All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நெஞ்சம் 17

 

VSV 35 – நெஞ்சமதில் தஞ்சமவள்
(@vsv35)
Member Author
Joined: 3 months ago
Posts: 23
Topic starter  

அத்தியாயம் 17

ஆதி என்ற ஒருவனைப் பற்றி தன் மகளிடம் உதயன் பேசிக் கொண்டிருக்கவே பெற்றோர் இருவரும் புரியாது தான் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். எதற்காக தன் மகள் அவனுக்காக இப்படி பித்து பிடித்தது போன்று இருக்கிறாள் அவனுக்கு விபத்து என்றால் தன் மகளுக்கு என்ன என்ற எண்ணத்தில் புரியாது உதயனிடம் கேட்டனர்.

"யாருப்பா ஆதி ?" என்றுக் கேட்கவே,

"அம்மா ஆதி என்னோட பெஸ்ட் பிரெண்ட், எனக்கு பிரசாத் எப்படியோ அதே மாதிரி தான் ஆதி. அதுவும் இல்லாம நாங்க ரெண்டு பேருமே சொந்தக்காரங்க. ஆதிக்கு நம்ம யுகனிகாவை ரொம்ப புடிச்சிருக்கு. அவன் இவளை காதலிக்கிறான். ஆனா இவளுக்கு பிடிக்கலைன்னு சொன்னதுனால நானும் அவன் கிட்ட இனிமே ஃபாலோ பண்ணாதே, அவ கிட்ட இருந்து தள்ளியே இரு அப்படின்னு சொல்லிட்டேன். அவனும் சரின்னு விலகி போயிட்டான். ஆனா சடன்னா எப்படியோ இன்னைக்கு இவங்க ரெண்டு பேரும் மீட் பண்ணும் போது அவனுக்கு ஆக்சிடென்ட் ஆயிட்டு. இப்ப அவனை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய் இருக்காங்க. எனக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் தகவல் வந்தது. அந்த இடத்துல நம்ம யுகனிகா இருந்திருக்கா, அதனால தான் அவ இப்படி பிரம்ம புடிச்ச மாதிரி இருக்கா " என்று நடந்த அனைத்தையும் சுருக்கமாக அவளின் பெற்றோரிடம் கூறினான்.

யாரோ ஒருவனுக்காக தன் மகள் இப்படி அமர்ந்திருக்கிறால் என்றால் தன் மகளுக்கு அவனின் மீது நேசம் இருக்கிறதா என்ன ?என்று நினைத்தனர்.

"யுகனிகா நீ இப்படியே இருந்தா எப்படி போய் டிரஸ் சேஞ்ச் பண்ணு அவனுக்கு ஒன்னும் ஆகாது " என ஆறுதல் கூற,

"அவனுக்கு எதுவும் ஆகக்கூடாது அந்த நிமிஷம் என் கண்ணுக்கு அப்படியே பிரசாத் தான் தெரிஞ்சாங்க. என் கண்ணு முன்னாடி அதே மாதிரி தான் பிரசாத்துக்கு ஆக்சிடென்ட் ஆச்சு. ஆனா கடைசி அவங்க என்ன விட்டுட்டு போயிட்டாங்க. அதே மாதிரி தான் இப்பவும். எனக்கு பயமா இருக்கு நான் ஆரம்பத்திலேயே அவன் கிட்ட சொன்னேன், என் பின்னாடி வராத நீ என் பின்னாடி வந்தாலே உனக்கு பிரச்சனை தான் வரும். நான் ஒரு ராசி இல்லாதவ, அதனால தான் இன்னைக்கு என்னால அவனுக்கு விபத்து நடந்தது. இல்லன்னா இந்த நேரம் நல்லாத்தான் இருந்திருப்பான் " என்று குற்ற உணர்வில் தன்னையே நொந்து புலம்பிக் கொண்டிருந்தாள்.

ஏற்கனவே பிரசாத் இறந்த செய்தி கேட்டு உறவுக்காரர்கள் சிலர் வந்த போது இவளால் தான் அவன் இறந்து விட்டான். இவள் ஒரு ராசி இல்லாதவள் என்று பல முறை இவளின் மனதில் ஆணி வேராக  பதியும் அளவுக்கு கூறி இருந்தனர். அதனாலே தன்னால் உறவினர் யாவரும் பாதிக்கப்படக்கூடாது என்று நினைப்பில் தான் பெற்றோரை தவிர மற்ற அனைவரிடமிருந்து தள்ளியே இருந்தாள்.

