நீரு மறுக்க மறுக்கச் சஞ்சய் அவளை அந்த வீதி முனையில் இருக்கும் பூங்காவுக்கு வாக்கிங் அழைத்துச் சென்றான். ஓரளவுக்கு மேல் நீருவுக்கும் மறுக்க மனம் இல்லாததோடு அவளுமே நடக்க வேண்டி இருப்பதால் சஞ்சய்யோடு சென்றாள்.
அங்கு அருகில் ஒருவன் இருக்கிறான் என்பது போலவே பாவிக்காமல் அவளாகவே நடந்து கொண்டிருந்தாள். ஆனால் சஞ்சய்யோ மெல்லிய மனதை மயக்கும் மெல்லிசையைத் தன் ஐபாடில் ஓட விட்டு அவளைக் கேக்க செய்தவாறே உடன் நடந்து கொண்டிருந்தான்.
அப்போது அங்கு இரண்டு வயதுடைய குழந்தை ஒன்று தன் தளிர் நடையில் நடந்து வருவதை கண்டு நின்ற நீரு அதை ஆசையுடன் பார்க்கவும், அதுவும் இவளை நிமிர்ந்து பார்த்துச் சிரித்தது.
அது காலை நேரம் என்பதாலும் பத்துமணியைக் கடந்து கொண்டிருந்ததாலும் அவ்வளவு குளிர் இல்லாமல் இருக்கவே, ஒரு சில பெண்கள் அதே பூங்காவில் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.
அனைவரும் அந்தக் குட்டியை தெரிந்தது போலவே நின்று பேசி கொஞ்சி விட்டு சென்றனர். அதுவும் அனைவரோடும் இயல்பாகப் பழகியது. பார்வையை அந்தக் குழந்தையின் மேலேயே வைத்தவாறு நீரு நடந்து கொண்டிருந்தாள்.
அதைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சஞ்சய், “என் பொண்ணும் இப்படித் தான் டி கியூட்டா இருப்பா...” என்றான். அதில் தன்னை அறியாமல் நீருவின் முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்தாலும் வீம்புக்காக முறைத்தவள், “என்னது பொண்ணா ஏன் சார் பையனா இருந்தா ஒத்துக்க மாட்டீங்களோ...?” என்றாள் கோபம் போலக் காண்பித்துக் கொண்டு.
“வழக்கமா இதைப் பெண் குழந்தைகளுக்குத் தானே கேப்பாங்க..?!” என்று யோசிப்பது போல சஞ்சய் நடிக்கவும், “நான் பையனுக்கும் கேப்பேன்...” என்றாள் முகத்தைச் சுழித்து.
“கேட்டுக்கோ... எனக்கு என்ன, ஆனா எனக்குப் பொண்ணு தான் டி வேணும்... உன்னைப் போல அழகா, கியூட்டா, என் மேலே உயிரா.. என்னையே சுத்தி சுத்தி வரது மாதிரி..” என்று சிறு கொஞ்சல் குரலில் கூறிக் கொண்டு இருந்தவனின் வார்த்தைகளில் லயித்து இருந்தவள், அவன் மீது இருந்த கோபம் எல்லாம் நினைவே இல்லாமல் தன்னை மறந்து “அதே ஆசை எனக்கும் இருக்காதா...?! எனக்கு உன்னைப் போலவே ஒரு பையன் தான் வேணும்...” என்றிருந்தாள்.
அதில் சஞ்சயின் கண்களில் ஒரு மின்னல் வந்து போக... அதைக் கண்ட பிறகே தன் தவறு புரிந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு வேகமாக நகர முயன்றாள்.
அதே நேரம் அவளின் அருகில் வேகமாக அந்தக் குழந்தை ஓடி வரவும் நிதானித்தவள், இத்தனை அருகில் வந்தவளை அள்ளி கொஞ்ச நினைத்து நீரு முட்டியிட்டு அமர, “ஐஷு..” என்று அழைத்துக் கொண்டு ஒருவன் அவர்கள் அருகில் வந்து நின்றான்.
அவனைக் கண்டு குழந்தை மாட்டி கொண்ட பாவனையில் தன் கையால் முகத்தை மறைத்துக் கொண்டு சிரிக்க, “இப்படிச் சிரிச்சே என்னை மயக்கிடு...” என்று கண்டிப்புடன் கூற முயன்றாலும் புன்னகை குரலிலேயே கூறினான் அவன்.
“என்ன கல்யாண்... ஓடி வந்துட்டாளா...?”
“சாப்பிட ஏமாத்திட்டு ஓடி வராளா...?”
“கல்யாண் இன்னைக்கு எவ்வளவு நேரமா இந்த விடா முயற்சி நடக்குது...?”
என்றெல்லாம் அந்தப் பக்கமாகச் சென்றவர்கள் அந்தப் புதியவனிடம் கேள்வி கேட்டுக் கொண்டே நிற்காமல் சென்றதில் அனைவருக்கும் சிரிப்புடன் கூடிய பதிலை அளித்துக் கொண்டிருந்தவனைப் பார்க்கும் போது இது தினசரி நிகழ்வு போல என்றே தோன்றியது.
