து கல்லில் கை வைத்து, எதையோ கார்த்திகா பார்த்துக் கொண்டிருந்தாள். சித்ராவுக்கு இயல்பாகவே இருந்த குறும்புத்தனம், "ப்ரெசென்ட் சார்" என்று அட்டெண்டன்ஸ் போட, அடிமேல் அடி வைத்து மெதுவாக கார்த்திகாவை நெருங்கினாள். கார்த்திகாவின் பெரிய சைஸ் பின்புறத்தை பார்த்ததும்,  சித்ரா கைகளை சத்தம் வராமல் தேய்த்துக் கொண்டு, டப் பென்று பின்னால் அடித்தாள். கார்த்திகா துள்ளிக் கொண்டு திரும்பினாள்.
 
சித்ரா ஏதோ சொல்வதற்காக வாய் திறக்க, கார்த்திகா வாயை மூடு என்பது போல், ஷ்ஷ்ஷ் என்று சைகை செய்தாள். சற்று தள்ளி கார்த்திகா கை காட்ட, அவள் கைகாட்டிய திசையில், ஒரு பொட்டு நடனத் தவளை மற்றொரு தவளையின் முன்னால், பின்னங்கால்களை லேசாக விரித்து, விரித்து, முன் கால்களை தூக்கி,  வாயைக் குவித்து நடனமாடுவது போல் செய்து கொண்டிருந்தது. தவளையானாலும், மனுசனானாலும்  இணை சேர வேண்டுமென்றால் ஒற்றை காலில் நின்று தான் ஆக வேண்டும் போலிருக்கிறது.
 
அதை பார்த்ததும் சித்ராவுக்கு சிரிப்பு தாங்கவில்லை. கார்த்திகா மறுபடியும் திரும்பி, ஷ்ஷ்ஷ் என்று சைகை செய்தாள்.
 
சித்ரா: ஏண்டி உனக்கு வேற வேலையே இல்லையா எப்ப பாரு காக்கா, குருவி,  தவளை, பூனைன்னு பின்னாலே சுத்திக்கிட்டு இருக்க. வேற உருப்படியான வேலை எதுவும் இல்லையா?
 
கார்த்திகா சித்ராவை நோக்கி திரும்பி," உன்ன மாதிரி பாய் ஃப்ரெண்ட் கூட பைக்ல ஊரு சுத்தவா?"
 
சித்ரா ஷ்ஷ்ஷ் என்றாள்.
 
"ஏண்டி சத்தமா பேசுற? அக்கா காதுல விழுந்திட போகுது. கேம்ஸ் விளையாட என் மொபைல்ல உன்னிடம் கொடுத்தது தப்பா போச்சு?"
 
வாட்ஸ் அப் மற்றும் மெசஞ்சரில் இருக்கும் மெசேஜ்களை சித்ரா உடனுக்குடன் டெலிட் செய்வதுண்டு. வீட்டில் இருக்கும் போது அரவிந்திடம் மெசேஜ் செய்யக்கூடாது என்றும் சொல்லியிருந்தாள். ஆனால் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நாளில், மெசேஜ்களை டெலிட் செய்யாமல் சித்ரா மறந்துவிட, அன்றைக்கு பார்த்து கார்த்திகா ஃபோனை கேட்க, மாட்டிக் கொண்டாள்.
 
கார்த்திகா: அக்கா, நமக்காக தானே கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்றாங்க.
 
சித்ராவின் முகம் மாறியது. லேசான குற்ற உணர்வு தொற்றிக் கொண்டது. அக்கா குடும்பத்துக்காக இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று சொல்லும்போது, நான் மட்டும் ஒரு ஜோடியை தேடிக் கொண்டோமே. இதெல்லாம் ஒரு செயலா? ஏம்பா, காதலிக்க தானே செய்கிறோம், இப்போது உடனே கல்யாணம் செய்து கொண்டு, வீட்டை விட்டு போகவா போகிறோம்... என்று அவளுக்கு அவளே சமாதானம் சொல்லிக் கொண்டாள்.
 
கார்த்திகா: இல்லக்கா, நான் உன்னை ஒண்ணும் சொல்லல. அக்கா நமக்காக இன்னும் எவ்வளவுதான் செய்வா? சீக்கிரம் பெரிய பொண்ணுங்களா ஆயிர மாட்டோமானு தோணுது.
 
எதார்த்தமாக கொல்லை பக்கம் வந்த அகல்யா, அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்க நேரிட்டது.
 
சித்ரா: நீ ரொம்ப பீல் பண்ணாத. இன்னும் ரெண்டு மூணு வருஷம் தான். நான் காலேஜ் முடிச்சிடுவேன். நீயும் காலேஜுக்கு போயிருவ. அதுக்கப்புறம் அக்கா கல்யாணம் பண்ணிக்குவா.
 
கார்த்திகா: இல்லக்கா, தாத்தாவும் அத்தையும் பேசிட்டு இருந்ததை கேட்டேன். கல்யாணம் பண்ணா கூட நம்ம ஊரோட இருக்குற பையன பார்த்து தான் பண்ணுவாங்களே தவிர வெளியூர் பசங்களை பண்ண மாட்டேன்னு சொல்லிட்டாங்களாம். அதனால் தான் தூத்துக்குடி அத்தை பையனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிருக்காங்க. அக்காவோட அழகுக்கும், அறிவுக்கும் நம்ம ஊர்ல மாப்பிள்ளை யார் இருக்கா? நமக்காக எவனோ ஒரு மீன்காரனை கட்டிக்கிட்டு அவங்க எதுக்கு கஷ்டப்படணும்?
 
சித்ரா ஒன்றும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள்.
 
கார்த்திகா: குமார் மாமாவும், அக்காவும் சின்ன வயசுல ஒண்ணா பழகுனவங்க தானே. நமக்காகத்தானே வேண்டாம்ன்னு சொல்கிறார்கள், அதனால் கஷ்டமா இருக்கு.
 
கேட்டுக் கொண்டிருந்த அகல்யாவின் கண்களில் லேசாக நீர் துளிர்த்தது.
 
சித்ரா: நாம் என்ன செய்ய முடியும் அக்கா முடிவு. அவ முடிவ யார் மாத்த முடியும்?
 
கொல்லைப்புற கதவு பக்கத்தில் நின்றிருந்த அகல்யா, அமைதியாக அவள் ரூமை நோக்கி திரும்பி சென்றாள். கம்ப்யூட்டர் இன்ஜினியரும் வேண்டாம், சாப்ட்வேர் இன்ஜினியரும் வேண்டாம். மீன்காரனாக இருந்தாலும் சரி, கூலிக்காரனாக இருந்தாலும் சரி, ஊரோடு இருப்பவனைத் தான் கல்யாணம் செய்வேன் அதுவும் இப்போது இல்லை. இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் சென்ற பிறகுதான் செய்வேன். யார் கேட்டாலும் இப்படித்தான் சொல்ல வேண்டுமென முடிவெடுத்து இருந்தாள். ஏன் என்று கேள்வி கேட்பவர்களுக்காக அடுத்த வரி. 
 
சில நேரங்களில் பழைய நினைவுகள் வருவதை தவிர்க்க முடிவதில்லை.
 
ரூமுக்குள் நுழைந்து கட்டிலில் போய் விழுந்தாள் அகல்யா. எண்ணங்கள் அலை அலையாக அவளை சூழ்ந்தன.
 
பல வருடங்களுக்கு முன்னால், சிங்கப்பூர்காரர் வீட்டில் மட்டும்தான் கலர் டிவி இருந்தது. சன் டிவியும், இன்னும் ஒரு சில சேனல்கள் மட்டும் கோலோச்சிய நேரம். சுற்றிலும் இருந்த குழந்தைகள் அவர் வீட்டு ஹாலில் ஞாயிற்றுக்கிழமை சினிமா பார்க்க சென்று விடுவார்கள். விசேஷ நாட்களில் டெக்கில் படம் போடுவார்கள். ஒரு நாள் இரவு எட்டு மணி டெக்கில், ஏதோ பேய் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். எல்லோரும் திரையில் பேய் உருவங்களின் மிரட்டலில் ஆழ்ந்திருந்த போது திடீரென கரண்ட் போய்விட, ஹாலில் சிறு கூச்சல், குழப்பம்.
 
கூட்டத்திலிருந்த அகல்யாவும் திடுக்கிட,
 
சிங்கப்பூர் காரர் குரல் கேட்டது." சத்தம் போடாதீங்க புள்ளைங்களா... ஏம்மா லதா, அந்த எமர்ஜென்சி லைட்டை எடுத்துட்டு வா."
 
இருட்டுக்குள் அகல்யாவின் கை மேல், ஏதோ ஒரு கை மெத்தென்று வந்து படிந்தது.
 
"யாருல இது???" என்ற அகல்யாவின் குரல், ஹாலில் குழந்தைகள் போட்ட சத்தத்தில் அடங்கிப் போனது. அகல்யா விரல்களால் அந்த கையை ஆராய்ச்சி செய்தாள். ஏதோ பழக்கமான கை மாதிரி தான் தெரிகிறது. இருட்டு, கூச்சல், குழப்பத்தில் பயந்து போயிருந்த அகல்யாவின் கைகளுக்கு, அந்த கைகள் ஆதரவாக இருந்தது அகல்யாவுக்கு பிடித்திருந்தது. தயக்கம், ஆசை, குறும்புத்தனம் என்ற உணர்ச்சிக் கலவைகளுக்கு, அவள் ஒரு சிறுமி தான் இன்னும் பெரிய பெண்ணில்லை என்று தெரியவில்லை.
 
இது நிச்சயம் அவன் தான்!!
 
விரல்கள் மட்டும் சுதந்திரம் பெற்று, அவன் கை விரல்களுடன் கூட்டணி அமைத்தன. அகல்யாவுக்கு இனம் புரியாத பரவசம். என்ன உணர்வு இது!!! பயமாக இருந்தாலும், அவளுக்கு பிடித்திருந்தது. அவள் கைகளுக்கு பிடித்திருந்தது.
 
லதா அக்கா லைட்டை தூக்கி கொண்டுவர, ரூம் முழுக்க வெளிச்சம் படர்ந்தது. அகல்யா பக்கத்தில் திரும்பி பார்த்தாள். அரைகுறை வெளிச்சத்தில், 
"உன் கை ஜில்லுனு இருந்துச்சு...", என்று குமார் அவளை பார்த்து சிரித்தான்.
 
அன்றுதான் முதல் பட்டாம்பூச்சி பறந்தது.
 
கண்ணாமூச்சி ரே ரே
காட்டுபூச்சி ரே ரே
உனக்கொரு பழமும்
எனக்கொரு பழமும் கொண்டு வா...
கண்ணாம்பூச்சி கடற்கரை பூச்சி எங்கே? எங்கே?
கண்ணாம்பூச்சி கடற்கரை பூச்சி எங்கே? எங்கே?
 
"அய்யய்யோ!! உன் பாவாடை சட்டை பூரா மண் ஆயிருச்சு பாரு."
 
"இருடா... எங்க அப்பா கிட்ட நீ தள்ளிவிட்டதை சொல்றேன்."
 
"ஜில்லு, சொல்லாதடி ப்ளீஸ்..."
 
அவன் அவளை அப்படித்தான் கூப்பிடுவான்.
 
"சொல்லத்தான் போறேன்.."
 
"அப்படியா, கொஞ்சம் கையை நீட்டு..."
 
அகல்யா கையை நீட்டினாள்.
 
அவள் கையைப் பிடித்து பளிச்சென்று புறங்கையில் முத்தமிட்டான்.
 
"இதையும் சேர்த்து உங்க அப்பா கிட்ட சொல்லுடி..."
 
இரண்டாவது பட்டாம்பூச்சி பறந்தது.
 
அப்பல்லாம் சினிமாவை விட்டா குடும்பத்தோட வெளிய போக நெறய இடம் கிடையாது. பொருட்காட்சி எப்ப தொடங்கும்னு காத்துட்டிருந்தவங்க தான் உண்டு. 
 
அஞ்சுகிராமத்தில் இருக்கும் பெரிய திடலில் பொருட்காட்சி நடக்கும். எல்லோரும் குடும்பத்துடன் வரவும்...  ட்ரக்கரில் மைக்கில் அறிவித்து செல்பவனை விரட்டிக்கொண்டு ஓடும் இளசுகள். அவன் விடும் நோட்டீஸ்களை பொறுக்கிக் கொண்டே வீடு வந்து சேர்வார்கள். அதை படித்ததும், குடும்பம் குடும்பமாக செல்வார்கள்.
 
மேஜிக் ஷோ, எதை எடுத்தாலும் ஐந்து ரூபாய் ஸ்டால், மூன்று வளையங்கள் உபயோகித்து பொருட்கள் மேல் வளையங்கள் போடும் ஸ்டால், பஞ்சுமிட்டாய், ஜவ்வு மிட்டாய் கடை, கரும்புச்சாறு கடை, ராட்சச ராட்டினங்கள், சுத்தி சுத்தி ஓடும் ரயில் வண்டி, ஐஸ்கிரீம் கடை, வளையல் கடை, புடவை கடைகள், கிர்ரய்க் கிர்ரய்க் சத்தம் எழுப்பும் பலூன் கடைக்காரன்,  பீபீ ஊதியபடி ஓடும் சிறுவர்கள், கூட்டம், கூட்டம், மேலும் கூட்டம்.
 
