About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
நேசம் – 2
மூன்று வெள்ளை நிற டாட்டா சுமோ தார்க்கின் அலுவலகத்தை நோக்கி சென்று கொண்டிருக்க.. முதல் வண்டியில் ஓட்டுனருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த முத்து பின்னால் திரும்பி பார்த்து, “அண்ணே அந்தப் பயலை எங்கே பார்த்தேன்னு ஞாபகம் வந்துடுச்சு..” என்றான்.
“அப்படியா..! யாருடா அவன்..? நம்ம இடத்துக்கே வந்து நாம் பொண்ணு மேலே கையை வைக்கற அளவுக்கு தைரியமானவன்..?” என்று கண்கள் சிவக்க கேட்டார் நாகராஜன்.
“போன மாசம் விருது வாங்கினானே.. டிவியில் எல்லாம் கூட வந்ததேண்ணே..” என்று முத்து கூறிய நொடி, யோசனையாக நெற்றியை நீவிக் கொண்டவர், “ஆமா.. அவனா இவன்..! பேப்பரில் கூடப் போட்டோ வந்தது இல்லை.. அதான் அவனை எங்கேயோ பார்த்து போல இருந்ததா..?” என்றார் நாகராஜன்.
இதை அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த கிரி, “அப்போ உங்களுக்கு அவரைத் தெரியாதா..?” என்று அதிர்வோடு கேட்க.. “நீ கல்யாணத்துக்குக் கூட்டிட்டு வந்துட்டு, எனக்குத் தெரியாதான்னு கேட்கறியா..?” என்று கிரியிடம் எரிந்து விழுந்தார் நாகராஜன்.
“இல்லை அங்கிள், அவரை எங்கேயோ பார்த்தது போல இருக்குன்னு நீங்க சொன்னீங்களா.. அதான் ஒருவேளை உங்களுக்குள்ளே முன் பகை எதுவும் இருக்குமோன்னு நினைச்சேன்.. ஏன்னா சார் இப்படி எல்லாம் செய்யறவரே இல்லை..” என்றான் கிரி.
அதில் பல வண்ண வார்த்தைகளில் அவனைத் திட்டி தீர்த்த நாகராஜன், “ஏன்டா நாயே, இதுக்கு நீயும் கூட்டா..? அவனுக்கு நீ தானே கூட நின்னு எல்லாம் செஞ்சு இருக்கே..” என்று கேட்டு அருகில் இருந்த கிரியின் தலையில் அடிக்கவும், அதைப் பார்த்துக் கொண்டிருந்த கணபதி “என்ன சம்பந்தி இது மேலே எல்லாம் கை வைக்கறீங்க..?” என்றார் கோபமாக.
“பின்னே இவன் செஞ்சுருக்க வேலைக்கு மாலை போட்டு மரியாதை செய்யச் சொல்றியா..? மொத அவனை முடிக்கறேன்.. அடுத்து இவனும் அதில் கூட்டுன்னு தெரியட்டும், அப்போ இருக்கு இவனுக்கு..” என்று நாக்கை மடித்து மிரட்டினார் நாகராஜன்.
அதற்குள் தார்க் அலுவலகம் இருந்த பகுதிக்கு அவர்கள் வந்து விடவும், “ஆபிஸை அடிச்சு உடைங்க.. அவன் யார் வீட்டில் கை வெச்சு இருக்கான்னு தெரியட்டும்..” என்று ஆத்திரத்தோடு தன் உடன் வந்தவர்களிடம் கத்தினார் நாகராஜன்.
அதே எண்ணத்தில் மூன்று வாகனங்களில் இருந்து இறங்கியவர்களும் அங்கிருந்த சூழ்நிலையைக் கண்டு திகைத்தனர். அங்குக் கருப்பு நிற சபாரி அணிந்து கடோத்கஜன் போல் நால்வர் நின்றிருக்க.. இரண்டு காவலர்கள் வேறு போலீஸ் உடையில் இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருந்தனர்.