பின் பார்வையைக் குழந்தையின் பக்கம் திருப்பியவன், சஞ்சய் மற்றும் நீருவை கண்டு சிநேகமாகப் புன்னகைக்க... பதிலுக்கு இவர்களும் புன்னகைத்தனர்.
“உங்க பேரு என்ன குட்டி...?” என்று நீரு கேட்கவும், அது பதில் அளிக்கத் தயங்கி தன் தந்தையின் முகம் பார்த்தது. “சொல்லு...” என்று அவன் கூறவும் தான் “ஐத்து...” என்றது தன் மழலையில் அழகாகப் பச்சரிசி பற்களைக் காண்பித்துக் கொண்டே.
“ஹை... ஐஷு குட்டியா நீங்க...” என்றதும் ‘ஆம்’ எனத் தலையசைத்து புன்னகைக்க... “ஏன் சாப்பிடாம ஓடி வந்தீங்க...?” என்றாள் நீரு. அதற்குப் பதில் அளிக்காமல் குழந்தை விழிக்கவும், “அவளுக்கு எப்பவுமே சாப்பிடணும்னா கஷ்டம் தான்...” என்று புன்னகைத்தவன், தன்னைக் கல்யாண் என்று அறிமுகம் செய்து கொண்டான்.
பரஸ்பரம் இவர்களும் அறிமுகம் செய்து கொள்ள... சற்று நேரம் ஐஷுவோடு கழிந்தது நீருவின் நேரம். இதற்கிடையில் விளையாட்டு போலவே குழந்தைக்கு ஊட்டி முடித்து இருந்தான் கல்யாண். பின் இவர்கள் விடை பெற்று கிளம்பிய பிறகும் அவர்கள் இருவரும் அங்கேயே அமர்ந்து விளையாடி கொண்டு இருந்தனர்.
அன்று மாலையும் இவர்கள் வாக்கிங் சென்ற போது அவர்களை வழியில் காண நேர்ந்தது. இப்படியே இரு தினம் செல்ல... மூன்றாம் நாள் மதியம் பன்னிரண்டு மணியளவில் இவர்கள் தங்கி இருந்த வீட்டுக்கு அடுத்து இருந்த வீட்டில் ஒரு பரபரப்புத் தெரிந்தது.
தோட்டத்தில் அமர்ந்திருந்த சபா, நீரு மற்றும் ராணி என்னவென்று புரியாமலே இதைப் பார்த்துக் கொண்டிருக்க... சற்று நேரத்திற்குப் பிறகு காவலாளியை அழைத்து விவரம் கேட்டார் சபா.
“பக்கத்து வீட்டு குழந்தை சார்... ரொம்பச் சின்னக் குழந்தை சார், ஒரு இரண்டு வயசு தான் இருக்கும்... இந்த ஏரியாவுக்கே செல்லம் சார் அது... இப்போ காணோமாம் சார்...” என்று வருத்தம் தோய்ந்த குரலில் அவர் கூறவும், மனம் தாளாமல் எழுந்து வாசல் கேட்டின் அருகில் சென்று நின்றனர் ராணியும் நீருவும்.
அங்குப் போலீஸ் வந்து இருக்க... ஒரு சிலர் வாசல் அருகில் குழுமி இருந்தனர். அவர்களோடு வருத்தம் தோய்ந்த முகத்தோடு ஏதோ பேசி கொண்டு நின்றிருந்தான் கல்யாண்.
அதைக் கண்டதும் துணுக்குற்ற நீரு, “அவரு கல்யாண் தானே... இங்கே என்ன செய்யறாரு...?” என்றாள் காவலாளியிடம். “ஆமா மா... அவரை உங்களுக்குத் தெரியுமா...?! அவர் வீடு தான் மா அது.. அவர் குழந்தையைத் தான் காணோம்... பேரு ஐஷு, அவ்வளவு சுட்டி...” என்றவரை கண்டு திடுக்கிட்டவள், திரும்பி கல்யானை பார்க்க... வெளியில் காண்பித்துக் கொள்ளவில்லை என்றாலும் அவனின் உடல் மொழியில் ஒரு தகப்பனின் தவிப்புத் தெரிந்தது.
நொடியும் தாமதிக்காமல் வீட்டிற்குள் வேகமாகச் சென்றவள் நேராகச் சென்று நின்றது சஞ்சய்யின் முன்பு தான். ஏதோ தீவிரமாக அலைபேசியில் யாருடனோ பேசி கொண்டு இருந்தவன், மூச்சு வாங்க தன் முன் வந்து நின்றவளை கேள்வியாகப் பார்த்தது ஒரு நொடி தான்.