இப்பொழுது ஆதி தன்னோடு நெருக்கமாக வருவது அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஏன் இந்த சில நாட்கள் ஆதியே தனக்கு குறுஞ்செய்தி அனுப்பாமலும் தன்னை காணாமல் இருக்கும் போதெல்லாம் அவள் அறியாது அவளின் மனது எதுவும் குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறானா ? என்று உள்ளே சென்று தேடிப் பார்த்தது.

செல்லும் வழியெங்கும் அவன் தென்படுகிறானா என்று அவளின் மனது ஆதியை தேடத்தான் செய்தது. ஆனால் அவளின் உள்ளமோ இது தவறு வேண்டாம் எனக் கூறிய அவனை ஒதுக்கி வைத்துக் கொண்டே இருந்தது. இன்று நேராக அவனைக் கண்ட நொடி அவன் எப்படி நின்றானோ அதே நிலையில் தான் விழிகளோடு விழிகள் சந்தித்துக் கொண்டு நின்றாள் யுகனிகா.

தன் கண் முன்னே அந்த லாரி அவனை ஏற்றி தூக்கி அடித்து கீழே விழுந்து உதிரம் கொட்ட உயிருக்கு துடித்தவன் இன்னும் நினைவில் நீங்காது காட்சி கொடுத்தான். அவனுக்குள் ஏனோ பிரசாத் புகுந்து கொண்டதுப் போல் தோன்றியது. அவளை பொறுத்தவரை அது ஆதியில்லை பிரசாத். இப்பொழுது கூட ஆதி என்று தன் மனதில் பதிய வைத்தாலும் பிரசாத் என்று தான் கூறுவாள்.

"சரி நான் பார்த்துக்கிறேன். நான் ஹாஸ்பிட்டல் தான் போறேன். அவனுக்கு என்ன ஆச்சு அப்படின்னு உனக்கு நான் கால் பண்ணி சொல்றேன். எதுவும் ஆகாது. பிரசாத் ஏதோ விதி விளையாட நம்மள விட்டுட்டு போயிட்டான். ஆனா ஆதி நம்மள விட்டுட்டு போயிருக்க மாட்டான். அவனுக்கு ஒன்னும் ஆகாது. நீ எதைப் பத்தியும் யோசிக்காம முதல்ல உள்ள போ. அம்மா அவளை கூட்டிட்டு போங்க பார்த்துக்கோங்க. எதுவுமே அவகிட்ட கேட்க வேண்டாம் " என்றதும் பொன்னியும் சரி எனக் கூறி தன் மகளை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்.

அவளுக்கான உடனே எடுத்துக் கொடுக்க அவளும் குளியல் அறைக்குள் புகுந்துக் கொண்டாள். அங்கிருந்த யுகனிகா தந்தை உத்தமனிடம் கூறி விட்டு மருத்துவமனை கிளம்பினான்.

இருள் சூழ்ந்த இரவு நேரம் தீவிர சிகிச்சை பிரிவில் ஆதி இருக்க அவனுக்கு என்னாகுமோ என்ற பதட்டத்திலே வெளியில் அவனின் குடும்பத்தார் அனைவருமே நின்றனர்.

"நான் அப்பவே சொன்னேன். உனக்கு ஏதோ ஆபத்து இருக்குடா எனக்கு உறுத்திக்கிட்டே இருக்கு. அந்த கயத்த கட்டுடா கட்டுனான்னு சொன்னேன். கேட்டானா அப்பனே கருப்பா நீ தான்பா துணையா இருந்து என் பேரனை மீட்டு கொடுக்கணும். என் உசுர கூட எடுத்துக்கோப்பா. வாழ வேண்டிய வயசுல இப்படி அவனை நீ படுத்த படுக்கையில போட்டு வச்சுட்டியே " என்று மருத்துவமனை என்றும் பாராது புலம்பலோடு கதறிக் கொண்டிருந்தார் அப்பத்தா.

மற்றொரு புறம் முந்தானையால் தன் முகத்தையும் வாயையும் மூடியவாறு ஏங்கி அழுதுக் கொண்டு இருந்தார் நாச்சி.

நிகழ்மதிக்கு யாருக்கு ஆறுதல் கூறுவதை என்றே தெரியாது இரு பெண்களுக்கும் நடுவில் அமர்ந்திருந்தாள். சிறிது நேரம் அப்பத்தா சிறிது நேரம் அன்னைக்கும் ஆறுதல் கொடுத்து அவளும் கலங்கிக் கொண்டு தான் இருந்தாள். ஆண்கள் இருவரும் எப்பொழுது தான் மருத்துவர் வெளியே வருவார் தன் மகனுக்கு என்ன ஆயிற்று என்பதை அறியத்தான் அவர்களோ காத்துக் கொண்டிருந்தனர். நேரம் சென்றதே தவிர மருத்துவர் உள்ளே வர வெளியேச் செல்ல என்று அவனுக்கு வைத்தியம் பார்ப்பதில் அதிதீவிரமாக இருந்தனர்.