“ஏய் என்னடா இது..” என அதற்கும் கிரியிடம் எகிறினார் நாகராஜன். அருவாளும் கம்புமாக வந்து இறங்கியவர்கள், சூழ்நிலையைக் கண்டு அப்படியே நிற்க.. “தள்ளுங்க..” என மேல் துண்டை உதறிப் போட்டப்படியே முன்னால் சென்ற நாகராஜனை அங்கிருந்த காவலர் தடுத்து நிறுத்தினார்.
“நான் அவனைப் பார்க்கணும்..” என்று நாகராஜன் அதிகாரமாகக் கூறவும், “யாருக்கும் உள்ளே போக அனுமதியில்லை..” என்றார் காவலர். “ஏன்..?” என்று அவர் ஏதோ சொல்ல வருவதற்குள், “மிஸ்டர் தாரக்கிற்குக் கொலை மிரட்டலும் ஆபிஸுக்கு வெடிக்குண்டு மிரட்டலும் வந்திருக்கு..” என்றவரின் பார்வை சற்று தள்ளி அடியாட்கள் போல் சுமோவுக்கு அருகில் நின்றிருந்தவர்கள் மேல் பதிந்தது.
அதைக் கண்டு அவர்கள் பின் வாங்க.. நாகராஜனும் கொஞ்சம் உஷாரானார். இவரின் அடுத்தக் கட்ட நடவடிக்கையை எதிர்பார்த்தே தாரக் இப்படிச் செய்தது போல் இருக்க.. யோசனையாக முகவாயை தடிவியப்படி சில நொடிகள் நின்றவர், “ஒரு முக்கியமான விஷயமா அவரைப் பார்க்கணுமே..! ரொம்ப அவசரம்.. எங்கே போனா பார்க்க முடியும்..?” என்றார் நாகராஜன்.
“அவர் ஆபீஸில் இல்லை..” என்ற காவலரின் பார்வை இப்போது நாகராஜன் மேல் சந்தேகமாகப் படிந்தது. அதில் எரிச்சலானவர், கிரியின் பக்கம் திரும்பி “நீ இங்கே தானே வேலை செய்யறே.. உள்ளே போயேன்..” என்று எரிந்து விழுந்தார்.
இதைக் கண்டு குழப்பமான கணபதி, “சம்பந்தி..” என்று தொடங்கவும், நாகராஜன் திரும்பி அவரை முறைக்க, அப்படியே பேச்சை நிறுத்தினார் கணபதி. “சொல்ல வந்ததைச் சொல்லி தொலையும்..” என்றார் நாகராஜன்.
“இல்லை.. நடந்ததை சொல்லி, நாம எதுக்காக இங்கே வந்து இருக்கோம்னு புரிய வெச்சு.. திடீர்னு கல்யாண வீட்டில் புகுந்து பொண்ணைத் தூக்கிட்டு போயிட்டாரு அதான் பொண்ணை கூட்டிட்டு போக வந்து இருக்கோம்னு சொன்னா உள்ளே விடுவாங்க இல்லை.. அதைச் சொல்லி கேட்கலாமே..” என்று இழுத்தார் கணபதி.
“எப்படியெப்படி..? என் ஊரில் வந்து என் பொண்ணுக்கு நான் ஏற்பாடு செஞ்சு இருந்த கல்யாணத்தில் புகுந்து ஒருத்தன் பொண்ணைத் தூக்கிட்டு போயிட்டான்னு என்னையே ஊரை கூட்டி தண்டோரா போட சொல்றியா..?” என்றார் ஆத்திரத்தை அடக்கிய குரலில் நாகராஜன்.
அதில் பதிலேதும் சொல்லாமல் கணபதி அமைதியாகி விட, “என் பொண்ணை எப்படிக் கூட்டிட்டு வரணும்னு எனக்கு நல்லா தெரியும்.. அடுத்தவன் உதவியை எதிர்பார்த்து நிற்க, நான் கையாலாகாதவன் இல்லை..” என்று பல்லைக் கடித்துக் கொண்டே கூறினார் நாகராஜன்.