அடுத்த நொடி அவளின் உடல் மொழியில் இருந்த அவசரம் புரிய, “நான் அப்பறம் கூப்பிடறேன் ஆனந்த்...” என்று அலைபேசியை அணைத்தவன், நீருவிடம் விவரம் கேட்க... பதட்டத்தோடு அனைத்தையும் கூறியவள், “ஐயோ எவ்வளவு அழகான குழந்தை அது... எதாவது செய்யேன்..” என்றாள் தவிப்போடு சஞ்சயின் சட்டையைப் பற்றி உலுக்கி...
நீருவின் நிலை சரியாகப் புரிய, அவளின் உடல் நிலையை மனதில் கொண்டு குடிக்க நீர் கொடுத்து சற்று அவளை அமைதிபடுத்தி அமர வைத்து தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி விட்டு அங்குச் சென்றான்.
தன் மேல் எவ்வளவு கோபம் என்று காண்பித்துக் கொண்டாலும் இக்கட்டான சூழ்நிலை என்று வரும் போது தன் நினைவும் தன்னால் தான் அதைச் சரி செய்ய முடியுமென்ற நம்பிக்கையும் அவளுக்கு இருப்பதாலேயே தன்னை நாடி வந்திருக்கிறாள் என்பதை அவள் அறிந்திருக்கக் கூட வாய்ப்பில்லை என்ற எண்ணத்தோடே பக்கத்து வீட்டுக்குச் சென்றான்.
அங்கு சஞ்சய்யை கண்டதும் கல்யாண், குழந்தை பற்றி எதுவும் விவரம் சொல்ல வந்து இருப்பானோ என்ற எதிர்பார்ப்போடு “பாப்பாவை எங்கேயாவது பார்த்தீங்களா..?” என்றான் பரபரப்போடு. “இல்ல.. சாரி, நான் இங்கே பக்கத்து வீட்டுல தான் தங்கி இருக்கேன்... இப்போ தான் விஷயம் தெரிய வந்தது... என்ன ஆச்சு... எப்படி ஆச்சு...?” என்றான்.
சஞ்சய்யின் பதிலில் முகம் சோர்ந்தவன், “இங்கே வீட்டில் தான்... அதான் என்ன எப்படின்னு ஒண்ணுமே புரியலை..” என்று கவலை குரலில் சொல்லவும், “இதையே தான் ரொம்ப நேரமா சொல்லிட்டு இருக்கே... உன்னை நம்பி விட்டுட்டுப் போனது என் தப்பு தான்..” என்று அழுதாள் கல்யாணுக்கு சற்றுத் தொலைவில் நின்றிருந்த பெண்.
அது கல்யாணின் மனைவி என்பது சொல்லாமலே தெரிந்தது. சஞ்சய் அனைத்தையும் கவனமாகப் பார்த்துக் கொண்டு இருக்க... தனக்குக் கீழ் இருக்கும் காவலர்களுக்குச் சில பல உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு வெளியில் வந்த இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் சஞ்சய்யை கண்டதும் மிகுந்த மரியாதையோடு வந்து சல்யூட் வைத்தார்.
“நீங்க எங்கே சார்...?” என்று ஆச்சர்யமாக வினவியவருக்கு “பக்கத்து வீட்டில் தான் இருக்கேன்... ஹாலிடே டிரிப், இந்தப் பாப்பாவை தெரியும் அதான் என்ன ஆச்சு...?” என்று பேசிக் கொண்டே அவரோடு நகர்ந்தவனுக்கு ஆறுமுகம் அனைத்தையும் கூறினார்.
கல்யாண் மிகப் பெரிய தொழில் குடும்பத்தின் தாமதமாகப் பிறந்த இரண்டாவது வாரிசு. ஆனால் தொழில் பணம் என்று அதன் பின்னாலேயே ஓடியவர்கள் பிள்ளையைப் பற்றி யோசிக்க மறந்து போனதின் விளைவாகப் பாசத்துக்கு ஏங்கி வளர்ந்தவன் இவன்.
சிறு வயதில் இருந்தே பணம் தான் தனக்கு நியாமாகக் கிடைக்க வேண்டிய அனைத்து சந்தோஷங்களையும் பறித்தது என்பதால் அதன் மேல் எப்போதும் ஒரு ஆர்வம் இருந்தது இல்லை.
இந்நிலையில் அன்புக்கு ஏங்கி கொண்டிருந்தவனுக்கு அவன் தேடிய அன்போடு சேர்த்து காதலையும் கொடுக்க வந்தவள் தான் சித்ரா. ஒரு பிராஜெக்ட் சம்பந்தமாகக் கம்பெனியின் எம்டியான கல்யாணை சந்திக்க வந்தவள், அவன் மனதில் இடம் பிடித்து அவனையே கரமும் பிடித்து இருந்தாள்.
இந்தத் திருமணத்தில் கல்யாணின் குடும்பாத்தாருக்கு விருப்பமே இல்லை. தங்கள் தகுதிக்கு கொஞ்சமும் ஒத்துவராதவளை மணந்ததால் சொத்தில் எதுவும் கிடையாது என்று மிரட்டியும் அதைப் பற்றிக் கவலையே படாமல் சித்ராவை மனது இருந்தான் கல்யாண்.