"ஏய் ஜில்லு, நீ யார் கூட வந்த?"
 
"அம்மா கூட..."
 
"நீ...?"
 
"நானும் அம்மா கூட தான் வந்தேன்..."
 
இரண்டு பேரும் அவர்களது அம்மாக்கள் எங்கே என்று தேட, இரண்டு அம்மாக்களும் ஏதோ ஒரு புடவை கடையில் மேய்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் இப்போது வரப்போவதில்லை.
 
அவன்: ஒரு நிமிஷம் இங்கேயே இரு... என்று சொல்லிவிட்டு எங்கேயோ ஓடினான்.
 
பத்து நிமிடம் கழித்து திரும்பி வந்தான். அவள் கோன் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். ஒரு துணி பையை நீட்டினான். சாப்பிட்டுக் கொண்டிருந்த கோன் ஐஸ்கிரீமை அவனிடம் கொடுத்துவிட்டு, அவள் வாங்கி திறந்து பார்க்க... ரிப்பன், ஹேர் பின், வளையல், என்று பொண்ணுங்க சமாச்சாரமா இருந்தது.
 
அவள் தலை நிமிர்ந்து பார்க்க ஐஸ்கிரீமை அவன் சாப்பிட்டு கொண்டிருந்தான்.
 
"வழிஞ்சு ஓடிக்கிட்டு இருந்துச்சு. அதான் நான் சாப்பிட்டு புட்டேன்...", என்று கள்ள சிரிப்பு சிரித்தான்.
 
அவளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி. வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
 
"சரி, உனக்கு என்ன வாங்கினே?"
 
அவன் சிரித்தபடி, "இருந்த காசெல்லாம் இதுக்கே சரியா போச்சு. எனக்கு எதுவும் வாங்கல..."
 
அவனை ஆசை தீர பார்த்தாள்.
 
பின்னர்,
 
அவள்: நீ இங்கேயே இரு... என்று சொல்லிவிட்டு கடைகளை நோக்கி ஓடினாள்.
 
பத்து நிமிடங்கள் கழித்து வந்து, அதே மாதிரி ஒரு துணி பையை கொடுத்தாள். அவன் திறந்து பார்த்தான். சுருள் சீப்பு, சிறிய கண்ணாடி, கர்ச்சீப், பேனா,  பவுடர் டப்பா இருந்தது.
 
பார்த்துவிட்டு அவன் சிரித்தான், அவளும் சிரித்தாள்... காதலும் சிரித்தது. நிறைய பட்டாம்பூச்சிகள் சுத்தி சுத்தி பறந்தன.
 
அவன்: ஜில்லு, உன்ன கட்டி புடிச்சுக்கவா?
 
அவள் திகைத்தாள்.
 
"பதில் சொல்லு..."
 
"நிறைய சினிமா பார்த்து கெட்டுப் போயிட்டே. 12 வயசு தான் உனக்கு ஆகுது. அதுக்குள்ள கட்டிப்பிடிக்கணுமா?... அதுவும் இந்த கூட்டத்தில... சீ போ", என்றபடி ஒற்றை ஜடையை பின் பக்கமாக தூக்கி போட்டு, திரும்பிப் பார்க்காமல் ஓடினாள். முன்பக்கம் அவள் முகம் வெட்கத்தில் சிவந்திருந்ததை அவன் கவனித்திருக்க வாய்ப்பில்லை.
 
பிரிதொரு மழை நாளில்,
 
"அப்படின்னா நீ என்னை விட்டு போறதுன்னு முடிவு பண்ணிட்டே" அவள் குரலில் வருத்தம், கோபம், ஏக்கம் கலந்திருந்தது.
 
"என்ன ஜில்லு, நானா போனும்னு சொன்னேன். அப்பாவுக்கு நாகர்கோவிலில் இருந்து, தூத்துக்குடிக்கு டிரான்ஸ்பர் ஆயிடுச்சு. அதனால வீட்டை மாத்துறாங்க. நான் என்ன பண்ணட்டும்?"
 
"என்ன விட்டுட்டு போறல்ல... போ பேசாத."
 
அவன் சோகமாக திரும்பி சென்றான்.
 
"என்ன மறந்துடுவியா?"
 
போனவன் நின்றான். அவளைப் பார்த்தான்.
 
"என்ன இப்படி சொல்ற?? ஸ்கூல் லீவ் வரும் போதெல்லாம் உன்னை வந்து பாக்குறேன்", என்று சொல்லிவிட்டு சென்றான்.
 
அவளை சுற்றி சுற்றி பறந்த பட்டாம்பூச்சிகள், விலகி தொலைதூரமாக சென்றன. அவளால் தடுக்க முடியவில்லை.
 
வருடங்கள் சென்றது. எந்த லீவுக்கும் அவன் வரவில்லை. வளர்ந்த பிறகு தூத்துக்குடிக்கு போய் பார்க்கலாமா என்று நினைப்பாள். அவனுக்கே தோன்றவில்லை நாம் ஏன் போக வேண்டும்? அப்பா அம்மா ஆக்சிடெண்டில் இறந்த பிறகு, தங்கைகளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு வந்தவுடன் அவன் நினைவுகள் மறந்து போனது.
 
சமீபத்தில் கல்யாணி அத்தை கல்யாண பேச்சை எடுக்கும் போது...  குமாருக்கா தோன்றவில்லை. இப்போது கூட அவன் எங்கேயோ மெட்ராஸில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். மெட்ராஸில் இல்லாத பெண்களா? மெட்ராஸ் காலேஜில் படித்த அவள் தோழி யமுனா, குமாரை யாரோ ஒரு பெண்ணுடன் சினிமா தியேட்டரில் தோளில் கை போட்டபடி பார்த்ததாக சொன்னாள். ஆண்கள் என்றாலே வெறுத்துப் போனது.
 
பக்கத்தில் இருக்கும் வரை தான் எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். தூரத்தில் சென்றால் அவ்வளவுதான். யாரையும் நினைத்து ஏங்கிக் கொண்டிருப்பது அவளுக்கு பிடிக்காது.
 
குப்புற படுத்திருந்த அகல்யா ஒரு தீர்மானத்துடன் எழும்பி உட்கார்ந்தாள். 
 
இப்ப இருக்கும் சூழ்நிலையில் கல்யாணமே செய்து கொள்ள முடியாது. 
 
எவனும் தேவையில்லை. அதென்ன பெண்கள் என்றால் எவனையாவது கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமா என்ன? ஆண்களை நம்பி தான் பெண்கள் இருக்கிறார்களா? யாரையாவது ஒருவனை நம்பி தான் வாழ்க்கை நடத்த வேண்டுமா?? 
 
அவளுக்குள் இருந்த வைராக்கியம் அவளுக்கு மட்டுமே தெரியும்.
 
தொடரும்
 
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது
 
 

   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Trusted Member Author
Joined: 1 month ago
Posts: 41
Topic starter  
கருப்பு 9
 
மறுநாள் காலை 9 மணி
 
ஏதோ ஒரு சேவல் தாமதமாக கூவிக் கொண்டிருந்தது. மேட்டு தெருவில் ஜல் ஜல் என ஒரு மாட்டு வண்டி ஒலியை காற்றில் பரப்பி கடந்து போனது. மேட்டு தெரு மரங்களில் ஒன்றிரண்டு அணில்கள் தாவி குதித்து சுறுசுறுப்பாக திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தது. கரிச்சான் குருவிகளின் ட்ரூச் ட்ரூச் சத்தம் மரங்களை நிரப்பியிருந்தது. கீழத்தெரு அடி பம்புகளில் தண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்தார்கள். அங்கிருந்த ஸ்டார் சலூனில், காத்திருந்த ஒரு சில பேர் எப்எம் ரேடியோவில் குத்துப் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தனர்.
 
வீட்டு திண்ணையில் பெரிய கருப்பன் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். கேட் திறக்கும் சத்தம் கேட்க, பெரிய கருப்பன் தலையை உயர்த்தி பார்க்கவில்லை.  வருவது சுந்தரராமன் வாத்தியார் தான் என்று அவருக்கு தெரியும்.
 
"என்ன வாத்தியாரே? என்ன விசேஷம் இன்னைக்கு?"
 
"நீர் தான் சொல்லணும்"
 
"ஒரு விசேஷமும் இல்லை. வாடகைக்கு நல்ல பசங்களா பார்த்து சொல்லுன்னு திருமுடி பய கிட்ட சொன்னேன். அவனும் பார்க்கிறேன்னு சொல்லிருக்கான்."
 
"அவன் பல ஜோலிக்காரனாச்சே ஒழுங்கா பாப்பானா?"
 
"நமக்கு தூரத்து சொந்தம் தான் தெரியும்ல. மத்தவங்களுக்கு எப்படியோ, நமக்கு நிச்சயமா ஒழுங்கா பாப்பான். அதனாலதான் அவன் கிட்ட சொன்னேன்."
 
வாத்தியாரிடம், அவர் மகள் ஹேமாவை பற்றி கேட்கலாமா என்று ஒரு நொடி யோசித்தார் பெரிய கருப்பன். வேண்டாம்! அவள் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்ட பிறகு, ஹேமாவை பற்றி பேசினாலே வாத்தியாருக்கு பிடிப்பதில்லை. சம்பவம் நடந்த ஐந்து வருடங்கள் ஆகிறது இன்னுமா பிடிவாதம்? என்றைக்காவது ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் அவருக்கு புரியும் படி எடுத்துச் சொல்ல வேண்டும்.
 
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது,
 
பச்சை நிறத்தில் இளமஞ்சள் பூக்கள் மலர்ந்திருந்த ஷிபான் சேலை அணிந்து அகல்யா வெளிப்பட்டாள். பார்க்கிறவர்களை மொத்தமாக வசீகரிக்கும் இளமையின் முழு வீச்சில் அவள் இருந்தாலும், அதைப்பற்றிய பிரக்ஞை இல்லாமலேயே அடக்கமாக தெரிந்தாள்.
 
பெரிய கருப்பன்: என்னம்மா நாகர்கோவில் கிளம்பிட்டியா?
 
அகல்யா: ஆமா தாத்தா, இன்டர்வியூக்கு போறேன். வர்றதுக்கு சாயங்காலம் ஆகும். மத்தியான சாப்பாடு கிச்சன்ல ரெடியா இருக்கு. உங்களுக்கு குழம்புல உப்பு போடாம தனியா ஒரு சின்ன பாத்திரத்தில் எடுத்து வச்சிருக்கேன். சாப்பிட்டுட்டு மாத்திரை போடுங்க. மறந்துடாதீங்க.
 
பெரிய கருப்பன்: சரிமா, நீ பார்த்து பத்திரமா போயிட்டு வா.
 
சுந்தர்ராமன் வாத்தியாரை பார்த்து சிரித்து விட்டு கேட்டை நோக்கி சென்றாள். புன்னகை உதிர்வில் இன்னும் வசீகரமாக தெரிந்தாள்.
 
சுந்தரராமன்: அப்புறம் இன்னொரு விஷயம். நம்ம குருசடி தெருவில் ஒரு கல்யாண சாவு.
 
பெரிய கருப்பன் நெற்றியை சுருக்க,
 
சுந்தர்ராமன்: கொஞ்ச நாளா கண்ணு தெரியாம, அங்கிட்டும் இங்கிட்டும், கைல தடியோட லாந்திகிட்டு இருந்தாரே, ராமபத்திரன் தாத்தா அவர்தான். ஒரே மகன் வள்ளியூரில் இருக்கானாம், இந்நேரம் வந்திருப்பான். சாயங்காலம் எப்படியும் தூக்கிருவாங்க.
 
பெரிய கருப்பன்: சரி நீரு முன்னால போவும், நான் பின்னாடியே வரேன்.
 
சுந்தர் ராமன் மேட்டு வீட்டை விட்டு வெளியே வந்தார். தெரு முனையிலேயே புல்லட்டில் இருந்த முத்துப்பாண்டி, காவண வீட்டை கை காண்பித்து, பக்கத்தில் நின்றிருந்த இரண்டு பேரிடம் பேசிக் கொண்டிருந்தான். யார் இவர்கள்? பார்ப்பதற்கு ஆபீசர்கள் போலிருந்தது. சிமெண்ட் கம்பெனி சம்பந்தப்பட்டவர்களாக  இருக்கும்.  முத்துப்பாண்டி அவர்களிடம் காவண வீட்டைக் காட்டி, பேசிக் கொண்டிருப்பதை பார்த்தபடியே, அவர்களைக் கடந்து சென்றார் சுந்தர்ராமன்.
 
முத்துப்பாண்டி: வாத்தியாரே, கொஞ்சம் நில்லுங்க.
 
சுந்தர்ராமன், நின்று, அவர்களை நோக்கி திரும்பி சென்றார்.
 
"என்னப்பா? என்ன விஷயம்?"
 
"வாத்தியாரே, தாத்தா கிட்ட கொஞ்சம் எடுத்து சொல்லுங்க! சும்மா பூட்டி போட்டுருக்கிற முனி வீட்ட எனக்கு கொடுத்தா என்ன? நான் அதை பயன்படுத்திக்குவேன்ல. என்னால முடிஞ்சத அந்த புள்ளைங்களுக்கு செய்யத்தானே போறேன்."
 