இதையெல்லாம் அருகில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கிரியை வெறுப்பாகப் பார்த்தவர், “இங்கே என்ன அவுத்து போட்டுட்டா ஆடறாங்க.. ஆஆன்னு பார்த்துட்டு இருக்கே, உன்னை உள்ளே தான் போகச் சொன்னேன்..” என கத்தினார் நாகராஜன்.
இதில் நிஜமாகவே மிரண்டு போய் அவரைப் பார்த்தான் கிரி. திருமணம் முடிவான நாளில் இருந்து அவன் பார்த்த நாகராஜன் இது இல்லை. அத்தனை மரியாதையோடு அவனிடம் பேசி பழகியவர், இப்போது நடந்து கொள்ளும் முறை கிரியை பதட்டப்பட்ட செய்திருந்தது.
அதில் அங்கு நின்று மேலும் நேரத்தை வீணாக்காமல் வேகமாக அலுவலகத்திற்குள் செல்ல முயன்ற கிரியும் தடுத்து நிறுத்தப்பட்டான். “நா.. நான் இங்கே வேலை செய்யறேன்..” என்று திணறியவனைச் சந்தேகமாகப் பார்த்த காவலர், “உங்க ஐடி..?” என்றார்.
இத்தனை பிரச்சனைகள் நடக்கும் அலுவலகத்திற்கு இந்த நேரத்தில் பட்டு வேட்டி சட்டையில் வந்து இருப்பவனின் மேல் சந்தேகம் வராமல் இருந்தால் தான் வியப்பு.
கிரி “ஐடி நான் எடுத்துட்டு வரலையே..” எனவும், “இன்னைக்கு உள்ளே யாரையும் விடறதா இல்லை.. அது தேவையில்லாத பிரச்சனையை உண்டாக்கும்..” என்றார் காவலாளி.
“ஆனா நான் இங்கே ஸ்டாப்..” என்ற கிரியை அவர்கள் கொஞ்சமும் மதிக்கவில்லை. விரலசைவில் ஒரமாகச் சென்று நிற்க சொல்லி விட, இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நாகராஜனுக்குத் தான் ஆத்திரமானது.
********
திருமண மண்டபமே கலவரமாக இருக்க.. ஒரமாக அமர்ந்து அழுது கொண்டிருந்தார் சுஜாதா. இதைக் கண்டு “ஹ்ம்ம், இப்போ அழுது என்ன பயன்..? இதையெல்லாம் முன்னேயே யோசிச்சு இருக்கணும், என்னமோ ஊரில் இல்லாத மாப்பிள்ளைன்னு என் பிள்ளையை விட்டு எவனையோ கூட்டி வந்தப் போதே ஒருமுறைக்கு நாலு முறை யோசிச்சு இருந்தா இப்படி எல்லாம் நடந்து இருக்குமா..?” என்று குத்தினார் சிவகாமி.
அதற்கெல்லாம் கவலைப்படும் நிலையிலோ, பதில் சொல்லும் நிலையிலோ கொஞ்சமும் இல்லை சுஜாதா. தன் ஒரே மகளின் வாழ்வை எண்ணி கலங்கி போய் இருந்தவரின் மனதில் பல்வேறு கலவரங்கள் நடந்து கொண்டிருந்தது.
நாகராஜனின் கோபத்தைக் கண்டு உண்டான பயமும், இப்போது தன் ஆட்களோடு மகளைத் தேடி போய் இருப்பவரின் நடவடிக்கைகள் என்னவாக இருக்குமோ என்ற அச்சமும் அவரை ஒரு அன்னையாய் தவிக்கச் செய்திருந்தது.
உறவு பெண்கள் சுற்றி அமர்ந்து அவரைத் தேற்ற முயன்று கொண்டிருக்க.. அதையெல்லாம் சிறு கேலி புன்னகையோடு பார்த்தப்படி அங்கிருந்து நகர்ந்தார் சிவகாமி.