அவன் பெயரில் சிறு வயதில் கல்யாணின் தாத்தா எழுதி வைத்து விட்டு சென்றதை மட்டும் பெரிய மனது செய்து கொடுத்துக் கை கழுவி இருந்தனர் பெற்றவர்கள்.
அதன்படி இந்த வீடும் கொஞ்சம் நிலமும் கல்யாணுக்கு கொடுக்கப்பட... நிலத்தை விற்று ஒரு தொழிலை துவங்கியவன் தன் மனைவியோடு இங்குக் குடியேறி இருந்தான்.
தன்னால் ராஜாவாக வாழ வேண்டியவன் அனைத்தையும் இழந்து வந்தது சித்ராவை நெகிழ செய்து இருக்க... அவனைக் காதலோடு தாங்கினாள். அவன் ஏங்கிய அன்பை வாரி வழங்கிய மனையாளை கல்யாணும் தரையில் விடாமல் தாங்கினான்.
மனைவி, குழந்தை, அவர்களைக் கவனிப்பது அவர்களுக்குத் தேவையானதை செய்வது என்று மட்டுமே இருந்தவனின் கவனம் தொழிலில் இல்லாமல் போனதில் ஏகப்பட்ட நஷ்டம் தொழிலில். அதைச் சரி செய்ய முயன்று மீதமுள்ள பணத்தை எல்லாம் மீண்டும் போட்ட போதும் பெரும் நஷ்டமே வந்தது.
இதில் மீண்டும் முதலீடு செய்யப் பணம் இல்லாமல் போனதில் தொழில் இழுத்து மூடப்பட்டது. இப்போது வேறு வழி இல்லாமல் சித்ரா வேலைக்குச் செல்ல வேண்டி வந்தது.
வீட்டில் இருந்து குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பைத் தானே முன் வந்து மனமுவந்து கல்யாண் ஏற்றுக் கொண்டான். தினசரி குழந்தையின் அனைத்து தேவைகளையும் கவனிப்பது எல்லாம் அவனே.
அதன்படி தினசரி வழக்கம் போல இன்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு பார்க் சென்று இருந்தவன், காலை உணவை அங்கு உண்ண வைத்து சிறிது நேரம் விளையாட வைத்து வீட்டிற்கு அழைத்து வந்தான்.
பதினோரு மணிக்கு வருபவர்கள், மதியம் ஒண்ணரை மணியளவில் மதிய உணவை சாப்பிட்டு விட்டு உறங்குவது தான் இருவரின் வழக்கம். இந்த இடைப்பட்ட நேரத்தில் பிள்ளைக்குத் தேவையானதை சமைப்பது, புதிதாகத் தோன்றி இருக்கும் எண்ணத்தின்படி வீட்டில் இருந்தே கதை எழுதி புத்தகமாகப் போடுவது என்ற எண்ணத்தில் அதற்குத் தேவையானதை செய்வது என்று நேரம் கழியும்.
மீண்டும் மாலை நாலு மணியளவில் குழந்தைக்குத் தேவையானதை கொடுத்து உடை மாற்றிப் பூங்கா கடைவீதி என்று சென்று இருவரும் திரும்பும் போது சித்ரா வீடு திரும்பி இருப்பாள்.
இரவு உணவை சித்ரா செய்வது வழக்கமென்பதால் இருவரும் பேசியவாறே அதைச் செய்து முடிப்பர். இது தான் அவர்களின் தினசரி வாடிக்கை. இன்றும் அதே போலத் தான் பூங்காவில் இருந்து திரும்பி கை கால்களைச் சுத்தம் செய்து குழந்தையைப் பொம்மைகளோடு விளையாட விட்டு சமையலை முடித்த கல்யாண், தன் கதை குறித்துத் தோன்றிய குறிப்புகளை எல்லாம் வழக்கம் போலக் குறித்து வைத்துக் கொண்டு அதை ஒரே புள்ளியில் கொண்டு வரும் யோசனையில் ஆழந்தான்.
எப்போதுமே தன் கண் பார்வையில் தான் உள் அறையில் குழந்தையை விளையாட விடுவான். இன்றும் அதே போலத் தான் செய்தான். குழந்தை பெரிய பந்தை வைத்து விளையாடி கொண்டு இருந்ததில் அது அறைக்கு வெளியே ஓடுவதும் இவள் ஓடி சென்று எடுத்து வருவதுமாக இருந்தாள்.
அப்படி ஒரு முறை சென்றவள் மீண்டும் பத்து நிமிடங்கள் ஆகியும் திரும்பி வராமலே போகவும் தான் கல்யாண் அவளைத் தேடி வெளியில் வந்தது. ஆனால் முன் அறையிலோ ஹாலிலோ கூட அவள் இல்லாமல் போகவும் சமையல் அறை முதல் ஒவ்வொரு இடமாகச் சென்று பார்த்தவனுக்கு எங்குமே அவள் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.