"அந்தப் புள்ளைங்களா?... அது உன்னோட தங்கச்சிங்கப்பா.."
 
"சரி, சரி, இருக்கட்டும். வீடு விசயத்துல தாத்தா கிட்ட எடுத்து சொல்லுங்க. சும்மா பூட்டி வீடு உளுத்து தானே போகுது."
 
"அந்த வீடு அகல்யாவுக்கும், அவள் தங்கச்சிகளுக்கும் எழுதி கொடுத்தாச்சு. உளுத்து போகுதோ, புளுத்து போகுதோ... அவங்க என்னமோ செஞ்சுட்டு போகட்டும். நீ கேக்குறது தப்பில்ல, ஆனா தருவதும் தராததும் அவங்க இஷ்டம். வீட்டை தருவதற்கு அவங்களுக்கு அபிப்பிராயம் இல்லைன்னு தான் நான் நினைக்கிறேன்."
 
முத்துப்பாண்டி மற்றும் அவனுடன் பேசிக் கொண்டிருந்த இரண்டு பேரின் முகமும் மாறியது.
 
முத்துப்பாண்டி: பொறுமையா கேட்கிறேன். எங்களுக்கு சரியான பதில் கிடைக்கலன்னா நான் வேறு வழிகளை கையாள வேண்டி வரும். நான் சொல்றது உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன். தாத்தா கிட்ட எடுத்து சொல்லுங்க.... என்று மிரட்டும் தொனியில் சொன்னான்.
 
எதுக்கு வம்பு என்று சுந்தர்ராமன் பின்வாங்கி சமாளிக்கும் விதத்தில்: நீ என்னிடம் சொன்ன விஷயத்தை நான் அவர்களிடம் சொல்லிடுறேன்பா... என்றார்.
 
முத்துப்பாண்டி: இதையும் சேர்த்து சொல்லுங்க. ஒரு வாரம் தான் டைம். அதுக்குள்ள வீட்டை எனக்கு மாத்தி எழுதி வைக்கணும். இல்ல, எனக்கு என்ன பண்றதுன்னு தெரியும்.
 
சுந்தர்ராமன்: சரிப்பா, சொல்லிடுறேன்... என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார். ரவுடி பையன் இந்த பிள்ளைகளை நிம்மதியா இருக்க விடமாட்டான் போலிருக்கே!!! பாவம் அந்த புள்ளைங்க!! இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகுதோ!! பிரச்சினையை மீண்டும் பஞ்சாயத்திற்கு கொண்டு போய்டுவோமா? 
 
பல வருடங்களுக்கு முன்னால் சொத்து பிரிக்கும் போது பஞ்சாயத்தில் இருந்த பெரிய தலைக்கட்டுகள் இப்போது உயிரோடு இல்லை. இப்ப இருப்பவர்கள் எல்லாம்  முத்துப்பாண்டிக்கு வேண்டப்பட்டவர்கள். பஞ்சாயத்துக்கு போவது பலன் தராது! 
 
ஒரு பக்கம் முனி, ஒரு பக்கம் இந்த சனி!!! 
 
முனி பிரச்சனை இன்னும் இருக்கா இல்லையான்னு உறுதியா தெரியல, ஆனா இந்த சனி பிரச்சனை இருக்குது... என்ன பண்றதுன்னே தெரியல!!
 
என்று நினைத்தபடி, குருசடித் தெரு நோக்கி நடையை கட்டினார்.
 
தொடரும்
 
 
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது
 

   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Trusted Member Author
Joined: 1 month ago
Posts: 41
Topic starter  
கருப்பு 10
 

வைரம் பாய்ந்த கட்டை என்று சொல்வார்களே அந்த மாதிரி ஜீவன் ராமபத்திரன் தாத்தா. சும்மா அடுத்தவருக்கு பாரமாக இருக்கும் பேச்செல்லாம் இல்லை. பேரன், பேத்தி என்று கொஞ்சியாயிற்று. 80 வயது தாண்டி விட்டாலே ஒவ்வொரு நாளும் கடவுள் கொடுத்த கொடை. அதனாலேயே யாருக்கும் அதிகம் துக்கம் இல்லை, அவர் வளர்த்த நாயை தவிர!

வள்ளியூரில் இருந்து அவர் மகன் ரஸ்தா காடு வருவதற்கு ஒரு மணி நேரத்துக்குள்ள தான் ஆகும்... காலையில் பக்கத்து வீட்டுக்காரர்கள் போன் பண்ணி சொன்னதுமே, கார் எடுத்து அவர் மகன் குடும்பத்துடன் வந்து விட்டான். ரேடியோ, பந்தலுக்கு, சமையல் ஆளுக்கு சொல்லிவிட்டார்கள்.  அரை மணியில் பந்தல் போட்டு, ரேடியோ கட்டியாகிவிட்டது. முதல் பாட்டு வழக்கம் போல "சட்டி சுட்டதடா!". வீட்டருகில் இருந்த பூவரச மரத்தடியில் மூன்று கல் வைத்து அடுப்பு கூட்டி சமையல் வேலையும் ஆரம்பமானது.

துக்கத்திற்கு ஏகப்பட்ட பேர் வர ஆரம்பித்தார்கள். வந்திருந்தவர்களில் ஆண்கள், அவர் மகனிடம் துக்கம் விசாரித்தார்கள். பெண்கள் மருமகளிடமும் பேருக்கு துக்கம் விசாரித்து, ஆறுதல் சொல்லிவிட்டு அருகில் இருந்த வேப்பமர நிழலில் உட்கார்ந்து ஊர் கதை பேச ஆரம்பித்தார்கள். சரியாக  டீயும் பன்னும் தயாராக இருந்தது. கல்யாண சாவு என்பதால் பெரிய அழுகாச்சி சீன இல்லை. டீயை குடித்த படி, அனைவரும் அரட்டையை ஆரம்பித்திருந்தனர். "பெரியவர் யாருக்கும் தொந்தரவு இல்லாம, தானும் இம்ச படாம சீக்கிரம் போய் சேந்துடுச்சு".

"அந்த சூப்பர்வைசர் வர வர ரொம்ப ரப்சர் பண்றான்"

"போன மாச பணம் அக்கவுண்ட்ல ஏறிடுச்சா?"

"வர்ற வாரம் குருசடிக்கு பின்னால் இருக்கிற முள்ளு மரங்கள் எல்லாம்  வெட்ட சொல்றாங்க..."

"ஆங்... அதெப்படி அவனை வந்து வெட்ட சொல்லு..."

அனைவரும் அரசாங்க வேலை பார்ப்பவர்கள். நூறு நாள் வேலை திட்டத்தில், மரத்தடியில் உட்கார்ந்து, உருண்டு, புரண்டு, பேசி பழக்கப்பட்டவர்கள். அவர்களிடம் வேலை செய்ய சொன்னால் எப்படி?

தார தப்பட்டை ஆட்கள் மரத்தடியில் கள்ளோ பதனியோ குடித்துக் கொண்டும், பீடி பற்றவைத்துக் கொண்டிருந்தார்கள்.

திருமுடி டீ கப்புகளுடன் அங்கும் இங்கும் சுத்திகொண்டு இருந்தான். ஊருக்குள் என்ன விசேஷம் நடந்தாலும் சரி, துக்க காரியமா இருந்தாலும் சரி, முதலில் ஆஜராகி விடுவான். ஏதோ அவனே தலைமை தாங்கி நடத்துவது போல் அவனுக்கு ஒரு உணர்வு ஏற்படும். 

எழவுக்கு வந்திருந்த சகாயராஜ் திருமுடியை நோட்டமிட்டு கொண்டிருந்தான். திருமுடிக்கு சகாயராஜ் என்றால் மட்டும் சிறுவயதில் இருந்து லைட்டா பயம்.

சாரத்தை மடித்து கட்டிக் கொண்டு வந்த ராமசாமி, ஏதோ பேசிக் கொண்டிருந்த சகாயராஜ் மற்றும் திருமுடியை பார்த்து,

"ஐயையோ!!! பெருசு நேத்து தானே என்கிட்ட 1000 ரூபாய் கடன் வாங்கிச்சு? இப்ப சொல்லாம கொள்ளாம போயிருச்சே!!! நான் யாருகிட்ட திரும்பி வாங்குவேன்", என்று ஒப்பாரி வைத்தபடி வந்தான்.

திருமுடி அவனை தடுத்து நிறுத்தி,

"யாரு நீயி... ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்த?... 

சகாயராஜ்: முதல்ல என்கிட்ட வாங்கின 50 ரூபாயை திருப்பி குடுல.

ராமசாமி கப்பென்று ஒப்பாரியை நிறுத்திவிட்டு, இருவரையும் மாறி மாறி பார்த்தான். பின்பு எதுவும் பேசாமல் சைடு வாங்கினான்.

திருமுடி: லேய் என்ன ஒண்ணுமே சொல்லாம போற. பதில் சொல்லிட்டு போல.

ராமசாமி பேசாமல் போய்க்கொண்டே இருந்தான்.

சகாயராஜ்: ஏலே நில்லு...

அவன் கண்டு கொள்ளவில்லை.

சொந்தக்காரர்கள் அனைவரும் வந்து விட்டதால்,  மாலை 5 மணிக்கு எடுத்து விடலாம் என்று முடிவு எடுக்கப்பட்டு இருந்தது. தாத்தா குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் எல்லோரும் கூரை மேல் சோறு வீசினார்கள். ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் ஒரு சடங்கு.

தாத்தா வீட்டின் கொல்லை புறத்தில், பெட்டிக்கடை பரிமளா அங்கிருக்கும் ஒரு சில பெண்களுடன் பேசிக் கொண்டிருந்ததை திருமுடி பார்த்தான். 

தூரத்தில் நின்று அவன் பார்ப்பதை, பரிமளாவும் பார்த்து விட்டாள்.

சகாயராஜ் எங்கே என்று பார்த்தான். அவன் முன்னால் கூட்டத்தில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்ததை உறுதி செய்ததும், திரும்பி பரிமளாவை பார்த்து,

தனியா வா என்று சைகை செய்தான். கொஞ்ச நேரம் பொறு என்று பதில் சைகை செய்தாள்.

பேசிவிட்டு சகாய ராஜை பார்க்க, அவன் அவர்கள் இருவரையும் முறைத்துக் கொண்டிருப்பதை பார்த்ததும், திருமுடி நைசாக நழுவினான்.

அடப்பாவி!!!! பார்த்துட்டானா!

தாத்தாவின் மகனும், இன்னும் ஒரு சில சொந்தக்காரர்களும் தாத்தாவை தூக்கி, வாகனத்தில் வைத்தார்கள். சரியாக "போனால் போகட்டும் போடா" பாட்டு ஒளிபரப்பப்பட்டது. வாகனம் சுடுகாடு நோக்கி புறப்பட்டது. ஆண்கள் முக்கால்வாசி பேர் கிளம்பினார்கள். பெண்களில் சிலர் பின்னாடியே அழுது கொண்டு வாசல் வரை சென்றார்கள்.

கொல்லைப்புறத்தில், ஆள் யாரும் இல்லாததால், திருமுடி பரிமளாவை வரச்சொன்னான்.

அவள் வந்ததும்,

திருமுடி அவசர அவசரமாக: என்னடி கண்டுக்கவே மாட்டேங்குற? பொட்டிக்கடை பக்கமும் வர முடியல. போன் பண்ண கூடாதுன்னு வேற சொல்ற. இன்னைக்கு நைட்டு வரவா?

பரிமளா சுற்றிலும் பார்த்தபடி,

"போன் வேற யாராவது எடுத்தா பிரச்சனையாயிரும். போன்ல்லாம் பண்ணிராத. இன்னைக்கு நைட் வேண்டாம். நாளைக்கு 10 மணிக்கு மேல வா. புருஷனுக்கு நைட் டூட்டி தான் போயிருவான்."

விலகியிருந்த முந்தானைப் பிரதேசங்களை பார்த்துக் கொண்டிருந்தான் திருமுடி. ஐந்து வருட திருமண வாழ்க்கை, பரிமளாவின் உடலமைப்பை சிறிது சேதப்படுத்தி இருந்தாலும்,  கிண்ணென்று தான் இருந்தாள்.

"அங்க என்ன பார்வை?" என்று முந்தனையை சரி செய்து விட்டு, அவன் தோளில் வலிக்காதவாறு அடித்தாள்.

நாளைக்கு நைட்டு செம மஜா தான் என்பது உறுதியானதும், திருமுடிக்கு சொல்ல முடியாத பாகங்கள் எல்லாம் சிலிர்த்தது.

பரிமளா: சரி, நான் போறேன்.

யாரும் இல்லாததால் திருமுடி அவள் இடுப்பில் கைவைக்க பார்க்க, அவள் கைக்கு அகப்படாமல், வளைந்து நெளிந்து ஓடினாள்.

கொல்லைப்புற வாசல் வழியாக சகாயராஜ் அவனைத் தேடிக் கொண்டு வெளிப்படுவதை பார்த்ததும், நீட்டிய கையை மடக்கிய திருமுடி,

"என்னடா இது, இந்த சுதந்திர நாட்டுல காதலிக்க தான் விட மாட்டேங்கறீங்க? கள்ளக்காதல் கூட பண்ண கூடாதா?"