மெல்ல அங்கிருந்து வெளியே வந்தவர், தன் மகனுக்கு அழைக்க.. அந்தப் பக்கம் ரிங் சென்று கொண்டிருந்ததே தவிர யாரும் எடுக்கவில்லை. “எங்கே போய்த் தொலைஞ்சான்னு தெரியலை.. அத்தனை முறை சொல்லியும் பரதேசி சொதப்பி வெச்சு இருக்கான்..” என்று திட்டிக் கொண்டே அந்த இடம் முழுக்க மகனை தேடிக் கொண்டிருந்தார் சிவகாமி.
அவனுக்கென ஒதுக்கபட்டிருந்த அறையிலும் சென்று பார்த்து விட்டு வெளியே வந்தவர், எதிர்பட்டவர்களிடம் எல்லாம் “கார்த்தியை பார்த்தீங்களா..?” என விசாரிக்க.. சொல்லி வைத்தது போல் அனைவரும் இல்லை என்றிருந்தனர்.
“படுபாவி.. ஒழுங்கா நான் சொன்னதையும் கேட்காம, நானே பக்காவா திட்டம் போட்டு வெச்சு இருக்கேன்.. நடக்கறதை வேடிக்கை மட்டும் பாருங்கன்னு சொல்லிட்டு, இப்போ ஆளையே காணோம்.. வரட்டும் அவன்..” என்று புலம்பிக் கொண்டே மகனை தேடினார் சிவகாமி.
அப்போது அங்கு வேலை செய்யும் ஒருவன் சொன்ன தகவலின் படி மகனை தேடி சென்ற சிவகாமியை கொஞ்சமும் ஏமாற்றாமல் அங்குத் தான் முழுப் போதையில் சரிந்திருந்தான் கார்த்திக்.
தென்னந்தோப்பில் வெட்ட வெளியில் மதிய வெயில் கூட உறைக்காமல் போதையில் கிடந்தவனைக் கண்ட நொடி, சிவகாமிக்கு அப்படியொரு ஆத்திரம் உண்டானது.
அதே கோபத்தோடு அருகில் ஏதாவது கிடைக்குமா எனத் தேடியவர், அங்கிருந்த ஒரு தென்னமட்டையை எடுத்து மகனை இரண்டு போட, அதில் லேசாக உளறிக் கொண்டே பிரண்டு படுத்தான் கார்த்திக்.
“டேய், எழுந்துருடா.. இப்படிக் குடிச்சு குடிச்சே வாழ்க்கையைத் தொலைச்சது போதாதா..! இப்போ கைக்குக் கிடைக்க இருந்த அடுத்த வாழ்க்கையும் போச்சே.. நேத்தே நான் சொல்றதை கேளுன்னு சொன்னேனே, இப்போ எவனோ மொத்தமா தூக்கிட்டு போயிட்டானே..” என்று புலம்பியப்படி சற்று தள்ளி இருந்த குடத்தைக் கொண்டு வந்து மகனின் தலையில் தண்ணீரை கொட்டினார் சிவகாமி.
அதில் அடித்துப் பிடித்து கார்த்திகேயன் எழுந்து அமர.. “இதான் நீ மாப்பிள்ளையை விரட்டிட்டு தாலி கட்டற லட்சணமாடா..” என்று ஆத்திரத்தில் கத்தினார் சிவகாமி.
“இப்போ என்னம்மா.. கல்யாணத்துக்குத் தான் இன்னும் நேரமிருக்கே..” என்று எழுந்து அமர்ந்தவனின் போதை அப்போதும் தெளியாமல் இருக்க.. “ஆமாடா.. நிறைய நேரமிருக்கு, ஆனா அறுபதாம் கல்யாணம் செஞ்சுக்கலாமா..? இங்கே காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் எவனோ தூக்கிட்டு போயிட்டான்..” என்று தொடங்கி அனைத்தையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் சிவகாமி.