“ஐஷு பாப்பா எங்கே காணோம்..?” என்று எப்போதுமே அவள் ஒளிந்து கொள்ளும் நேரங்களில் கல்யாண் குரல் கொடுத்தால், ஒளிந்த இடத்திலிருந்தே “ஐத்துப் பாப்பா காணோம்...” என்ற குரல் கொடுப்பாள்.
அதையும் கூட முயன்று பார்த்து விட்டான். ஆனால் பலனோ பூஜ்யம் தான். அதன் பின்னே சற்று பரபரப்போடு தேடியவனுக்கு முதலில் எங்காவது படுத்து தூங்கிவிட்டாளோ என்றே தோன்ற, படுக்கைக்குக் கீழே, சோபாவுக்குப் பின்னே, மறைவான இடம் என்று எங்கும் விடாமல் தேடி பார்த்து விட்டான்.
எங்குமே இல்லை என்றவுடன் தான் ஒரு பயம் உண்டானது. எப்போதுமே வாசல் தாண்டி செல்பவள் இல்லை என்பதால் உள்ளேயே இதுவரை தேடியவன் அடுத்து வெளியில் சென்று தேட... குழந்தை விளையாடி கொண்டிருந்த பால் காம்பவுண்ட் சுவர் ஓரம் இருந்தது.
ஒருவேளை பால் வெளியில் வந்து இருக்குமோ அதை எடுக்கக் குழந்தை வந்து இருப்பாளோ என்று என்ன அவசியமே இல்லாத அளவுக்கு அவள் விளையாடிய அறையில் இருந்து எவ்வளவு வேகமாக அடித்தாலுமே இங்கு உருண்டு வர வாய்ப்பே இல்லை.
வீட்டின் அமைப்பு அப்படி இருந்தது. இத்தனை வளைவுகளைக் கடந்து வெளியில் வந்திருக்க வாய்ப்பில்லை எனும் போது பால் வீதியில் இருக்க ஒரே வாய்ப்பு குழந்தையை யாரோ தூக்கி செல்லும் போது அவளின் கையில் இருந்தது கீழே விழுந்து இருக்கலாம்..’ என்று தோன்றியவுடன் சற்றும் தாமதிக்காமல் போலீஸை அழைத்து இருந்தான்.
சித்ராவுக்கும் தகவல் தெரிவிக்கபடவும், அடுத்த இருபது நிமிடத்தில் வீட்டிற்கு அழுதவாறே வந்துவிட்டாள். இதோ இரண்டு மணி நேரங்கள் கடந்த நிலையில் இன்னும் குழந்தையைப் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட சஞ்சய், வீட்டுகுள்ளேயே வந்து தூக்கிட்டு போய் இருக்காங்கனா... இவங்களை நல்லா தெரிஞ்ச யாராவதா தான் இருப்பாங்க... அந்தக் கோணத்தில் விசாரிச்சீங்களா..?” என்றான்.
“ஆமா சார்... விசாரிச்சிட்டு இருக்கோம்...?” என்றார் பவ்யமான குரலில். “ஹ்ம்ம்... குழந்தை அவங்க தூக்கிட்டு போகும் போது அழுகலை... அப்போ குழந்தைக்கும் நல்லா தெரிஞ்சவங்களா தான் இருக்கும்..” என்று யோசனையோடு கூறியவன்,
“பாப்பா இங்கே யார் கூட எல்லாம் கிளோசா பழகுவா...?” என்றான் கல்யாணை பார்த்து. “அவ இங்கே எல்லாருக்குமே செல்லம் தான் ஆபிசர்... அவளைத் தெரியாதவங்க இங்கே யாரும் இல்லை...” என்ற கல்யாணின் வார்த்தைகள் எந்த அளவுக்கு உண்மை என்பது தான் அவனுக்கே தெரியுமே...!!
“ஆறுமுகம்... நீங்க முதலில் இந்த வீதியில் இருக்கவங்களை விசாரிங்க... வீட்டுகுள்ளேயே வந்து தூக்கிட்டு போகற அளவுக்கு நெருக்கமானவங்களா தான் இருப்பாங்க... அப்படி யாரெல்லாம் இருக்காங்க..? முதலில் அவங்களை விசாரிங்க...” என்றவன், விவரம் சொல்லு என்பது போலக் கல்யாணை பார்த்தான்.
“இல்ல ஆபிசர்... வீட்டுக்குள்ளே எல்லாம் யாரும் வரும் அளவுக்குப் பழக்கம் இல்லை...” என்றவனைக் குழப்பமாகப் பார்த்தான். “இல்ல மிஸ்டர் கல்யாண் நல்லா யோசிச்சு சொல்லுங்க... குழந்தை எளிதா எல்லார் கூடவும் பழகக் கூடியவதான் ஆனாலும் தெரியாதவங்ககிட்ட பழகும் முன் உங்க அனுமதிக்கு காத்திருப்பா... நாங்க பேர் கேட்ட போதே இதை நான் பார்த்தேன்... சோ இது அவளுக்கு நல்லா தெரிஞ்ச யாரோ தான்...” என்றான் சஞ்சய்.