என்று முணுமுணுத்தப்படி  நடையை கட்டினான்.

ரஸ்தாகாடு சுடுகாடு

இரவு 9 மணி

ஊரிலிருந்து கடற்கரைக்கு போகும் வழியில், இருளாயி கோயிலில் இருந்து, பிரிந்து செல்லும் ஒரு மாட்டு வண்டி செல்லும் அளவுக்கு சற்றே பெரிய பாதை, சுடுகாடு நோக்கி செல்லும். ஊருக்கு வெளியே ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. முள்ளு செடிகள் சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் போல் அமைந்திருந்தது. ரஸ்தாகாடு பக்கத்தில், கடற்கரையோரமாகவே இரண்டு சிற்றூர்கள். வலப்புறம் காணிமடமும், இடப்புறம் பனையூரும் இருந்தது.   இரண்டு ஊர்களில் நடக்கும் சாவுகளுக்கும் ரஸ்தாகாடு சுடுகாட்டை தான் பயன்படுத்துவார்கள்.

சுடுகாடு நுழைவாயிலேயே செக்யூரிட்டி கேபின் போல் வெட்டியானின் குடிசை. எப்போதோ பின்னப்பட்ட ஓலைகளுடன், குடிசை கீறல்களுடன் காணப்பட்டது.

பனை மரத்திலிருந்து பாம்பு தலைகீழாக இறங்குவது போல், இருட்டு வானத்தில் இருந்து இறங்கி கொண்டிருக்க, சுடுகாட்டில் பெரியவரின் பிணம் எரிந்து கொண்டிருந்தது. சாயங்காலம் மழையும், காற்றும் சிறிது நேரம் அடித்ததால் முழுவதுமாக எரிக்க முடியவில்லை. விறகு கட்டைகளும், வரட்டியும் பயன்படுத்துவதால், முழுவதுமாக எரிப்பதற்கு இரண்டு, இரண்டரை மணி நேரமாகும். வாழும் போது என்னென்ன ஆசைகளுடன் வாழ்ந்தானோ, அதில் எவ்வளவு நிறைவேறியதோ தெரியாது. நெருப்பு அவன் உடலை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. கடலின் பேரொலியும், காற்றின் சத்தத்தையும் தவிர வேறு எந்த சத்தமும் வந்து பிரதேசத்தில் கேட்கவில்லை.

சாராய பாட்டிலை வாயில் வைத்து கொட்டி கவிழ்த்துவிட்டு, வெட்டியான் கையில் வைத்திருந்த ஊறுகாய் பாக்கெட்டை பிரித்து வாயில் வைத்து இழுத்தான். லுங்கி அவுந்துவிடாமல் இருக்க பெரிய பெல்ட் அணிந்திருந்தான். பெல்ட்டுக்குள் ஒரு டார்ச் லைட்டை சொருகி இருந்தான்.

கடற்கரை காற்று அடித்ததில், பிணத்தின் முகத்தை மூடியிருந்த வறட்டி சரிந்து, கீழே விழுந்தது. பொசுக்கிக் கொண்டிருந்த தீ பிணத்தின் வாயை ஆ வென பிளந்து வைத்திருந்தது.

வெட்டியான் திரும்பி பார்த்தான். அவன் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. கழுத்தை சுற்றி போட்டிருந்த துண்டை எடுத்து தலையில் உருமா கட்டிக் கொண்டான்.

திடீரென,

"ஊஊஊஊஊ.....ஊஊஊஊஊ.....", என்று ஒரு நாயின் ஊளை சத்தம், கடலின் பேரொலியும், காற்றின் சத்தத்தையும் இரண்டாகப் பிளந்தது. ஹொவ்க்..ஹொவ்க்.... என்று ஆந்தைகளின் சத்தம்... கிரீச் கிரீச்...  என்று தூரத்தில் ஒரு  பேர் தெரியாத பறவை வினோதமாக சத்தமிட்டது. வெட்டியான் சுற்றிலும் பார்த்தான். ஊளை சத்தம் வெட்டியானுக்கு புதிதல்ல... ஆனால் கேட்டுக் கொண்டிருந்த கடல் அலைகளின் சத்தமும், காற்று சத்தமும் திடீரென்று நின்று பேரமைதி ஆனது தான், அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

"ஊஊஊஊஊ.....ஊஊஊஊஊ.....", மறுபடியும் ஊளை சத்தம்.

சட சடவென சத்தம் கேட்க, பிணம் எரிந்து கொண்டிருக்கும் மேடையை திரும்பி பார்த்தான். தீக்கங்குகள் சிதறி கீழே விழ, எரிந்து கொண்டிருந்த பிணம் மேலே எழுந்தது. வெட்டியான் சுற்றிலும் பார்த்தான். கீழே கிடந்த ஒரு விறகு கட்டையை எடுத்துக் கொண்டு பிணத்தருகே சென்றான். 

டொப் டொப் என்று  அடித்து மறுபடியும் படுக்க வைத்தான். பிணத்திலிருந்து என்னெல்லாமோ தெறித்து பக்கத்தில் விழுந்தது. வெட்டியான அசரவில்லை. எவ்வளவு பிணங்களை பார்த்திருப்பான்.

விறகு கட்டையை தூக்கி எறிந்து விட்டு, திரும்பி நடந்த வெட்டியான் தூரத்தில் கருப்பாக ஏதோ சுழல் காற்று போல் சுழன்று வருவதை பார்த்தான். 

திகைத்தான்.

சுழல் காற்று நகர்ந்து வராமல், துள்ளித்துள்ளி வருவது அவனுக்கு வித்தியாசமாக தோன்றியது. அவனை நோக்கி தான் வந்து கொண்டிருந்தது.

என்னடா இது!!! வித்தியாசமாக இருக்குதே என்று அவன் பார்த்துக் கொண்டிருந்த வேளையிலேயே துள்ளித்துள்ளி வந்த கருப்பு காத்து, திடீரென வேகம் எடுத்தது.

கண்ணிமைக்கும் நேரம். புயல் வேகத்தில்,

விஷ்க்..... என்று அவனை நோக்கி வந்து மோத, வெட்டியான் தூக்கி எறியப்பட்டான். ஏதோ புல்டோசர் வந்து மோதியது போல் உணர்ந்தான்.

பல அடி தூரம் பின்பக்கமாக பறந்து, தட் என்று பூமியில் மோதி விழுந்தான். சர்ரென்று சறுக்கி கொண்டே சென்றான்.

கருப்பு காற்று அதே இடத்தில் நின்றிருந்தது. விசித்திரமாக, மூர்க்கத்தனமாக, நெகிழ்வுத் தன்மையுடன், நெளிந்தபடி, உள்ளுக்குள் ஏதோ மிக்சியில் நற நறவென அரைப்பது போல், கருப்பு காத்துக்குள் விளங்கிக் கொள்ள முடியாத சத்தம்.

கீழே விழுந்தவன் மறுபடியும் எழும்ப முயற்சிக்க, முடியவில்லை. மெதுவாக தலையை எழுப்பி பார்த்தான். அடி வயிற்றில் இருந்து ஏதோ பிரட்டிக்கொண்டு வர, உவ்வே... என்ற சத்தத்துடன் வாந்தி எடுத்தான். 

இரத்தம் இரத்தமாக வந்தது.

தடாலென்று அவன் கீழே சரிந்தான்.

தொடரும்

உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது
 

   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Trusted Member Author
Joined: 1 month ago
Posts: 41
Topic starter  
கருப்பு 11
 
மேட்டு வீடு, மறுநாள் இரவு பத்து மணி
 
அகல்யா வேலை எல்லாம் முடித்து விட்டு அவள் ரூமுக்குள் நுழைந்தாள். போனை எடுத்துப் பார்த்தாள். நான்கு மிஸ்டு கால்கள். ஹேமா தான் பண்ணிருந்தாள்.
 
அகல்யா ஹேமாவுக்கு போன் செய்தாள்.
 
"ஹலோ... என்னடி ரொம்ப நாள் கழிச்சு போன் பண்ணிருக்க?"
 
"ஏன் நீ போன் எடுக்கல?"
 
"கொஞ்சம் வேலையா இருந்தேன். இப்பதான் பார்த்தேன். என்ன விஷயம்?"
 
"இல்ல, கீழத்தெரு ரத்னாவை இன்னைக்கு வடசேரி பஸ் ஸ்டாண்டில் பார்த்தேன். எங்க அம்மாவுக்கு ஏதோ உடம்பு சரியில்லைன்னு சொன்னா. அதான் உனக்கு கால் பண்ணினேன்..."
 
"பயப்படுற அளவுக்கு ஏதும் இல்லடி. வயசான வர்ற கோளாறுகள் தான். பிரஷர் தான்... வாத்தியார் டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனாரு.  பிரஷர் மாத்திரை கூடவே அயன் டானிக் எழுதி கொடுத்தாராம். நீயே போன் பண்ணி நலம் விசாரிக்க வேண்டியது தானே"
 
மறுமுனையில் அமைதி.
 
அகல்யா: சரி, ஸ்டீபன் கிட்டருந்து ஏதாவது தகவல் வந்துச்சா?
 
ஹேமா: இல்லடி, அவன் ஆபீஸ்ல வேலை பார்க்கிற பொண்ணோட தொடர்பு இருக்குன்னு எனக்கு எப்ப தெரிஞ்சதோ, அப்ப விட்டுட்டு போனவன் தான், என்ன ஏதுன்னு கூட கேட்கல்லை. கைக்குழந்தையுடன் இருக்கிறாளே அவளை விட்டுட்டு போறோமே... சின்ன அக்கறை கூட கிடையாது. எப்படில்லாம் தேன் மாதிரி பேசி என்னை ஏமாத்திட்டான். காவியாவுக்கு இப்ப நாலு வயசு. குழந்தையை பாக்கணும், அட்லீஸ்ட் குழந்தைக்கு தேவையான விஷயங்கள் செய்யணும்னு ஒரு நினைப்பும் இல்லை. அவன் வரமாட்டான்னு நான் எப்பவோ முடிவு பண்ணிட்டேன். டைவர்ஸ் அப்ளை பண்ணிருக்கேன்.
 
அகல்யா: நான் ஒண்ணு சொல்றேன். தப்பா நினைக்காத!! வாத்தியாருக்கு வேணும்னா உன் மேல இருக்கிற கோபம் குறையாமல் இருக்கலாம். ஆனால் உங்க அம்மா பாவம். உன் மேல் உள்ள பாசத்தை வெளிக்காட்ட முடியாம ரொம்ப மருகி, கொமஞ்சி போறாங்க. அவங்க கிட்டயாவது நீ பேசலாம்ல.
 
ஹேமாவின் குரலில் தழுதழுத்தது. "வேணாம் அகல்.. நான் ஓடிப்போய் சந்தோசமா இருக்கிறேன்னு நினைச்சிட்டு இருப்பாங்க. என் வாழ்க்கை இப்படி சீரழிஞ்சு போச்சுங்கிற விஷயம்ல்லாம் அவங்களுக்கு தெரிய வேண்டாம். அவங்களால தாங்க முடியாது. எவ்வளவு வீராவேசமா அவங்களை தூக்கி எறிஞ்சிட்டு போனேன். எனக்கு இது தேவை தான்."
 
அகல்யா: வேலைக்கு போயிட்டு இருந்த தானே?  இப்ப எப்படி சமாளிக்கிற?
 
ஹேமா: கஷ்டமா தான் இருக்கு. குழந்தையை கிரஷ்ல விட்டுட்டு ஆபீஸ் போயிருவேன். சாயங்காலம் வரும்போது கூட்டிட்டு வருவேன். எங்க துணைக்கு கூட யாரும் இல்லை. நீயும் என்ன மறந்துட்ட, பார்க்க வர்றதில்ல.
 
அகல்யா: சாரிடி. எனக்கும் ஆபீஸ்ல ஒரு சில பிரச்சனைகள். வேலையை விட்டுட்டேன். வேலை தேடி சுத்துறதால, என்னால வர முடியல. நெக்ஸ்ட் வீக் கண்டிப்பா வந்து பார்க்கிறேன் ஓகேவா?
 
ஹேமா: கண்டிப்பா வரணும். நான் எதிர்பாத்துட்டு இருப்பேன்
 
அகல்யா ஓகேடி என்று சொல்லிவிட்டு வைத்தாள்.
 
கீழத்தெரு கடைசி வீதி
அதே நேரம்
 
கீழ தெருவின் பத்தாவது வீதி கடற்கரைக்கு போய் சந்திக்கும் முனையில் இருந்தது பரிமளாவின் வீடு. லைட்டு ஆப் செய்யப்பட்டிருக்க வீட்டுக்குள் கிசுகிசு சத்தங்களுடன் வேறு ஒரு சில சத்தங்கள்.
 
பரிமளாவிடமிருந்து விலகி சைடில் படுத்தான் திருமுடி. வேலையை வெற்றிகரமாக முடித்த திருப்தியுடன், பீடிக்கட்டில் இருந்து ஒரு பீடியை உருவி பற்ற வைத்தான். பரிமளா ரவிக்கையை எடுத்து மாட்டி கொண்டிருந்தாள்.
 