அதில் கார்த்திக்கின் முழுப் போதையும் ஒரே நொடியில் தெளிந்தது. “என்னது..? எப்படி..?” என்று அதிர்வோடு எழுந்து நின்றவன், சிவகாமியின் முறைப்பில் “யார் அவன்..? எங்கே இருந்து வந்தான்..?” என்று அடுத்தடுத்து கேட்டுக் கொண்டே செல்ல.. “ஹாங் இப்போ வந்து கேளு ஆயா கதையெல்லாம்.. நான் நைட்டே மாப்பிள்ளையைத் தூக்கிடுன்னு சொன்னேன், நீ தான் மாமாவுக்குச் சந்தேகம் வரும்.. அதை விட இந்த மாப்பிள்ளை வேண்டாம்னு மாமாவே கல்யாணத்தை நிறுத்தற அளவுக்கு ஒரு பிளான் வெச்சு இருக்கேன்னு எல்லாம் படம் காட்டினே.. ஆனா இப்போ என்னாச்சு..?” என்றார் கோபமாக சிவகாமி.
“அம்மா, நீங்களே யோசிச்சு பாருங்க.. மாமா குணத்துக்கு மாப்பிள்ளை ஓடி போயிட்டான்னு சொன்னா நம்புவாரா..? அதெப்படி என் பொண்ணை விட்டுட்டு அவன் போகலாம்னு தான் தேடி கிளம்புவாரே தவிர.. வா ராசா நீ கல்யாணம் செஞ்சுகோன்னு என்னை சொல்ல மாட்டார்.. அதான் அவரையே இந்த மாப்பிள்ளை வேண்டாம்னு சொல்ல வெச்சு நான் சிந்துவுக்கு வாழ்க்கை கொடுக்கறேன்னு முன்னே வந்து நின்னா.. மணமேடை வர வந்து கல்யாணம் நின்னு போனா அவமானம்னு நினைச்சு சரின்னு சொல்லுவார்.. அதுக்குத் தான் அப்படி யோசிச்சேன்..” என்றான் கார்த்திக்.
இப்போது யோசித்துப் பார்க்கும் போது கார்த்திக் சொல்வதும் சரியென்றே தோன்றினாலும், அதையும் சரியாகச் செய்யாமல் சொதப்பி இப்படி எவனோ ஒருவன் இடையில் வந்து அனைத்தும் வீணாகிப் போன கோபம் சிவகாமிக்கு இருந்தது.
“அதெல்லாம் சரி.. இப்போ என்னாச்சு பார்த்தே இல்லை.. திட்டம் போடறது மட்டும் முக்கியமில்லை.. அதை ஒழுங்கா செஞ்சும் முடிக்கணும்..” என்று அவர் திட்டிக் கொண்டே செல்ல.. “இப்போ மாமா எங்கே..?” என்றான் கார்த்திக்.
“வேற எங்கே போவான்.. அவனை தேடி தான் போயிருக்கான்..” என்றார் சிவகாமி. “அப்பறம் என்னம்மா.. அவனைப் போட்டு தள்ளிட்டு சிந்துவை தூக்கிட்டு வந்துடுவார், இனி என்னைத் தவிர எவனும் அவளைக் கட்டமாட்டான், அவ இனி எனக்குத் தான்..” என்றான் கார்த்திக்.
“ஏய் ச்சீ வாயை கழுவு.. எவனோ தாலி கட்டனவளை நீ..” என்று அவர் அருவருப்பாகச் சொல்லவும், “அதனால் என்னம்மா.. அதான் மாமா பின்னேயே போய் இருக்கார் இல்லை, அவன் விரல் கூட அவ மேலே பட்டு இருக்காது..” என்றான் தெனாவட்டாகச் சிரித்தப்படியே கார்த்திக்.
அதில் யோசனையாக முன்னும் பின்னுமாக நடந்தவருக்கு அப்போதும் மனம் ஏற்கவில்லை என்றாலும் மனதில் எதையோ யோசித்து அப்போதைக்கு அமைதியானார் சிவகாமி.