மருத்துவமனைக்கு வந்த உதயன் ரிசப்ஷனில் ஆதியின் பெயரை கூறி எங்கு இருக்கிறான் என கேட்டு அங்குச் சென்றான்.

தீவிர சிகிச்சை பிரிவுக்கு வெளியே அவனின் குடும்பத்தார் இருப்பதை கண்டதும் அவர்கள் அருகில் சென்று, " மாமா " என்று தென்னவனைக் கண்டு அழைத்தாள்.

"மாமா ஒன்னும் ஆகாது நீங்க கவலைப்படாதீங்க. சாயங்காலம் தான் எனக்கு விஷயம் தெரிஞ்சது " என்று தன் மாமாவின் கரங்களைப் பற்றிக் கொள்ள,

"உள்ள போன டாக்டர் இன்னும் வெளியில வரலப்பா. இன்னும் ஒரு தகவலும் தெரியல. என்னாச்சுன்னு பயமா இருக்கு " என்று தென்னவன் புலம்பவே, அவரின் கரங்களை பற்றி கொண்டு ஆறுதல் கொடுத்தவாறு இருந்தான்.

அந்த நொடி அவனின் பார்வை மற்றவர்களையும் காணவே,அழுது வீங்கி கன்னமெல்லாம் சிவந்து போய் தலைமுடி கலைந்து வதங்கிய தோற்றமாக அமர்ந்திருந்த நிகழ்மதி அவனின் விழிகளுக்கு விழுந்தாள். பக்கத்து பக்கத்து ஊராக இருந்தாலும் சொந்தமாக இருந்தால் கூட என்றாவது ஒரு நாள் தான் அவளை எதார்த்தமாக சந்திப்பான். ஆனால் நிகழ்மதி அப்படி அல்ல வாரத்தில் ஒரு முறையாவது உதயனைக் கண்டு விடுவாள்.

வெளியே வந்த நர்ஸ், "சீக்கிரம் போய் இந்த டிப்ஸ், மாத்திரை எல்லாத்தையுமே வாங்கிட்டு வாங்க " என ஒரு பட்டியலை கொடுக்கவே அதனை வேகமாய் வாங்கினான் உதயன்.

"நீங்க இருங்க நான் போய் வாங்கிட்டு வரேன் மாமா " எனக் கூறி நகரப் பார்க்கவே,

"இந்தாப்பா பணம் " என்று அப்புச்சி கொடுக்க,

" வேண்டாம் என் கிட்ட இருக்கு " எனக் கூறி மருந்து சிட்டையை வாங்கிக்கொண்டு சென்றான். சிறிது நேரம் கழித்து மறுபடியும் வந்து கதவினை தட்டி அதனை கொடுக்கவே, அவர்களும் வாங்கிக் கொண்டு உள்ளேச் சென்றனர்.

நடு இரவில் தான் மருத்துவர் வெளியே வர அவரை சூழ்ந்துக் கொண்டனர்.

"டாக்டர் எங்க புள்ள இப்ப எப்படி இருக்கான் " என்க,

"என்னால இப்போதைக்கு எதுவுமே சொல்ல முடியாது. ஆனா அவளுக்கு ரொம்ப பிளீடிங் லாஸ் ஆயிருக்கு அதுக்கு நாங்க ட்ரீட்மென்ட் கொடுத்திருக்கிறோம். ஸ்கேன்க்கு அனுப்பி இருக்கோம். அவருடைய தலையில் கொஞ்சம் அடிபட்டு இருக்கு உடம்புலையும் எலும்பு முறிவு இருக்கு அதுக்கு எல்லாமே நாங்க கட்டு போட்டு விட்டு இருக்கோம். ஆனா இன்னும் அன்கான்சியஸ்ல தான் இருக்காரு. அவரு கண் விழித்ததுக்கப்புறம் தான் அவருக்கு மேற்கொண்டு என்ன பண்ணனும் அப்படிங்கறது நாங்க முடிவு பண்ண முடியும். சீக்கிரம் ஒரு கண் முழிக்கிறதை பொறுத்து தான் இருக்கு. ஆனா இப்படியே அவர் அன்கான்சியஸ்ல இருந்துட்டா அதுக்கப்புறம் ரொம்ப டேஞ்சர் " என்க, வீட்டார் அனைவரும் பதறினர்.