"என் புருஷன் காலையில தான் வருவான். கொஞ்ச நேரம் இருந்துட்டு போய்யா..."
 
"நான் படுத்தா தூங்கிருவேன். அப்புறம் விடிஞ்சிடுச்சின்னா வெளியில போறது சிரமமாயிடும். இப்பவே கிளம்பறது தான் நல்லது. நாளைக்கு வரேன். அதான் உன் புருஷனுக்கு ஒரு வாரம் நைட் ஷிப்ட் தானே..."
 
"ஆமா, 10 மணிக்கு மேல வாயா"... அவள் பாவாடை நாடாவின் முடிச்சுகளை போட்டுக் கொண்டே பேசினாள்.
 
திருமுடி கதவைத் திறந்து மெதுவாக வெளியே எட்டிப் பார்த்தான். தெரு காலியாக இருந்தது.
 
"கதவை பூட்டிக்க...", என்று சொல்லிவிட்டு சட்டென்று வெளிப்பட்டு, கடற்கரையை நோக்கி விறுவிறுவென நடந்தான். கடலில் இரவு மீன் பிடிக்கச் சென்றிருந்த ஒரு சில படகுகளில், வெளிச்சம் தெரிந்தது. கடற்கரையோர சாலை ஒன்றிரண்டு டியூப் லைட் வெளிச்சத்தில் தூங்கிக் கொண்டிருந்தது. திருமுடி ஏதோ ஒரு பாடலை விசிலடித்தபடி சென்று கொண்டிருந்தான்.
 
கடற்கரையோரமாக இருந்த ஒன்றிரண்டு வீடுகள் தூங்கிக் கொண்டிருந்தன. இங்கே அவ்வளவு பிரச்சனை இருக்காது. யாரும் ராத்திரி வெளியே வர மாட்டார்கள். தைரியமாக திருமுடி சென்று கொண்டிருந்தான். திடீரென்று ஒரு வீட்டின் கதவு திறக்கும் சத்தம் கேட்க, 
 
சாலையோரமாக ஒரு குட்டை சுவருக்கு பின்னால் போய் திருமுடி ஒளிந்து கொண்டான்.
 
ஏதோ ஒரு உருவம் தலையில் துண்டை போட்டுக்கொண்டு வெளியே வர,
 
யாரு வீடு இது என்று திருமுடி பார்த்தான். நம்ம சந்தன மேரி வீடாச்சே!! ஒருவேளை அவ புருஷன் ராத்திரி கடலுக்கு போறதுக்காக வருறானோ!
 
அவன் வெளிப்பட்டதும் கதவு பூட்டிக் கொண்டது. தலையில் துண்டு போர்த்தியிருந்த உருவத்தை கூர்ந்து பார்த்ததும், திருமுடிக்கு யாரென்று தெரிந்தது.
 
அட நம்ம சித்தப்பு சகாயராஜ்!!
 
சந்தன மேரி வீட்ல இந்நேரத்துல என்ன பண்றாரு? அது சரி, சந்தனம் பூசிட்டு இருந்திருப்பார்.
 
குட்டை சுவத்துக்கு பின்னாலிருந்து படாரென்று பின்னால் கையை கட்டிய படி திருமுடி வெளிப்பட்டான்.
 
"என்ன சித்தப்பு இந்த பக்கம்?"
 
சகாயராஜ் அவனைப் பார்த்ததும், திடுக்கிட்டான்.
 
ஒருவேளை சந்தனமேரி வீட்டுக்குள்ள இருந்து வந்ததை பார்த்திருப்பானோ?
 
சகாயராஜ்: ஹி ஹி  ஒன்னுமில்ல மவனே.. தூக்கம் வரல. அதான் சும்மா காத்தாட ஒரு நடை வந்தேன். ஆமா நீ என்ன இந்த பக்கம்?
 
திருமுடி: ம்ம்ம்ம்... (என்று அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு) அதையேதான் எங்களுக்கும். தூக்கம் வரல, காத்தாட ஒரு நட வந்தேன் என்றான் கடுப்பாக...
 
சகாயராஜ் மைண்ட் வாய்ஸ்: ஒருவேளை இவனும் நம்மள மாதிரி தான், அந்த பொட்டிக் கடைக்காரியை பார்க்க வந்திருப்பானோ!!!
 
திருமுடியை சந்தேகமாக பார்த்தான். திருடனுக்கு தேள் கொட்டி இருந்ததால், மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.
 
இருவரும் கடற்கரை சாலையில் இணையாக நடக்க ஆரம்பித்தார்கள்.
 
திருமுடி அவனை கடுப்பாக முறைத்துக் கொண்டு வர, 
 
அவன் மைண்ட் வாய்ஸ்: கொஞ்ச நஞ்ச அட்டூழியமா பண்ணுனான்? நிம்மதியா பரிமளா கூட பேச விட்டானா?  சித்தப்பனா போயிட்டான்... இல்லன்னா கண்டமேனிக்கு கேள்வி கேட்டுருக்கலாம்.
 
திருமுடி ஏதாவது கேள்வி கேட்டு விடக்கூடாது என்பதற்காக, வேட்டி மடிப்பில் சுருட்டி வைத்திருந்த வெற்றிலை, புகையிலை எடுத்து போட்டு, குதப்பி கொண்டான்.
 
தூங்கிக் கொண்டிருந்த சாலையை தட்டி எழுப்பும் விதத்தில் தூரத்தில்  சைக்கிள் வரும் சத்தம் கேட்டது. இருவரும் பதட்டமாகி,  சாலைக்கு மறுபுறம் இருந்த ஒரு  திண்டின் பின்னால் போய் ஒளிந்து கொண்டார்கள்.
 
சகாயராஜ்: யார்ரா அது இந்த நேரத்துல?
 
திருமுடி: ஆமா நீ எதுக்கு ஒளியிர? காத்து வாங்க தான வந்த?
 
சகாயராஜ்: நாம எதார்த்தமா காத்து வாங்க வந்தாலும், ஊர் ஜனங்க நம்மள தப்பா நினைக்க கூடாதுல்ல, அதுக்கு தான்.
 
திருமுடி: ஓஹோ...
 
சைக்கிள் காரன் கிட்ட வர வர, யாரென்று தெரிந்தது. ராமசாமி தான் அது. இரவு வலைக்கு போயிட்டு வர்றான் போலிருக்கு.
 
"பாவி பய நம்மளை இப்ப பார்த்தா  ஊர் பூரா போய் பத்தி வச்சுருவானே. அவன் கடந்து போகட்டும்", என்று நினைத்தபடி, இருவரும் ஒளிந்து நின்றார்கள்.
 
இருவரும் அவனையே பார்த்துக் கொண்டிருக்க,  சைக்கிளில் வந்தவன், சைடில் இருந்து லாரி வந்து மோதியது போல், திடீரென தூக்கி வீசப்பட்டான். ராமசாமி, ஐயோ என்று சத்தமிட்டபடி பறந்து போய், பீச் மணலில் விழுந்து புரண்டான். சுழற் காற்று போல் ஏதோ ஒன்று சுழண்டது. நடு நிசியில் கிணற்றை எட்டிப் பார்த்தால், உள்ளிருந்து நம்மைத் திருப்பிப் பார்க்கும் கறுப்புப் பூனையின் கண்கள் போல,  சுழற் காற்றுக்குள் இரண்டு கண்கள் மின்னின. இரண்டு பேருக்கும் நடு முதுகு சில்லிட உலுக்கிப் போட்டது.
 
கருப்பு சுழற் காற்று சாலையை கடந்து விஷ்கென்று மறுபுறம் சென்றது.
 
பார்த்துக் கொண்டிருந்த இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. தொண்டையில் மீன் முள் மாட்டியது போல் திருமுடி ஹக் ஹக் என்று பயத்தில் வினோதமாக சத்தமிட்டான்.
 
என்னடா நடக்குது இங்க?
 
திருமுடி பயம் கலந்த அச்சம் கலந்த பீதி கலந்த குரலில்: 'ராமசாமி ஒழுங்கா தானே வந்துட்டு இருந்தான், ஏதோ வந்து மோதுனது மாதிரி இப்படி பறந்து போய் விழுறானே?'
 
ராமசாமி கடற்கரை மணலில் தலையை அசைத்தபடி, ஏதோ முனகி கொண்டிருந்தான். அடி ஜாஸ்தியாக இருக்க வேண்டும். 
 
திருமுடி: அவனை போய் எழுப்பி, என்னாச்சுன்னு கேட்போம் 
 
சகாயராஜ்: பைத்தியமா உனக்கு??? நீ எதுக்கு  இந்த டைம்ல, இந்த பக்கமா வந்த என்று கேள்விகள் வரும். எங்க அப்பன் குதிருக்குள்ள இல்லைன்கிற கதையாயிரும்
 
என்று அவன் யோசனையை நிர்தாட்சண்யமாக மறுத்தான். 
 
திருமுடி:  ஒருவேளை முனி வேலையாக இருக்குமோ? 
 
இருவருக்கும் குப்பென்று வியர்த்தது. 
 
மீன் கூடைகள் பறந்து போன சமாச்சாரத்தையே கஷ்டப்பட்டு தான் மறந்திருந்தார்கள். இப்போது அதுவும் ஞாபகத்துக்கு வர,
 
சகாயராஜ்: வீணா பீதியை  வேற கிளப்பி விட்டுட்ட... வாடா போயிரலாம்.
 
இருவரும் வேக வேகமாக நடக்க ஆரம்பித்தார்கள். அடிக்கிற காற்று அவர்கள் மேல் மோதி, காதோரங்களில் விசித்திரமாக சத்தமிட்டது. யாரோ அவர்களை பின் தொடர்ந்து வருவது போலவே உள்ளுக்குள் தோன்ற, திரும்பி பார்க்க முயற்சித்த, திருமுடியை தடுத்தான் சகாயராஜ்
 
சகாயராஜ்: வேண்டாம்!!! இன்னைக்கு என்னமோ நிலைமை சரியில்ல. திரும்பி பாக்காம போயிடலாம்.
 
தொடர்ந்து வேகமாக நடந்தார்கள்.
 
அவரவர் வீட்டுக்குப் போகும் பிரிவு வந்ததும், ஆளுக்கொரு பக்கமா, சொல்லாமல் கொள்ளாமல் பிரிந்து சென்றார்கள்.
 
தொடரும்
 
 
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது.
 

   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Trusted Member Author
Joined: 1 month ago
Posts: 41
Topic starter  

கருப்பு 12

மேட்டு வீடு

இரண்டு நாட்களுக்குப் பிறகு,  காலை 11 மணி

 

சிட் அவுட்டில் பெரிய கருப்பனும் திருமுடியும் பேசிக் கொண்டிருந்தார்கள். காலை நேர பரபரப்பு முடிந்து, மேட்டு வீடு அமைதியாக இருந்தது. சித்ரா காலேஜுக்கும், கார்த்திகா ஸ்கூலுக்கும் சென்றிருந்தார்கள். வேலை காரணமாக, ஹேமாவை ரொம்ப நாள் பார்க்க முடியாததால், அகல்யா அவளை பார்ப்பதற்காக நாகர்கோவில் சென்றிருந்தாள். மேட்டு தெருவில் மரத்தடியில் சிக்னி படுத்திருந்தது.

 

பெரிய கருப்பன்: எனக்கெனவோ ஊருக்குள்ள திடீர்னு முனி நடமாட்டம் பத்தி பேச்சு ஆரம்பிச்சிருக்கிறது, முத்துப்பாண்டி வேலையா இருக்குமோன்னு சந்தேகம். அவன் காவண வீட்டை வளைக்கிறதுக்கு என்ன வேணா பண்ணுவான். முனி இருக்கிறது  உண்மைன்னு ஆயிருச்சுன்னா, காவண வீட்டை நாம வாடகைக்கு விட முடியாது, விற்க முடியாது. மறுபடியும்  அடிச்சு வாங்கிக்கலாம்ன்னு திட்டம் போடுறான்.

 

திருமுடி: மீன் கூடைகளை முனி தூக்கிட்டு ஓடுனதை என் கண்ணால பார்த்தேன்...

 

பெரிய கருப்பன்: சொல்றத ஒழுங்கா சொல்லு. மீன் கூடைகளை எவனோ எடுத்துட்டு ஓடிருக்கான். நீங்க விரட்டிட்டு போய்ருக்கீங்க. கடைசில கூடைகள்  முனி சிலை பக்கத்துல கிடந்ததை பார்த்தீங்க. கரெக்டா?

 

திருமுடி தயங்கியபடியே ஆமா என்றான்.

 

ராமசாமி விஷயத்தை சொல்லலாமா என்று யோசித்தான். இரவு கடற்கரையில், தூக்கி எறியப்பட்டு, ரத்தம் கக்கி விழுந்து கிடந்தவனை, காலையில் தான் பார்த்து ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு போய்ருக்கிறார்கள். கீழே விழுந்து, தலையில் பலத்த அடிபட்டதால் எப்பவோ அவன் இறந்து விட்டான் என்று டாக்டர் கையை விரித்திருக்கிறார்.