“இல்ல ஆபிசர்... இங்கே இருக்க எல்லார் கூடவும் பார்க்கும் போது பேசுவதோடு சரி... வீட்டிற்கு வரும் அளவுக்கு யாரும் இல்லை...” என்று மீண்டும் அழுத்தமாகக் கல்யாண் கூறினான்.
இப்போது குழம்புவது சஞ்சய்யின் முறையானது, காவலர்கள் விசாரித்துப் பார்த்தவரை, யாருமே குழந்தையோடு சென்றதையோ இல்லை அழும் குழந்தையைத் தூக்கி செல்வதையோ பார்த்திருக்கவில்லை.
அதே போல அது மதிய நேரம் என்பதால் அந்தப் பகுதியில் வெளியே யாரும் அப்போது இல்லை என்ற பதிலே கிடைத்தது. அப்போது வீட்டிற்குச் சென்று தூக்கி செல்லும் அளவுக்கும் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும், அதேநேரம் கல்யாணின் தினசரி நடவடிக்கையை அறிந்தவர்களாகவும் இருக்க வேண்டும்... இல்லையென்றால் அந்த இடைவெளியை சரியாகப் பயன்படுத்திக் குழந்தையைத் தூக்கி சென்று இருக்க வாய்ப்பே இல்லை.
குழந்தை தானாக வெளியில் சென்று இருக்குமோ என்ற சந்தேகம் வராத அளவுக்கு இருந்தது அந்த வீதியில் இருந்தவர்களின் வாக்குமூலம்... இதுவரை கல்யாண் கூட மட்டுமே பிள்ளை வெளியே வந்து பார்த்திருப்பதாகக் கூறியவர்கள், அத்தனை கவனமாகக் குழந்தையைக் கல்யாண் கவனித்துக் கொள்வதாகவும் கூறினர்.
அதே போல இந்த வீதி மலை பகுதி சற்று மேல் நோக்கி இருந்தது, இரண்டு வயது பிள்ளை எத்தனை வேகமாக நடந்தாலும் அந்த வீதியை பத்து நிமிடத்தில் கடக்க முடியாது என்பதும் புரிந்தது.
இதையெல்லாம் யோசித்தவன், “கல்யாண் எனக்கு என்னவோ இது உங்களுக்கு நல்லா தெரிஞ்ச யாரோ தான் செஞ்சு இருக்கணும்னு தோணுது.. முதல் விஷயம் குழந்தை தூக்கினதும் அழமா கூடப் போய் இருக்கா... அடுத்து வீட்டிற்குள் வரும் அளவு அவங்க நெருக்கமானவங்களா தான் இருக்கணும்... இன்னொன்னு இது பணத்துக்காகச் செய்யப்பட்டது போலத் தெரியலை, ஏன்னா கடத்தப்படு கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் கடந்தாச்சு... இன்னும் மிரட்டியோ பணம் கேட்டோ எந்த அழைப்பும் வரலை... அப்போ இது அந்தக் காரணங்களுக்காக நடந்த கடத்தல் இல்லை, உங்களின் தினசரி வாடிக்கை தெரிஞ்ச யாரோ தான் இது... அவங்களை எல்லாம் ஒரு முறை நினைவுப்படுத்திச் சொல்லுங்க...” என்ற சஞ்சய்யின் வார்த்தைகள் கல்யாணை யோசிக்க வைத்தது.
“இங்கே வந்த பிறகு இந்த இரண்டு வருஷமா ஒரு சிலரோடு தான் நெருக்கமா பழகி இருக்கேன்... என்று தொடங்கி அவர்களின் தகவல்களைக் கல்யாண் பகிரவும் காவலர்கள் துரிதமாகச் செயல்பட்டு அவர்களை விசாரிக்க முனைந்தனர்.
அடுத்தப் பத்து நிமிடங்களில் கல்யாணின் அலைபேசிக்கு ஒரு புது எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. பிள்ளை அவர்களிடம் இருப்பதாகவும், இன்னும் ஒரு மணி நேரத்தில் நாற்பது லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றும் போலீஸ் இதில் தலையிடவோ இவர்களைத் தேடவோ கூடாது என்றும் நிபந்தனை விதித்தவன், மீண்டும் பத்து நிமிடங்களில் அழைப்பதாகவும் அதற்குள் யோசித்துச் சொல்லுமாறும் கூறி அழைப்பை துண்டித்தான்.