"அவனை கண் முழிக்க வைக்கிறதுக்கு ஏதாவது பண்ணுங்க டாக்டர் "

"அவங்க இப்ப ஆழ்ந்த மயக்கத்தில இருந்தாலும் ஒரு சில உணர்வுகளை புரிஞ்சுக்க முடியும். அவரை நீங்க தொடுறது, அவர் கிட்ட பேசுறது இந்த மாதிரி. நாளையிலிருந்து அவங்க கிட்ட நீங்க பேசுங்க. உங்களோட அந்த சத்தத்தில் கண் விழிச்சுட்டாரு அப்படின்னா ரொம்ப நல்லது. இப்போதைக்கு அவரை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். மார்னிங் வரைக்கும் யாரும் உள்ள போக வேண்டாம். நீங்க பார்க்கிறதா இருந்தா போயிட்டு ஒரு நிமிஷத்துல வெளியே வந்துருங்க " எனக் கூறிய மருத்துவர் என்னென்ன வேலை செய்ய வேண்டும் என செவிலியரிடம் கூறி இருந்தார்.

அதன்படி அவன் இருந்த அறையில் ஒரு செவிலிப் பெண் இருக்கும் படி வைத்தனர். அவனுக்கு எந்த நொடி எந்த மருந்தெல்லாம் கொடுக்க வேண்டுமோ அதெல்லாம் கொடுத்துக் கொண்டு இருந்தாள். உள்ளேச் சென்று அவனை வீட்டார்கள் காண, முழுவதும் கட்டிகளோடு இருந்த தங்கள் வீட்டு பிள்ளையை தான் கண்டனர்.

தின்மையான தோள்களும் பரந்து விரிந்த மார்பும் மீசையை முறுக்கி கருப்பன் போல் நடந்து வரும் கால்கள் இப்படி அனைத்துமே அவனிடம் செயலற்று கிடக்க இந்நிலையில் தான் காண்போம் என்பதை அவனின் வீட்டார்கள் ஒரு சதவீதம் கூட எதிர்பார்க்கவில்லை. அந்த ஊரின் ராஜாவாக தங்கள் வீட்டுச் செல்ல பிள்ளையாகச் சுற்றி வந்தவனுக்கு இப்பொழுது இந்த நிலை.

"ரொம்ப நேரம் நீங்க இருக்க வேண்டாம் எல்லாரும் வெளில போய் வெயிட் பண்ணுங்க. கூட ஒரு ஆள் ரெண்டு பேரு இருந்தா மட்டும் போதும். மத்தவங்க இங்கிருந்து கிளம்பிருங்க " என்க, அவர்களும் அப்போதைக்கு அந்த அறையில் இருந்து அவனை மீண்டும் ஒரு முறை பார்த்து விட்டு வெளியே வந்தனர்.

"மாமா நான் வேணா இருக்கிறேன் நீங்க எல்லாரும் வீட்டுக்கு போயிட்டு காலையில வாங்க " உதயன் கூறவே,

"எப்படிப்பா எங்க புள்ள இப்படி இருக்கும் போது எங்களால வீட்டுக்கு போக முடியும். வீட்டுக்கு போனாலும் எங்களால என்ன நிம்மதியாவா இருக்க முடியும். அதுக்கு நாங்க இங்கேயே இருந்துட்டு போறோம்பா " என்று அப்பத்தா கூறினார்.

ஆனால் செவிலியரோ முடியாது என்று மறுத்து விட்டார்.

"சரி அப்போ உதயா நீ இவங்க எல்லாத்தையும் கூட்டிட்டு போ காலையில எல்லாரும் வரட்டும் நான் கூட இருந்துக்கறேன் " என தென்னவன் கூறவே, அந்த நொடி எதையாவது தேவை என்றாலும் ஆண்மகன் தான் அங்கு இருக்க இயலும் பெண்கள் இரவு நேரம் எங்கு வெளியேச் செல்ல முடியும் ? அதனாலே ஒரு வழியாகப் போராடி வீட்டு பெண்களையும் வயதான சங்கரமணி அப்புச்சியையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான் உதயன்.

மருத்துவமனையை விட்டு அவர்களை அழைத்துக் கொண்டு வெளியே வர அந்த நொடி சரியாக உதயனுக்கு யுகனிகாவிடமிருந்து அந்த நடு இரவில் அழைப்பு வந்தது.

கருத்துக்களைப் பகிர,

https://kavichandranovels.com/community/vsv-35-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-comments/


   
ReplyQuote

You cannot copy content of this page