 

மறுநாள் செய்தியை கேள்விப்பட்டதும், சகாயராஜ்க்கும் திருமுடிக்கும் அதிர்ச்சி. சைக்கிளில் வருபவன், எதிர்காற்றில் தூக்கி  வீசப்படுவது போல், தானாக பல அடி தூரம் பறந்து எப்படி விழ முடியும்?

 

ரொம்ப குழம்பி போயிருந்தார்கள். வெளியேவும் சொல்ல முடியவில்லை.

 

பெரிய கருப்பன்: நான்தான் சொல்றேனே! இவ்வளவு நாள் இல்லாம இப்ப திடீர்னு முனி எங்கிருந்து வந்தது? காவண வீடு பத்தின விஷயம் தெரிஞ்சதுக்கப்புறம் தானே, இந்த பேச்சு ஆரம்பிச்சிருக்கு. அப்போ இது யாருடைய வேலையா இருக்கும். நிச்சயமா முத்துப்பாண்டி வேலை தான் இது!

 

திருமுடி ஒன்றும் பேசாமல் யோசித்தபடியே நின்றான்.

 

பெரிய கருப்பன்: முனி ஆட்டத்தை நான் நேரில் பார்த்தவன். நானே இப்படி சொல்றேன்னா, நீ புரிஞ்சுக்கணும். முந்தி மாதிரி இல்ல. எனக்கு ரொம்ப வயசாயிடுச்சு. என் காலத்துக்கு அப்புறம், இந்த பிள்ளைகளுக்கு யாருமே இல்லாம போயிடும். பணம் இருந்தாலாவது கொஞ்சம் கவலை இல்லாம இருப்பாங்க. அதனால்தான் இவ்வளவு மெனக்கெடுறேன். இதுல யோசிக்கிறதுக்கு ஒண்ணுமே இல்ல. உடனடியா வாடகைக்கு யாராவது கிடைக்கிறாங்களான்னு பார்.

 

கேட் வாசலில் மோட்டார் பைக் சத்தம் கேட்க... பெரிய கருப்பனும், திருமுடியும் திரும்பிப் பார்த்தார்கள். முத்துப்பாண்டி மோட்டார் பைக்கில் இருந்து இறங்கினான்.

 

முகத்தில் எக்கச்சக்க கோபத்துடன் கேட் வாசலை திறந்து, உள்ளே நுழைந்தான். நடையிலேயே ஆக்ரோஷம் தெறித்தது. சிட் அவுட் படிகளில் ஏறாமல் முன்னாலேயே நின்றபடி,

 

"என்ன திருமுடி நேரடியாவும் சொன்னேன், வாத்தியார் மூலமாகவும் சொல்லி அனுப்பினேன். அவ்வளவு தூரம் சொல்லியும், இன்னும் வீட்ட வாடகைக்கு விடுறதாகவும், விற்க போறதாகவும் பேச்சு அடிபட்டுகிட்டே இருக்கே. அதான் ரெண்டுல ஒண்ணு என்னன்னு கேட்டுட்டு போலாம்னு வந்தேன்?"

 

பெரியகருப்பன்: என்ன பாத்து பேசுடா?! எதுக்கு சம்பந்தம் இல்லாத அவனை பார்த்து பேசுற?

 

முத்துப்பாண்டி: தாத்தா இன்னும் உங்க காலம் இன்னும் எவ்வளவு நாள்ன்னு தெரியாது. ஒழுங்கா எனக்கு ஒத்துழைங்க. நான் சொல்றத கேளுங்க. அந்த வீடு சும்மாதான் பூட்டி போட்டுருந்தீங்க. அதனால தான் நான் அதை பயன்படுத்தலாமேன்னு கேட்டேன். இப்ப நீங்க வீட்டை விக்க முடிவெடுத்ததுனால மறுபடியும் முனி நடமாட்டம்ன்னு பேச்சு அடிபடுது, பாத்தீங்களா?

 

பெரிய கருப்பன் திருமுடியை அர்த்தத்துடன் பார்த்தார்.

 

பெரிய கருப்பன்: டேய், நான் தெரியாம தான் கேட்கிறேன். நான் விக்க போறதுனால தான் முனி வந்ததாகவே இருக்கட்டும். உன்கிட்ட கொடுத்தால் மட்டும், முனி என்ன, உன்னை தொட்டில்ல போட்டு தாலாட்டுமா? இந்த முனி எப்படி வந்துச்சுன்னு கூட எனக்கு தெரியும். அதனால உன் வேலையை என்கிட்ட காமிக்காத. நான் உன் அப்பனுக்கு அப்பன்.

 

முத்துபாண்டி: தாத்தா வேண்டாம். வீணா என்ன கோபப்படுத்தாதீங்க? ஒழுங்கா எனக்கு மாத்தி எழுதி கொடுத்து, சாவியை கொடுத்துடுங்க...

 

பெரிய கருப்பன்: எதுக்காக உனக்கு இந்த வீடு தேவைப்படுது, நீ யாருக்கு கொடுக்கப் போற, உனக்கு இதுல எவ்வளவு லாபம் கிடைக்கும் எல்லாமே எனக்கு தெரியும். உன் அப்பன் சொத்தை தேவைக்கு அதிகமாகவே  எழுதி வாங்கிட்டே. இன்னும் ஏன் மத்தவங்களுக்கு கொடுத்தத அடிச்சு புடுங்க பார்க்கிறே?

 

முத்துப்பாண்டி வேட்டியை மடித்து கட்டி, சொடக்கு போட்டு," என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு.  ஒரு வாரம் தான் டைம். அதுக்குள்ள வீட்டை எனக்கு மாத்தி எழுதி தரணும். இல்லனா என்ன நடக்கும்னு என்னால சொல்ல முடியாது... திருமுடி எடுத்து சொல்லு", என்று சொல்லிவிட்டு கேட்டை நோக்கி நடந்தான். 

 

வெளியே சென்று, புல்லட்டை கிளப்பி, எக்கச்சக்கமான புகையை கக்கிவிட்டு நகர்ந்தான்.

 

திருமுடி: ஐயா, இவன் ரொம்ப மோசமானவன்னு உங்களுக்கே தெரியும். எப்படியும் ஏதாவது தொந்தரவு பண்ணிட்டே இருப்பான். பேசாம அவனுக்கு எழுதிக் கொடுத்திருங்களேன். எப்படியும் பணம் கொடுக்க தானே போறான்.

 

பெரிய கருப்பன் சற்று காட்டமாக,

 

"என்னடா பேசுற? இவன் வந்து மிரட்டுறாங்குறதுக்காக பயந்திர முடியுமா? நியாயம்னு ஒண்ணு இல்லை. ஊர் பஞ்சாயத்துன்னு ஒண்ணு இல்ல. அவன் என்ன பெருசா பணம் கொடுக்கப் போறான்? முழுசையும் அவன் அமுக்கிக்கிட்டு, சோள பொறி மாதிரி ஏதாவது பிச்சை போடுவான். அதை வச்சி என்ன பண்ண முடியும்? 

 

மூணு பொண்ணுங்க இருக்காங்களே! அவங்களுக்கு கல்யாணம் காட்சின்னு நடக்க வேண்டாம். நீ வாடகைக்கு ஆள் பாரு. மிச்சத்தை நான் பாத்துக்குறேன்."

 

சரி ஐயா என்று சொல்லிவிட்டு, திருமுடி கிளம்பி சென்றான்.

 

பெரிய கருப்பன் தைரியமாக பேசிவிட்டாரே தவிர, முத்துப்பாண்டி என்னென்ன செய்யப் போகிறானோ என்று நினைத்து அவருக்கு கவலையாக இருந்தது.

 

நினைத்ததை நிறைவேற்றும் கூடங்குளம் பத்ரகாளியம்மா, எந்தப் பிரச்சனையும் இல்லாம காப்பாற்று தாயே!!!

 

ஹா ஹா ஹா... 

 

யாரோ பரிகாசமாக சிரிக்கும் சத்தம்.

 

யாருடா அது சிரிப்பது என்று பெரிய கருப்பன் சுற்றிலும் பார்க்க...

 

காவண வீட்டிலிருந்து தான் கேட்கிறது.

 

பெரிய கருப்பன் நெஞ்சுக்குள் இனம் புரியாத பயம் ஒன்று கவ்வி பிடித்தது.

 

தொடரும்

 

உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது

https://kavichandranovels.com/community/dennis-jegans-novels-comments-and-discussions/

 


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Trusted Member Author
Joined: 1 month ago
Posts: 41
Topic starter  
கருப்பு 13
 
என்ன இது பகல் வேளையில், அதுவும் காவண வீட்டுக்குள் இருந்து ஒரு முரட்டுத்தனமான சிரிப்பு சத்தம்!!!
 
துண்டை எடுத்து தோளில் போட்டு கொண்டு, சிட்டவுட்டை விட்டு இறங்கி, காவண வீட்டுக்கு செல்லும் பாதையில் குறுக்காக நடந்தார். 20 வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவங்கள் பிளாஷ்பேக்காக ஓடின.
 
சேச்சே!!! அப்படில்லாம் இருக்காது.
 
அப்பல்லாம் முனி ஓட்டம் இருந்த காலகட்டம். இப்பதான்  அப்படில்லாம் எதுவுமே இல்லையே!!! மந்திர கட்டு வேறு போட்டாச்சு, எல்லாம் முத்துப்பாண்டி பயலோட வேலை. தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டார்
 
செடி வேலியை கடந்து காவண வீட்டுக்குள் நுழைந்தார். வீடு வழக்கம் போல் அவரை உர் ரென்று பார்த்துக் கொண்டிருந்தது
 
எங்கிருந்து சிரிப்பு சத்தம் கேட்டது?
 
வீட்டுக் கதவு பூட்டியிருக்கிறது. வீட்டுக்குள் இருந்து சத்தம் கேட்க வாய்ப்பில்லை. வீட்டுக்கு பின்பக்கமாக சென்று பார்த்தார். பின்பக்க புதர்களை எல்லாம் அகற்றி இருந்ததால், சுத்தமாக, விஸ்தாரமாக தெரிந்தது.
 
யாருமே இல்லை.
 
சிரிப்பு சத்தம் கேட்டதா? அல்லது மனப்பிரமயா? யோசித்தபடியே வீட்டுக்கு முன்பக்கமாக வந்தார்.
 
காம்பவுண்டை தாண்டி வெளியே சென்று எட்டிப் பார்க்க...
 
சடை சாமி நின்றிருந்தான்.
அவரை பார்த்து கறை பற்களுடன் சிரித்தான். சடை சடையாக முடி, கிழிந்து கந்தலாகி போன அவனுடைய உடை மேலும் கந்தலாகி இருந்தது.
 
இவன் தான் சிரித்தானா???
 
அட பரதேசி பயலே!!! ஒரு நிமிஷம் பயந்தே போனேன்.
 
பெரிய வீதி வேப்ப மரத்தடியில் தானே இவன் இருப்பான், எதற்கு காவண வீட்டின் முன்னால் வந்து நிற்கிறான்?
 
பெரிய கருப்பன்: என்ன சாமி நீ தான் சிரிச்சியா? என்ன இந்த பக்கம், சாப்டியா?
 
யாருக்கும், எதற்கும், எந்த கேள்விக்கும் அவன் இதுவரைக்கும் பதில் சொன்னதே கிடையாது. அவன் பூர்வீகம் என்ன? எங்கிருந்து வந்தான் என்று யாருக்குமே தெரியாது? வேப்ப மரத்தடியில் தான் அவன் ஜாகை.
 
அவன் எதுவுமே பதில் சொல்லவில்லை. நம் வீட்டில் இருக்கும் நாய், பூனைகள் திடீரென்று ஒன்றுமே இல்லாத சூனியத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருப்பது போல், காவண வீட்டை வெறித்தான்.
 
பெரிய கருப்பன்: இப்படி கிழிஞ்ச சட்டை போட்டுக்கிட்டு திரியறியே! நான் என்னுடைய பழைய சட்டை தர்றேன். அதை போட்டுக்கோ.
 
அவன் பதில் சொல்லாமல், வாயில் ஏதோ முணுமுணுத்த படி, கையில் வைத்திருந்த கம்பை தரையில் தட்டிக் கொண்டு திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
 
அவன் நடவடிக்கைகள் பெரிய கருப்பனுக்கு ஆச்சரியமாக இருந்தது.  வேப்பமரத்தடியில் திருவோடு மாதிரி பெரிய சைஸ் சட்டி ஒன்று கிடக்கும். ஊர் மக்கள் பரிதாபப்பட்டு அவனுக்கு அதில் சாப்பாடு போடுவார்கள். அவனாக தேடி யார் வீட்டுக்கும் செல்வதில்லை. அப்படியே போவதென்றாலும், இருளாயி கோவிலைத் தவிர வேறு எங்குமே போவதில்லை.
 
கொஞ்ச நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அந்த தெருவின் முகப்பில் படுத்திருந்த சிக்னி அவரைப் பார்த்ததும் துள்ளி குதித்து ஓடி வந்தது. தன் சொர சொரப்பான நாவால் காலை வருடி தன் அன்பை வெளிப்படுத்தியது.  இரண்டு முன்னங்கால்களாலும் அவரது கைகளை பற்றி பொய்யாய் கடித்து விளையாடியது. 
 