நாகராஜனின் உடன் பிறந்த அக்காவான சிவகாமிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. மகன் கார்த்திக் முன்பே திருமணமாகி மனைவியை பிரிந்தவன், முறைப்படி விவாகரத்து ஆகவில்லை என்றாலும் தினம் குடித்து விட்டு வந்து தொல்லை செய்வதாகச் சொல்லி கார்த்திக்கின் மனைவி பிறந்த வீட்டுக்கு சென்று விட்டிருந்தாள்.
மீண்டும் இருவரையும் சேர்த்து வைக்க முயன்ற சிவகாமிக்கு தோல்வியே கிடைத்தது. அதில் மகனின் வாழ்க்கையைச் சரி செய்யவும், அவனுக்கு ஒரு வாரிசு வேண்டுமென்றும் சிவகாமி பல இடங்களில் பெண் தேடியும், இவனின் முதல் வாழ்க்கையைப் பற்றி அறிந்தவர்கள் யாரும் அதற்குத் தயாராகவே இல்லை.
இதில் பத்து வருட வித்தியயாசம் இருந்தாலும் பரவாயில்லை என்று சிந்துவை திருமணம் செய்து வைக்க சிவகாமி நினைக்க.. நாகராஜன் அதற்குச் சம்மதிக்கவில்லை. இதில் குறுக்கு வழியிலாவது தன் எண்ணத்தைச் சாதித்துக் கொள்ள நினைத்தார் சிவகாமி.
இதில் சிந்துவிற்கு வரும் சொத்தும் அவரின் மனதில் இருந்தது. அதோடு சிந்துவின் பயந்த சுபாவம் அவருக்குச் சாதகமாக இருக்க.. கார்த்திக்கின் முதல் மனைவி போல் இவள் எதையும் செய்ய மாட்டாள், மிரட்டி எளிதாகப் பணிய வைத்து விட முடியும் என்று எண்ணியே திட்டமிட்டு காய் நகர்ந்தி கொண்டிருந்தவரின் சூழ்ச்சியை எல்லாம் தன் ஒரே செயலில் அடித்து வீழ்த்தி இருந்தான் தாரக்.
********
தன் இரு கரம் கொண்டு வாயை மூடியவாறு மிரட்சியாகத் தாரக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் சிந்து. வேகமாகச் செல்லும் காரின் வேகத்தை மிஞ்சிக் கொண்டிருந்தது அவளின் பயம்.
அவளின் வாழ்வின் முக்கியமான ஒருநாள். இது இப்படித் தலைக்கீழாக மாறிப் போகுமென அவள் துளியும் எதிர்பார்த்து இருக்கவில்லை. அதிலும் யாரென்றே தெரியாத ஒருவன் திடீரெனப் புகுந்து தாலி கட்டி தூக்கி செல்வதெல்லாம் அவள் கனவிலும் எண்ணாத ஒன்று.
ஆனால் தன்னருகில் அமர்ந்து இருந்தவனின் அந்த இறுகிய முகமும், சற்று முன்னான அவனின் மிரட்டலும் இது நிஜமென அவளுக்கு நொடிக்கு நொடி உணர்த்திக் கொண்டே இருந்ததில் சிந்துவுக்கு அழுகை வெடித்துக் கொண்டு வந்தது.
சிந்துவுக்கு அவனின் அதட்டலில் அழ கூடப் பயமாக இருந்தது. சிறு வயதில் இருந்தே தன் தந்தையின் கட்டுப்பாட்டில் வளர்ந்து பழகி இருந்தவளுக்கு எதற்கெடுத்தாலும் பயம் தான். சட்டெனத் தன் மனதில் இருப்பதைக் கூட வெளிப்படுத்திக் கொள்ளச் சிந்துவுக்கு வராது.