“கல்யாண் இந்தக் குரல் உங்களுக்கு இதுக்கு முன்னே கேட்ட குரலா...?” என்று ஆறுமுகம் விசாரிக்கவும், “நோ ஆறுமுகம்.. அவன் குரலை மாற்றிப் போனில் துணி போட்டு மறைத்து பேசி இருக்கான்...” என்று கல்யாண் பதிலளிப்பதற்கு முன் சஞ்சய் சொல்லி இருந்தான்.
“ம்ம்.. எனக்கும் வாய்ஸ் கேட்டது போல இல்லை...” என்றான் கல்யாண். “சரி நெக்ஸ்ட் மூவ் என்ன...?” என்று சஞ்சய் துவங்கவும் அதுவரை அழுது கொண்டிருந்த சித்ரா, “பணத்தைக் கொடுத்துடலாம்... சரின்னு சொல்லுங்க கல்யாண்..” என்று படபடத்தாள்.
விசாரித்து அறிந்து கொண்ட வரையில் கல்யாணின் இன்றைய நிலைக்கு உடனடியாக ஐந்து லட்சம் என்பதே முடியாத காரியம் என்று சஞ்சய்க்கு புரிய... கல்யாணின் முகம் பார்த்தான்.
“எனக்கு மட்டும் மறுக்கத் தோணுமா சித்து... ஆனா நாம இந்த வீட்டை விக்கணும்னா கூட அதுக்கு அவகாசம் வேணுமே...” என்றான் கவலை தோய்ந்த குரலில்.
“எஸ்... மிசஸ் கல்யாண், அவங்க இப்போ...” என்று சஞ்சய் விளக்க தொடங்கும் போதே மீண்டும் அதே எண்ணிலிருந்து கல்யாண் அலைபேசிக்கு அழைப்பு வந்தது. இதில் அனைவரையும் அமைதியாக்கிய சஞ்சய் கல்யாணை எடுத்துப் பேசுமாறு கூறினான்.
கல்யாண் எடுத்ததும், “என்ன முடிவு செஞ்சிட்டீங்களா...? குழந்தை வேணுமா..? வேண்டாமா...?” என்று அவன் மிரட்டுவது போனை ஸ்பீக்கரில் போட்டு கேட்டுக் கொண்டிருந்த அனைவருக்குமே கேட்டது.
உடனேயே தாவி கல்யாணின் சட்டையைப் பற்றிய சித்ரா, “சரின்னு சொல்லு...” என்று மன்றாட... “ஒகே...” என்று வேறு வழியில்லாமல் மனைவியைக் குழப்பத்தோடு பார்த்தவாறே பதிலளித்து இருந்தான் அவன்.
“அப்போ ஒரு மணி நேரம் உங்களுக்கு டைம்.. பணத்தை ஏற்பாடு செய்ங்க, மறுபடி கூப்பிடறேன்...” என்று வைத்துவிட்டான் அவன். “என்ன சித்து இது... விளையாட்டு விஷயமா...? இப்போ ஒரு மணி நேரத்தில் எப்படி ஏற்பாடு செய்யமுடியும்...” என்று அவ்வளவு நேரத்தில் முதல் முறையாகத் தன் பொறுமையைக் கைவிட்டு கோப முகம் காட்டினான் கல்யாண்.
‘எஸ் மிசஸ் கல்யாண்... நீங்க அவசரபட்டுட்டீங்க, ஒரு மணி நேரத்தில் அவ்வளவு பணத்தை ஏற்பாடு செய்யறது எல்லாம் வாய்ப்பே இல்லை... நீங்க கொஞ்சம் அமைதியா இருந்து இருந்தா டிராக் செஞ்சு இருக்கலாம்... இன்னும் கொஞ்ச நேரம் அவன் பேசி இருந்தா போதும்...” என்று அந்த அழைப்பை ரெக்கார்ட் செய்து டிராக் செய்ய முயன்று கொண்டிருந்தவர்களைப் பார்த்தவாறே கூறினான் சஞ்சய்.
“இல்ல... இல்ல.. முடியும், என்னால் முடியும்... கல்யாண் உங்களுக்கு நியாபகம் இல்லையா, என்னோட பிக்ஸட் அமௌன்ட் இருக்கே...” என்றாள் சித்ரா. அப்போதே அவனுக்கும் அது நினைவு வரவும் “ஓ ஆமா..” என்று முகம் பிரகாசம் அடைந்தவன், “ஏற்பாடு செஞ்சுடலாம் ஆபிசர்...” என்றான் சஞ்சய்யிடம்.
அதே நேரம் விவரம் அறிந்து வேகமாக அங்கு வந்து சேர்ந்தான் சித்ராவின் தம்பி சுகுமார். அவனைக் கண்டதும் சித்ரா மேலும் அழுக துவங்கவும் ஒருவாறு அவளைத் தேற்றி காவலர்களிடம் விவரம் அறிந்தவன், கல்யாணை இங்கு இருந்து பார்த்துக் கொள்ளுமாறு கூறி, சித்ராவோடு சேர்ந்து பணம் எடுத்து வர கிளம்பினான்.