"டேய் விடுடா", என்று பெரிய கருப்பன் கத்தினார்.
 
"இப்போ உனக்கு உடம்பு சரி ஆயிடுச்சா?"
 
ஒரு வருடத்திற்கு முன்னால், குட்டியாக தெருக்களை சுற்றி திரிந்து, கிடைத்ததை சாப்பிட்டுக் கொண்டு, அனாதை தெரு நாயாக வாழ்ந்து கொண்டிருந்த சிக்னி  வாழ்க்கையில், ஒரு திருப்பம் நேர்ந்தது.
 
கார்த்திகாவின் கண்ணில் பட்டது தான் அதன் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.
 
வேளை தவறாமல் இதற்கு சோறு வைத்து, கார்த்திகா தான் கவனித்துக் கொண்டாள். சிக்னி பெயர் காரணம் கேட்டால் அவளுக்கு தெரியாது. ஏதோ வாயில் வந்ததை வைத்து விட்டாள். ஸ்கூலுக்கு போகும்போது கூட ஏதோ ஒரு நம்பிக்கையான மனிதரிடம் சொல்வது போல், தாத்தாவிடம் சிக்னியை பத்திரமா பாத்துக்குங்க என்று சொல்லிவிட்டு தான் போவாள். இப்போது சிக்னி பெரிதாக வளர்ந்து விட்டது, அதனால் அதை கவனிக்க தேவையில்லை என்பதால் தாத்தாவிடம் சொல்வதில்லை.
 
கார்த்திகா சிக்னியை தத்தெடுத்து கொண்டது போல், சிக்னி மேட்டு தெருவையே தத்தெடுத்து  கொண்டது. மேட்டு வீட்டுக்கு முன்னாலையே தெருவில் படுத்து கிடக்கும். வேறு தெரு நாய்களை அந்த தெரு பக்கம் சிக்னி வரவே விடாது. கார்த்திகா ஸ்கூலுக்கு போகும்போது பஸ் ஸ்டாப் வரை கொண்டு போய் விட்டுவிட்டு திரும்பி வரும். அதை ஏமாற்றிவிட்டு அவளால் ஒரு அடி கூட நகர முடியாது. அவள் ஆடையை கவ்வி பிடித்து விடும்.
 
கடந்த எபிசோடுகளில் சிக்னி வராததற்கு காரணம், கடந்த நான்கைந்து நாட்களாக உடம்பு சரியில்லாமல் ஏனோ சோர்வாக படுத்தே கிடந்தது. கார்த்திகாவும் பால் சோறு, சிக்கன் வேக வைத்த தண்ணீர், எல்லாம் கொடுத்து பார்த்தாள். அசிரத்தையாக சாப்பிட்டு படுத்தே கிடந்தது. இன்றைக்கு தான் எழும்பி ஓடி வந்திருக்கிறது. 
 
காவண வீட்டைப் பற்றி பேச்சு ஆரம்பித்ததற்கு பிறகுதான் திடீரென்று ஒரு சில விஷயங்கள் நடக்க ஆரம்பித்திருக்கின்றன. பெரிய கருப்பனுக்கு லேசான குழப்பம். நாம் போகும் பாதை சரிதானா? 
 
நமக்கும் வயசாகிக்கொண்டே போகிறது.  என்னை நம்பி மூன்று பெண் குழந்தைகளை விட்டுவிட்டு மகராசனாய் போய் சேர்ந்து விட்டார்கள். பணம் வருவதற்கு வேறு வழியே இல்லை. காவண வீட்டை நல்ல தொகைக்கு விற்று தான் அவர்களை செட்டில் பண்ண வேண்டும். நல்ல தொகைக்கு விற்க வேண்டும் என்றால், எந்த பிரச்சினையும் இல்லாத வீடு என்று நிரூபிக்க வேண்டும் எந்த பிரச்சினையும் இல்லாத வீடு என்று நிரூபிக்க வேண்டும் என்றால், யாரையாவது வாடகைக்கு குடியமர்த்த வேண்டும்.  நான் போகும் பாதை சரிதான்.
 
அவர் முகத்தில் குழப்ப ரேகைகள் மறைந்து, முடிவு எடுத்ததற்கு உண்டான தீர்க்கம் தென்பட்டது.
 
குழம்பி கொண்டிருப்பதற்கு பதிலாக, காவண வீட்டுக்கு இன்னொரு முறை மந்திர கட்டு போட்டுற வேண்டியது.
 
மாலை 5 மணி
 
நாகர்கோயில் கோர்ட் ரோட்டில் ஒரு லீகல் ஃபர்மில் ஆபீஸ் அசிஸ்டண்டாக  வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் ஹேமா. சுற்றிலும் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களை ஒரு முறை பார்த்தாள்.
 
அவரவர் வேலையில் பிசியாக இருந்தார்கள். அடுத்தவர்களை பற்றி கவலைப்படுபடுவதற்கு இப்போது யாருக்கு நேரம் இருக்கிறது? 
 
வழக்கமாக சோர்வாக இருப்பவளுக்கு, இப்போது புதிதாக இறக்கைகள் முளைத்தது போலிருந்தது.
 
காலையில் அகல்யா கால் பண்ணும் போதே, போயிருக்க வேண்டும். ஆனால் நிறைய லீவு போட்டு விட்டதால், ஆபீஸில் நிச்சயமாக லீவு தர மாட்டார்கள்.
 
"லீவு போட்டுட்டு வாடி. உன் வீட்டுக்கு கூட்டிட்டு போ. இன்னைக்கு பூரா உன் கூடத்தான் இருப்பேன்.."
 
"ஐயையோ லீவு தர மாட்டாங்கடி... அஞ்சு மணிக்கு தான் விடுவாங்க. நான் என்ன பண்ணுவேன்?" என்றாள் ஹேமா அழும் குரலில்.
 
அகல்யா: சரி ஓகே ஓகே... அழாத. அப்போ ஒண்ணு பண்றேன். ரொம்ப நாளா ஒரு கம்பெனி இன்டர்வியூக்கு போகணும்னு நினைச்சுட்டு இருந்தேன். அங்க இன்டர்வியூக்கு போயிட்டு அஞ்சு மணிக்கு கரெக்டா வேப்பமூடு ஜங்ஷன் வந்துடறேன். நீ வந்துரு."
 
மணி ஐந்தாகிவிட்டது. அகல்யாவை பார்க்க போகிறோம். மனசு விட்டு எல்லாத்தையும் பேசப்போகிறோம் என்று நினைக்கும் போதே, ஹேமாவுக்கு உற்சாகமாக இருந்தது.
வேப்பமூடு ஜங்ஷனில் தீப்பிடித்தது போல் வாகனங்கள் பரபரப்பாக சென்று கொண்டிருந்தன. மகா நெரிசலான சாலை.
இரண்டு சக்கர வாகனங்கள், இடைவெளிகளில் புகுந்த ஆட்டோக்கள், மினிபஸ் என முச்சுத் திணறியது.
ரோட்டோரத்தில் வரிசையாக கடைகள். பணக்கார கடைகள், மத்திய வர்க்கக் கடைகள், ஷட்டர் போட்டு மூடிய கடைகள், மூடாத கடைகள். வேப்பமூடு ஜங்ஷனுக்கு எதிரே இருந்த பார்க்கை வாகன சத்தங்கள் தீண்டினாலும், முடிந்தவரை புத்தம் சரணம் கச்சாமி என்றிருந்தது. உள்ளே இருந்த மரங்களில் பறவைகளின் கீச்சொலிகள்.
 
பார்க்கின் கேட்டுக்கு வெளியே இருவரும் நின்றிருந்தார்கள்.
 
"என்ன ஹேம்ஸ் எதுவும் பேச மாட்டேங்குற?"
 
அகல்யா அருகில் நின்றிருந்த ஹேமா, ஏனோ அந்நியமாக உணர்ந்தாள். கடந்த ஏழெட்டு மாதங்களில் இரண்டு முறை தான் அகல்யாவை பார்க்க முடிந்தது. ஸ்டீபனுக்கு ஆபீஸில் எவளோ ஒருத்தியுடன் தொடர்பு ஏற்பட்டு, ஹேமாவுக்கு விஷயம் தெரிந்ததும் பூகம்பம் வெடித்தது. இரண்டு பேரையும் வைத்துக் கொள்கிறேன் என்று ஸ்டீபன் சமாதான உடன்படிக்கை செய்தான். இரண்டில் ஒன்றாக இருக்க விருப்பம் இல்லாமல், ஹேமா டைவர்ஸ் கேட்டுக் கோர்ட்டு படி ஏறி இருந்தாள்.
 
ஸ்டீபனின் நம்பிக்கை துரோகத்தை கேட்டதும், அகல்யா துடித்துப் போனாள். அவனிடம் நியாயம் கேட்டே தீருவேன் என்று அகல்யா சொல்ல, ஹேமா வேண்டாம் என்று தடுத்தாள்.
 
"வேண்டாம் அகல். நாம அவங்க மேல வச்சிருக்கிற நம்பிக்கையை காப்பாற்ற முடியாதவங்க கிட்டல்லாம் வரிஞ்சி கட்டிட்டு போய், நின்னு பேசி, நியாயம் கேட்டு என்ன பிரயோஜனம்? உன்னுடைய நம்பிக்கையை காப்பாற்றாத குமார் கிட்ட நீ எப்படி பேசலையோ, அதே மாதிரி தான் இதுவும். ஸ்டீபன் கூட எனக்கு பேசவே பிடிக்கவில்லை. இனிமே எனக்கும் காவ்யாவுக்கும் அவன் தேவையில்லை. விட்டுரு."
 
ஹேங்க் என்று ஆரன் அடித்துக் கொண்டே சென்ற பஸ் ஹேமாவின் அவசர ஃப்ளாஷ் பேக்கை கலைத்தது.
 
காற்றில் தலை கலையாமல் உதிரி முடிகளை கையால் அடக்கி வைத்த படி 
"ஏன்னு தெரியல, முந்தைய மாதிரி பேச முடியல...", என்றாள். மெரூன் நிற சேலையும், அதே நிற ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள்.
 
"ஏதோ கொஞ்ச நாள் பாக்காத உடனே இப்படி சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்... பழைய மாதிரி தினமும் பேசாததால். உனக்கு அப்படி தோணுதுன்னு நினைக்கிறேன்.. நீ ஆசைப்பட்டு பண்ணிக்கிட்ட கல்யாணம் ஃபெயிலியர் ஆன உடனே... எல்லாமே உனக்கு அந்நியமா போச்சா? அதெல்லாம் ஒன்னும் கிடையாது. நான் உன்னுடைய பழைய அகல் தான். நீ என்னுடைய அதே ஹேம்ஸ் தான். என்னடி தொப்பை லைட்டா வந்துருச்சி போல..." என்று அவள் வயிற்றில் செல்லமாக குத்தினாள்.
 
ஹேமா கொஞ்சமாக மேடிட்டு இருந்த வயிற்றை உள்வாங்கி கொண்டு, மெல்ல சிரித்தாள்.
 
"அதெல்லாம் ஒன்னுமில்ல. சும்மா லைட்டா தான்.."
 
சுற்றிலும் பஸ்க்காக காத்திருப்பவர்கள், பஸ் ஸ்டாண்ட் நோக்கி செல்பவர்கள் என்று பரபரப்பாக மக்கள் இயங்கிக் கொண்டிருந்தனர்.
 
ஹேமா மாநிறம். பெரிய பேரழகி கிடையாது. பக்கத்து வீட்டு பெண் போல் சாதாரண தோற்றம், ஆனால் முகத்தில் ஏதோ ஒரு வசீகரம். நீளமான கூந்தல். கொஞ்சம் சதை பிடிப்பான தேகம். அகல்யாவை ஏக்கமாக பார்த்தபடி,
 
"அகல் நீ முன்னை விட சிவப்பா, இன்னும் அழகா இருக்க. நீ ஏண்டி பொம்பளையா பிறந்து தொலைச்ச??..."
 
"ஏன்?"
 
"ஆம்பளையா பிறந்திருந்தா உன்னையே கல்யாணம் பண்ணிருப்பேனே, எனக்கு இவ்ளோ பிரச்சனை வந்திருக்காது. நீ என்னை நல்ல கவனிச்சுருப்ப. எப்பவுமே இணை பிரியாம இருந்திருக்கலாம்."
 
"ஒண்ணா சேர்ந்திருந்தா தான் இணை பிரியாம இருக்கிறதா அர்த்தமா? இப்ப மட்டும் நாம எப்படி இருக்கிறோம்? உனக்கு ஏதாவது பிரச்சனைனா நான் வரப்போறேன். எனக்கு ஏதாவது பிரச்சனைனா நீ வரப்போற. "
 
"இவ்வளவு நாள்ல நான் உனக்கு போன் பண்ணலன்னா நீ எனக்கு ஏன் பண்ணல?  சொல்லாம கொள்ளாம ஸ்டீபனை கல்யாணம் பண்ணிட்டு போனதில் உனக்கும் கொஞ்சம் வருத்தம். அப்படித்தானே? அதனாலதான் நீயும் என்கிட்ட சரியா பேசுறதில்லை. தனியா ரொம்ப கஷ்டப்பட்டுடேண்டி.. எனக்கு தான் யாரும் இல்லையே."
 