இன்று இப்படி முகம் தெரியாத ஒருவனின் கையால் மாங்கல்யம் வாங்கிய அதிர்வு அவன் தன்னை எங்கோ கடத்தி செல்வதில் உண்டான பயமென எல்லாம் சேர்ந்து சற்று முன் அவளைத் தன்னிலை மறந்து கத்த செய்திருந்தது.
ஆனால் அதுவும் அவனின் ஒரு அதட்டலில் காணாமல் போய் இருக்க.. கண்ணீர் வழிய மிரட்சியாக அவனைப் பார்த்திருந்தாள் சிந்து. ஆனால் மறந்தும் அவன் பார்வை இவள் பக்கம் திரும்பவில்லை. ஒரு இடத்தில் திடீரெனக் கார் நிற்கவும் பெரும் நம்பிக்கையோடு பார்வையைத் திருப்பியவள், அந்த ஆள் அரவமற்ற இருள் சூழ தொடங்கியிருந்த இடத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, டிரைவர் இறங்கிக் கொள்ள.. தாரக் அங்குச் சென்று அமர்ந்து காரை எடுத்தான்.
அவன் காரை எடுத்த வேகத்தில் பிடிமானம் இல்லாமல் சென்று இடித்துக் கொண்டவளுக்கு அதன் வலி கூடப் பெரிதாகத் தெரியவில்லை. அப்படி ஒரு பயம் மனம் முழுக்கப் பரவி இருக்க.. பெயர் கூடத் தெரியாத ஒருவனோடு பயணிப்பது அவளுள் பெரும் கலவரத்தை உருவாக்கி இருந்தது.
இதிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று புரியாமல் சிந்து பார்வையைச் சுழற்ற.. கார் வெகுதூரம் சென்று கொண்டிருந்தது. நகரை கடந்து கார் சென்று கொண்டே இருக்க.. சுற்றிலும் மரங்கள் அடர்ந்த பகுதியில் ஆள் அரவமற்று இருப்பதையும் மாலை மங்கிக் கொண்டு வருவதையும் கண்டு சிந்துவினுள் பயபந்து உருண்டது.
சுற்றுப் புறத்தில் வீடுகளே இல்லாத மரங்கள் அடர்ந்த ஒரு இடத்தில் கார் சென்று நின்றது. சிந்து மிரட்சியாக அந்த இடத்தைப் பார்த்திருக்க.. காரை அதற்குரிய இடத்தில் கொண்டு சென்று நிறுத்தியவன், வேகமாக இறங்கி உள்ளே செல்ல.. கொஞ்சமும் அசையாமல் அப்படியே பின்னிருக்கையில் இருந்து அவனைப் பார்த்திருந்தாள் சிந்து.
கதவை காலால் உதைத்து தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தவன், அதே வேகத்தில் திரும்பி வெளியில் வந்து காரை நெருங்க.. சிந்துவுக்கு உடல் பயத்தில் நடுங்கியது.
முகம் இறுக காரின் கதவை திறந்து அவளின் கையைப் பிடித்து வெளியே இழுத்தவன், அதே வேகத்தில் அவளை உள்ளே இழுத்து செல்ல.. கால்கள் தேய, பாதி அமர்ந்த நிலையிலேயே அவனின் இழுப்பிற்கு உள்ளே சென்றாள் சிந்து.
அப்படியே அவளை அங்கிருந்த ஒரு அறைக்குள் இழுத்து சென்று தள்ளியவன், “இனி இது தான் உன் இடம்.. இங்கே தான் நீ இருந்தாகணும்..” என்றான் கட்டளைக் குரலில் தாரக்.
அந்தக் குரலும் அதை தாரக் சொன்ன விதமும் அவளுக்கு ஏதோ தான் சிறையில் இருப்பது போலான உணர்வை கொடுக்க.. அவ்வளவு நேரம் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த அவளின் கண்ணீர் வெடித்துக் கொண்டு கிளம்பியது.