அவர்கள் சென்ற பிறகு, அது என்ன பணம் என்று சஞ்சய் விசாரிக்க... “அது சிறு வயதில் சித்ராவின் தந்தை இறந்து விட, அவரின் பெயரில் இருந்த வீட்டை விற்று இரு பிள்ளைகளின் பெயரில் பிக்ஸட்டில் போட்டு வைத்த அவர்களின் அத்தை இவர்களை ஒரு ஹாஸ்டலில் சேர்த்து விட்டு படிக்கவும் ஏற்பாடு செஞ்சு அதுக்கும் ஒரு தொகையைப் போட்டு வெச்சாங்க... அவங்களுக்கு இவங்களைக் கூடக் கூட்டிட்டு போக முடியாத சூழ்நிலை, அங்கேயே தான் இவங்க இரண்டு பேரும் படிச்சு வளர்ந்தாங்க... அந்தப் பணம் தான் இப்போ இவ்வளவு ஆகி இருக்கு... போன வாரம் தான் அது மெச்சுர்ட் ஆகி வந்தது... மறுபடி பிக்ஸட்லேயே போடலாமா இல்லை வேற ஏதாவது செய்யலாமான்னு யோசிச்சிட்டு இருந்தோம்...” என்று விளக்கினான்.
“போன வாரம் எடுத்த பணத்தோட நியாபகம் உங்களுக்கு வரவே இல்லையா...?” என்றான் சஞ்சய். “எப்போவுமே பணம் பத்தி நான் அதிகம் கவலைப்பட மாட்டேன்... அதிலும் இது அவளோட பணம், நான் அதை எப்படி யோசிக்க முடியும்...” என்றான்.
கல்யாணையே யோசனையாகப் பார்த்தாலும் சஞ்சய் அப்போது எதுவும் பேசவில்லை. அடுத்த அரைமணி நேரத்தில் சித்ராவும் சுகுமாரும் பணம் கொண்டு வந்துவிட, அடுத்து யார் இதை எடுத்து செல்வது என்ற விவாதம் துவங்கியது.
குழந்தையைக் காப்பாற்றுவது தான் முக்கியம் என்று கூறி தானே செல்வதாகச் சித்ரா சொல்லவும், அதை மறுத்த கல்யாண் அவன் செல்வதாகக் கூறினான். இதைப் பற்றிய பேச்சு வார்த்தை நடைபெறும் போதே கடத்தல்காரனிடம் இருந்து அழைப்பு வந்தது.
“என்ன பணம் ரெடியா...?” என்றவன், அதை எடுத்துட்டு **** கிட்ட வந்துடுங்க... உங்க குடும்பத்தில் இருந்து யாராவது ஒருத்தர் தனியா தான் வரணும்... பின்னாடி போலீஸ் பாலோ செஞ்சுது உங்க குழந்தை உயிருக்கு நான் கியாரண்ட்டி இல்லை...” என்றதோடு தொடர்பு துண்டிக்கப்பட...
“நீங்க இரண்டு பேரு தான் வரணும்னு அவன் சொல்லலை... சோ எங்க ஆளு யாராவது போகட்டும்...” என்று சஞ்சய் துவங்கவுமே, இடையிட்ட சித்ரா “பிளீஸ் வேண்டாம்... நான் இதில் ரிஸ்க் எடுக்க விரும்பலை.. நானே போய்ப் பணத்தைக் கொடுத்து குழந்தையை வாங்கிட்டு வந்துடறேன்...” என்று கையெடுத்து கும்பிட்டாள்.
“புரியாமா பேசாதீங்க மிசஸ் கல்யாண்... அப்படி எல்லாம் உங்களை அவனை நம்பி அனுப்ப முடியாது... வீடு புகுந்து குழந்தையைக் கடத்தி இருக்கான்... அதுவும் வீட்டில் ஆள் இருக்கும் போதே, அவன் கேட்ட பணமும் சரியா உங்ககிட்ட இருக்கத் தொகை... அப்போ உங்களைப் பத்தி எல்லாம் தெரிஞ்ச யாரோ தான் இதையெல்லாம் செய்யறாங்க... இது பணத்துக்காக மட்டும்னா பரவாயில்லை... ஆனா இதோடு முடியாம போனா... ஒருவேளை உங்களில் யாரையாவது பழி வாங்கவோ இல்லை கஷ்டபடுத்தவோ நினைச்சா...” என்று சஞ்சய் இத்தனை நேரம் இருந்த இலகு தன்மை போய்ச் சற்று கடின குரலில் பேசவும் மிரண்டு போனாள் சித்ரா.
“இல்ல அது...” என்று மேலும் ஏதோ கூற முயன்றவளை, “ஒருவேளை பணத்தையும் வாங்கிட்டு உங்களையும் பிடிச்சு வெச்சுகிட்டா என்ன செய்வீங்க...?’ என்று இடையிட்டு சஞ்சய் கேட்டு இருக்க... அமைதியாகி போனாள் அவள்.