ஹேமா கண்கள் நீர் கோர்த்துக்கொள்ள,
 
அகல்யா ஆறுதலாக அவள் கையைப் பிடித்து இறுக்கினாள். அந்த இறுக்கத்தில் "நான் இருக்கேன்டி", என்ற அன்பு, ஆதரவு, அரவணைப்பு எல்லாம் தெரிந்தது.
 
"என் செல்லமே... அழாதடி. கண்ண தொடைச்சிக்கோ.."
 
கண்களில் நீர் திரையிட்டு இருக்க ஹேமா அகல்யாவை பார்த்தாள். பனி படலத்தின் வழியாக தெரியும் காட்சி போல் அகல்யா தெரிந்தாள்.
 
தனியாக இருந்திருந்தால், இந்நேரம் ஆரத்தழுவி ஒன்றாக இணைந்து இருப்பார்கள். அகல்யா ஹேமாவை அழ விட்டிருக்கவே மாட்டாள். மக்கள் கூட்டத்துக்கு நடுவே இருப்பதால், அன்பை வெளிக்காட்டிக் கொள்ள முடியவில்லை.
 
அகல்யா அவள் கையில் செல்லமாக தட்டி கொடுத்தாள்.
 
"ஸ்டீபனை நீ கல்யாணம் பண்ணிட்டு போனப்ப, ஆரம்பத்தில் கொஞ்சம் வருத்தம் இருந்தது உண்மைதான். அதன் பிறகு உன் காதல், உன் வாழ்க்கை, உன் முடிவு, எல்லாத்தையும் புரிஞ்சுகிட்டேன். இப்ப எனக்கு வேறு எந்த வருத்தமும் இல்லை. உன் வாழ்க்கை இப்படி ஆயிருச்சேன்கிற வருத்தம் மட்டும் தான். உனக்கு வேற யாரும் இல்லைன்னு மட்டும் தயவுசெய்து நினைக்காதே! நான் இருக்கேன், கடைசி வரைக்கும் இருப்பேன். எப்படி என் தங்கச்சிங்களுக்காக கல்யாணம் முக்கியம் இல்லன்னு  நினைக்கிறேனோ, அதே மாதிரி என் ஹேமான்னு வரும்போது எதுவுமே எனக்கு முக்கியமில்லை.."
 
ஹேமாவின் கண்களில் தேங்கி நின்ற அன்பு மொத்தமாக, அவசரமாக, வெளிப்பட்டது. 
 
இப்போது சுற்றியிருந்த கூட்டம் ஒரு பொருட்டே இல்லை என்று அவளுக்கு தோன்ற,
 
உதடுகளில் வெளிப்பட்ட விம்மல்களுடன் சென்று,
 
அகல்யாவை அணைத்துக் கொண்டாள்.
 
தொடரும்
 
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது
 

   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Trusted Member Author
Joined: 1 month ago
Posts: 41
Topic starter  

கருப்பு 14

 

அவர்களைக் கடந்து சென்ற ஒரு சில பேர் விசித்திரமாக பார்த்தபடி சென்றார்கள். வீட்டுக்கு வெளியே வந்தால், பெண்களை இயல்பாகவே இருக்க விடாத கூட்டத்தை சேர்ந்தவர்கள்.

 

சூழ்நிலையை உணர்ந்து இருவரும் சுதாரிக்க,

 

ஹேமா கண்களை துடைத்துக் கொண்டாள்.

 

அகல்யா: இப்படியே ரோட்ல நின்னு பேசி அனுப்பி விடுற மாதிரி ஐடியாவா? வீட்டுக்கு கூட்டிட்டு போக மாட்டியா?"

 

"ச்சே என்னடி சொல்ற?   கிரஷ்ல காவியாவை விட்டுருக்கேன். செட்டிகுளம் போயி அவள கூட்டிக்கிட்டு அதன் பிறகு வீட்டுக்கு போகலாம்..."

 

"பாப்பாவை மூணு மாசத்துக்கு முன்னால பார்த்தது.... நவம்பர் வந்தா தானே நாலு வருஷம் முடியுது?"

 

"ஆமா...."

 

அகல்யா: இப்ப நீ புதுசா குடி இருக்கிற வீட்ல புருஷன் எங்கன்னு கேட்டுருப்பாங்களே என்ன சொன்ன?

 

ஹேமா: ஹஸ்பண்ட் துபாய்ல இருக்குறாரு, ரெண்டு மூணு வருஷத்துக்கு ஒரு தடவை தான் வருவாருன்னு சொன்னேன். வீட்டுக்காரங்களுக்காக மட்டுமல்ல, ஏரியால இருக்குற பசங்க தொந்தரவுலே இருந்தும் தப்பிக்கணுமே.

 

அகல்யா: கரெக்ட் தான்

 

ஹேமா: பேசாம நம்ம ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்த காலத்துக்கு, சின்ன வயசுக்கே, ரஸ்தா காட்டுக்கே திரும்பி போயிரலாமன்னு அடிக்கடி எனக்கு தோணும். எந்த கவலையும்  இல்லாத காலம். ஜோடி போட்டு ஊரையே சுத்தி வந்தோம், பட்டான்பூச்சி புடிச்சோம். கடற்கரையில் உருண்டோம். கள்ளன் போலீஸ் விளையாடினோம். பாவாடை சட்டை அழுக்கானதை பற்றி கவலைப்படவே இல்லை. மேட்டு தெரு, முள்ளு காடு, தென்னந்தோப்பு, இருளாயி கோயில்... எல்லாத்தையும் ரொம்ப மிஸ் பண்றேன்.

 

பேசிக் கொண்டிருக்கும் போதே பால்ய பருவத்துக்கு சென்றிருந்தாள்.  நிகழ்காலத்தில் தோற்றுப் போனவர்கள், கடந்த காலத்தை  நினைத்து ஏங்குவது இயல்பு தானே.

 

அகல்யா: சரி ஓகே ஓகே.. எல்லாம் பழைய கதை. நிகழ்காலத்துக்கு வா. இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல. அதே மாதிரி இப்பவும் இருக்கலாம். மனசு தான் வேணும்.

 

ஹேமா அகல்யாவை கேள்விக்குறியுடன் பார்க்க,

 

அகல்யா: உண்மையைத்தான் சொல்றேன். எதை பற்றியும் கவலைப்படாமல் விட்டு விடுதலையாகி சிட்டுக்குருவியை போலிருப்பேன்னு நீ நினைச்சுக்கோ. உன்னை அழுத்தும் பாரங்களை தூக்கி தூர ஏறி. சந்தோஷமாக இருக்கலாம்.

 

ஹேமா முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம்.

 

"உன்னை இன்னைக்கு பார்த்ததுனால, உன் கூட பேசினதனால, என் மனசுக்குள்ள இருந்த பாரம் எல்லாம் குறைஞ்ச மாதிரி இருக்கு.."

 

"சரி அத விடு. உங்க ஆபீஸ்ல நிறைய அழகான பசங்க வேலை பாக்குறாங்க போல... அதனால தான் உனக்கு என் ஞாபகம் இல்லாம போயிருச்சுன்னு நினைச்சிருந்தேன்."

 

"ச்சிய் போடி.."

 

அகல்யாவும் ஹேமாவும் சாலையோரம் நடக்க ஆரம்பித்தார்கள். இருவருக்கும் பழைய குதூகலம் திரும்பியிருந்தது.

 

அதே நேரம்,

 

ரஸ்தா காடு,

முத்துப்பாண்டி வீடு

 

சதை உருண்டைகளை உருட்டி வைத்தது போல், புஷ்டியாக, பளபளப்பான சேலையில் ராஜலட்சுமி, வீட்டுக்கு பின்பக்கமாக தேங்காய் உரித்து கொண்டிருந்த வேலையாளிடம் அடுத்தது என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குள் நுழைந்தாள்.

 

பணக்காரர்களின் வீடு எப்படி இருக்கும் என்று பல கதைகளில் வர்ணித்து இருப்பார்கள். அதனால் வர்ணித்து ஒரு பேராவை வீணாக்க தேவையில்லை.

 

முத்துப்பாண்டி ரூமை நோக்கி சென்றாள். அவன் எங்கேயோ கிளம்புவதற்கு தயாராகிக் கொண்டிருந்தான்.

 

"அந்த முனி வீடு பிரச்சனை என்னாச்சு??:

 

"பேசிட்டு இருக்கேன். சீக்கிரம் முடிஞ்சிடும் பார்ட்டி கிட்ட பேசி அட்வான்ஸ் வாங்கியாச்சு இந்த கழுதைங்க தான் முரண்டு பிடிச்சிட்டு இருக்கு"

 

"அவளுங்களுக்கு என்ன தெரியும்? எல்லாம் உங்க தாத்தா பண்ற வேலை. முனி வீடு பிரச்சனை இருக்கிறதுனால தானே, அவங்க கிட்ட தள்ளி விட்டோம். எனக்கெனவோ திரும்ப அதை வாங்கணும்னு நினைக்கிறது சரியில்லைன்னு தோணுது"

 

"அட ஏம்மா... நீயும் மத்தவங்க மாதிரி பேசிக்கிட்டு, முனி வீட்டை முடித்துக் கொடுத்து, மத்த நிலங்களையும் வளச்சி கொடுத்தா, சிமெண்ட் கம்பெனி காரங்க நம்மள சிறப்பா கவனிக்கிறேனு சொல்லிருக்காங்க. ஏற்கனவே தேவையில்லாத வேலை எல்லாம் செஞ்சு, பாதி சொத்தை இழந்துட்டேன். மீதியையாச்சும் காப்பாத்தணும். இழந்ததை மீட்கணும். அடுத்த எம்எல்ஏ எலக்சன்ல நிக்குறதுக்கு பண உதவி செய்கிறேன்னு சிமெண்ட் கம்பெனிக்காரங்க சொல்லிருக்காங்க. அப்புறம் வேற என்ன வேணும்?"

 

"எல்லாம் சரிதான், ஆனா....", என்று அவன் இழுத்துக் கொண்டிருக்கும் போது முத்து பாண்டியின் போன் அடித்தது.

 

போனை எடுத்து,

 

"ஹலோ", என்றவன் மறுமுனையில் பேசியவர் சொன்ன தகவலை கேட்டு முகம் வெளுத்துப் போனது.

 

"அப்படியா? எப்ப, எங்க நடந்துச்சு?"

 

"....................."

 

"சரி சரி நான் பாக்குறேன்", என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.

 

அவன் முகம் போகிற போக்கை பார்த்து, ராஜலட்சுமி என்னவென்று விசாரிக்க,

 

"சிமெண்ட் கம்பெனி சார்பில், நம்ம ஊர்ல செயல்பட்டுக்கிட்டு இருந்த மேனேஜரும், அவர் கூட வந்த இன்னொரு ஆபீஸரும், நேத்து ராத்திரி நம்ம ஊரு விலக்குல ஆக்சிடெண்டில் அடிபட்டு ரொம்ப சீரியசான நிலைமையில் ஹாஸ்பிடலில் இருக்கிறதா போன் வந்துச்சு..."

 

ராஜலட்சுமி நெஞ்சை பிடித்துக் கொண்டு, " என்னப்பா சொல்ற?" என்று அதிர்ந்தாள்.

 

முத்துப்பாண்டி எதுவும் பேசாமல் யோசித்துக் கொண்டிருந்தான்.

 

ராஜலட்சுமி: இந்த ரெண்டு பேரும் தானே முனி வீட்டை விலை பேசுறதுக்காக அன்னைக்கு வந்தாங்க.

ஒருவேளை அந்த முனி வேலையை காட்டிருக்குமோ?

 

முத்துப்பாண்டி: என்னமா பேசுறீங்க? அப்படின்னா என்னத்தானே முதலில் அடிச்சிருக்கணும். இது ஏதோ ஆக்சிடென்ட். எதேச்சையா நடந்த விஷயம்.

 

ராஜலட்சுமி: உன்னை முனி அடிக்காது. முனியினால் எந்த பிரச்சினையும் வரக்கூடாதுன்ன்னு அந்த வீட்டை நேர்ந்து விட்டு பிரச்சினை வரும்போது, பூஜை பண்ணி, இரட்சையை உன் இடுப்பு அருணாகயிறில் கட்டினோம். கயிற்றை நீ கழட்டல இல்ல?

 

முத்துப்பாண்டி தன்னிச்சையாக அருணாகயிற்றை தொட்டுப் பார்த்தான். அருணாகயிறு இருந்தது.

 

"அம்மா எனக்கு இதுலல்லாம் நம்பிக்கை இல்லை. அந்த பொட்ட கழுதைகளை அடிச்சு விரட்டி, அந்த முனி வீட்டை வாங்கி சிமெண்ட் கம்பெனி காரங்களுக்கு எழுதிக் கொடுப்பேன்.  வெளியே ஒரு வேலை இருக்கு. நான் கிளம்புறேன்", என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

 

என்ன நடக்க போகுதோ என்று நெஞ்சு பதைப்பதைக்க, ராஜலட்சுமி அவன் போவதை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

தொடரும்

உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது

https://kavichandranovels.com/community/dennis-jegans-novels-comments-and-discussions/


   
ReplyQuote
Page 1 / 2

You cannot copy content of this page