அதில் கண்ணீரோடு அவனைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டவள், “என்.. என்னை விட்டுடுங்க..” என்று கெஞ்ச.. அதைக் கண்டவனுக்கு அவளின் மேல் பரிதாபம் வருவதற்குப் பதில் வெறுப்பே வந்தது.
“ஏய்.. இங்கே பார்.. இந்த அபலை போலக் கண்ணீர் வடிச்சுட்டு கையேந்தி கேட்டு எல்லாம் ஒரு பயனும் இல்லை.. இனி இது தான் உன் இடம்.. நீ இங்கே தான் இருந்தாகணும்.. புரியுதா..? அதை முதலில் உன் மனசில் பதிய வெச்சுக்கோ..” என்றான் கடினமான குரலில் தாரக்.
“ஆனா நா.. நான்..” என்று திணறியவளுக்கு அடுத்து என்ன பேசுவது என்று கூடத் தெரியவில்லை. சிறு வயதில் இருந்தே நாகராஜன் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் கன்னம் வீங்கி விடும். அதில் அனைத்திற்கும் தலையசைத்தே பழகி இருந்தாள் சிந்து.
இப்போதும் இத்தனை கோபத்தோடு இருப்பவனிடம் பேசவே அவளுக்குப் பயமாக இருந்தது. அதில் வெறுப்பும் கோபமுமாக அவளைப் பார்த்து விட்டு தாரக் அறையில் இருந்து வெளியேற முயன்ற நொடி “நா.. ன்.. வீ.. ட்டு.. க்கு.. அப்.. பா..” என்று சிந்து கோர்வையாகப் பேச முடியாமல் திணற.. சட்டெனத் திரும்பி அவளைப் பிடித்து இழுத்து சென்று அந்த அறையின் பால்கனி கதவை திறந்து வெளியே தள்ளி கதவடைத்து இருந்தான் தாரக்.
அவள் தள்ளிய வேகத்தில் தரையில் நிலைக்குலைந்து கீழே விழுந்தவள், அழுகையோடு அவனைப் பார்க்க.. அறைக்குள் இருந்த பொருட்களை எல்லாம் வெறியோடு தூக்கி போட்டு உடைத்துக் கொண்டிருந்தான் தாரக்.
அவனின் இந்தக் கோபத்தைக் கண்டு மிரண்டவளுக்குக் கை கால்கள் எல்லாம் நடுக்கம் எடுக்கத் தொடங்கியது. அதில் அமர்ந்த வாக்கிலேயே சிந்து பின்னால் நகர.. தன் ஆத்திரம் தீரும் மட்டும் அனைத்தையும் அடித்து நொறுக்கியவன், அப்போதும் தன் கோபம் தீராமல் போகவும் “ஆஆஆஆ..” என்று மேலே பார்த்து பெரும் குரலெடுத்து கத்தி இருந்தான் தாரக்.
அந்தக் குரலுக்கு வானமே நடுங்கியது போல் பெரும் இடியோடு மழை வர தொடங்க.. அப்படியே மடிந்து அங்கிருந்த படுக்கையில் அமர்ந்தான் தாரக். மழையில் நனைந்தப்படி சிந்து அழுகையோடு அமர்ந்திருக்க.. கையை இறுக்கமாக மூடியவாறே தன் கோபத்தைத் தணிக்க முயன்று கொண்டிருந்தவன் விழிகள் சிவக்க அவளையே தலையை மட்டும் திருப்பி பார்த்திருந்தான்.
அந்தப் பார்வை உறுத்த விழிகளை உயர்த்தியவள், தாரக்கின் விழிகளில் தெரிந்த ஏதோ ஒன்றில் திகைத்து எச்சில் கூட விழுங்க மறந்து அவனையே பார்த்திருக்க.. சிந்துவின் முகத்தில் நிலைத்திருந்த அவன் பார்வை மெதுவாக அவள் மேல் வேறு விதமாகப் படிந்தது.
Latest Post: கையில் மிதக்கும் கனவா நீ..! (முதல் பாகம்) - Comments Thread Our newest member: Vijayalakshmi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page